Tuesday, March 30, 2021

NOSTALGIC THOUGHT

 



அது   அக்காலம்......   நங்கநல்லூர்   J K  SIVAN 

காலையில் பேப்பரை திறந்தால் அதிகமாகும்  கொரோனா கேஸ்கள் பற்றி சொல்கிறது. குழந்தைகள் வெளியே சென்று விளையாட முடியவில்லை.  பொது இடங்களில் சென்று  விளையாட வழியில்லை. வீட்டிலே இருந்தாலும்  ஒவ்வொன்றின் கையிலும் மொபைல்  டிஜிட்டல் கேம்,  டிவி  பார்ப்பது குறைந்து விட்டது. புத்தகம் படிக்கும்  பழக்கம் பறந்து போய்விட்டது..  ஓடி ஆடி  விளையாடும் குழந்தைகள் குறைந்துவிட்டன.  
  
75 வருஷங்களுக்கு  முன்பு எனக்கு   விளையாட  நிறைய  இடம் இருந்தது.  பையன்களும் நிறைய பேர்  அண்டை அசலில் இருந்தார்கள். வீட்டிலும்  யாரும் தடுக்கவில்லை. எல்லோருமே  அநேகமாக   சட்டையில்லாமல் தான்  அரை நிஜாரோடு சுற்றினோம். காலில் செருப்பு எவருக்குமே  இல்லை.
 ஓடிப்பிடிப்பது.  கில்லி  தண்டு, பச்சை குதிரை தாவுவது. ஒளிந்து கொண்டு பிடிபடும் ''டீயாண்டோர்'' (இன்று வரை இதற்கு அர்த்தம் தெரியாது. ஆனால் விளையாட்டு விதிகள் நினைவிருக்கிறது).  நெருப்பு பெட்டிக ளுக்கிடையே  நீண்ட  கம்பியையோ,  காற்றாடி மாஞ்சா  நூலோ  இணைத்து,  தூர  ஒரூ முனையில் ஒருவன் மற்றொரு முனையில் மற்றொருவனோடு  பேசுவோம்.  நாங்கள் கண்டுபிடித்த டெலிபோன் இது.

கில்லி தாண்டு  விளையாட்டில் ஜான் பாஷா கூரான  இரு முனைகளை கொண்ட குண்டு மரத்துண்டு ஒன்றை வேப்பமரத்துக் கிளையில்  செதுக்கிக் கொண்டு வருவான் அதுவே கில்லி.  ஒரு சிறு குழி தோண்டி அதில் கில்லியை படுக்க போட்டு, குச்சியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறுகையால்  வேகமாக கில்லியை  குழியை விட்டு நெம்பி தள்ளி  யார்  அதிக தூரம் தள்ளுகிறார்களோ. அவர்கள் தப்பினார்கள். அருகிலேயே விழுந்தால் அவ்வளவு தான். அந்த துரதிர்ஷ்ட சாலி ''காஞ்சி காய்ச்ச்சப்' படுவான்.

குழியைச்  சுற்றி ஒரு வட்டம். அதற்குள் கில்லியை போடவேண்டும்.  குச்சியாளன்  அதை தடுக்கவேண்டும். வட்டத்துக்குள் விழுந்தால்  அவன் அவுட்.  வெளியே விழுந்தால். அங்கிருந்து கில்லியை அடித்து தூர அனுப்புவார்கள்.  கில்லியை அடிக்க ஒரு தடிமனான  ஒன்றரை அடி நீள  குச்சி தான் தண்டு. இந்த விளையாட்டில் முதலியார் வீட்டு பையன்  பாலன்  டெண்டுல்கர்.,  கில்லியின் ஒரு முனையை  கீழே வேகமாக  தட்டி  மறு முனையோடு அது மேலே எழும்பும்போது குறிபார்த்து  லாகவமாக அதை குச்சியால்  அடிப்பான். விர்ரென்று பறக்கும்.  பல வீரர்கள் அதை பிடிக்க முயல அவர்கள் தலைக்கு மேல் அது சிக்ஸர்  பிரயாணம் செய்யும்.  அது விழுந்த இடத்தில் இருந்து கில்லியை   எதிர்கட்சி  யாளன்  குழியை நோக்கி  வீசுவான். வட்டத்தை விட்டு வெளியே எங்கோ விழுந்த கில்லி  மீண்டும் அடி பட்டு  பறக்கும். இப்படியே  வெகு தூரம் கில்லி செல்ல செல்ல,  'தோற்றவன் ''கத்திக் காவடி நவாப்பு சாவடி'' என்று கத்திக்கொண்டே தலைக்கு மேல்  குச்சியை பிடித்துக்கொண்டு நொண்டிகொண்டே  வர  வேண்டும். . சும்மா சொல்ல கூடாது. நுரை தள்ளிவிடும்  ஓடி ஓடி.

