Saturday, March 20, 2021

KRISHNA GUIDES

 



                  கண்ணன் இட்ட  கட்டளை... நங்கநல்லூர்   J K  SIVAN 

 கடவுளைக்  கோயிலில் தேடுகிறோமே , அவன்  நம்மில், நம்மோடு, நம்  எதிரில், அருகிலேயே,  ஏன் ,  எங்குமே  'இருக்கிறான் என்று  எத்தனை பேர்  உணர்கிறோம்.  ஒரு சம்பவம் இதை தெளிவாகிறது. அவனைக் காண  வெறும் கண்  மட்டும்  போதாது.  மனமும் அதை  இயக்கவேண்டும்.  உணர்வதற்கு  ஈரமான  இதயம் வேண்டும். அருகிலேயே இருப்பவனை காணாமல்  மேலே   ஆகாயத்திலே பார்த்து  தேடிக் கன்னத்தில்  போட்டுக்கொண்டால்  எப்படி  தெரிவான்?.

ஒவ்வொருநாளும்  கிருஷ்ணன் நம்மோடு  பேசுகிறான், பார்க்கிறான், சிரிக்கிறான், கூடவே வருகிறான்.  எல்லோர் வாழ்க்கையிலும் இது நடந்தும்  நாம்  அறிவதில்லை. 

ரங்கு  ரெண்டு மணி நேரம்  பஞ்சு பாகவதரின்  பிரசங்கம் கேட்டான்.  பாகவத  பிரசங்கம்.  கிருஷ்ணன்  பிறந்தது வளர்ந்தது, செய்த லீலைகள் எல்லாம்  நேரில் கேட்டது போல், கண்டது போல்  அழகாக  வர்ணித்ததை  கேட்டுவிட்டு   நண்பன்  பாபுவுடன் சைக்கிளிலில் திரும்பினான். பசி, வீட்டில் என்ன இருக்கிறது, யார் இருக்கிறார்கள்  ஆகாரம் கொடுக்க.   வழக்கமான தெரு ஓர கையேந்தி பவனில்  நாயர்  கொடுத்த தோசைகளை சாப்பிட்டு   டீ  குடித்தபோது  ரங்குவும் பாபுவும்  என்ன பேசினார்கள்.

''பாபு,  பஞ்சு  பாகவதர் சொன்னமாதிரி  கிருஷ்ணன்  இன்னும்  நம்மோடு  தான்  இருக்கிறார்.  எப்போ வேணுமானாலும்  நம்மிடம் பேசுவார்  என்று தான் எனக்கு தோன்றுகிறது. நீ என்ன சொல்றே?'' 

பாபு  தோசையை விழுங்கிக்கொண்டே   ''ஆமாம்   கிருஷ்ணன்  பேசுவார்.  பேசட்டும் . சரிடா நேரமாயிட்டுது.   நாளைக்கு மறுபடியும்  பாகவதர் உபன்யாசத்தில்  சந்திப்போம்'' .    பாபு  போனதும்  சைக்கிளை  மிதித்துக்கொண்டே   ரங்கு  வழியெல்லாம்  ''கிருஷ்ணன்  இருக்கிறானா, என்னோடு பேசுவானா'' என  யோசித்துக்  கொண்டிருந்தபோது ராத்திரி மணி  ஒன்பது. .    

'கிருஷ்ணா,   நீ என்னோடு   பேசுவாயா?  பேசேன்.  உன் குரல்  கேட்க  ஆசையாக  இருக்கிறதே எனக்கு''  

 ரங்குவின்  சைக்கிள்  சைதாப்பேட்டை   பச்சையப்ப முதலி தெருவில் வழக்கம்போல்  திரும்பாமல் ஏன்   எதிர்ப்புறம்  பகதூர் சந்தில்  திரும்பியது?  சந்து திருப்பத்தில் இருந்த   நாகசாமி  பால்  கடை முன் ஏன் நின்றது? எதற்கு   நாலு  கப்  பால் சூடாக ஒரு  பிளாஸ்டிக் பையில் வாங்கினான்?  

