Friday, December 27, 2019

THIRUVEMB AVAI



திருவெம்பாவை:  J K  SIVAN  



                            12    மணிவாசகரும்  ஆனாயரும்  


போன வருஷம் மார்கழியின் போது  ஒரு இனிய நண்பர்  வாளாடி  தத்தாத்ரேயன் என்னை அவர் ஊருக்கு அழைத்திருந்தார்.  16.12.2018 அன்று  அருகே  இருந்த  ஒரு ஊரில்  அற்புத சிவனை நான்  அங்கே  தரிசித்ததை  நினைவு கூர்கிறேன். 

 திருச்சியிலிருந்து லால்குடி வழியாக திருமங்கலம் என்று ஒரு ஊர். வாளாடியிலிருந்து அப்படி ஒன்றும் வெகு தூரம் முதுகு வலிக்க பிரயாணம் செய்ய தேவையில்லாத அற்புத சாம வேதிகள் வாழ்ந்த,   இன்னும்  சிலர் வாழும் ஊர். சிவனுக்கு சாமவேதீஸ்வரர் என்று பெயர். அம்பாள். லோகநாயகி. காவேரிக்கு வடக்கே இன்றும் செழிப்பாக காட்சி தரும் கிராமம். . நான் செல்வதற்கு  முன்பே  வழி தெரிந்து,  இங்கு சுந்தரர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் எல்லோருமே பஸ், கார் எதுவும் இல்லாமலே நடந்து வந்திருக்கிறார்கள். பச்சை பசேலென்ற வயல், செடிகொடிகள், நிறைய ஆறுகள் ஓடும் சோலை வனத்தில் நடக்க கொடுத்து வைத்திருக்கிறார்கள்.

இந்த   திருமங்கல சாமவேதீஸ்வரர் ஆலயத்தில்  கண்ட சில  அதிசயங்கள்:

இந்த சாமவேதீஸ்வரர் தான் ஜைமினி ரஷியை சாமவேதத்தை 1000 சாகைகளாக பிரித்து இங்கேயே எழுத வைத்தவர். எங்கும் சின் முத்திரை காட்டும் தக்ஷிணாமூர்த்தி இங்கே அபய ஹஸ்தம் காட்டி அருள்வது விசேஷம். சுப்ரமணியரும் தேவசேனாவும் தரையில்  நிற்க வள்ளி மட்டும்  மயில் மீது அற்புதமாக இங்கு வீற்றிருக்கிறாள்.  ஆறுமுகத்திற்கு இங்கு நான்கு கரங்கள் மட்டுமே! விஷ்ணு துர்க்கை மகிஷாசுரனை  ஓய்வெடுக்க சொல்லிவிட்டு,  இங்கே சிம்ம வாஹினியாக இருக்கிறாள்.   .சனீஸ்வர பகவானின் காக வாஹனம் வழக்கத்திற்கு மாறாக  ஏன் வடக்கு நோக்கி பார்க்கிறது. இந்த ஆலயத்தில் மட்டும் தான் பைரவரும் காலபைரவரும் அருகருகே நின்று அருள்பாலிக்கிறார்கள். ரெண்டு பேருக்கும் உள்ள வித்யாஸம் பற்றி ஒருநாள்  முடிந்தால் எழுதுகிறேன்.

இந்த ஆலயத்தில் குட்டி குட்டியாக  கோஷ்டத்தில் தரையிலிருந்து ஒன்றிரண்டு அடி உயரத்தில் இடுப்பு வரை வரிசையாக இராமாயண காட்சிகளை சிற்பங்களாக வடித்த சிற்பிக்கு நமது அனைத்து ஹிந்துக்களின் வணக்கத்தை உங்களோடு  சேர்ந்து செலுத்துகிறேன். சில சிற்பங்களை மட்டும் குனிந்து உட்கார்ந்து படமெடுக்க முடிந்தது. இன்னும் எத்தனையோ இருக்கிறது. நீங்களே நேரில் சென்று பார்த்து ரசித்து எனக்கும் போட்டோ அனுப்புங்கள்.

