Wednesday, December 11, 2019

BHARATHI

ஒரு அபூர்வன் பிறந்த நாள்
J.K. SIVAN

காலை வெயில் கொஞ்சம் கொஞ்சமாக உக்ரமாகிக்கொண்டு வந்தது. திருவல்லிக்கேணியில் எப்போதுமே கூட்டம் உண்டு அதுவும் பார்த்தசாரதி கோவில் பக்கம் கேட்கவே வேண்டாம். வெள்ளைக்காரன் காலம். சுதந்திர தாகம் அநேக இந்தியர்களிடையே பரவலாக தொத்திக்கொண்டு வெள்ளையர்களுக்கு நடுக்கம் தந்த வேளை.

அந்த வீட்டில் வீட்டுக்கவலையே இல்லாத பொறுப்பற்ற பிராமணர் ஒருவர் சதா ஏதோ கனவுலகத்தில் சஞ்சரித்தவராக இருந்தார். மனைவி குழந்தைகள் பற்றி பிரஞையே கிடையாது. நிறைய புத்தகங்கள் யாரிடமாவது கிடைக்கும் படிப்பது.காகிதங்களில் கிறுக்கி எழுதுவது. இதே வேலை. அன்றும் அதேபோல் தான்.

அடிக்கடி நண்பர்கள் சிலர் வருவார்கள். அந்த மீசைக்கார ப்ராமணனிடம் பேசி விட்டு போவார்கள். அவர் மனைவி சாது. எதிர்த்து பேசமாட்டாள். தாடிக்கார .குடும்ப நண்பர் வந்து திண்ணையில் அமர்ந்தார்.மீசைக்காரர் அதை லக்ஷியம் பண்ணாமல் எதையோ எழுதிக்கொண்டி ருந்தார்.

தாடிக்காரரை பார்த்த மீசைக்காரர் மனைவி ''வாங்கோ. தீர்த்தம் சாப்பிடறேளா?'' அது தான் இருந்தது வீட்டில்.

''என்ன சமையல் இன்னிக்கு?.

''வாயு பக்ஷணம். மணி அரிசி இல்லை, பருப்பு புளி நெய் தீர்ந்து போய் பல நாள் ஆகிறது. இவர் ஒன்றுமே கவனிப்பதில்லை. நானும் சொல்லி பார்த்தாகி விட்டது. இன்று தோட்டத்தில் சில கீரைகள் பறித்தேன். அது தான் மசியல் சாதம். சுட்டப்பளம். நாளை எப்படியோ? தாடிக்காரர் எப்போது ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் வைத்திருப்பார்.அன்று அதுவும் இல்லை சுப்ரமணிய சிவா விடம். கடவுளே என்று வருத்தப்பட்டார்.

காதில் வாங்காதது மாதிரி இருந்த மீசைக்காரர் தலையை தூக்கினார். தாடிக்காரரை பார்த்து '' சிவா, இதை பாருங்கோ, தான் எழுதியதை காட்டினார் மீசைக்காரர்.
தாடிக்காரர் படித்து வியந்து போனார். அந்த காகிதத்தில், அந்த மோசமான வறுமை நிலையில் மீசைக்கார பாரதியார் எழுதியது '':

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா!
(எத்தனை)

சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்
(எத்தனை)

முக்தியென்றொரு நிலை சமைத்தாய் – அங்கு
முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய் – எங்கள்
பரமா பரமா பரமா

பாரதி ஸ்தித ப்ரஞன். ஜீவன் முக்தன். பசியில் வயிறு வாடியபோதும் இறைவா எத்தனை கோடி இன்பம் தந்தாய் என்று நன்றியுடன் சொல்லும் ஒரே தமிழன். தனி ஒருவனுக்கு உணவு இல்லையென்றால் இந்த ஜகத்தையே அழித்து விடு.என்று பொதுநலமே குறியாக கொண்ட அக்னிக் குஞ்சு மஹாகவி பாரதியார். இன்று அவர் பிறந்த நாள்.

ஐந்து வயதில் அம்மாவை இழந்த சுப்ரமணிய பாரதிக்கு எல்லா பெண்களும் தாய். பெண்கள் விடுதலைக்கு பாடு பட்ட முதல் வீரத் தமிழன். பாரதியின் புதுமைப்பெண் எப்படி இருப்பவள் தெரியுமா?

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்

வெள்ளையனிடம் இருந்து தப்பி புதுச்சேரி பிரெஞ்சு அரசாங்க இடத்துக்கு சென்ற பாரதிக்கு அங்கும் சில நண்பர்கள் உண்டு. எப்போதும் ஒரு கை ரிக்ஷாவில் வேலைக்கு போவார். அவரைக்கண்டால் எல்லோருக்கும் பிடிக்கும். முக்யமாக ஏழைகளுக்கு. இந்த ரிக்ஷா இழுப்பவனுக்கும் அதே போல் அவர் மேல் பிரியம். அவரை பாட சொல்லி கேட்பார்கள். அவரை சித்தராக பார்த்தார்கள்.

''சாமி உங்களை என் ரிக்ஷாவில் இழுத்துகிட்டு போறதுக்கு காசு வாங்கமாட்டேன் என்றான் அந்த கூலியாள். இந்த மாதிரி நிறைய ரிக்ஷாகாரர்களுக்கு தன்னுடைய மேல் அங்கவஸ்திரத்தை கொடுத்திருக்கிறார். அவர் வஸ்திரத்தை போட்டுக்கொண்டால் அவரைப்போல் தமிழ் எழுத பேச கொஞ்சமாவது வரும் என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கை.
பாரதிக்கு தமிழ், ஹிந்தி, ஸம்ஸ்க்ரிதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பிரெஞ்சு, இங்கிலிஷ் , லத்தீன், கிரீக், லத்தின், அரபிக், உருது என்று 32 மொழிகள் தெரியும். இருந்தாலும் அவர் மார் தட்டி சொன்னது என்ன ஞாபகம் இருக்கிறதா?
'' யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்''

நம் எல்லோரையும் இந்த நாட்டின் மன்னர்களாக்கிய இந்த கவிஞன் தான் இந்தியாவிலேயே முதன் முதலாக தனது அனைத்து பாடல்களும் தேசியமயமாக்கப்பட்ட பெருமைக்குறியவர்.

சம்பளம் வாங்கிக்கொண்டு சுதேச மித்ரன் ஆபிசிலிருந்து ரிக்ஷாவில் வீடு திரும்பும்போது ரிக்ஷாக் காரர் தனது வறுமையை சொல்லிக்கொண்டு வண்டியை இழுத்துக்கொண்டு ஓடுகிறார். ''இந்தா இதை வீட்டுக்கு கொண்டு போ ''என்று தனது சம்பளம் முழுதும் அவனுக்கு கொடுக்க யாருக்கு தோன்றும். அது பாரதியார்.

ஜாதி அடிப்படையில் அரசுகள் தோன்ற ஆரம்பித்து நன்றி மறந்த வர் பாரதியை சிறப்பிக்க தவறிவிட்டனர். அந்த மா பெரும் கவிஞன் உயர்ந்த பரந்த நோக்கம் கொண்டவன் என்பது ஏனோ மறந்து விட்டது:

சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.

ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே- அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே

பாரதி புதுமை பித்தன் மட்டுமல்ல, சித்தனும் கூட.

எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன் இந்தநாட்டில்
பாரதி புத்தனும் கூட என்றும் இறவாத ஞானி.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...