Monday, December 30, 2019

THIRUVEMBAVAI


திருவெம்பாவை                           J K  SIVAN


         

         பேசாமடந்தையும்  பௌத்தமும்
நான் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை இது. 
அழகு தமிழை, ஆர்வமுடன், அன்பும் பக்தியும் கலந்து அளித்தவர்கள் ஆழ்வார்களும்  சைவ சமய  சிவனடியார்களும் தான். இவற்றை ஒருவன் ஆழ்ந்து ருசித்து அறிந்தால் வேறெதுவும் கற்க தேவையில்லை. பன்னிரு ஆழ்வார்களும் நான்கு சைவ சமய குரவர்களும் பாடியதை அறிந்து கொண்டாலே வாழ்வின் பெரும்பகுதி பண்பட்டுவிடும் . வேறொன்றும் கற்க தேவையில்லை எனலாம்.

திருவெம்பாவை  15வது  பாடலில்  மணிவாசகர் சித்திரிக்கும்  ஒரு காட்சி இது:

15. ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.''

'' என் அழகிய பெண்களே! இதோ இவளைப்  பாருங்கள். பித்தா பிறை சூடி பெம்மானே, என்று சதா ஆடிப் பாடி  அரற்றுபவள்..  ஒவ்வொரு சமயத்தில் திடீர் திடீரென்று  ''எம்பெருமான் என் பெருமான்'' என்று சொல்லி   ஓடி வந்து  எப்பொழுதும்   நம்மிறைவனது பெருமையை வாயினால் உச்சரிப்பதை  விடாதவள் . 


அதனால் அவள் பெறும்  மன மகிழ்ச்சி அவளது விழிகளினின்றும், ஒருபொழுதும் நீங்காதவள் ., பொய்கையில் நீராடிய நீர் உடலில் சொட்ட சொட்ட  , அதைவிட கண்களில்  சிவன் மேல் கொண்ட பக்தியால் கண்ணீர் பிரவாகமாக நீண்ட தாரை தாரையாக ஒழுக, பூமியின்மேல் வீழ்ந்து வணங்குகிறாள்.  அவனருளால் அவன் தாளை வணங்குபவள்.

எனக்கு இந்த உலகில் வேறொன்றும் வேண்டாம்.   என் சிவனே போதும்.  அவனது நாமமன்றி 
 வேறொன்றும் நான் அறியேன் பராபரமே என்பவள் . பெரிய தலைவனாகிய இறைவன் பொருட்டு ஒருவர் பித்தராகுமாறும் இவ்வாறோ? நான் ஏன் நீர் சொட்ட குளித்துவிட்டு நிற்கிறேன் என்றால் அவனைப் பார்த்து 
விட்ட பிறகு தான். 

 அதோ என் சிவன் சிரத்தில் கங்கை ஆறாக பெருகி அவன் உடல் வழியாக சில்லென்று பனி நீராக ஓடுவது தெரியவில்லையா?.  அவன் அபிஷேகப் பிரியனல்லவா? அவன் மீது வைத்த அன்பினால் தானே ''அன்பே சிவமாக'' அமர்ந்திருக்கிறேன்'' .   பிறரை அடிமை கொள்ளும் ஞான உருவினர் யார் ஒருவரோ, அவருடைய திருவடியை நாம் வாயாரப் புகழ்ந்து பாடி, அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த இந்த   சிவாலய  தீர்த்தத்தில்  நீங்களும்  குதித்து ஆடுவீராக.    எப்படிப்பட்ட  த டுத்தாட்கொள்பவர்  அந்த மகேஸ்வரன்  என்பதை  சுந்தரரை கேட்டு  தெரிந்துகொள்ளுங்கள்.  கதை கதையாக சொல்வார். 

அடேயப்பா,  சேக்கிழார் தனது பெரிய  புராணத்தில்  தான்  ஒன்றுவிடாமல்  இதெல்லாம் எழுதி வைத்திருக்கிறாரே.