பச்சை குதிரை விளையாட்டில்  முதலில்  சின்ன பையன்கள், குள்ளமானவர்கள் குனிந்து முழங்காலை கெட்டியாக பிடித்துக்கொண்டு  நிற்பார்கள். மற்றவர்கள்  ஓடி வந்து அவர்கள் முதுகில் கைகளை ஊன்றி  அவர்களைத்  தாவ வேண்டும். கால்கள் குனிந்தவன் உடலில் படக்கூடாது.  தாவும் போது தவறி விழுந்தால் அவுட்.  சின்ன பையன்களை தாண்டி விட்டு  அடுத்து   பெரிய பையன்களை  தாவுவது சிரமம்.  கொஞ்சம் கொஞ்சமாக  குனிந்தவன் நிமிர்ந்து கொண்டே வருவான். அவனை அப்போது தாண்டுவது முடியாத காரியம்..

கபடி ஆடுவோம்.  காற்றாடி சீசனில் கலர் கலராக  காற்றாடிகள்  பறந்து மரங்களில் சிக்கும். யார் வீட்டு  மொட்டை மாடியிலாவது அறுந்து விழுந்து அவர்கள் வீட்டிற்குள்  மாடி ஏறி திட்டு வாங்குவது வழக்கம். இருட்டு வேளைகளில் விளையாட்டு நின்று விட்டு,   கூட்டமாக அமர்ந்து கதை கேட்போம்.

சொக்கலிங்கம்  பேய்க் கதைகள் சொன்னால் மெய் சிலிர்க்கும்.  அடுத்து உட்கார்ந்திருப்பவனை பார்க்கும் போதே  அவன் கால்  தரையில் ஊன்றி இருக்கிறதா என்று பார்க்க தோன்றும்.  பேய்க்கு தரையில் கால் பாவாது என்பான் சொக்கலிங்கம்.  திகில் மன்னன் சொக்கலிங்கம். கோடம்பாக்கத்தில் ஒரு புத்தக பிரஸ் ஒன்றில்  பைண்டிங்  வேலை செய்வான். காலை வேளைகளில் மோரும்  கொடுக்காப் பளிக் காயும் விற்பான். அவனிடம்  கதைகள் கேட்டால்  மரங்கள், நிழல்கள்  எல்லாம்  பேயாக தோன்றும். காற்று சத்தம் பேயின்  ஓலமாக  கேட்கும். இரவு தூக்கம் பாதிக்கும். யாராவது அருகில் இருந்தால் தான் படுப்போம்.  தனியாக படுப்பது என்பது   நினைத்துக்கூட  பார்க்க முடியாத ஒன்று.  கரெண்ட் இல்லாத காலம்.  எங்கும்  லாந்தர் விளக்கு. வீட்டில்  நிறைய நிழல்களுடன் ஹரிக்கேன் விளக்கும்.  வெளிச்சத்தை விட இருட்டு எங்கும் அதிகம். பேய் கற்பனைக்கு இதை விட  தோதாக  ஒரு சூழ்நிலை கிடைக்குமா?