''எனக்கோ வீடு இல்லை. ஒத்தை ரூம்.  யாருமில்லை.  ஒண்டிக்கட்டை.    எதற்கு  இப்போது    இந்த  சந்திற்கு  வந்து   4 கப்  பால்  வாங்கினேன். தேவையா?  கிருஷ்ணா,   ஒருவேளை  நீ  தான்  இவ்வாறு  எனக்கு  கட்டளையிட்டாயோ.?  சைக்கிள்  மீண்டும் பச்சையப்ப முதலி தெருவில்   நுழைந்தது.  நேரே  ரெண்டு கிலோ  மீட்டர்  சென்று வடக்கே  வாராவதி மீது ஏறி இடது பக்கம்   ராஜாமணி  சினிமா  கொட்டகை  அருகே  உள்ள  தெருவில்  மூன்றாவது கட்டிடம்  அவனுடைய  ஒத்தை அறை  இல்லம்.   வீட்டுக்காரன்  பாலு  முதலி  10 மணிக்கு  வாசல் விளக்கை  அணைத்து  கதவை பூட்டி விடுவான்.  கறார் பேர்வழி.

 ''கிருஷ்ணா, நீ  தான்  என்னை  பால்  வாங்க  வைத்தாயோ. எதற்காக? சரி  சரி.  பதில்  சொல்லாவிட்டால்  போ. எதற்கு  பால்  வாங்க  புத்தி  போனதோ தெரியவில்லை.  அதனால் என்ன,ஒன்றும்  குடி முழுகிப்போகாது.  நாளை காலை  ரெண்டு மடக்கு கூட  குடித்தால் டிபன்  காசு மிச்சம்.''

அவன்  போகவேண்டிய  வாராவதி  எதிரே  தோன்றியது.  மேலே  ஏறிப் போகாமல்  ஏன்  வாராவதிக்கு  கீழே  மேற்கே  திரும்பினான்.  கால்வாய்  ஓரமாக  நீலகண்டன்  குறுக்கு சந்து  என்று  ஒரு பலகை   குறுகலான அந்த   தெருவின்  பேரைக் காட்டியது.  சைக்கிளை  மிதித்துக்கொண்டு  அதில் எதற்கு  செல்லுகிறான்?     எதிரே  ஒரு குப்பை  லாரி  வழி மறைக்க   அதற்கும்   நின்றுகொண்டிருந்த  ஒரு  காய்கறி  கை  வண்டிக்கும்  இடையே  உள்ள  கொஞ்சம்  இடைவெளியில்  சாமர்த்தியமாக  அவன்  சைக்கிள்  நுழைந்து  சென்றது.

 ''என்ன  பைத்தியக்காரத்தனம்  இது'' 

 ரங்குவுக்கு அவன் மேலேயே  கோபம் வந்தது.  ஆனால்  சைக்கிள் மேலே  மேலே  சென்றது.  குறுகிய தெருவுக்கு  முனை வரை  வந்தவன்  ஒரு  மாமர தோட்டத்திற்கு  அருகில்  உள்ள பாதி கட்டியிருந்து  வர்ணம்  பூசாத  சிமெண்ட்  ஷீட் முன் பக்கம்  சரிந்த  ஒட்டு  வீடு  வாசல்  முன்னால்  நின்றது.  நடந்து அந்த  கட்டிடம்  அருகே  சென்றான்.  நீளமாக  ஒரு  ஸ்டோர்  மாதிரி அந்த ஒட்டு விடு  இருந்தது. முதலில் மூங்கில்  தட்டி   கதவு இருந்த வீடு.  கதவு சாத்தியிருந்தது.   கதவு பக்கத்தில்  நீல கலர் கம்பி கிராதி போட்ட  ஜன்னல் . உள்ளே    ஒரு  25  வாட் பல்ப் அரைகுறை  வெளிச்சம்.  

இது  யார்  வீடு?.  யார்  இருக்கிறார்கள்  இதில்?   அவனுக்கு அந்த  தெருவே  புதிசு. அவன்  இதுவரைஇங்கு   வந்ததில்லையே.   சுற்று முற்றும்  பார்த்தான்.  எதிரே  ரோஷினி  டைலர்ஸ்  என்ற  ஒரு  கடை. அதுவும்   மூடியிருந்தது.  இடையில் ஒரு   குப்பை தொட்டி.   டைலர் கடையை அடுத்து  கோபால்  பலசரக்கு  கடை.  இரவு   ஒன்பதரை மணி ஆகிவிட்டதே.   அதன்  கதவும் மூடப்பட்டு  இரவிலும்  ஒரு   பெரிய வெள்ளை  பூட்டு மினு மினுத்து  தொங்கியது.

