Monday, December 30, 2019

THIRUK KOLOOR PEN PILLAI



திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள்  J K  SIVAN

                                      
   35  இரு மன்னர் பெற்றேனோ வால்மீகியைப் போலே

நமது பாரத தேசத்தின் இரு கண்களான ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றை எழுதியவர்கள் இரு ரிஷிகள். ராமாயணத்தை வால்மீகி முனிவர் இயற்றினார். 24000  ஸமஸ்க்ரித  ஸ்லோகங்கள். 7000 வருஷங்களுக்கு முன்பு ராமர் காலத்தில் வாழ்ந்ததாக அறிகிறோம்.

ஒரு சாதாரணனும்  கூட  ரிஷி யாகி  ராமாயணம் இயற்ற முடியும் என்று வாழ்ந்து காட்டியவர் வால்மீகி.  ராமாயணம் கதை அல்ல. அது ராமனின் வாழ்க்கை சரித்திரம், வால்மீகியும் த்ரேதா யுகத்தவர்.அவர் எழுதிய ராமாயணத்தில்  ராமனை சந்தித்தது  சீதையும் அவளுடைய   இரண்டு பிள்ளைகளையும்  ரக்ஷித்தவர்   என்ற  காட்சிகளும் உண்டு.   ராமர்  வால்மீகியை சந்தித்தது  வனவாசத்தில். 

ஒரு சந்தர்ப்பத்தில்  துணிவெளுக்கும் வண்ணான் வீட்டில் நடந்த சம்பாஷணையை கேட்ட  ஒரு இரவு ரோந்து காவலன்  சீதையை தரக்குறைவாக அந்த வீட்டில் பேசியதை கேட்டு  மறுநாள்  அதை ராமனிடம் கூறுகிறான்.  ராமர்  சீதையை இதனால் அரண்மனையை விட்டு  காட்டுக்கு  அனுப்புகிறார். அவள் அப்போது  பூரண கர்ப்பவதி.

''லக்ஷ்மணா,  சீதைக்கு  இனி  இங்கே  இடமில்லை.   நீ  உடனே அவளைக்  காட்டில் கொண்டு விட்டுவிட்டு வா...''  

ராமனின்  ஆணையை  மீறமுடியாத லக்ஷ்மணன் அவளைக் காட்டில் வால்மீகி முனிவர் ஆஸ்ரமம் அருகே  கொண்டு விடுகிறான்.  தனது ஆஸ்ரமம் அருகே  ஒரு அபலைப்  பெண் பூரண கர்ப்பவதியாக கைவிடப்பட்டிருப்பதை கண்ட முனிவர் அவளுக்கு அடைக்கலம் கொடுத்து  சீதை சில நாட்களில் இரட்டை ஆண் குழந்தைகளைப்  பெறுகிறாள்.  வால்மீகி அந்த ரெட்டையருக்கு லவன் குசன் என்று நாமகரணம் செய்கிறார்.  ராமாயணத்தை முழுதும் அவர்களுக்கு கற்பிக்கிறார். முதன் முதலில் ராமாயணம் அறிந்தவர்கள்  லவனும் குசனும் தான்.  பின்னர் அந்த இரு குழந்தைகளும் ராமரின் அஸ்வமேத யாகத்தின் போது  அயோத்தியில் ராமாயணத்தை பாடுகிறார்கள். 

''ஜகம் புகழும் புண்ய கதை....   ''பாட்டு  மறக்கமுடியாத ஒரு அருமையான ராகமாலிகை பாடல் இன்றும் கேட்க  இனிமையானது.  நீங்களும்  கேட்டிருப்பீர்கள். 

வால்மீகியைப் பற்றி ஒரு  விஷயம். பிறந்தபோது  அவரது பெயர்  அக்னி சர்மா.   ப்ருகு கோத்ர  பிராமணர்.  ஒரு நாள் நாரதரை சந்திக்கிறார்.  ''மரா மரா '' என்று  விடாமல் சொல்லு  என்று உபதேசம் பெற்று  ''ராம'' த்யானம் அவரை முழுதும் ஆட்கொண்டு சிலையாக அமர்ந்து அவர்மேல்  கரையான் புற்று கூட மலை போல் உருவாகி,  அவர் பெயர்  வால்மீகி ஆகியது.  வால்மீகி என்றால் ''புற்றிலிருந்து'' உருவானவன் என்று அர்த்தம். ரிஷியாகி விட்டார்.

ஒரு நாள் கங்கைக்கரையில் சிஷ்யன் பாரத்வாஜனோடு ஸ்னானத்திற்கு சென்றபோது   தமசா எனும் ஒரு சிற்றாறு  குறுக்கிடுகிறது.  