வீட்டில் ஏதாவது ஒரு வேஷ்டியோ நீளமான துண்டோ  கிடைத்தால்  அதை தலைக்கு மேலே இரு கைகளிலும் பிடித்துக்  கொண்டு வேகமாக ஓடும்போது அது  நீளமாக  பாரசூட்  குடைபோல் காற்றில் விரியும். இது ஒரு விளையாட்டு. வேகமாக ஓடினால் தான் காற்றில் அது நீளமாக  தலைக்குமேலே  விரியும்.

கைகளை ஸ்டீரிங் வீலாக  வளைத்து வளைத்து  அசைத்து  வாயில்  கார்  சப்தம்,   சக்கரம்,பெட்ரோல் இல்லாத கார்  இப்படி   ஒட்டியிருக்கிறேன். ஹாரன் சப்தம்  வாயில்  ஒலித்துக்கொண்டு  என்னோடு  ஓடும் நண்பர்கள் இருந்தார்கள். வீட்டில்  எதாவது சாமான் வாங்கி வா என்று கடைக்கு அனுப்ப மாட்டார்களா என்று காத்திருப்பேன். உத்தரவு கிடைத்தால் என் கார்  ஹாரன் அடித்துக்கொண்டே வேகமாக சத்தம் போட்டுக் கொண்டு கடையை நோக்கி  ஓடும். சாமானோடு திரும்ப வந்து வீட்டில்  எங்காவது ஒரு மூலையில் கார் நிற்கும். என் சட்டையைப் பிடித்துக்கொண்டு பின்னால் ஓடி வருபவன் தான்  காரில் என்னோடு சக பிரயாணி.

யார் வீட்டிலாவது  ஊஞ்சலில்  (அனேக வீடுகளில் அப்போதெல்லாம் ஊஞ்சல் இருந்தது)   உட்கார்ந்து  ரயில் மாதிரி சப்தம் செய்து  ஸ்டேஷன்கள் நிறைய  கடந்து  அங்கங்கே பிரயாணிகள் மூட்டை முடிச்சோடு   இறங்கி ஏறி  விளையாடியது மீண்டும் இனி  நடக்கப்போவதில்லை. இதில் என்ன வேடிக்கை என்றால்,  ரயில் ஓட்டுபவன், பெஞ்சில் நடுவில் அல்லது ஒரு ஓரத்தில் இருந்து ரயில் என்ஜின் மாதிரி கத்திக்கொண்டு  சைதாப்பேட்டை, அதை அடுத்து மாயவரம், என்று மனம் போன படி எல்லாம்  ஊர்  பேர் சொல்வான். அவனுக்கு எது எங்கே இருக்கிறது என்று தெரியாது. பேர் மட்டும் கேட்டிருப்பான். ஒருவன் டிக்கெட் கொடுப்பான். ஓசிப் பயணம் கிடையாது.

இரும்பு வளையங்கள்  கொண்டு வந்து  அவற்றை  இயக்க  கம்பிகளின்  முனையில்  U  மாதிரி வளைத்து  U வில் வளையத்தை வேகமாக தள்ளி வண்டி விடுவோம். இதில் ரேஸ் உண்டு.  ஜெயித்தவனுக்கு  எத்தனை  தீப்பெட்டி  லேபில் என்று கணக்கு உண்டு. ' மேச்சஸ்'   என்று பெயர் அந்த லேபிலுக்கு. இதிலும் ஜான் பாஷா  நிபுணன். அவன் சக்கரம்  கீழே  சாயவே சாயாது . வேகமாக ஓட்டிக்கொண்டே ஓடுவான். சில பேர்  சிகரெட் பாக்கேட்களின்  அட்டைகளை வெட்டி நிறைய சேர்த்து வைத்திருப்போம்.  என்னிடம்   இருந்தவைக்கு  பாசிங்க்ஷோ, வில்ஸ்,  சார்மினார்  என்றெல்லாம்  பல பெயர்கள் உண்டு .   பேர்கள் இப்போது மறந்து விட்டது. கோபால கிருஷ்ணன்  எங்கள்  வீட்டிற்கு மூன்றாவது வீடு. பிள்ளையார்  கோவிலுக்கு பின்னால் இருந்த  கோவில் அர்ச்சகர் ராமமூர்த்தி சாஸ்திரிகள் பையன். நிறைய சிகரெட் பாக்கெட்டுகளின்  பேர் ஒப்பிப்பான்.  அவன் அப்பா காதில் பட்டதில்லை.  விழுந்திருந்தால் தோலை  உறித்திருப்பார். ,

