Saturday, March 27, 2021

mathru shodasi

 

MATHRU SHODHASI -- நங்கநல்லூர் J.K. SIVAN--

அம்மா, இந்தா பதினாறு பிண்டம் உனக்கு........

''அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா '' இந்த பாட்டோடு தான் என் கல்வி துவங்கி யது. இப்போது இது போல் யாரும் அம்மாவை நினைத்து பாடி மனப்பாடம் பண்ணி பள்ளிக் கூடத்தில் கற்கவில்லை. எதற்குமே நேரம் இல்லை என்கிறபோது அம்மாவுக்காக எப்போது என்றைக்கு நேரம் செலவழிக் கப் போகிறார்கள்?
அம்மாவைப் பற்றி முன்பே எழுதினதை மீண்டும் கீழே தருகிறேன். எத்தனை தடவை எழுதினாலும் அது அவசியம். நன்றியுள்ள மனம் தாயை மறக்காது.... பலபேருக்கு மறந்து போய் விடுகிறதே என்பதால் மறு பதிவுகள் அவ்வப்போது.
ஆதிசங்கரர் அம்மா மேல் எழுதிய மாத்ரு பஞ்சகம் எழுதும்போதே இந்த மாத்ரு ஷோடசி பற்றியும் எழுத ஒரு எண்ணம். பித்ரு ஸ்ராத்தம் கயாவில் செய்வது உசிதம்/ அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது தொன்று தொட்டு நடக்கும் வழக்கம். ''கயா கயா கயா'' என்று சொல்வது நமது பித்ருக்களுக்கு ஸ்ரத்தையோடு , அவர்களுக்கு திருப்தியாக நாம் செய்யும் ஸ்ராத்தத்தை தான் சொல்கிறேன். ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ஸ்ரேயஸும் பெறும்.
16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு ஷோடசி. தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியமும் காரணமும் புரியும். தாயின் அருமை தெரியும்.

ஜீவதோர் வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜனாத்
கயாயாம் பிண்ட தானத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய

'' அடே பயலே, அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே அவர்கள் சொல்படி நட. அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம் தான், உன் படிப்பு மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு அந்தந்த திதியில் அவர்கள் பசியைப் போக்கு. அவர்களுக்குத் தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும் தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை.

“அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம் 64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம். ஸ்ராத்தம் பண்ணுப வர்கள் கயாவில் பித்ருக்களுக்கு, நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத' என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' (தமிழில் சின்ன 'ட") ஆல மரம். சென்னைக்கருகே திரு ஆலம் காடு (திருவாலங்காடு - வடாரண்யம் என்று பெயர் கொண்டது.அது போல )

இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த 16 பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”. அதைத்தான் இப்போது படிக்க போகிறோம்.

1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''கொஞ்சமா நஞ்சமா நான் உன்னைப் படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படியெல்லாம் உன்னை வயிற்றிலிருந்தே உதைத்திருக் கிறேன்.என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே. இதோ நான் செய்த பாவங்களுக்காக உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே படுத்துகிறானா? பிரசவ காலம் கஷ்டமானது தான். மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக நான் இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.

3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

அம்மா, நான் அளித்த வேதனையில் நீ பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக் கொண்ட தாங்கமுடியாத துன்பம் நான் உன்னை வயிற்றுக்குள் இருந்தபோது உதைத்தது தானே. அதற்காக ப்ராயச்சித் தமாக இந்த 3வது ஸ்பெஷல் பிண்டம் உனக்கு. என் தாயே.

4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம்
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''அம்மா, இந்த 4 வது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக் காக -- ஒரு பரிசு -- என்றே ஏற்றுக்கொள் .என்னைப் பொருத்தவரை எனது பிராயச் சித்தம் என்று நான் இடுகிறேன்.

5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏண்டி, மூச்சு விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான் பொறுத்துக்கோ'' .என்று உன் அம்மா, உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே மனமுவந்து நான் விளைத்த துன்பத்தை, வேதனையை நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான் இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.''

6. பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறமா சாப்பிடறேன்'' என்று உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாம் என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான் நோயற்று வளர, வாழ எத்தனை தியாகம் செய்தாய்?. நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான் இந்த ஆறாவது பிண்டம். அம்மா இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?'

7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான் குவா குவா என்று பேசி பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது நீ பசியை அடக்கி வெறும் வயிற்றோடு எத்தனை நாள் சரியான ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும் பால் நேரம் தவறாமல் கிடைத்ததே. அந்த துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த 7வது பிண்டம்.

8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை சொர்ரென் று ஈரம் பண்ணியிருக்கிறேன். ''படவா'' என்று செல்லமாக தானே சிரித்துக் கொண்டே வேறு துணி எனக்கும் மாற்றினாய். இதற்கு இந்த படவா உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த 8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லா மல் தருகிறேனே.

9. ''தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான் சுகவாசி. எனக்கு எப்போது தாகம், பசி, தூக்கம், எதுவுமே தெரியாது.நீ தான் இருந்


தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக் காக நீ இதெல்லாம் செய்தாயே. இந்த பெரிய மனது பண்ணி என்னை வளர்த்த உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த 9வது பிண்டம்.

10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஒரு சின்ன, செல்ல, தட்டு என் மொட்டை மண்டையில். ''கடிக்காதேடா..'' . நான் பால் மட்டுமா உறிஞ்சி னேன். என் சிறு, முளைக் காத பல்லால் உன்னைக் கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு. இந்தா அதற்காக ப்ளீஸ் இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா

11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''வெளியே பனி, குழந்தைக்கு ஆகாது. இந்த விசிறியை எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து. ஜன்னலை மூடு. எனக்கு காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.'' காலத்திற் கேற்ற வாறு என்னை கருத்தில் கொண்டு காத்த என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்ப தெல்லாம் இந்த சிறு பிண்டம், 11வதாக எடுத்துக்கொள்.'

12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

எத்தனை இரவுகள், எத்தனை மன வியாகூலம். குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமா யிருக்கே. சளி உபாதையாக இருக்கிறதே என்று வருந்தி, நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி மடியில் போட்டு ஆட்டி, தட்டி, என்னை வளர்த்தாயே, கண்விழித்து உன் உடல் நோய்வாய்ப் பட்டா யே . அதற்காகத்தான் இந்த 12வது பிண்டம் தருகிறேன்.

13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு கை நிறைய காசோடு . ஆனால் இதெல் லாம் அனுபவிக்காமல் நீ யமலோகம் நடந்து சென்று கொண்டிருக் கிறாயே. என் கார் அங்கு வராதே. வழி யெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே உனக்கு துன்பம் தராமல் இருக்க நான் தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான் அம்மா.

14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இப்போது, பெரிய டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் -- ஹாஹா, அதெல்லாம் நீ இல்லாவிட்டால் நானே எது.? ஏது? ஆதார காரணமே, என் தாயே, இந்த 14வது பிண்டம் தான் அதற்கு பிரதியுபகாரமாக உனக்கு என்னால் தர முடிந்தது.

15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
திருப்பி திருப்பிச் சொல்கிறேனே. நான் வளரத்தானே நீ உன்னை வருத்திக் கொண்டாய். நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான் ''தன்னலமற்ற'' தியாகம் என்று படிக்கிறேன். நீ அதை பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள். எனக்காக நீ கிடந்த பட்டினி, பத்தியம் எல்லாவற்றிற்கும் உனக்கு நான் தரும் பிரதிஉபகாரம் இந்த 15வது பிண்டம் ஒன்றே.

16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் சுயகார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான் க ருவாகி, உருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே. தெய்வமே. என்னை மன்னித்து ஆசிர்வதி.

நான் உனக்கென்று ஒரு நாள் மட்டும் ஒதுக்காதவன். எந்நாளும் எப்போதும் நீ என் இதய தெய்வம். என் மூச்சே நீ தானே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...