Wednesday, March 17, 2021

ORU ARPUDHA GNANI

 

ஒரு அற்புத ஞானி      ---    நங்கநல்லூர்  J K  SIVAN ---

சேஷாத்திரி ஸ்வாமிகள் 


         ''புரியாத புதிர்கள் ''

நமக்கு  வரும் துன்பங்கள்  நாம்  சாப்பிடுபவைகளால்  தான் அதிகம்  வருகிறது.  சர்க்கரை  கலந்த  இனிப்பு வகையறா  பக்ஷணங்கள், கேசரி, அல்வா, லட்டு, மைசூர்பாகு, அதிரசம் இதெல்லாம் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா?.  ' வேண்டவே வேண்டாம்''  ஒன்று ஒருவர்  ஓடினால் ''  ரெண்டு விஷயம் நிச்சயம்.  ஒன்று அவர்   இனிப்பு பண்டங்களை அதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு திகட்டிப் போயிருக்கும். அல்லது அவற்றை   பண்ணுபவராக இருப்பார்.   பார்த்துப் பார்த்து அலுத்துப்  போயிருக்கும் . அப்படியும் இல்லை யென்றால் பிடிக்காது என்று சொல்லாமல், '' ஐயோ வேண்டாம்'' என்று சொல்பவரானால் அவர் ஏற்கனவே நிறைய  தனது உடலிலேயே  ''சர்க்கரை'' உள்ளவராக இருப்பார்.

திருவண்ணாமலை அன்னசத்திரம் உக்ராணம் (சமையல் கட்டு) அறையில் ஒரு மாடப் பிறையில் மூன்று   குஞ்சாலாடுகள் வைத்திருந்தது.  கை கொள்ளாமல்  ஒவ்வொன்றும்  அரைகிலோ எடை இருக்கும்படி  பெரிதானவை. அங்கே அதைக் கொண்டு  வைத்தவர் சூணாம்பட்டு திருவேங்கட முதலியார். ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டு விட்டு கையில் ஸ்டாக் கொண்டு வந்தவர்.   சேஷாத்ரி ஸ்வாமிகள் அந்த நேரம் பார்த்து அன்ன சத்திரத்துக்குள்  நுழைந்தார். 

முதலியார் ஸ்வாமிகளைப் பார்த்துவிட்டு உள்ளே சென்று ஒரு குஞ்சாலாடுவைக் கொண்டு வந்து எதிரே வைத்தார். ஸ்வாமிகள் அதைச்  சாப்பிடமாட்டார்.  வழக்கம்போல் வாரி இறைத்து விடுவார் என்று தெரியுமே.

அதை வாங்கிக்கொண்ட ஸ்வாமிகள் கொஞ்சம் சாப்பிட்டார்.

''இன்னும் ரெண்டு உள்ளே உக்ராண அறையில் வச்சிருக்கியே அதையும் கொடேன்'' என்கிறார்.

 எப்படி தான் உள்ளே  மறைவாக வைத்தது  ஸ்வாமிகளுக்கு தெரிந்தது.  ஆச்சர்யப்பட்ட முதலியார் மீதி ரெண்டையும் கொண்டு வந்து தர, அவர் எதிர்பார்த்தபடியே ஸ்வாமிகள் அவற்றைப் பிட்டு அங்கு இங்கு என்று எல்லா இடத்திலும் போட்டு விட்டு போய்விட்டார்.
++

திருவண்ணாமலை மேல் ஒரு குகையில் கண்ணாடி ஸ்வாமிகள் என அழைக்கப்பட்ட  ஒரு  சாது  இருந்தார். (இந்த கண்ணாடி ஸ்வாமிகள் அதிஷ்டானத்தை சேஷாத்திரிஸ்வாமிகள் ஆஸ்ரமத்தில் பார்த்தேன். நுழை வாயில் தாண்டி உள்ளே சென்றதும் முன்னாடியே இருக்கிறதே).

ஒரு சமயம்  கண்ணாடி  ஸ்வாமிகளுக்கு  யாரோ  நிறைய  மைசூர்பாகு  தந்தார்கள். அதை ஒரு பானையில் போட்டு குகையில் ஒரு இடத்தில்  வைத்திருந்தார்.  ஆண்டு  மழை கொட்டோ கொட்டு என்று பெய்ய,  மழையில்  நனைந்துகொண்டே  அங்கு வந்த  சேஷாத்திரி ஸ்வாமிகள் கண்ணாடி ஸ்வாமிகள் குகை வாசலில் நின்றார். தொப்பலாக நனைந்த சேஷாத்திரி ஸ்வாமிகளை   கண்ணாடி ஸ்வாமிகள்   உள்ளே  அழைத்தார். உள்ளே சென்றார்.   உள்ளே  போன  சேஷாத்திரி ஸ்வாமிகள்  சும்மாவா இருந்தார்?

