Tuesday, March 23, 2021

BHADRAGIRIYAR

 


பத்ரகிரியார்     --  நங்கநல்லூர்  J K  SIVAN  --

ஸன்யாஸி ராஜாவின் குமுறல் -   

தூரியின் மீன்போற் சுழன்றுமனம் வாடாமல்
ஆரியனைத் தேடி யடிபணிவ தெக்காலம்.

என் வசம் இல்லாதது ஒன்று என்னுடையது என்றால் அது என் மனம் ஒன்றே தான். அது மீன் பிடிப்பவன் வைத்த வலையிற் சிக்கிய மீனைப்  போல ஓடி ஆடி அலைந்து தப்ப வழியில்லாமல் இருக்கிறதே.   அதை   வருந்தாமல் குருநாதனைத் தேடி அவனுடைய திருவடியை வணங்குமாறு  செய்வது  எப்போது ?.

எண்ணூ றுகமிருந்து மெய்தாத வீடுபெற
வெண்ணீறு பூசி விளங்குவது மெக்காலம்.

போகாத ஊருக்கு பதினோரு வழி சொல்வார்கள். நான் கிட்டத்தட்ட எண்ணூறு யுகம் உலகத்தில் வாழ்ந்தாலும்  அப்போதும் என்னால் அடைய முடியாத மோட்சத்தை ஒரு கணத்தில் அடைய வெண்மையான விபூதி யணிந்து  ஆனந்தமாக  ஒளிர்வது எபோது  சிவனே ?   (மந்திரமாவது நீறு, "பராவண மாவது நீறு" என்றார் ஞானசம்பந்தர். நீரில்லா நெற்றி பாழ் என்பார்கள். நீறு மாசில்லா மனத்தைக் காட்டும்.)

அவவேடம் பூண்டிங் கலைந்து திரியாமற்
சிவவேடம் பூண்டு சிறந்திருப்ப தெக்காலம்.

உலக வாழ்வில் காலையிலிருந்து இரவு படுக்கும் வரை நாம் போடும் வேஷங்கள் எத்தனை எத்தனை யோ, அதுவும் அனுதினமும். அதற்கு தக்கவாறு  டயலாக் , அத்தனையும் வடிகட்டிய பொய் , நடிப்பு,  பித்தலாட்டம். இப்படிப்பட்ட போலி வேடங்களைத் தரித்து இங்கு அலைந்து  திரிந்து உழலாமல், சிவ வேடங்களைத்  தரித்துப் பெருமை பெற்றிருப்பது எப்போது  எனக்கு முடியும் ?

அண்டருக்கா நஞ்சருந்தி அம்பலத்தி லாடுசிவன்
தொண்டருக்குத் தொண்டனெனத் தொண்டு செய்வ தெக்காலம்.

தேவர்கள் பொருட்டு விஷத்தைப் பானஞ் செய்து சிற் சபையில் நடம் புரியுஞ் சிவபெருமானுடைய அடியவர்க் கெல்லாம்  நான்  அடியவ னென்று அவர்களுக்குத்   தொண்டு செய்வது என்றைக்கு நிறைவேறும்? (அன்பர் பணிசெய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் - இன்ப நிலை தானேவந் தெய்தும் பராபரமே" எனத் தாயுமானார் சொல்லி இருக்கிறாரே.

பன்றி வடிவெடுத்துப் பாரிடத்து மால்காணாக்
குன்றில் விளக்கொளியைக் கூறுவது மெக்கலாம்.

தங்களில் யார் உயர்ந்தவர் பெரியவர் என்ற ப்ரம்மா விஷ்ணுவின்  அகந்தை கொண்ட  கேள்விக்குப்  பதிலாக  தானே  ஒரு அடி முடி யற்ற ஒளி ஸ்தம்பமாக ஸ்தாணுவாக சிவன் உருவெடுத்து  அவர்களுக்கு உணர்வித்து  அவர்களது  சர்ச்சையை அந்த இருவரும்  திருந்தியபின்  கைவி

ட்டார்கள் என  புராணம் சொல்கிறது.   அப்படி அடியைத் தேடி ப்போன நாராயண மூர்த்தி வராக உருக்கொண்டு பூமியை அகழ்ந்து சென்றும்   காணாத மலைமேலுள்ள விளக் கொளி போன்ற சிவபெருமானைத் தோத்திரஞ் செய்வது எந்தக்காலத்தில்  நிகழும்  என ஏங்குகிறார் பத்ரகிரியார். இந்த பாடலில்  குன்றில் விளக்கு என்பது திருவண்ணாமலையை, அண்ணாமலை தீபத்தை உணர்த்துவதாகக்  கூட  எடுத்துக் கொள்ளலாம். 

தித்திக்குந் தெள்ளமிர்தைச் சித்தாந்தத் துட்பொருளை
முத்திக்கு வித்தை முதனினைப்ப தெக்காலம்.

என் மனது என்னென்னவோ குப்பையின் பின்னால் அலைந்து பாழாகிறதே. அமிர்த மென சுவையாக இனிக்கும் சிவநாமத்தில், சித்தாந்தத்தின் இரகசியப் பொருளும், மோட்சத்துக்கு வித்து மாகிய சிவபரஞ்சுடரை நாம் முதலில் தியானம் செய்ததாக வேண்டுமே. அது எந்தக் காலம்?  சிவத்தில் உள்ளம் நுழைந்து விட்டால் அதைவிட அமிர்தம் எதுவுமில் லையே.  மணி வாசகர் ஒரு இடத்தில் ''நினைக்க மனத் தமுதாகும் சங்கரனை" என்கிறார் என்பதிலேயே  புரிந்துகொள்ளலாம்.

"சித்தாந்தத்தே சீவன்முத்தி சித்தித்தலாற் -
சித்தாந்தத்தே நிற்பர். முத்தி சித்தித்தவர் -
சித்தாந்த வேதாந்தஞ் செம்பொ ருளாதலால் -
சித்தாந்த வேதாந்தங் காட்டுஞ் சிவனையே" - திருமூலர்.

ரொம்ப  நாளாச்சு  திருமூலராய்ச் சென்று பிடிக் கப்போகிறேன்.  ஒவ்வொரு  உண்மையும்  திரு மூலர் சொல்லும் அழகே தனி.

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...