Tuesday, March 16, 2021

BADRAGIRI


 


பத்ரகிரியார் ஸன்யாஸி ராஜாவின் குமுறல்   -  நங்கநல்லூர்  J K  SIVAN 


எப்போது படித்தாலும்  பத்திரகிரியார்  பாடல்கள்  மனதில்  ஒரு  அழுத்தத்தை  உண்டாக்குகிறது. காரணம் வார்த்தைகளில் பொதிந்துள்ள  சாஸ்வத உண்மை. விரக்தி. நிலையில்லாமை யின்  பரிமாணம்.

ஒரு மனிதன் எதிர்பார்த்தது, கனவு கண்டது , எல்லாம் கை வராமல் போனால் தான் விரக்தி வருகிறது. பெருத்த ஏமாற்றம் அவனை உலுக்கி, உள்ளிருக்கும் அறிவை ஆட்டுவிக்கிறது. தான் செய்த குற்றம் தான் ஒருவனை கடைசிவரை முள்ளாய் குத்திக் , குதறி,  அவனை அமைதி இழக்கச் செய்கிறது. இதற்கெல்லாம் யார் காரணம்? எது காரணம்? துன்பம் வரும்போது மட்டும் கடவுளை நினைக்கச் செய்கிறதே. அது எது?

ஞானம் பிறக்க தியாகம் தேவையாயிருக்கிறதே!

இதெல்லாம் ஒருவன் தன்னுள் தான் ஆழமாக மூழ்கி  அலசுவதன் வெளிப்பாடு. . உள்ளே சுத்தமானால் வாயில் வார்த்தை ஞானமாய் புறப்படுகிறது. பார்வை சமமாகிறது . எண்ணம் தெளிவாகிறது.   இப்படிப்பட்ட நிலை அடைந்து, விரக்தியுடன்  நாட்டையும் வீட்டையும்  துறந்து  தெருவுக்கு வந்துவிட்ட பத்திரகிரி ராஜா  சீர் பட்டு விட்டான்!  உலகம்  வாழ்க்கை ரெண்டும்  புரிந்தது. எது  தேவை எது தேவையல்லாதது, எது நிரந்தரம், எது அழிவற்றது, எதைப் பிடிக்க வேண்டும்,. எதை விடவேண்டும், எதில் நாட்டம், எதில் நோக்கம்  அவசியம்  என்று.  தேடி  அடைந்துவிட்டான்.  அவன் அனுபவம்  வார்த்தையாக  நமக்கு  அறிவுரையாக  அமைந்துள்ளது:

''ஆறாத புண்ணி லழுந்திக் கிடவாமல்
தேறாத சிந்தைதனைத் தேற்றுவது மெக்காலம்.

சில எண்ணங்கள்  தான்  என்றும் ஆறாத புண். அதைப்பற்றியே சிந்திக்காமல் சிந்தையைத் தெளிவுறச் செய்வது எப்போது?

''தந்தைதாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே
சிந்தை தனிற்கண்டு சிக்கறுப்ப தெக்காலம்.''

''அப்பா, அம்மா,  அண்ணன்  தம்பி, அக்கா தங்கை,  மனைவி  சுற்றம் குழங்கிறாள்   இவர்களெல்லாரும்   சாஸ்வதம் இல்லை, பொய் என மனதினில் உறுதியாக  தெளிவு ஏற்பட்டு   உறவை  வெட்டி விடுவது எப்போது?
 இந்த உலக உறவுகள் எல்லாமே, கர்மாவில் மேலும் அழுந்தி வேதனையை அதிகமாக்கத் தான் உதவும் இதிலிருந்து விடுபட்டு  பேரானந்தத்தைத் தேடுவது எப்போது?
தாய் என்னை அணைத்து பாலூட்டினாள் , சோறூட்டினாள் , வளர்த்தாள் , தந்தை படிப்பித் தான், உடன்பிரதந்து எல்லாம் அன்போடு விளையாடியது,  இதெல்லாம் சரி  யார்  வந்து என்னை  இப்போது மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றப் போகிறார்கள்?

மன்னுயிரைக் கொன்று வதைத்துண் டுழலாமல்
தன்னுயிர்போ லெண்ணித் தவமுடிப்ப தெக்காலம்.

உலகத்தில் உள்ள  மற்ற  உயிர்களைக் கொன்று வதைத்து அவைகளைத் தின்று திரியாமல் அவைகளும்  என்னைப்போலவே  ஜீவிக்க வேண்டியவை என்று உணர்ந்து   என்னுயிர்போல் எண்ணி  அன்பு கொண்டு   தவத்தைப் பூர்த்தி செய்து கொள்வது எந்தக்காலத்திலே?

பாவியென்றே பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்
ஆவிநின்ற சூத்திரத்தை யறிவதினி யெக்காலம்.

''இவன் பெயர் பத்திரகிரி. ஒரு பாவி. கொண்டு போய் போடு எண்ணெய்க் கொப்பரையில்'' என்று  சொல்லும்படியாக என் பெயரைத் தாங்கிக் கொண்டு   கொடிய நரகத்தில் வீழாமல்  பேர் ஊர் அற்ற  ஆன்மாவாக   நிற்கும் தந்திரத் தைத்  தெரிந்து கொள்வது எந்தக்காலம்?