 ரெண்டு  தெரு நாய்கள்   அரை மனதோடு  அவனைக்  கடிக்கலாமா,   வெறுமே ஸாஸ்திரத்துக்கு  குலைத்தால் மட்டும் போதுமா   என்று  யோசனை செய்தவாறு  படுத்திருந்தன.  ரங்குவின்  கால்கள்  தானாகவே  அந்த  கம்பி கிராதி  ஜன்னல் வீட்டை நோக்கி  நடந்தன.   கதவை தட்டச்  சொல்லி  ஒரு உந்துதல்.  
தட்டினான். 
யார்  இங்கே இருப்பவர்கள்?   தூங்கும் நேரமாச்சே.  யார் வீட்டு கதவையோ எதற்கு   தட்டினேன்?
 ''கிருஷ்ணா  என்ன  இதெல்லாம்.  எனக்கு  பைத்தியமா  பிடித்துவிட்டது?   சரி  கிருஷ்ணா  இது  உன்  கட்டளை  தான்  போல  இருக்கிறது.  நடப்பது நடக்கட்டும்.''

கதவு திறந்தது.   ஒல்லியாக  கண்  பஞ்சடைந்த  ஒரு  முதியவர் கொஞ்சமாக  கதவைத்திறந்து  தலையை  மட்டும்  வெளியே  நீட்டினார் 
 '' யாரு?'  என்ன வேணும்?''  .
''இந்தாங்க''   சூடான   பால்  பாக்கெட்  கை மாறியது.
''என்னதுங்க  இது.  எதுக்கு,  யார்  நீங்க.''
''என் பேர்  ரங்கராஜன்.  இந்தாங்க  சூடான  பால்.  உங்களுக்கு  தான்  கொண்டுவந்தேன்'
 கிழவருக்கு  ஆச்சர்யம்.  ராத்திரி  10 மணி வாக்கில்   யாரோ ஒருவன்  எதற்கு சூடான பால் கொண்டுவந்து தருகிறான்'''',
ரங்கு வாசலில் நிற்க, கிழவர்   ''ராதா, இந்தா'' என்று கூப்பிட்டுக்கொண்டு  பாலோடு உள்ளே போனார். .  அடுத்த  கணம்  ஒரு  இளம் பெண்  கையில்  ஒரு  அழும்  ரெண்டு வயது குழந்தையோடு தோன்றினாள் . அவள்  கண்களில்   காவேரி. கூடவே  அந்த கிழவர்.

''ஐயா. நீங்கள்  யாரோ  தெரியவில்லை.   என்  பெண்  ராதா  குழந்தைக்கு  பால்  வாங்கக் கூட  காசில்லை.  இப்போது  தான்   கொஞ்ச நேரத்திற்கு  முன்     ''கிருஷ்ணா   நான்  ஒரு வழியும் அறியாமல்  கையில்  சல்லிக் காசில்லாமல்   இருக்கிறேனே.  குழந்தை  பசியால்  வாடுகிறதே.  செல்லாக் காசும் இல்லையே.  இரவில் கண் தெரியாமல்  எப்படி  என்  அப்பா  வெளியே  போய்  எங்காவது  பால்  வாங்கி வருவார்  என்று  வேண்டினாள் .   நானும்  கிருஷ்ண பக்தன்  தான். 
சுவாமி  நீதான்  எதாவது  வழி காட்டவேண்டும்.  நீ  தீன  ரக்ஷகன்  அல்லவா?'' என்று  கெஞ்சினேன்.  

 இந்த வீட்டின் மேல் கடன்  கொடுத்தவன்  நாங்கள்  இன்னும்  திருப்பித் தராத பாக்கிக்கு  எங்கள்  இந்த   பழைய  ஓட்டை  வீட்டை  ஜப்தி செய்ய  ஒரு வழக்கு  போட்டு  நாளைக்கு தீர்ப்பாகி,  நாளைக்கு இந்த  வீட்டை காலி செய்யவேண்டும்.  வீடு  காலி  பண்ணி  ஊருக்கு போக   பணம் இல்லையே. கிருஷ்ணா  இந்த  குழந்தை  பசியால்  வாடி  துடிக்க விடுவாயா.''    என்று நெஞ்சு கதறியது.  

