Monday, December 31, 2018

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம்     J.K. SIVAN 
மகா பாரதம் 

                                 
  நாரதரின் பதில் 

த்ரேதா யுகம்,  துவாபர யுகத்திலும்  இப்போது போலவே  விசித்திர மனிதர்கள்  இருந்தார்கள்.  மனிதன் என்றாலே  விசித்திர   மனம்,அதிலிருந்து  பிறக்கும் குணம் படைத்தவன்  தானே.  ஒரு நிமிஷம் போல் மறுநிமிஷம்  இருக்க மாட்டானே. இதில் கால நேரம் யுகம்  வித்யாசம் எங்கே இருக்கிறது?

ஜனமேஜயனுக்கு  வைசம்பாயனர்  சொல்லும்  மார்க்கண்டேய ரிஷியின் கதைகள்  மிகவும் பிடித்திருந்தது. அவரது  மற்றொரு கதைக்கு  காதைத் தீட்டிக்கொண்டான்.

வ்ரிஷதர்பன்,  சேதுகன் என்று  இரு  அரசர்கள். வீரர்கள். பலம் வாய்ந்தவர்கள். தான தர்மங்கள் போட்டி போட்டுக்கொண்டு  செய்பவர்கள்.   வ்ரிஷதர்பன் பிராமணர்களுக்கு  தங்கம் வெள்ளி  தவிர மற்ற  உலோகங்களை  தானமாக  கொடுப்பதில்லை  என்று  சேதுகனுக்கு  தெரியும்.  ஒரு நாள் ஒரு பிராமணன் தனது குருவுக்கு சம்பாவனை கொடுக்க  ராஜா சேதுகனிடம் சென்று  தானம் கேட்டான்.

''  வா ப்ராமணா,  சொல் உனக்கு என்ன  தானம் வேண்டும்? என்றான்  சேதுகன்.

''ஆயிரம் குதிரைகள் ''  என்றான் பிராமணன்.

 ''பிராமணரே, நீங்கள்  வ்ரிஷதர்பனிடம்  சென்றால்  நீங்கள் வேண்டியது  தானமாக கிடைக்கலாம்'' என்றால் சேதுகன் .

பிராமணன் வ்ரிஷதர்பனை அடைந்தான்.
பிராமணன் தன்னிடம்  ஆயிரம் குதிரைகளை தானமாக கேட்ட போது வ்ரிஷதர்பன்,   ஒரு சாட்டையால்  பிராமணனை  வீறு வீறு என்று விளாசுகிறான்.

''ஐயோ,  இதென்ன.?   ஏன்   என்னை  சாட்டையால்  அடிக்கிறீர்கள்?  என்று பிராமணன் அவனை சபிக்க எண்ணினான்.  அப்போது  வ்ரிஷதர்பன்

''ஒ  பிராமணரே,  தாங்கள்  சபிக்க வேண்டியது  தங்களுக்கு  தானம்  கொடுக்காதவனை? ''
' ஹே  ராஜன்,  உங்களிடம் போக  சொன்னவர்  சேதுகன்.''

உங்களுக்கு  தேவையான  குதிரைகளின் மதிப்புக்கும் மேலாகவே  நான் தருகிறேன்'' என்று  சொல்லி  நிறைய  பொன்னும்  வெள்ளியுமாக  தந்தான்.''

 'இதில் என்ன நீதி?'  என்று  கேட்ட யுதிஷ்டிரனுக்கு, மார்கண்டேயர், ''சேதுகனுக்கு  நன்றாக தெரியும்.  வ்ரிஷதர்பன் பொன் வெள்ளி மட்டுமே  தானமாக அளிப்பவன் என்று.  ஆயிரம் குதிரை கேட்ட  பிராமணனுக்கு  தன்னிடம் இருந்தால்  தரலாம், இல்லையென்றால்  என்னிடம் இல்லையே  என்று சொல்லியிருக்கலாம்.  வேண்டுமென்றே வ்ரிஷதர்பனை இம்சை செய்ய பிராமணன் தூண்டினான். பிராமணன் அதற்காக சாட்டையடி பெற்றான். ஆனால்  ஆயிரம் குதிரைகளின் மதிப்புக்கும் மேலான பொன்னை தானமாக பெற்றான். குற்றம் செய்வதை விட  தூண்டிவிடுவது தண்டனைக்குரியது.  ஒருவன் மற்றொருவனிடம் கோபமாக  இருக்கும்போது அவன் கண்ணெதிரே ஒரு கூரான கத்தியை வைப்பவன் கொலைகாரனை விட  கொடியவன்.  சட்டத்தில் இதற்கு தண்டனை உண்டு ''accessory  after the fact  of  crime''  என்று  பிடித்து உள்ளே  போட்டுவிடுவார்கள்.'' என்றார்  மார்கண்டேய  ரிஷி.