உளியிட்ட கல்லு முருப்பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் பொருளாவ தெக்காலம்.

உளியால் செதுக்கப்பட்ட கல்லும், உருவாக அமைத்த செவ்விய சாந்தும், புளியினால் துலக்கப்பட்ட செம்பும் பொருளாகத் தோன்றுவது எந்தக்காலம்?

கோவிலில் சென்று வணங்குகிறோம்  அப்போது நம் கண்  காண்பது,  கல்லில் வடித்த, செஞ் சாந்தில் செம்பினால், பஞ்ச லோகத்தினால் செய்யப்பட்ட உருவங்கள்  தானே. அவற்றைத் தானே  விக்ரஹங்களாக வழிபடுகிறோம்.  அவைகளைக் கல்லாகவுஞ் சாந்தாகவுஞ் செம்பாகவுங் கொண்டு வழிபடுவோர் மேலும் மேலும் அஞ்ஞானத் தழுந்துவர்.     கல், சாந்து, செம்பு என்னும் பாவனை இல்லாமல் அவைகளை   பகவானாகவே பார்த்து,  சிவமாகக்  கண்டு, மகிழ்ந்து  வழிபடுவோர் விரைவில் ஞானம்பெற் றின்புறுவர். எதிலும்  இறைவனே எனும்  இந்த பண்பு பற்றி தான் ராஜா பாடுகிறான்.

வேடிக்கை யுஞ்சொகுசு மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கை யெல்லா மறந்திருப்ப தெக்காலம்.

உல்லாசத்திலும் அலங்காரத்திலும்  வேடிக்கைப்  பாட்டிலும் காலத்தைச் செலவழிக்கும் வழக்கங் களை யெல்லாம் மறந்து  உன்னை, உன் கருணையை மட்டுமே  ருசிப்பது எந்தக் காலத்தில் எனக்கு நேரும் ?நான்  இன்று வரை எப்படி இருக்கிறேன் தெரியுமா? கமகம வென்று வாசனை தைலம். நல்ல டிரஸ், பட்டு வேஷ்டி. அங்கவஸ்திரம். பளபள வென்று மின்னும் தங்க ஆபரணம் கழுத்திலும் கையிலும். பகட்டு. .நல்ல கச்சேரி சபாவுக்கு செல்கிறேன். இடையே சூடான போண்டா. கேசரி. .... சரி , இதெல்லாம் விட்டு விட்டு சாஸ்வதமான உன் பாதத்தில் நாட்டம் வருவது எப்போதையா சிவனே!,

ஆமைவரு மாட்கண் டைந்தடக்கஞ் செய்தாற்போல்
ஊமை யுருக்கொண் டொடுங்குவது மெக்காலம்.

ஆமை மெதுவாக தான் செல்லும். எதிரே யாரையாவது பார்த்துவிட்டால் போதும். தன் ஐந்துறுப்புக்களையும் ஓட்டுக்குள் ஒடுக்கிக் கொள்வதுபோல  நான்  உலக ஈர்ப்புகள்  என்னை நெருங்கும்போது  அதில்  சிக்கிக் கொள்ளாமல்   மோன நிலையை யடைந்து ஐம்புலன்களையும் ஒடுக்கிக்கொள்வது எப்போது எனக்கு முடியும்?

தண்டிகையுஞ் சாவடியுஞ் சாளிகையு மாளிகையுங்
கண்டு களிக்குங் கருத்தொழிவ தெக்காலம்.

என்  பிரயாணம்  நான் பல்லக்கில் உட்கார்ந் திருக்க  நாலு பேர் சொகுசாக தூக்க சுகமாக உள்ளே சாய்ந்து தாம்பூலம் போட்டுக்கொண்டு செல்வது. இந்த பல்லக்கு, எனக்கென அமைந்த உணவு சத்திரம், கனமான பணப்பை, வசதியான வீடு இவைகளைக் கண்டின்புற வேண்டு மென்னும்  என்று    என் மனதில் தோன்றுகிற எண்ணம் ஒழிவது  எப்போது?   இந்த சாக்கடை யிலிருந்து மனம் மீள்வது எப்போது?

அத்த னிருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்துநிதஞ்
செத்த சவம்போற் றிரிவதினி யெக்காலம்.

தாயுமானவர் ''செத்தாரைப் போலே திரி'' என்கிறார். அதாவது செத்தவனுக்கு உலகில் பந்தமோ பாசமோ கிடையாது. பணம் வீடு வாசல், பசி தாகம் உடை, மற்றவர் பற்றிய பிரஞை கிடையாது. அதுபோல இந்த உலகில் நான் உலவ வேண்டும். என் மனம் பூரா நீ தான் சிவனே எழுந்தருளி இருக்கவேண்டும். அதையே நான் உணர்ந்து ஆனந்த நிலையில் இருக்க வேண்டும். உண்மையை  நிலையாமையில்  மனம்  லயித்து ஒவ்வொரு நாளும்  உலகில்   இறந்த பிணத்தைப் போலத் திரிவது எபொது  என்னால் முடியும்?

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...