Monday, March 29, 2021

DHROWPATHI

 



       ஆபத் சகாயன் -   J.K. SIVAN
       
எல்லோருக்கும் எல்லாமும் தெரியும்  என்று எண்ணுவது சரியல்ல. அதே நேரம்  யாருக்கும்  ஒன்றும் தெரியாது நம்மைத் தவிர  என்று எண்ணுவது மஹா மோசம்.   நாம் எங்கோ  படித்தோ, கிடைத்ததோ, ஒரு விஷயம்  புதிதாக  சொல்வதாக  கூறுவது   நமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். பலர் பலமுறை படித்த சமாச்சாரம் என்றால் தொடக்கூட மாட்டார்கள்.  மஹா பாரதம் ராமாயணம்  கதைகள் சம்பவங்கள் எல்லோருக்கும் அநேகமாக தெரிந்தவைகள்  என்றாலும்  ஒவ்வொரு முறையும் யார்  வாயிலாக கேட்கும்போது படிக்கும்போது அதில் ஒரு சுவாரஸ்யம் ஏற்படுகிறது ஒன்றே  போதும்    நமது இதிகாசங்கள் அமரத்துவம் வாய்ந்தவை என்று நிரூபிக்க . இப்போது நான் சொல்வதும் மஹாபாரதத்தில் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

திரௌபதி பஞ்ச மகா கன்னிகைகளில் ஒருவள். அவளுக்கும்   கிருஷ்ணனுக்கும்  உண்டான உறவு பகவானுக்கும் ஒரு  பக்தைக் குமான பரிசுத்த  அன்பு.   திரௌபதி  சாதாரணமாக நம்  போல் பிறந்தவள் அல்ல யாகத்தீயில்  சகோதரன்  த்ருஷ்டத்யும்னனோடு அவதரித்தவள்.  அவளை வளர்த்த தந்தை  ராஜா துருபதன் அவள்  கல்வி, கேள்விகளிலும் ஒழுக்கம், குடும்ப பாங்கு ஆகியவை அனைத்திலும்  தேர்ச்சி பெற  ஏற்பாடு செய்தான்.  அவள் பக்தி பூரா  கிருஷ்ணனிடமே இருந்தது.  அவளை கிருஷ்ணனுக்கு  திருமணம் செய்து வைக்க  துருபதனுக்கு  எண்ணம்.  கிருஷ்ணன்  "திரௌபதி  என்றும் என்னுடைய  பிரியமான சகி. அவளை நான் மனைவியாக நினைத்துக்  கூட  பார்க்ககூட முடியாதே”  என்று  கிருஷ்ணன்  மறுத்து விட்டான்.  ஆனால்   கிருஷ்ணனின் யோசனைப்படியே துருபதன் சுயம்வரம் நடத்தி அதில்  அர்ஜுனன் வெற்றிபெற்று  அவள் பாண்டவர்கள் மனைவியான விஷயம் ஒரு தனிக்  கதை.   மஹா பாரதத்தில் ஒவ்வொரு சம்பவமும் ஒரு அற்புத சரித்திரம்.

 திருதராஷ்ட்ரனுக்கு கண் இருந்தால்  ஒரு கண் வெண்ணை  ஒரு கண்  சுண்ணாம்பு  என்று சொல்லலாம். கண் இல்லாமலேயே அவன்  தனது புத்ரர்களுக்கு  சாதகமாகவே செயல் பட்டவன்.

பாண்டவர்களுக்கு என்று  தேசம் பிரித்தபோது ஹஸ்தினாபுரத்தை துரியோதனனுக்கும்  ஒன்றுமே விளையாத
 வறண்ட பூமியான காண்டவ ப்ரஸ்தத்தை பாண்டவர்களுக்கும் பிரித்து கொடுத்தான். கிருஷ்ணனுக்கு
 துரியோதனனின்  பங்கு இதில் அதிகம்  உண்டு என்று தெரியும்.   இருப்பினும், கிருஷ்ணன்  தேவலோக சிற்பி மயனை  அனுப்பி  காண்டவப்ரஸ்தத்தை அழகிய  சோலை வனம் மிக்க  பச்சை பசேலென்ற இந்திர பிரஸ்தமாக மாற்றி அமைத்தான். எல்லாம்  திரௌபதியின் மேல் இருந்த பாசத்தால்  தான்.  

பாண்டவர்களின் வளர்ச்சி புகழ் அனைத்தும் துரியோதனனை பொறாமைத்   தீயில் வாட்டியதால்  அவன்  மாமா  சகுனியின்  யோசனைப்படி பாண்டவர்களை சூதாட்டத்துக்கு அழைத்தான்.   

கிருஷ்ணனுக்கு சகுனியால் தான் கௌரவ வம்சமே அழியப்போவது  நன்றாகத்  தெரியும்.  அவன்  மூலமே மகாபாரத போர் மூளப்போகிறது  என்பது மட்டுமல்ல. சகுனியின் தந்தையின்  கால் எலும்பினால்  செய்யப் பட்ட தாயக்கட்டை தான்  கேட்கும்  எண்களைத்  தரப்போகிறது,   இதனால் தர்மன் தோல்வி நிச்சயம்  என்றும்  தெரியும். கவுரவர்  அழிவுக்கும் பாண்டவர் வெற்றிக்கும் முக்ய காரணம்  சகுனி  என்பதால்  கண்ணன்  தக்க சமயம் வர, காலம் கனிய பொறுத்தான் . 

