Wednesday, March 24, 2021

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம்  --   நங்கநல்லூர்  J K  SIVAN 

            
    காந்தர்வ வேதம்  . 

ஒரு பழைய நினைவு.  எந்த நினைவும் ஆரம்பத்திலோ , நடுவிலோ, முடிவிலோ  மஹா பெரியவாவில் போய் தான் நிற்கும். இது எனக்கு வழக்கமாகி விட்டது. 


ஒன்றரை வருஷம் இருக்கும்.  ஒருநாள்  வாசலில்  பெஞ்சின் மீது  அமர்ந்து  காலை   ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த சம்யஹம்,....  காலாட்டல்  காலுக்கு  ரத்த ஓட்டம் தரவே  அன்றி நான் காலாடி  என்ற விருது வாங்காதவன்.  எதிரே  மார்க்கபந்து அமர்ந்து  ''சந்திர சேகரா''  ஹிந்தோள  ராக அருமையான  பாடலை பாடிக்கொண்டிருந்தார்.  மகாராஜபுரம்  சந்தானம் விசிறி அவரும் நானும். எனவே  அந்த  விதவானின் ஒரு அற்புதமான   மூன்று  பெரியவா மீதிலும்  பாடப்பட்ட சின்ன பாடல் மனதில் ஆனந்தத்தை தந்தது.  அந்த  ஆனந்த அனுபவத்திற்கு பிறகு  என்னன்னவோ பற்றியெல்லாம் பேசிய  மார்கபந்து  திடீரென்று *

 *சிவன் அண்ணா,  நீங்க  நிறைய  எழுதறேளே.  மனதுக்கு  ரொம்ப  திருப்தியாக  இருக்கு. பக்கத்தை  புரட்டினா கீழேயே  வைக்க மனசில்லை. '*

'மார்க்க பந்து  எங்க ஊர் பக்கம்  அடிக்கடி  ஒரு வார்த்தை  உபயோகிப்போம்.  என்ன  அவன்  பெரிசா  ''புரட்டிட்டான்'' என்று  *
அந்த  வார்த்தையை  பெரியவா  கூட  யூஸ்  பண்ணியிருக்கா   அற்புதமான விஷயம் தந்திருக்கா அதை வைத்தே,  படித்திருக்கிறீர்களா.
'அப்படியா எங்கே  அதைச் சொல்லுங்களேன்''
''நானும் படிச்சது தான் '' எங்கே  எப்போ  யார் எழுதினா அதை என்பது முக்கியமில்லை என்கிறதாலே  நோட் பண்ணலை. தெய்வத்தின் குரலில் தான் படித்தேன்  என்று  ஒரு அனுமானம்.
++
அவன் என்ன புரட்டிவிட்டானா? என்பது   சாதாரணமாக ஒரு அன்றாட வழக்கில்  இருக்கும்  சொல்.   புரட்டுவதற்கு என்ன இவ்வளவு முக்கியத்துவம்? என்று  யோசித்துப் பார்த்தால், முறைப்படி புரட்டுவது ரொம்பவும் பெரிய, அர்த்தமுள்ள விஷயம் என்று தெரிகிறது. 

அநேக கலைகள் புரட்டுவதினாலேதான் பிறந்திருக்கின்றன.
இத்தனை புஸ்தகங்கள் நம்மிடம் இருக்கின்றன. ஒரு சில எழுத்துக்களைப் புரட்டி வைத்து வார்த்தைகளாக்கியதால்தானே இத்தனை புஸ்தகங்களும் வந்திருக்கின்றன. 
நம்மைவிட இங்கிலீஷ்காரர்களுக்கு எழுத்து இன்னும் குறைவு. இருபத்தாறே எழுத்துக்களைப் புரட்டிப்  போட்டு விட்டு ஏராளமாக எழுதிவிட்டார்கள். அந்தப் புரட்டலில்   ஓர்  முறை,  அழகு.  இருந்துவிட்டால்  அது கலையாகிறது. நமக்கும் வார்த்தைகள் தெரிகின்றன. கவியும் அதே வார்த்தைகளைத்தான்  புரட்டி வைக்கிறான். உடனே அதில் ரஸம் பிறக்கிறது. கவியைக் கொண்டாடுகிறார்கள். நாம் வார்த்தையைப் புரட்டி எழுதினால் அதை யார் மதிக்கிறார்கள் ? தாகூர் மாதிரி ஒருவர் புரட்டுகிற புரட்டினால் ஏக மதிப்பு உண்டாகிறது. அக்ஷர லக்ஷம் என்கிறார்கள்.

சித்திரக் கலையும் இப்படியேதான். வர்ண குப்பிகளையும் பிரஷ்ஷையும் வைத்துக்கொண்டு நாம் புரட்டுவது ரஞ்சகமாக இல்லை. ஆனால்  சைத்திரிகன் அதே வர்ணங்களைப் புரட்டினால் அது  கண்ணுக்கும் மனதுக்கும்  ஆனந்தம் தருகிறது.

