Friday, December 27, 2019

MARGAZHI VIRUNDHU




மார்கழி  விருந்து:          J K  SIVAN 

            
                                12.  மனத்துக்கு இனியன்
     
யாரோ எங்கோ கணக்கிட்டு பார்த்ததில் உலகிலேயே அதிகமாக பரிச்சியமான ஒரு இந்து கடவுள் கிருஷ்ணன் தான். இதையே  இன்று  ரெண்டு தடவை எழுத ஒரு வாய்ப்பு  வந்ததும் ஆச்சர்யம் தான். 

கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக  உலகமறிந்த இன்னொரு  ஹிந்து கடவுள் பெயர் ராமன் என்று சொல்கிறார்கள். அவர்கள் வாக்கிலே சந்தேகமே வேண்டாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறே பதம் என்றபடி பார்த்தாலே இங்கேயே நமக்குத் தெரிந்தவர்களிடையே அதிகம் பேசப்படும் தெய்வம், இஷ்ட தெய்வம் கிருஷ்ணன் தானே.

ஆயர்பாடியில் வழக்கம் போலவே நிறைய சிறுமிகள் ஆண்டாளை மொய்த்துக்கொண்டு அந்த அதிகாலையிலும் வீதியில் ஒரு பெண்ணின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு நடுவே ஆண்டாள் மற்றும் சிலரை எதிர்பார்த்து காத்திருந்தாள். காற்று சில்லென்று வீசியதையும், பனி எங்கும் சூழ்ந்திருந்ததையும் அவர்கள் லக்ஷியம் பண்ணவே இல்லை.

'ஆண்டாள், பாடு. நீ தான் நிறைய தானாகவே இட்டுக்கட்டி நன்றாக படுவாயே. என்னவோ அம்மா. உனக்கு இயற்கையாகவே வெகு நன்றாக பாட்டும் வருகிறது அழகாக பாடவும் முடிகிறது. . அந்த கிருஷ்ணன் உனக்கு நல்ல குரலையும் கற்பனை வளத்தையும் வேறு பிரசாதமாக அளித்திருக்கிறான். கொடுத்து வைத்தவள் நீ. இன்று என்ன பாடப்போகிறாய் என்று காத்திருக்கிறோம்'.

'இதோ பாடுகிறேன்' என்று ஆண்டாள் சொன்னபோதும் அவள் எதையோ நினைத்துக்கொண்டிருந்தாள் என்று ஒரு பெண்ணுக்குத் தோன்றியது.

“ஆண்டாள் என்னடி இன்று ஒருமாதிரி இருக்கிறாய்?”

“ஒண்ணுமில்லை. தினமும் இவர்களை நாம் போய் எழுப்பி, கிளப்பி, நோன்பில் பங்கேற்க வைக்க வேண்டியிருக்கிறதே. அப்படி என்ன தினமும் நாம் அவர்களை எழுப்பும் கடிகாரம் போல் ஆகி விட்டோமே என்று யோசித்தேன். ஆனால் இப்படி இவர்களை துயிலெழுப்பும் போதும் அந்த மாயகிருஷ்ணனின் நினைவோடும் அவன் பெருமை பாடும் பாசுரங்களை பாடிக்கொண்டும் இவ்வாறு செய்வது மனதிற்கு இனிக்கிறது. ஒரு வேடிக்கை பார்த்தாயா?''

''என்ன சொல்லு  ஆண்டாள்''

“ இதோ அந்த கோபாலனின் நண்பன் சுதாமாவின் வீட்டு வாசலில் நிற்கிறோமே. இன்று மார்கழி 12 இந்த வீட்டுக்கும் நம்பர் 12, என்ன பொருத்தம்!. இந்த வாசல் முன்புறத்தில் மேலே கூரையில்லை. மார்கழி பனி நம் தலை பூரா மழையென நனைத்து குளிர் காற்றில் நம்மை எங்கோ கொண்டு செல்கிறது. கீழே பார்த்தீர்களா?. இதென்ன அதிசயம்! சுதாமாவின் வீட்டு செழுமையான எருமைகளில் ஒன்று என்ன செய்கிறது பாருங்கள் பெண்களே! அதன் கன்று மெதுவாக அருகில் வர, பரம ஆனந்தத்தோடு அந்த தாய் எருமை அதன் மடியில் வெள்ளம் போல் தானாகவே சுரக்கும் பாலை எல்லாம் கீழே விழ வைத்து இங்கு நிற்கும் நம் கால்களை நனைத்து நம் கால்களுக்கு பால் அபிஷேகம் நடக்கிறதே!

மேலே பனிநீர், பன்னீருக்கு பதிலாக, கீழே பால்! நமக்கு  இரண்டு அபிஷேகம் ஒரே சமயத்தில்!! ஏன் தெரியுமா?    அந்த கிருஷ்ணனை நாம் பாடிக்கொண்டே நிற்பதால் தான்.

