Sunday, December 29, 2019

THIRUK KOLOOR PEN PILLAI


திருக்கோளூர்  பெண் பிள்ளை வார்த்தைகள் J K SIVAN



  34  இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே

 பன்னிரண்டு ஆழ்வார்களில்  பொய்கை  ஆழ்வார்,  பூதத்தாழ்வார், பேயாழ்வார்  எனும்  மூன்று  முதல் ஆழ்வார்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள்.  ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். சந்தித்தவர்கள். பரம ஞானிகள்,  இணையற்ற  விஷ்ணு பக்தர்கள். சிறந்த தமிழ் வித்தகர்கள். அவர்களது பாசுரங்கள்  நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சாஸ்வத  இடம் பெற்றவை. 


தனித்தனியே கிராமம் கிராமமாக  பல க்ஷேத்ரங்களை அடைந்து நாராயணன் புகழ் பாடிய  அவர்கள்  திருக்கோவலூரில் ஒரு  நாள்  உலகளந்த திருவிக்ரமனை தரிசிக்கிறார்கள்.  மனதார தரிசித்து வெளியே  செல்கிறார்கள். 

இரவு ஆகிவிட்டது. கடும் குளிர்.   மழை விடாது பெய்கிறது. இரவு எங்கு தங்குவது என்று  அவர்கள்  இடம்  தேடுகிறார்கள்.   கோவிலுக்கு  அருகாமையில்  ஒரு  சின்ன  வீடு மாதிரி ஒரு ஆஸ்ரமம். மிருகண்டு மகரிஷி வசித்த ஆஸ்ரமமாக இருந்த ஒரு பழைய வீடு. முதலில் அங்கு வந்த   பொய்கை யாழ்வார் அதை தேர்ந்தெடுத்து கதவை திறந்து உள்ளே நுழைகிறார்.  திண்ணை மாதிரி ஒரு சின்ன  அறை .   அவர் கண்டுபிடித்த  அந்த  இடம்  ஒரே ஒரு ஆள்  படுக்கக் கூடிய அளவிற்கு சிறியது. 

வாசல் கதவை சாற்றிவிட்டு   இந்த இரவுக்கு  இது போதுமே  என்று அந்த திண்ணையில் கால் நீட்டி ''நாராயணா '' என்று சொல்லி  பொய்கையாழ்வார் படுத்து தூங்கினார். 

சிறிது நேரத்தில் ''டொக் டொக்'' என்று  கதவை யாரோ தட்ட விழித்தார்!  கதவை திறந்தபோது வாசலில் நின்ற பூதத்தாழ்வார்   ''சுவாமி எனக்கு  இங்கே  தங்க சற்று  இடம் இருக்குமா?''  என்று கேட்கிறார். 
யாரோ ஒரு வைஷ்ணவர்  பாவம் மழையில் இருட்டில் தடுமாறுகிறார், என்று  இரக்கம் கொண்ட  பொய்கையாழ்வார்,

 “இங்கு ஒருவர் தான் படுக்கலாம், ஆனால்  நாம் இருவர் அமரலாம்! உள்ளே வாருங்களேன் ! என அழைக்கிறார். 

இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கி  பரமாத்மா நாராயணனின் அருள் பற்றி பேச ஆரம்பித்து நேரம் போனதே தெரியவில்லை. 
மறுபடியும் கதவு தட்டப்படும் சப்தம்.  பேச்சை நிறுத்தி  கதவை திறந்த போது  உள்ளே  நுழைந்தவர்  பேயாழ்வார்.
''இங்கே தங்க ஏதாவது வசதி உண்டா ?'' என்கிறார். 
பொய்கை ஆழ்வார்:  “இங்கு ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், நீங்களும் வந்ததால்  நாம் மூவர் நிற்கலாமே .   தாராளமாக உள்ளே வாருங்கள்!” என்று கூறி அவ்விருவரும் பேயாழ்வாரை வரவேற்றனர்.  