இந்த ஊரில் தான் 63 நாயன்மாரில் ஒருவரான ஆனாய நாயனார் அவதரித்தார். அவரைப் பற்றி எழுதி இருக்கிறேன். மீண்டும் ஒருமுறை இங்கே தருகிறேன்:

'அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்''

''சாம வேதம் என்றால் என்ன என்று எடுத்துரைத்த ஸ்தலம், ஆலயம் ஒன்று இருக்கிறது. அரசாங்கமோ, மற்றும் தனவான்களோ கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன. நாமே ஒன்று சேர்ந்து எழுப்புவோம் என்று சில பக்தர்களின் முயற்சியால் அந்த ஆலயம் உருவானதா, உருவாகிறதா?. இப்படி தேனீ போல் உழைத்து கோவிலை வளரச்செய்யும் இரு நபர்கள் பெயர்கள் : ஸ்ரீ R. Chandrasekar, 37/2, Third Main Road, Gandhinagar, Adyar, Chennai-600020. (Ph: 24416336) and Kittu Josyar, Thirumangalam, Lalgudi-621703. (Ph: 2541020).

 ராஜகோபுரம் தலை தூக்கிவிட்டது. அந்த கிராமத்தின் பெயர் திருமங்கலம், நல்ல பெயர். மழ நாடு. சிவன்  சாமவேதீஸ்வரர். எண்ணற்ற பக்தர்கள் மஹான்கள் தரிசித்த ஆலயம். ரிஷி ஜைமினி சாமவேதத்தை விளக்கி பதம் உரைத்த ஊர். கோவிலில் உள்ள கல்வெட்டில் பரசுராமேஸ்வரம் என்று இதற்கு பெயர் என்று தெரிகிறது. பரசுராமனின் பாவங்கள் விலகிய இடம். லக்ஷ்மி சிவனை உபாசித்த ஸ்தலம். பலாமரம் ஸ்தல விருக்ஷம். சிற்றாறுகள் பொழில்கள் சூழ்ந்த இயற்கை வளம் மிக்க அமைதியான கிராமம். மூன்று பிராஹாரங்கள். வசந்த வாகன மண்டபங்கள். 200 ஏக்கரா நிலம் கொண்ட ஆலயம். மரத்தேர் செப்பம் செய்தாகிவிட்டதா? அப்பர் சேக்கிழார் ஆகியோர் தரிசித்த சிவன். இனிமேல் தான் விஷயத்துக்கு வருகிறேன். இது சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக கோவிலாக இருக்க இன்னொரு முக்கிய காரணம் இங்கே ஒரு நாயனார் பிறந்து வாழ்ந்தார். யாதவ குலத்தவரான ஆனாய நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர்.

பலவிஷயங்களில் ஆனாயர் கிருஷ்ணனை போலவே இருக்கிறார். யாதவர். பசுக்களை மேய்ப்பவர். புல்லாங்குழலில் இனிய மதுர கானம் புரிந்தவர். அசையும் அசையா சகல ஜீவன்களையும் ஜீவநாதத்தால் கவர்ந்த கலியுக கிருஷ்ணன். பட்டை பட்டையாக திருநீறணிந்து ருத்ராக்ஷமாலைகளோடு காணும் சிவ பக்தர்.

விடிகாலை விடிந்தவுடனேயே பசுக்கள், கன்றுகள் ரெடியாக நாயனாருக்கு காத்திருக்கும். அவருடன் மேய்ச்சல் காடுகளுக்கு சென்று பொழுதுசாய்ந்து அஸ்தமன நேரத்தில் அவற்றோடு திரும்புவார். அதுவரை அவரது நேரம் சிவனை நினைந்து பாடுவதிலேயே கழிந்து விடும்.