''கோபாலனின் தங்கையே, உன்னைத் தானடி பெண்ணே, நாங்கள் வாசலில் பாடி நிற்பது தெரிந்துமா இன்னும் கதவு தாள் திறக்கவில்லை நீ? 

எங்கள் பாட்டைக் கேட்டு அண்டைஅசல் வீட்டு வாசலில் கூட எல்லாரும் எங்களை வரவேற்று பால், பூ, பழங்களோடு நிற்க நீ என்னடி இன்னும் படுக்கையில் கண் மூடி கிடக்கிறாய்? சீக்கிரம் வந்து சேர்ந்துகொள். இன்று உனக்கு பிடித்த ராவண சம்ஹார மூர்த்தி ராமனைத்தான் போற்றி பாடுகின்றோம். வா, சீக்கிரம் வெளியே”.

இது பாட்டாக வெளிவந்தது. ஆண்டாள் மிக நன்றாக பாடுவாள் என்பது தான் தெரிந்த விஷயமாயிற்றே. அவள் பாடியதை மற்ற பெண்கள் ஒரே குரலில் திருப்பி சொன்னது அண்டை அசல்  வீடுகளில் இருப்போரை எல்லாம் எழுப்பிவிட்டது. தூங்கிக்கொண்டிருந்த அந்த வீட்டுப் பெண்ணும் வந்து விட்டாள்,

அனைத்து பெண்களுமாக சென்று வழக்கம்போல் யமுனையில் அமிழ்ந்து நீராடி கண்ணனைப்  பாடி உள்ள, உடல் தூய்மையுடன் தங்களது அன்றைய பாவை நோன்பை இனிது முடித்து வீடு திரும்பினார்கள் என்பது இந்த 12 நாட்களாக திரும்பத் திரும்ப சொல்வது வழக்கமாகி விட்டதல்லவா?

அதேபோல் நாம் வழக்கமாகச் செல்லும் வில்லிபுத்தூர் கிராமத்தில் ஒரு ஆஸ்ரமத்தில் என்ன நடக்கிறது என்றும் அறிவோம்.

விடியற்காலை நிசப்தம். பட்சிகள் கூட இந்த அரை இருட்டில் வெளியே வர தீர்மானிக்க வில்லை. மரங்களில் இலைகள் சல சல வென்று காற்றில் ஆடி மலர்ந்த மலர்கள் கீழே விழுந்து பெரிய  வண்ண வண்ணப் பாய் விரித்தன.  இன்னொரு  அதிசயமும்   கூட.காற்று பலமாக  வீசியபோதெல்லாம்  மலர்கள்  இடம்பெயர்ந்து  வெவேறு  இடத்தில் சேர்ந்து,  பிரிந்து  மொத்தமாக  உதிரி உதிரியாக   புது புது  டிசைன் design   பாயாக  காட்கை அளித்தது.    சாதாரணப் பாயை விட மென்மையானது மட்டுமில்லை, வாசனையும் சேர்ந்த அதிசயப் பாய்.

''அந்த தீபத்தைச் சற்று பெரிதாக தூண்டி விடு கோதை, என்னால் இந்த ஓலையைப் படிக்க முடியவில்லை.''

'நீங்கள் எதற்கப்பா சிரமப்படுகிறீர்கள். நானே பெரிதாக இன்று மாக் கோலத்தில் வாசலில் அந்த பாசுரத்தை எழுதியிருக்கிறேன் பாருங்கள். விஷ்ணு சித்தர் சுவற்றை பிடித்துக்கொண்டு எழுந்து வெளியே சென்றார்.   பொழுது புலர்ந்த  அரை இருட்டிலும் வெள்ளை வெளேரென்று மாவில் கோலம் அதன் நடுவே பாசுரம் பெரிய எழுத்தில்  இன்றைய  பாசுரம்  ...

விஷ்ணு சித்தர் ஆர்வமுடன் அந்த பாசுரத்தைப் பார்த்து படித்தார்.

''கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்''

''அடாடா, இந்த கோதை எவ்வளவு பக்குவப்பட்டவள். கண்ணனும் ராமனும் ஒன்றே. அவர்களுள் என்ன வித்யாசம் என்பதை ஒரே வார்த்தையில் ஆணி அடித்தாற்போல் சொல்லி விட்டாளே ! ராமன் தனது எதிரிகளாலும் விரும்பப்படுபவன். கிருஷ்ணனும் அவ்வாறே எதிரிகளாலும் மதிக்கப்படுபவன். கண்ணனை கண்ணுக்கினியான் என உணர்த்தும்போது ராமனை மனத்துக்கினியான் என்றல்லவோ அலங்கரிக்கிறாள்!

நெஞ்சம் உருகி பக்தி  ஆனந்தக்  கண்ணீராக   விழி ஓரத்தில்  வெளிவந்ததை ''ஹே ரங்கா, ரங்கா'' என்று உச்சரிப்போடு துடைத்துக் கொண்டு உள்ளே திரும்பினார் பெரியாழ்வார்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...