மணிவாசகர் மனதில் குடிகொண்ட  எத்தனையோ  சிவாலயங்களில்  இரு முக்கிய ஆலயங்கள். ஒன்று   ஆவுடையார் கோயில் எனும் திருப்பெருந்துறை,  மற்றொன்று  சிதம்பரம் .  

சிதம்பரத்தில் மணிவாசகர் ஒரு அதிசயம் செய்தது நினைவு கூர்வோம்.

அவர்காலத்தில் சோழநாடு பாண்டியநாட்டில் எல்லாம்   சைவமதம்  தக்க ஆதரவு பெறாமல் தவிக்க நேர்ந்தது.    ஈழத்தில்  இருந்து பௌத்தர்கள் இங்கே வந்து  அவர்கள்  மதத்தை  பரப்பி  சைவமதத்தை  இழிவாக பேசினார்கள்.  அரசர்கள்  சிலரும் ஆதரித்தார்கள்.  

 எப்படி இந்த பௌத்தர்களை வாதத்தில் வெல்வது. தக்க சைவமத தலைவர் எவருள்ளார் என்று தேடிய நேரம்  தில்லை மூவாயிரவர்  சோழநாட்டு மன்னனிடம்  மணிவாசகர் சிதம்பரம் வந்து தவச்சாலையில் தங்கி இருப்பதைக்  கூறி  சிறந்த  சிவபக்தர் அவரால் பௌத்தர்களை  வாதத்தில் வெல்ல முடியும் என அரசனிடம் உணர்த்தி  அவரை அழைக்க சொல்கிறார்கள். அரசன் அனுமதி பெற்று  தில்லை மூவாயிரவர் எனும் தீட்சிதர்கள்  மணிவாசகரை அணுகுகிறார்கள். 

''என்ன,  சோழமன்னன் என்னை ஈழத்திலிருந்து வந்திருக்கும்  பௌத்த குருவோடு வாதத்தில் ஈடுபட அழைக்கிறாரா, என் இறைவனுக்கு நான்   செய்யும்  ஒரு தொண்டாக  மன்னன் அழைப்பை  மதித்து தில்லை நடராஜன் அருளோடு  வருகிறேன்'' என்கிறார்.

தில்லையில்  ஒரு மண்டபத்தில் ஏராளமான   பக்தர்கள், புலவர்கள், பண்டிதர்கள்  சபையில் கூடி விட்டார்கள்.  பௌத்த குரு  தன்னுடைய  சீடர்களோடு  ஏராளமான  ஓலைகள், , சுவடிகள்  சகிதம் வந்து அமர்ந்துவிட்டான்.   வாதத்தில் சைவத்தை தவிடு பொடியாக்கி  விடுவோம் என்கிற நம்பிக்கை அவன் முகத்தில்  ஆணவமாக  தெரிந்தது.   மணிவாசகர் என்ற துறவி வந்து அமர்ந்ததும்  அவரை ஏளனமாக பார்த்தான். இந்த பரதேசியா என்னை எதிர்ப்பவன்?   சோழமன்னன் நம்பிக்கையோடு வாதவூரரான மணிவாசகர் வாதத்தில் வெல்வார் என்று அமைதியாகி இருந்தும் அவன் முகத்தில் அவர் ஜெயிக்கவேண்டுமே என்ற கவலை இருந்தது.

தீயாரைக் காண்பதுவும் தீது என்று தீர்மானித்த  மணிவாசகர்  அரசனை தனக்கும் பௌத்தகுருவுக்கும் இடையே ஒரு திரை போட சொல்கிறார்.  திரைக்குப்  பின்னாலிருந்தே பௌத்தகுருவின்  கேள்விகளுக்கு பதில் சொல்கிறார். 