 அஞ்சு நிமிஷம்  கூட  ஆகலை. நீங்கள்  யாரோ  தெரியவில்லை  பாலுடன் வந்து நிற்கிறீர்கள்.  கிருஷ்ணன்  தான்  உங்களை  அனுப்பியிருக்க வேண்டும். அவரா  உங்களை  இங்கு  பால்  கொண்டுவரச் சொன்னது,   செய்தது.?  அந்த  கிழவர் உணர்ச்சியில்  திக்கி திக்கி பேசினார்.  ரங்குவின் காதில்  அவர்  பேச்சு விழவில்லை.  கண்கள்  குளமாயின.   ரங்கு தனது கைப்பையை துழாவினான். ஏதோ  அவனுக்கு சேரவேண்டிய  பழைய  அல்லோவான்ஸ் ஏதோ  எல்லாம் சேர்த்து அன்று தான் ஆபிசில்  1008 ரூபாய்  கிடைத்தது. எதிர்பாராமல் வந்த அந்த பணத்தை அப்படியே   கிழவர் கையில்  வைத்து  அழுத்தினான். திரும்பினான். 

சைக்கிள்  ராஜாமணி  சினிமா  கொட்டகையைக்  கடக்கும்போது ரங்குவின் சந்தேகத்துக்கு  பதில் கிடைத்துவிட்டதே.

 ''அது சரி 1008  ரூபாய்  ஏன்?

 பஞ்சு பாகவதர்  'உனது நாமங்களை அஷ்டோத்ரம் 108  என்றும்  சஹஸ்ர  நாமம்  என்று 1000 - 1008 சொல்ல முடியாவிட்டால்   பரவாயில்லை  உங்களால்  முடிந்த  அவன் நாமாவளி எதையாவது மனம் நிறைந்து சொன்னால் அவன்  உங்களோடு என்றும்  இருப்பான் . தினமும்  சொல்லுங்கள்''  என்றாரே.  நானும்   சரி  நாளையிலிருந்து  சொல்ல  ஆரம்பிக்கலாம் என்று  பாபு விடம்  சொன்னேனே.  அதன்  பிரதிபலிப்பா?

'' கிருஷ்ணா  நீ தான் என்னுள் பேசினவனா? . என்னை  பகதூர்  சந்து  நாகசாமி பால் கடை போகவைத்து,  4 கப்  பால்  வாங்கச் சொல்லி  அதை அந்த  குறுகல் தெருவுக்குள் நுழைந்து  கம்பி கிராதி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போ   காத்திருக்கும்  அந்த  குழந்தையிடம்  கொடு''  என்று  இயக்கியவன்  என்பதில் எனக்கு சந்தேகம்  இப்போ  இல்லை''

ரங்கு தனது  ஒற்றை  அறையின்  கதவை  திறந்து கொண்டிருந்த  போது  மனது  லேசாகி இருந்தது. அதில் சந்தோஷம். 
 'மாமா''  மாமா''  இந்தாங்க ?  ரங்கு திரும்பினான்.
 வீட்டுக்காரன்  பாலு முதலி  பெண்  ருக்மணி  அவனிடம்  ஒரு  கிருஷ்ணா ஸ்வீட் பாக்கெட்  மைசூர்பாக்கை நீட்டினாள் ''
 ''எதுக்குங்க எனக்கு  இது.''
''எனக்கு இன்று  பெர்த் டே. BIRTH  DAY.  ஏன் லேட் ?'' .

 கிருஷ்ணன் அவனைத் தேடி வந்து  அவன் செயலை மெச்சி கொடுத்த  பரிசா  இது?
 'கிருஷ்ணா  நீ  பேசுவாய்.  ஆனால்  மற்றவர்கள்  மாதிரி  இல்லை . எல்லாம்  சூசகமாகத் தான் செய்வாய் என்பது  எனக்கு  புரிந்து விட்டது'' என்றான்  ரங்கு  

அவனது ஒற்றை அறையில் புல்லாங்குழல்   வாசித்துக்கொண்டு புன்னகைக்கும்  ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவை  டிரஸ்ட்   கிருஷ்ணன்  படம் மின் விசிறி  காற்றில்  நர்த்தனம் ஆடியபோது   'அலை பாயுதே கண்ணா, என் மனம்  மிக அலைபாயுதே...'' என்று  விசில் அடித்தான். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...