வழக்கமான ஒரு கொன்றை மரதடியில்  பசுக்கள்  மேயும்போது  அவர்  அமர்ந்திருப்பார்.   அவரிடம் ஒரு புல்லாங்குழல் இணைபிரியாமல் இடுப்பிலே இருக்கும். அதிலிருந்து புறப்படும் கான வெள்ளம் காட்டை நிரப்பும். காந்தத்தால் கவரப்பட்ட இரும்பு துகள்களைப் போல பக்ஷிகள், மிருகங்கள், சகல ஜீவராசிகளும் மயங்கி அவரருகில் வந்து மெய்ம்மறந்து நிற்கும். இசையின்பத்தில் மூழ்கும்.

இப்படியே நாட்கள் நகர்ந்தது. இசையும் தொடர்ந்தது. ஒரு நாள் பஞ்சாக்ஷரம் எனும் ஐந்தெழுதது மந்திரத்தை அழகாக சிவநாம சுகத்தில்  ஆனாயர் புல்லாங்குழல் ஒலித்தது. சகல ஜீவராசிகளும் மயங்கி சுகானுபவம் பெற்றன. நீர் குடிக்க மறந்த, உண்ண மறந்து நின்றன. எதிரி என்ற நினைப்பே இல்லாமல் அருகருகே புலியும் மானும் தலை யசைத்து ரசித்தன.பயமே இல்லாமல் பாம்பின் நடனத்துக்கு தவளை தாளம் போட்டது. நேரம் வந்துவிட்டது ஆனாயருக்கு, என்பதால், சிவனே உமாசகிதம் அவரை அணுகி அணைத்து கைலாசம் கூட்டி சென்றான்.

இந்த நாயனாரை வேணுகோபாலன் மாதிரி சிலை வடித்து கோயிலில் வழிபடுகிறார்கள் சிவபக்தர்கள் என்பதால் இவரை ஆனந்த கிருஷ்ணனா ஆனாயநாயனாரா என்று சட்டென்று அடையாளம் காணமுடியாது. தூய பக்திக்கு, இறைஅன்பை நாதோபாஸனை மூலம் பெற்றவர் ஆனாய நாயனார்.''

சரி இன்றைய  திருவெம்பாவை படிப்போம் ரசிப்போம்  ருசிப்போம்

 12 ''ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய். ''

நம்மைப் பிணித்த பிறவித் துன்பம் ஒழியும்படி செய்பவன் சிவன். நாம் மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் உள்ளவன், எத்தனை சிவாலயங்கள் நமது தேசத்தில் உள்ளன. சென்று தரிசிக்க வேண்டாமா? என்னால் முடிந்த வரை செல்கிறேன். அதை உங்களிடமும் சொல்கிறேனே. அதில் உள்ள சுகத்திற்காக, அதை சேர்ந்து கூடியிருந்து குளிர்ந்து உங்களோடு அனுபவிப்பதில் கிடைக்கும்  சுகம் எனக்கு மட்டும் தான் தெரியும்.

அழகிய தில்லையில் ஞான சபையில் அனலேந்தி ஆடுகின்ற கூத்தப்பிரான். நடராஜன். காலைத்தூக்கி நின்றாடும் தெய்வம். விண்ணுலகத்தையும் நிலவுலகத்தையும் நம் எல்லோரையும், தோற்று வித்தும் நிலை பெறுத்தியும், நீக்கியும், விளையாடுபவனாகிய எம்பெருமான் அவனைப் போற்றி பாடி, புகழை உரைத்து, வளையல்கள் ஒலிக்கவும், நீண்ட மேகலை முதலிய அணிகள் அசைந்து ஓசை எழுப்பவும் அழகிய கூந்தலின் மேல், வண்டுகள் எழுந்து முழங்கவும் மலர்கள் விளங்குகின்ற பொய்கையில் ஆடி, நம்மை உடைய இறைவனது பொன் போன்ற திருவடிகளைத் துதித்துப் பெரிய மலைச் சுனை நீரில் மூழ்க எழுந்திருங்கள் பெண்களே. நேரமாகிறதே. காத்திடுக்கிறோமே '' என்கிறார்கள் அவளை துயிலெழுப்பும் பெண்கள். மறந்து   விடாதீர்கள்.மணிவாசகர் அதில் ஒரு பெண். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...