துரியோதனனின்   சூதாட்ட வெற்றி தந்த மதி மயக்கத்தில், வெறியில்,  தம்பி  துச்சாதனனை அனுப்பி  தோல்வியுற்ற பாண்டவர்கள் மனைவி  திரௌபதியை  அலங்கோலமாக  சபைக்கு   இழுத்து வரச்  செய்து,   மானபங்கப்படுத்த  எடுத்த  முயற்சி  தோற்றதற்கும் கிருஷ்ணனுக்கு திரௌபதி மேல் இருந்த  அளவற்ற  பாசத்தால் மட்டுமல்ல அவளுக்கு கண்ணனிடம் இருந்த  பக்தியாலும் தான்.

 ஒரு சமயம்  பாண்டவர்களோடு திரௌபதியும்  கிருஷ்ணனும்  ஒரு  வடதேச யாத்ரை  சென்றபோது  அங்கு  ஒரு பெரிய  காட்டாறு  கடல்போல்  உருண்டு திரண்டு   ஓடிக்கொண்டிருந்தது அதன் பேரிரைச்சல்  சுற்று வட்டாரத்திலுள்ள  விலங்குகளுக்கு  கூட  அச்சத்தை உண்டு   பண்ணியது.  அப்போது  அதில் நீராடலாமா  என்று அர்ஜுனன் கேட்க  அனைவரும்  அந்த நதியில் இறங்கினர்.  

நதியில்  வெகுநேரம்  நீராடிய பின்  பாண்டவர்கள்  கரையேறினார்.  கிருஷ்ணன் மட்டும்  கரை ஏறாமல்  நீரிலேயே நின்று கொண்டிருந்ததை  திரௌபதி  கவனித்துவிட்டாள். கிருஷ்ணனின்  ஆடையை  வெள்ளம்  அடித்துக்  கொண்டு போனதை  அவள்  புரிந்து கொண்டுவிட்டாள். சமயோசிதமாக  கிருஷ்ணன் இருந்த பக்கமாக ஆற்றில்   தன்னுடைய  புடைவையில்  பாதி கிழித்து  கிருஷ்ணன்   பார்வை படும்படியாக போட்டாள்.  கிருஷ்ணன்  அதைப்  பிடித்து  உடுத்திக் கொண்டு  கரையேறினான். இதுவே   ஒரு மறக்க முடியாத   சம்பவமாக மனதில்  உறைந்து தக்க  சமயத்தில் திரௌபதிக்கு  துரியோதனன் சபையில்  முடிவில்லாத வஸ்த்ர தானம் செய்து கண்ணன்  உதவினான் என்று  சம்பவம் எங்கோ படித்தேன்.  கிருஷ்ணன் தக்க நேரத்தில் தனது நன்றிக் கடனை  திரௌபதிக்கு செலுத்தியது தான்  எல்லையற்ற புடைவை மயமா ?


அரசவையில் திரௌபதியின் க்ரிஷ்ணபக்தியை  மெச்சிய திருதராஷ்ட்ரன்  "திரௌபதி, உனது பக்தியும் கணவன்மார் மீது  உள்ள பதிவ்ரதா தர்மமும்  எனக்கு  மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது உனக்கு இரண்டு வரம் தர வேண்டும்  என்று தோன்றுகிறது. கேளேன்!” என்றான்.

''என் கணவர்களது மேல் அங்கவஸ்தரத்தையும்  அவர்களது மகுடங்களையம்  திருப்பிக்  கொடுத் தாலே போதும் ” என்றாள்  திரௌபதி. 

வெந்த புண்ணில் வேலைப்  பாய்ச்சுவது  துரியோதனனிடமிருந்து வந்த வித்தை. பாண்டவர்களிடம் அக்ஷய பாத்ரம் இருந்து அதன் மூலம் அன்றாடம் அவர்களுக்கும்  வனத்திலிருந்த அனைத்து மக்களுக்கும்  உணவு கிடைக்கிறது, அனைவரும் உண்டு அந்த பாத்ரம் கழுவி வைக்கப்பட்டால் அவ்வளவு தான் அன்று உணவு என்றும் தெரிந்து,  துர்வாசரை தன்னுடைய 60000 சிஷ்யர்களோடு பாண்டவர்களைப்  போய்  மதியத்துக்கு மேல் போஜனம் அளிக்குமாறு  கேட்க வைத்தான்.  அவனுடைய துரதிர்ஷ்டம் அன்று கிருஷ்ணனுடைய  பிறந்தநாள். 

கிருஷ்ணன் பாண்டவர்களை அன்று  சந்திப்பது வழக்கம். துர்வாசர் தனது 60000 சிஷ்யர்களோடு ஸ்நானம் செய்து வருவதற்குள்  கிருஷ்ணன்  அக்ஷய பாத்ரத்தில் ஒட்டிகொண்டிருந்த ஒரு  கீரைத்துண்டின்  மூலம் தன் பசியாறி துர்வாசரும் அவர் சிஷ்யர்களும் பசியறியாதபடி  பண்ணினது   ஏற்கனவே எழுதியிருக்கிறேன் அல்லவா?  இதெல்லாம் திரௌபதிக்காக கிருஷ்ணன் செய்த ஆபத்சகாயம் தானே!!      இன்னொரு விஷயம், திரௌபதிக்கு ஒரு பெயர்  கிருஷ்ணா.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...