பம்பரம் சாட்டை ஒரு காலத்தில் போட்டி நடக்கும்.  குண்டு பம்பரங்களில் ஆணி  கூறாக கீழே நீட்டி இருக்கும். சாட்டை என்ற கயிற்றை பம்பரத்தின் வயிற்றில் சுற்றி இழுத்து விடுவான். அந்த சுழற்சியில்  பம்பரம் கீழே விழுந்து சுற்றும். அதை கையில் ஏந்துவது ஒரு கலை. கையால் அதை சுற்றும்போது ஏந்தி அடுத்தவனின்  சுழலும் பம்பரத்தை அது தாக்கி.  அந்த மற்றவன் பம்பரம் செத்து விழும். அதை ஒரு வட்டத்தில் வைத்து  மற்ற பம்பர தாரிகள் அதன் மீது   தங்கள் பம்பரத்தை சுழற்றி குத்து வார்கள். அது ரணகளப்படும் . அதன் சொந்தக்காரன் கண்களில் ரத்தம் சொட்டும். கையை உயர்த்தி பம்பரத்தை கயிற்றிலிருந்து விடுவித்து குறி பார்த்து  அந்த  அப்பாவி பம்பரத்தை குத்தி குதறுவது   ஒரு வீர விளையாட்டு.

பெண்கள்  தாயக்கட்டை, பல்லாங்குழி, ஸ்கிப்பிங்,   ஏழு கல்,  அம்மானை, மண்ணில் பள்ளம் தோண்டி  புளியங் கொட்டையை புதைத்து மேடுறுத்தி, இரு கைகவிரல்களை கோர்த்துக்கொண்டு  ஏதாவது ஒரு இடத்தில் தொபீர் என்று வைக்கவேண்டும். அந்த பகுதியில் புளியங்கொட்டை கிடைக்கா விட்டால் மீண்டும்  தேடல்.  இது மிகவும் சுவாரசியமாக விளையாடுவார்கள்.  ஏரோப்ளேன்  என்று  பாண்டி  ஆட்டம். ஒரு மரத்தடியில் நடக்கும்.   கண்களை துணியால் கட்டிக்கொண்டு  பிடிப்பது கொஞ்சம் டேஞ்சர் தான்.   ஆனால்  போடமாட்டார்கள், கையால் துழாவிக்கொண்டே  சுற்றி சுற்றி நடப்போம்.

வீட்டிலோ  பள்ளியிலோ  விசேஷம் என்றால்  பெண்கள்  இடுப்பில்  ஒட்டியாணம் கட்டிக்கொண்டு  கும்மி அடிப்பது விநோதமாக இருக்கும்.  நடுவில் கூடையை வைத்து சுற்றி சுற்றி வந்து கைகோர்த்து  கை தட்டி பாடிக்கொண்டு   பச்சை மலை  பவழ மலை  எங்கள் மலை அம்மே   பாடி ஆடுவார்கள்.  எல்லா பெண்களுமே பூ தொடுப்பார்கள்.  தலை நிறைய  பூ வைத்திருப்பார்கள்.

உட்கார்ந்தால்  பிடிப்பாயா, நின்றால் பிடிப்பாயா  என்று அகப்பட்டுக்கொண்ட ஒருவனை பிடித்து ஆப்ஷன் கேட்டு அவனைத் திணற அடிப்போம்.  நின்றால் பிடிப்பேன்  என்று சொன்னால்  எல்லோரும் நிற்பார்கள். யாரையாவது பிடிக்க வருவதற்குள் அவன் அமர்ந்துவிடுவான்.  அதேபோல் உட்கார்ந்தவனைப் பிடிக்க வரும் முன்பு அவன் சட்டென்று எழுந்து விடுவான்.

