Saturday, March 13, 2021

TWO POTS

 



கண்ணீரும்  தண்ணீரும் --   நங்கநல்லூர்   J K  SIVAN 

வெயில் காலம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.   சுள்ளென்று அனல் வீசப்போகிறது.  நிறைய  தண்ணீர் குடிக்கவேண்டும்.  தண்ணீர் பற்றி நிறைய எழுதுவேன். 

நமது பரந்த  தமிழகத்தில்  எங்கோ  ஒரு மூலையில்  ஒரு சின்ன  கிராம ஊர்க் கோடியில்  ஒரு வாயகன்ற கிணறு. எந்த  மஹாநுபாவன்  எப்போதோ கட்டிய  ஆழமான கிணறு. ஊருக்கெல்லாம்  சுவையான குடிநீர்  கொடுத்தது.


ஒரு கிராமவாசி  தினமும்  தூரத்தில் இருந்த தன் வீட்டுக்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு போக  அந்த கிணற்றுக்கு வருவான்.  அவன்  தோளில்   தொங்கிய  ஒரு மூங்கில் கழியின் இரு முனைகளிலும்  ரெண்டு  பெரிய மண்  பானைகளில்  நீர் நிரப்பி  சுமந்து கொண்டு  போவது வழக்கம்.  வழியெல்லாம் பாடிக்கொண்டு போவான்.

ஒரு பானையில் சின்ன ஓட்டை.  ஆகவே  அந்த பானையில் இருக்கும் நீர் வழி யெல்லாம் சொட்டி   வீட்டுக்கு வரும்போது, பானையில் கால் பாக   நீர் அளவு குறைந்திருக்கும்.  ஆகவே  தினமும் ஒரு முழுப் பானை  ஒரு முக்கால் பானை தண்ணீர்  தான்  வீடு போய்  சேரும்.. 

நமது கதையில் பானைகள் பேசும். முழுதும் நீருள்ள பானை  ஓட்டைப் பானையைப் பார்த்து கேலி செய்தது.
''ஏய், தொண்டி , என்னைப் பார்த்தாயா, எஜமான்   நிரப்பிய  எல்லா தண்ணீரையும் நான் ஜாக்கிரதையாக கொண்டு வருகிறேன். நீயும் இருக்கியே. தண்டம், அவனுக்கு துரோகம் செய்கிறே . உன்னால்  யாருக்கு என்ன பிரயோஜனம்?''  என்று ஏசியது.
 
''என்ன பண்றது. என்னை தான்  எவனோ உடைச்சு வச்சிருக்கானே . அதுக்கு நான் என்ன பண்ணுவேன். ''  என்று மட்டுமே  நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு  ஓட்டை பானை  பொறுத்துக்கொண்டு முணுமுணுக்கும். காருக்கு கோபமே  வராது. யார் எது சொன்னாலும் வாங்கி கொள்ளும். 

முழுப்பானைக்குத் தன் திறமை  பற்றி பெருமை.   நேரம் கிடைத்தபோதெல்லாம் ஓட்டைப்  பானையைப் பார்த்து  கேலி செய்யும்.  குறையைக் கூறி கிண்டல் பண்ணும்.     இப்படியே கொஞ்ச காலம் ஓடிவிட்டது  தினமும்  கேலியும் கிண்டலும் அதிகமாக  அதிகமாக  ஒருநாள் ஓட்டை பானைக்கு துக்கம் தொண்டை அடைத்து அழ ஆரம்பித்தது.  கிராமவாசி  இதை ஒருநாள் பார்த்து விட்டான். 

''ஏன் நீ அழுகிறாய். கொஞ்ச நாளாகவே உன் கண்ணீர் தெரிகிறதே? என்ன காரணம் சொல்?''

"ஐயா! என் குறையை நினைத்து நான் ரொம்ப நொந்து கொள்கிறேன். பாவம் நீங்கள் என்னை முழுதும் நிரப்பி  சுமந்து வருகிறீர்கள்.  நானோ அதில் கால் பாகத்தை தரையில் சிந்தி விடுகிறேன். என்னால் உங்களுக்கு கஷ்டம், நஷ்டம் இரண்டுமே கொடுக்கிறேனே. என் துரோகத்தை நினைத்து அழுதேன்' முடிந்தால்  என்  மேல் உள்ள  சிறு விரிசலை, ஓட்டையை அடைத்து விடுங்களேன். நானும் உங்களுக்கு மற்ற பானையை போல்  உதவுவேனே'' என்றது.
கிராமவாசி  விவேகமானவன். சிரித்தான்.  

''ஓட்டைப் பானையே! நீ ஒன்று கவனிக்க  மறந்துவிட்டாய்.  நாம்  தினமும்  ஊர் கிணற்றிலிருந்து வரும் ஒத்தையடிப் பாதையில்   நீ  உள்ள பக்கம் மட்டும் அழகான பூச்செடிகள் மலர்வதை பார்க்கவில்லையா?

ஒருநாள் நீ  சிறு ஓட்டை வழியாக  நீரை சொட்டுவதை கவனித்து நம் வீட்டிலிருந்து ஊர் கிணறு வரை வழி நெடுக தரையைக்  கொத்தி, பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் முளைத்து இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் நமது  வீட்டில் உள்ள   கிருஷ்ணனை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன். நீ  ஓட்டைப் பானையாக இருப்பதால் எனக்கு ரெட்டை லாபம்.  வீட்டிலும் தண்ணீர் கிடைக்கிறது. பூக்களும் நீ சிந்திய நீரால் எனக்கு கிடைத்து பூவை விற்று பணமும் சம்பாதிக்கிறேன்.  ஆகவே  நீ எனக்கு இப்படியே  இருந்தால் மிக்க மகிழ்ச்சி என்பதால் உன் ஓட்டையை நான் அடைக்கவில்லை.''

இதைக் கேட்ட ஓட்டை பானை அழுகையை நிறுத்தி சிரித்தது.  இதை கேட்டுக்கொண்டிருந்த மற்ற பானை  தலையை குனிந்து ''சே  நாம்  அந்த ஓட்டை பானையாக இல்லாமல் போய்விட்டோமே. எஜமானனுக்கு  திருப்தி அளிக்க முடியவில்லையே. என்று அன்றுமுதல் ஓட்டை பானையை மதிப்போடும் மரியாதையோடும் நடத்தியது.  திருந்தியது.  பானை திருந்தி விட்டது. படித்தவர்கள்  நாம்  நிறையபேர்  திருந்தவில்லையே. 

இதில்  உள்ளடங்கி இருக்கும் நீதிகள் என்னவென்பதை வரிசையாக  செடிகள் போல்  நீங்கள் எடுத்து சொல்லுங்கள் நான் கேட்கிறேன். அரசியலை மட்டும் உள்ளே கொண்டு வர வேண்டாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...