''பாரத்வாஜா, எவ்வளவு அழகான நீரோடை பார்த்தாயா, பளிங்கு மாதிரி பரிசுத்த நீர்,  நல்லோர் இதயம் மாதிரி தெளிவானது,   இன்று இங்கே ஸ்னானம் செய்வோம் என்று அருகில் செல்கிறார்.  அங்கு  ஒரு ஜோடி கிரவுஞ்ச பறவைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன.  அவைகளை ரசித்துக்கொண்டிருந்தபோது எங்கிருந்தோ எய்யப்பட்ட ஒரு அம்பு ஆண் பறவையை  ஸ்தலத்திலேயே  கொன்றுவிட,   பெண் பறவை கதறி அழுது தானும்  உயிர் விடுகிறது.   சில வினாடிகளுக்கு முன்பு அங்கு நிலவிய  சந்தோஷம், ஆனந்தம், அடுத்த கணத்திலேயே  மீளாத  சோகத்தில், மரணத்தில் முடிகிறதை கண்கூடாக காண்கிறார்.   ஆழ்ந்த சோகம் அவரது நெஞ்சை பிழிகிறது.  அதேசமயம்  யார் இதற்கு காரணம் என்று கோபம். 
 யார்  அம்பை எய்தது என்று திரும்பி பார்க்கும்போது ஒரு வேடன் கையில்  வில்லோடு  வணங்குகிறான்.

मा निषाद प्रतिष्ठां त्वमगमः शाश्वतीः समाः।यत्क्रौञ्चमिथुनादेकमवधीः काममोहितम्॥
'mā niṣāda pratiṣṭhā tvamagamaḥ śāśvatīḥ samāḥyat krauñcamithunādekam avadhīḥ kāmamohitam

''இனி உனக்கு வாழ்வில் நிம்மதி கிடையாது. தீங்கு செய்யாத, சந்தோஷமாக  ஆனந்தமாக  விளையாடிக் கொண்டிருந்த ஜோடிப்பறவைகளில்  ஒரு  பறவையை காரணமின்றி கொன்ற உனக்கு இது தான் தண்டனை''  என்று சபிக்கிறார் வால்மீகி.

இது தான் ஸமஸ்க்ரிதத்தில்  வால்மீகியிடமிருந்து புறப்பட்ட  முதல் ஸ்தோத்ரம். பிறகு  ப்ரம்மா ஆசிர்வாதத்தால் ஆதி கவி  வால்மீகியால்    ராமாயணம் இயற்றப்படுகிறது.

விஷ்ணு தர்மோத்தர புராணம்  வால்மீகி த்ரேதா யுகத்தில் ப்ரம்மா அம்சமாக  அவதரித்து ராமாயணம் எழுதினவர் என்கிறது.  அவரே  பின்னர் கலியுகத்தில் துளசிதாசராக அவதரித்தவர்.

நமது சென்னையில்  திருவான்மியூர்  வால்மீகி பெயரால் உருவானது. திரு வால்மீகி ஊர் தான் திருவான்மியூரானது. 

1300 வருஷ  வால்மீகி கோவில் ஒன்று வடக்கே  இருக்கிறது.   உ.பி. யில்  திரிவேணி  அருகே உள்ள  தமஸா   நதிக் கரையில்  பித்தூர்  என்ற கிராமத்தில்  வால்மீகி ஆஸ்ரமம் இருக்கிறது  அங்கே தான் சீதையை லக்ஷ்மணன் கொண்டு விட்டான். அங்கே தான்  லவ குசர்கள்  பிறந்தார்கள். அங்கே தான்  வால்மீகி ராமாயணம் எழுதினார். அந்த நதியை கடந்து அக்கரையில்  ஆஸ்ரமத்தை அடையலாம்.   இல்லை யென்றால் சுற்றி வந்து  கண்டகி நதி பாலத்தின் மேல் சென்று அக்கரையில் ஆஸ்ரமத்தை  அடையலாம்.இப்போது  தமஸா  நதி இரு கிளைகளாக  பூர்ணபத்ரா, தாம்ர பத்ரா  சிற்றாறுகளாக  செல்கிறது.  

திருக்கோளூர் பெண்மணி  இந்த விஷயத்தையும் விட்டு வைக்கவில்லை.   ராமானுஜருக்கு பதிலளிக்கையில் 

“வால்மீகி போல், ஸ்ரீ இராமருக்கு சேவை புரிந்தவளா, ரெண்டு  இளவரசர்களை வளர்த்தவளா?  நான் எப்படி திருக்கோளூரில் வசிக்க பொருத்தமானவள்?'' என்று  கேட்கிறாள்.

   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...