இப்போதெல்லாம் உட்காரவும் முடியவில்லை, நிற்கவும் முடியவில்லையே.

தெருக்கூத்து  சில தினங்கள் பனைமரத் தோப்பில் நடக்கும். ஐந்து ஆறு மணிக்கே  கூட்டம் சேர ஆரம்பித்து விடும்.  இருட்டிய பிறகு, தீ வட்டி வெளிச்சத்தில் அல்லது வசதி உள்ள இடங்களில் பெட்ரோமாக்ஸ்  விளக் கொளியிலும்  கூட  கூத்து நடைபெறும். அனைவருமே ஆண்கள் தான்.. பெண்கள் வேஷம் போட்டுக் கொண்டு ஆடுவார்கள் பாடுவார்கள்.  ஜெயராமன்  என்ற  எங்கள் வீட்டுக்கு துணி வெளுப்பவன் தான் கிருஷ்ணன். முன் பற்கள்  மூன்று இல்லை. ஐந்தடி  உயரத்தோடு முதுகு கொஞ்சம் கூனி  இருக்கும்.  முன் வழுக்கை தலைக்கு பின் புறம்  கழுத்து வரை  சுருள் சுருளாக முடி. , சூம்பிய சுருங்கிய  மாவடு  முகத்தில் நிறைய  பச்சையும்  நீலமும்  சாயம் பூசிக்கொண்டு, தலையில் ஜரிகை கிரீடம் வைத்துக்கொண்டு,

முழுக்கை சட்டையின் மேலே  அங்கங்கே  கை, கழுத்து  மார்பு எல்லாம் மறைக்க எல்லா வித நிற பட்டை பட்டையாக  மணிகள் கோர்த்த அட்டை மாலை, கவசம்  அணிந்து, காதை சுற்றி  ஒரு குண்டலம் மாட்டிக்கொண்டு  கையில்  ஒரு மூங்கில் குச்சி (அது தான்  புல்லாங்குழல்)   கீச்சு குரலில் பாடிக்கொண்டே  சுற்றி சுற்றி வருவான்.  கழுத்தில்  காகிதப்பூ மாலைகள் நிறைய அணிந்திருப்பான். சட்டையை உள்ளே விட்டு  வேஷ்டியை இருப்பில் வரிந்து முடிந்து  கீழ்ப் பாஸ்  கட்டிக்கொண்டு இருப்பான். இது தான்  பீதாம்பரம்.  ஒவ்வொரு காட்சியில் இடைவெளியில்  பனை மரத்தடியில்  பீடி குடிப்பான். கிட்டேயே வரமுடியாத துர்கந்தம். ஜெயராமன்  நிறைய  நாட்டுப் பாடல்கள் மனப்பாடம் பண்ணி  பாடுவான். அல்லி அர்ஜுனா, சுபத்ரா கல்யாணம், நல்ல தங்காள் பழையனூர் நீலி, அண்ணன்மார் கதை,   தெருக்கூத்து போடுவார்கள். இரவெல்லாம்  நடக்கும். நிறைய  பேர்  அசையாமல் உட்கார்ந்து பார்த்து கூடவே பாடி, ஆடி கைதட்டுவார்கள். பெண்கள்  அழுவார்கள். ஜெயராமன் மற்றவர்களுக்கு,   தான் கற்பனை செய்த  டயலாக்  சொல்லிக் கொடுப்பான். அவர்கள்  யாருக்குமே  எழுத  படிக்க தெரியாது. எனவே  வாயால் சொல்லி மனப்பாடம் செய்வார்கள்.

இன்னும் நிறைய சொல்லவேண்டும் போல் இருக்கிறது. ஞாபகம் வரும்போது  சொல்லட்டுமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...