இருட்டில்  முகம் தெரியாமல்  நெருக்கி நின்று கொண்டு மூவரும், பரமாத்மாவை  எண்ணி, அவன் புகழ் பாடி  பேரானந்தத்துடன்  இரவை கழித்தனர்.   சற்று நேரத்தில் தான்  அங்கே  இன்னொரு ஆசாமியும் நாலாவதாக தங்களுடன் நெருக்கி நின்று கொண்டிருப்பது அவர்களுக்கு புரிந்தது.  இருட்டில்  ஒருவர் முகம் இன்னொரு வருக்கு தெரிய வழியில்லையே.. வெளியே மழை, கும்மிருட்டு. திண்ணையில் நெருக்கம்.

யார் இந்த  நாலாவது மனிதர்??  வெளிச்சம் இருந்தால்  தெரிந்து கொள்ளலாம்.   ஆகவே  பொய்கையாழ்வார் ஒரு பாசுரம் பாடுகிறார்: 

“வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று”
“இந்த பூவுலகம் ஒரு அகல்.  அதில்  கடல்  தான்  நெய் . அந்த பெரிய உலக ஆகலின் விளிம்பிலியே திரி எது தெரியுமா? சூரியன்.  இப்படி ஒரு ஒளி தீபத்தை ஏற்றி  நாராயணனின் திருவடிக்கு இதை மாலையாக சூட்டுகிறேன். இருள் நீங்கட்டும்'' என்று பாடுகிறார்.

பூதத்தாழ்வாருக்கு  உற்சாகம் பிறந்து விட்டது. தானும் ஒரு பாசுரம் பாடுகிறார். அது எப்படி தெரியுமா?

''அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானச் தமிழ் புரிந்த நான்

''அகல் கடலல்ல.  அன்பு .    தீபம் எரிய  அகலில்  நெய்  வேண்டுமே  அது திருமாலின் கல்யாண குணங்களை  அறிந்துகொள்ளும்  தீராத ஆர்வம்.   திருமாலை அறிந்து அவனை புரிந்து கொள்ளும்  அறிவு, ஞானம் தான் திரி.   இப்படி  ஒரு தீபம் இருந்தால்  நாம் ஒருவரை பார்ததுக்கொள்ளலாம்.' இப்படி ஒரு தீபம் நான் ஏற்றுகிறேன்.

பேயாழ்வார் இந்த இரு பாசுரங்களையும் கேட்டு அவர்கள் ஏற்றிய ஞான பக்தி தீபத்தின் ஒளியில்  தன்னுடன் இருந்த  இவரோடு  நாலாவதாக வந்து நெருக்கி நிற்கும்  நபர்  யார் என்பதையும் கண்ணால்  கண்டு  அறிந்து  பரம சந்தோஷம் அடைந்தார். அந்த நான்காமவர் யார் என்று பார்த்ததை ஒரு அற்புத   பாசுரமாக ஒலிக்கிறார். 

''திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் – செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன்
என்ஆழி வண்ணன்பால் இன்று

''ஹாஹா''  இன்று தானே திருக்கோவாலூரில்  திரிவிக்ரமனை தரிசித்தேன். அவனை இங்கும் கண்டேன், அவனது தங்கநிற மேனி இந்த இரு ஆழ்வார்கள் ஏற்றிய தீப  ஒளியில் தெரிந்தது. அவன் சங்கு சக்ரத்தோடு ஜொலிக்கும் அழகு கண்டேன்.  அவனது  செல்வ  பிராட்டியைக் கண்டேன்.  லக்ஷ்மியோடு சேர்ந்த நாராயணன் அவள் ஒளியால்  தனது கரிய  திருமேனி  பொன்னொளி வீச  இங்கே நிற்கிறானே. லக்ஷ்மிநாராயணன் சங்கு சக்ரதாரியாக தரிசனம் தர என்ன பாக்யம் பெற்றேன்'' என்று பாடுகிறார்.

இந்த திருக்கோவலூர் ''ராத்திரி சம்பவம்''  எங்கோ திருக்கோளூரில் இருந்த பெண்பிள்ளைக்கும் தெரிந்ததால் தானே அவள்  ராமானுஜரை கேட்கிறாள்:

“சுவாமி,  நான் முதலாழ்வார்கள் மூவர்  போல், அவனருளால் அஞ்ஞான  இருட்டு நீங்கி  அவனை தரிசித்தவளா?''   எப்படி இந்த புண்ய க்ஷேத்திரத்தில் வசிக்க  இயலும் . நீங்களே சொல்லுங்கள்?''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...