''உள்ளே பானையில் மைசூர் பாகு இருக்கே உனக்கு பிடிக்காதா. எனக்கு பிடிக்குமே?''
 கண்ணாடி ஸ்வாமிகள்  கொண்டு வந்து கொடுக்க சிறிது எடுத்து  வாயில் போட்டுக்கொண்டே மழையில் நனைந்து கொண்டே  ஸ்வாமிகள்  திரும்பி விட்டார்.
++
அன்று சந்திர கிரஹணம். இரவு பத்து மணிக்குப் பிறகு தான் ஆகாரம் எடுத்துக் கொள்வார்கள். இதனால் திருவண்ணாமலையில் ஸ்வாமிகளுக்கு யாரும் எந்த ஆகாரமும் கொண்டு வந்து தரவில்லை. எஸ். ஜெயராம் முதலியாரும் அவர் மனைவியும் பக்தர்களாயிற்றே. காலையில் இருந்து கிரஹணத்துக்காக உபவாசம் இருந்ததால் யாருமே அவருக்கு ஆகாரம் கொடுத்திருக்க மாட்டார்களே. நாமாவது ஏதாவது கொண்டு கொடுப்போம் என்று சில பக்ஷணங்கள், பழங்களோடு ஸ்வாமியைத் தேடிச் சென்றார்கள். 

சடைச்சி வீட்டு திண்ணையில்  ஸ்வாமிகள்  உட்கார்ந்திருந்ததை  பார்த்துவிட்டு அவரிடம் சென்று கொடுத்தார்கள். அவர்கள் கொண்டுவந்தது எதையுமே  ஸ்வாமிகள்  ஏற்க வில்லை. முதலியார் அவரோடு இரவு வரை இருந்தார்.

''எனக்கு சாதம் , ரசம், பருப்பு துவையல் கொண்டு வருவியா?'' என்று முதலியாரை திடீரென்று கேட்டார் ஸ்வாமிகள் .

''அவா கொண்டு வந்த பக்ஷணங்கள், பழங்களை எல்லாம் வேண்டாம் என்று சொல்லி விட்டு பருப்பு துகையலை கேக்கறியா நீ'' என்று ஸ்வாமிகளை பார்த்து சடைச்சி அம்மாள் சிரித்தாள்.  இருவருக்குள் அவ்வளவு அன்னியோன்னியம்.

ஜெயராம் முதலியார் உடனே வீட்டுக்கு ஓடினார். சீக்கிரம் ஸ்வாமிகள் கேட்டதையெல்லாம் மனைவியை த் தயார் செய்யச்  சொல்ல வேண்டும் என்று ஆவல். அவருக்குத்  தெரியாதது  என்ன வென்றால்   அவர் வீட்டில் அன்று அது தான் மெனு. அவர் மனைவி  ரசம்  பருப்பு துவையல் மட்டும் தான்  சமையல் செயதிருந்தாள் .  இது எப்படி  சேஷாத்ரி ஸ்வாமிகளுக்குத் தெறித்தது.    ஸ்வாமிகளை  அப்படி சட்டென்று புரிந்து கொள்ள முடியுமா. முடிந்தால் நமக்கும் அவருக்கும் என்ன வித்யாசம்?
++

ஜெயராம் முதலியார் மனைவி ஒரு நாள் இரவு ஒரு சொம்பில் பசும்பால் காய்ச்சி எடுத்துக்கொண்டு வந்து ஸ்வாமிகளுக்கு கொடுத்தாள் . ரெண்டு மூணு நாள் சாப்பிடாத ஸ்வாமிகள் அதைக் குடித்து செம்பைக் கொடுத்ததும் அவள் வீடு போக திரும்பினாள்.

''இரு.   இப்போ போகாதே, பாம்பு வந்திருக்கு அதுக்குப் பசி. உன்னை கடிச்சிடும். விஷம். இங்கேயே இரு''

அவள் பேசாமல் திண்ணையில் அமர்ந்தாள். ரெண்டுமணி நேரம் கழித்து ''சரி இப்போ போ'' என்கிறார்.

அவள் வீட்டுக்குச் சென்று ஸ்வாமிகள் சொன்னதைக் கேட்டவர்கள் , எப்படி ஸ்வாமிக்குத் தெரிந்தது. பெரிய நாகப் பாம்பு ஒன்று உன் சமையல் கட்டில் ஒளிந்து கொண்டு விட்டது. மெதுவாக அதை எடுத்து அடித்து தூர போட்டு விட்டோம் . ரெண்டுமணி நேரம் அதோடு யுத்தம்.'''என்கிறார்கள்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...