Sunday, March 7, 2021

SURDAS

 

 ஸூர்தாஸ்    ---           நங்கநல்லூர்  J K  SIVAN                                  



  23.மோஹனன்வந்தான்

இதோ பார்த்தீர்களா, சூரியன்மெதுவாக மேலைவானத்தில் ஜகஜ் ஜோதியாக அக்னி பிழம்பாக  கீழே கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறான். 

ஒவ்வொரு நாளும் இந்த நேரத்தில் அமைதியாக சூரியன் அஸ்தமனம் ஆகும் அழகை எவ்வளவு காலமாக பார்த்தாலும் அலுப்பதில்லை. சுவை  திகட்டுவதில்லை. எத்தனையோ நாள் நான் மொட்டை மாடியில் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டு ரசித்து அவனை வணங்கி இருக்கிறேன். நான் காளிதாசனாகவோ கம்பனாகவோ காளமேகமாகவோ  இருந்திருக்கக்  கூடாதா?  . உங்களுக்கு  ஆயிரமாயிரம்   அருமையான கவிதைகள் கிடைத்திருக்குமே.   வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டு வேர்க்கடலை ஓட்டை உடைத்து ஒவ்வொரு  மணியாக  விழுங்கும் சோற்று மூட்டை  சோணாசலமாக  இருக்கி
றேனே. என்ன செய்வது?

ஸூ ர்தாஸ் கண்ணை இழந்த வராக இருந்தால் என்ன? கற்பனைக்கு  கண்  எதற்கு?  
ஒரு மாலைப் பொழுதை எப்படி 
வர்ணிக்கிறார் பாருங்கள்.

பிருந்தாவனம் வழக்கம் போல சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. மாலை நேரம் கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற்று இரவு இனி தலையை நீட்டப் போகிறது. அதற்கு அச்சாரமாக சூரியன் மேற்கில் மறையத் தயாராகி விட்டான்.
பிருந்தாவன கோபியர்கள் அவர்கள் கணவன்மார்கள், சகோதரர்கள், பிள்ளைகள், சிறுவர்கள் எல்லோரும்  மேய்ச்சல்
காட்டிலிருந்தும்  வயல் காடுகளிலிருந்தும் திரும்பி வீடுவரும் நேரம் என்பதால் அவர்கள் வரவுக்கு காத்திருக்கிறார்கள். அவரவர்  தங்கள்  வீட்டு மனிதர்களுக்குக்  காத்திருப்பதில் என்ன ஆச்சர்யம்?. ஆனால்  அவர்கள் கவனம் எல்லாமே  ஒரே   ஒருவன் மேல்  தான்.   அவனுக்காக அனைவருமே காத்திருப்பதல்லவோ அதிசயம்.

இதோ  அந்த மோஹனன் வந்து விட்டான். அவனைச்  சுற்றி கண்களில்  ஆனந்தத்தோடு அழகிய பசுக்கள்கூட்டம். கன்றுகள் இடை இடையே அவனை  உரிமையோடு அன்பாக முட்டிக்கொண்டு   அவன் மேல் செல்லமாக இடித்துக் கொண்டு அழகு நடை போட்டு வருகின்றன. வயிறு நிறைய ஆகாரம் அத்தனைக்கும். அவன் அருகே இருப்பது அதை விட ஆனந்த உணர்வு அவற்றிற்கு.

மோஹனன் மெதுவாக நடந்து வருகிறான். தலையே மறைந்து போகும் அளவிற்கு கிரீடம் போல மயிற்பீலிகள் அவன்சிரத்திலே. வன மாலைகள், காட்டு மலர்களை கோபியர் தொடுத்து மாலையாக அவன் கழுத்து நிறைய அணிவித்து. மார்பே தெரிய வில்லை. ஒரு கையில் மூங்கில்குச்சி. பசுக்களை,  கன்றுகளை விரட்ட. ஒருநாளும் அவை அவனிடம் அடிபட்ட தில்லையே. எதற்கு அந்த குச்சி. சும்மா. சும்மாவே தான். அவன் உடம்பு முழுதும் கோதூளி (பசுக்கள் நடந்து எழுப்பிய மிருதுவான பொடிப்பொடியான  புழுதி) அபிஷேகம் செய்தது போல்.  கவசம் போல்!

அது என்ன ஒரு சிவப்பு வஸ்திரமாக, கயிறா?   இடுப்பைச் சுற்றி. ஓஹோ   அது தான்  பெல்ட்டோ ?? BELT. 
அதுவே எவ்வளவு 
அழகாக கண்ணைப் பறிக்கிறது! இரண்டு பாதங்களுக்கு மேல் கணுக்காலில் தண்டை. அவன் மெதுவாக நடக்கும்போது என்னமாக ஜல்ஜல் என்று செவி இனிக்க ஒலிக்கிறது. அவனைச் சுற்றி அவனை யொத்த கோப குல சிறுவர்கள். அவன் நண்பர்கள். ஒரே கும்மாளம் ,சிரிப்பு மயம். சந்தோஷத்தின் ஏகபோக  பிரதிநிதிகள். ஆனந்தத்தின் அடுத்த வாரிசுகள்.

தூரத்தில் இருந்தே  மோஹனன்  அந்த  ஷ்யாமன் வந்து விட்டான் என்று அவன்  கால்  தண்டை ஒலி, கன்றுக்குட்டிகளின் 'அம்மா'' ஓசை, அவன்  நண்பர்களின் சிரிப்பொலி ஊருக்குள் எல்லோருக்கும் கேட்டு விட்டதே. அதற்காகத் தான் இத்தனை நேரம் காத்திருந்தார்கள். வெளியே அனைத்து கோபியரும் வீட்டை விட்டு அப்படியே எல்லாவற்றையும் போட்டு விட்டு வாசலில் வந்து கண்ணிமைக்காமல் பார்க்கிறார்கள். ஆஹா அதோ தூரத்தில் அவன் மஞ்சள் வஸ்திரம் தெரிகிறதே. மாலை சூரியன் செவ்வொளியில் குளித்தவாறு அழகிய மஞ்சள் நிறம் தெரிகிறதே. கருமேகங்கள் இடையே பளிச்சிடும் கண்ணைப் பறிக்கும் வெள்ளை மின்னல் மாதிரி யல்லவோ இது!  சபாஷ்  ஸூர்தாஸ்.......

Mohan comes herding the cows,
crown of peacock feathers on his head,
garland of forest flowers on his chest,
in his hand a wooden staff,
his body wrapped in cow-dust.
A band around his waist
and from his feet the sound of anklets
there amidst his cow-boy friends
Shyam comes. His yellow garments standing out
like lightning amidst the clouds.

                                '

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...