பௌத்த குருவின் கேள்விகளுக்கு தக்க பதில் சொல்லி சைவ மத பெருமையை பறை சாற்றுகிறார். மணிவாசகர்.  பல மேற்கோள்கள் காட்டுகிறார்.   பௌத்த குரு இதை எதிர்பார்க்கவில்லை.  இனி வாதத்தில் சைவ கோட்பாடுகளை எதிர்க்க முடியாது என்ற நிலை தோன்றியதும்  சிவபெருமானை தூஷணையாக, இகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டான். மணிவாசகர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவன் வாதத்தை முறையாக தொடராமல் இப்படியே  இழிவாக பேசிக்கொண்டிருக்கவே   மனம் நெகிழ்ந்த  மணிவாசகர்  மனதால்  கலைவாணியாகி  ஸரஸ்வதியை  தியானித்து  ''நாவுக்கரசியே, நாமகளே , இந்த பாதகன் எம்பிரானை இழிவாக பேசுவது என் காதில் நாராசமாக  இடிபோல் விழுந்து என்னை வாட்டுகிறதே. நாவில் உறையும் நீ எப்படி அம்மா  இதை அவன் பேசுவதை அனுமதிக்க இயலும்.  என் ஈசன் மீது ஆணை, நீ அவன் நாவில் இதை சகித்துக்கொண்டு  இந்த பாதகர்கள்  நாவில் உறைவது இனியும் தவறு'' என்கிறார்.

என்ன ஆச்சர்யம் அடுத்த கணமே பௌத்த குரு மட்டுமல்ல, அவனுடன் வந்த அனைத்து சீடர்களும் வாய் பேசமுடியாமல் ஊமையாகி  விடுகிறார்கள்.    அதிர்ச்சி அடைந்த அவர்கள்  வாதவூரர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்கள்.  அவரது தெய்வ சக்தியை உணர்கிறார்கள்.  எங்களை மன்னித்து, எங்கள் தவறை பொருட்படுத்தாது மீண்டும் பேசும் சக்தியை அருளவேண்டும். எங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு  சைவ மதத்தில்  இணைகிறோம்  அதை ஆதரிக்கிறோம்'' என்று ஜாடையாக கதறுகிறார்கள்.  

மணிவாசகர்  தில்லை நடராஜனையும் சரஸ்வதியையும் வேண்டி அவர்களை மன்னித்தருள கோருகிறார். 
பௌத்தர்கள் பேச்சு சக்தியை மீண்டும் பெற்று அங்கேயே  சைவமதத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.  ஈழத்தில்  பௌத்த மதத்தை சார்ந்த மன்னன் தனது மதத்தை தமிழ்நாட்டில் ஸ்தாபிக்க சென்ற குருவும் சிஷ்யர்களும்  தோற்று, ஊமையாகி பின்னர்  மணிவாசகர் அருளால் பேசும் சக்தி பெற்ரூ  சைவமதத்தை சார்ந்ததையும்  அறிகிறான்.  அவனுக்கு ஒரு பிறவியிலேயே ஊமையாக பிறந்த மகள். அவளை மணிவாசகர் பேச  வைத்தால் தானும் தனது நாடும் சைவத்தில் இணையும் என்று வேண்டு கிறான். 

''அழைத்து கொண்டுவாருங்கள் அந்த பெண்ணை ''என்கிறார் மணிவாசகர். தில்லை நடராஜன் சந்நிதியில்  அந்த பெண்ணை தனது அருகே அமர்த்தி பெண்ணே  இதோ எதிரில் இருக்கும் பௌத்தகுரு கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நீ தான் பதில் சொல்லவேண்டும் என்கிறார்''    தானே பௌத்தகுரு கேட்ட கேள்விகளை அந்த பெண்ணிடம் கேட்கிறார். கணீரென்ற குரலில் இதுவரை பேசாமடந்தையாக இருந்தவள் பட் பட்டென்று பௌத்த குருவின் கேள்விகளுக்கு சைவமதத்தின் பெருமையை கூறி வாதிடுகிறாள். வெல்கிறாள். அப்புறம் என்ன  ஈழ மன்னனும் மக்களும் சைவத்தை தழுவியதை  சரித்திரம் சொல்கிறது. 

இந்த கேள்வி பதிலை தான் மணிவாசகரின்  திருச்சாழல் பதிகங்கள்  திருவாசகத்தில் வினா விடையாக காட்டுகிறது. முடிந்தபோது  அதையும் படிப்போம். 



   



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...