சங்கீதமும் புரட்டல்தான். நாம் எல்லோரும் சத்தம் போடுகிறோம். அந்தச் சப்தத்தை ஸ்வரங்களைகப் பாகுபடுத்தி, இதற்கப்புறம் இது , அது  என்று அழகாகப் புரட்டிப்  புரட்டி  போட்டு  பாடும்போது  எத்தனை   இன்பம் உண்டாகிறது. நன்றாகப் புரட்டினால் நிறைய இன்பம். புரட்டலில் நிபுணனாக இருப்பவனுக்கு ஒரு மணிக்கு   எத்தனையோ  ரூபாய்கள் என்று  சம்பாவனை  தருகிறோம். நாம் சத்தம் செய்தால் ஒய வைப்பதற்கு பணம் கொடுக்கலாம். புரட்டல் இன்பம் இப்படிப்பட்டது.

நமது தொண்டை என்கிற மாமிச வாத்தியத்தில் காற்றைப் புரட்டுகிறோம். தவிர சங்கீத வாத்தியங்கள் பல இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் இந்த புரட்டல் மாத்திரம் பொது. தவில், மிருதங்கம், கஞ்சிரா போன்ற சர்ம வாத்தியங்கள் தோலில் புரட்டுகிறார்கள். வீணை, தம்பூர், பிடில் போன்ற  ரந்திர  வாத்தியங்களில் தந்தியில் புரட்டுகிறார்கள். 

இந்த வாத்தியங்களில் புரட்டுவதற்கு நடுவே இழைந்து வரும் அநுரணனம் என்ற இழைப்பு ஒலி நயமான இன்பம் தருகிறது. ஒருதரம் மீட்டினால் உண்டான ஒலி நீடித்து, இரண்டாவது மீட்டில் எழுப்பும் ஒலியோடு கவ்வி நிற்கிறது. இதுவே, அநுரணனம், புல்லாங்குழல், நாயனம் எனும்  நாதஸ்வரம், போன்ற துவாரமுள்ள  வாத்தியந்தான். அதில் வாய்க்குப் பதில் துருத்தி இருக்கிறது. புல்லாங்குழலிலும் நாயனத்திலும்  துவாரங்களை விரலாம் மாற்றி மாற்றி அடைத்துத் திறக்கிறார்கள் என்றால், ஹார்மோனியத்தில் பில்லைகளை மாற்றி மாற்றி அழுத்தி எடுக்கிறார்கள். தத்துவம் ஒன்றுதான்.  காற்றை  கண்ட்ரோல் பண்ணி அனுப்புவது.

சப்தத்தைப் புரட்டுவதோடு, அங்கங்களைப் புரட்டி விட்டால் நாட்டியக் கலை உண்டாகிறது. சங்கீதத்தால் காதால் கேட்டு அர்த்த ஆனந்தமும், ஸ்வர ஆனந்தமும், பெறுகிறோம். நாட்டியத்தில் இவற்றோடு கண்களால் பார்த்து, அங்கசர்ய ஆனந்தமும் (அங்கங்களைப் முறைப்படி அசைப்பதால், புரட்டுவதால் ஏற்படுகிற இன்பமும்) பெறுகிறோம்.
நவரஸ உணர்ச்சிகளை விளக்குகிற அங்க அசைவான அபிநயம் மட்டும் இல்லாமல், நவரஸமில்லாத வெறும் அங்கசரியை (அங்கப் புரட்டு) மட்டுமே ஆனந்தம் தருவது உண்டு என்பதால்தான் நிருத்தம் என்ற கலை ஏற்பட்டிருக்கிறது.

ஈஸ்வரனுக்குச் செய்கிற அறுபத்துநாலு உபசாரங்களில் சங்கீதத்தோடுகூட, நிருத்தமும் உபச்சாரமாக சொல்லப்படுகிறது. கீர்த்தனத்தில் சப்தம், அர்த்தம், லயம் யாவும் சேர்த்து இன்பம் தருகின்றன. ராக ஆலாபனத்தில் வெறும் சப்தம் மாத்திரம் ஆனந்தம் தருகிறது அல்லவா? நிறுத்தத்தில் வெறும் அங்கசரியை மட்டும் லயத்தோடு சேர்த்து ஆனந்தம் தருகிறது.
இந்தக் கலைகள் யாவும் கந்தர்வ வேதம் எனப்படும். கந்தர்வர்கள் உற்சாகப் பிறவிகள், அவர்கள் எப்பொழுதும் பாடிக் கொண்டும்  ஆடிக்கொண்டும்  இருப்பார்கள். மனதுக்கு உற்சாகம் தரும் கலைகளுக்கு இதனாலேயே காந்தர்வ வேதம் எனப் பெயர் ஏற்பட்டிருக்கிறது.  கந்தர்வ கானம்  என்பது சுகமான இசை யை   இவ்வாறு புரட்டலில் அனுபவிப்பது. 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...