'' நாரதர் பற்றிய கதை ஒன்று சொல்கிறேன் என்றீர்களே  மகரிஷி  அது  என்ன''   என்று  யுதிஷ்டிரன் கேட்க  மார்க்கண்டேயருக்கு அந்த கதை நினைவுக்கு வந்ததால்  வைசம்பாயனர் மூலம் ஜனமேஜயனுக்கும்  நமக்கும்  ஒரு  கதை  இங்கே  கிடைக்கிறது:

கௌசிக குல  ராஜா  அஷ்டகன் ஒரு  அஸ்வமேத யாகம் பண்ணினான். அநேக ராஜாக்கள் வந்திருந்தார்கள்.

ஒருநாள்  உசினரர் மகன் சிபி, பிரதர்தனன்,  வசுமனஸ் ஆகியோர்  அஷ்டகனுடன்  ஒரு தேரில் சென்ற போது வழியே  நாரதரைப் பார்த்துவிட்டு அவரையும் தேரில் ஏற்றிக் கொள்கிறார்கள்.

''நாரத ரிஷியே, உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா  என்றான் அஷ்டகன் ''

'கேளேன் ''

''நாங்கள்  நால்வரும்  இந்தரலோகம் சென்று  நீண்ட நாள்  வாழப்போகிறவர்கள். எனினும்  எங்கள்  நால்வரில் யார் புண்யம் முடிந்து முதலில் மீண்டும்  பூலோகத்தில் தள்ளப்படப்  போகிறோம்?
''இந்த கேள்வி  கேட்டவனே, அஷ்டகா, நீ தான்  பூமியில் முதலில் விழுவாய். 'ஐயோ நானா ? என்று நீ கேள்வி கேட்குமுன் நானே காரணம் சொல்கிறேன்.

''ஒரு  தடவை இதேபோல் நீ உன்னுடைய தேரில் என்னை அழைத்துப் போனாய். வழியில் எங்கோ ஒரு இடத்தில்  நிறைய  பல  வர்ணங்களில் ஆயிரக்கணக்கான  பசுக்கள் இருந்தது.   '' அஷ்டகா, இங்கே  இத்தனை  பசுக்கள்  இருக்கிறதே. யாருடைய  பசுக்கள் இவை, இங்கு   என்ன விசேஷம்  எங்கு கேட்டேன். நீ  என்ன பதில் சொன்னாய்  தெரியுமா?''

''இதெல்லாமே  நான்  தானமாக கொடுத்தவை  என்று  ''நானை''  கொஞ்சம்  அழுத்தி சொன்னாய்.  ''அந்த  அழுத்தம்'' தான்  உன்னை  கீழே  ''அழுத்தி'' தள்ளப் போகிறது.  புரிகிறதா?

''பிரம்ம ரிஷி,  மற்ற  எங்கள்  3 பேரை  பற்றி சொல்லுங்கள். கவலையாக இருக்கிறதே?  அடுத்தது யார் ?''

உன் அருகே  அமர்ந்திருக்கும்  பிரதர்தனன் தான்  அடுத்து  பூமியில்  இறங்கப் போகிறவன். அவன் என்ன செய்தான் சொல்லட்டுமா?
''ஒரு தரம் ஒரு பிராமணன்  எனக்கு ஒரு குதிரை கொடுங்கள்  என்று அவனைக் கேட்டான். தேரில் குதிரைகளை ஒட்டிக் கொண்டு சென்ற ப்ரதர்தனன் , நான்  உடனே  திரும்பி வருவேன். இங்கேயே  இருங்கள் வந்து  தருகிறேன் என்றான். திரும்பி வந்து  வலது சக்கரம் பக்கத்தில் ஒரு குதிரையை அவிழ்த்து தானம் செய்தான். அடுத்து இன்னொரு பிராமணன் இதைப் பார்த்து விட்டு ஓடி வந்து  தானும்  ஒரு குதிரை  கேட்க, இடது சக்ர பக்கத்து குதிரை சென்றது. இதே போல் பின்னிரண்டு பக்க குதிரைகளும் பிராமணர்கள் வசம் போய், கடைசியில் குதிரையே இல்லாமல்  தேரை தானே  இழுத்துகொண்டு  போனான். அப்போது அவன் சொன்னது தான் காரணம்.  ''அப்பாடா,  இனி என்னை  எந்த  பிராமணனும்  குதிரை கேட்டுக் கொண்டு வரமாட்டானே!''

இவ்வளவு  தானம்  செய்தாலும், இனி செய்யவேண்டிய அவசியம் வராது  என்ற  எண்ணம்  அவன் இது வரை  செய்த தான  பலனை  சாப்பிட்டு விட்டதே ''

 ''அடடா, பிரதர்த்தனனுக்கு  அப்புறம் யார் பூமியில் விழப்போகிறார்? வசுமனசா சிபியா?''
''வசுமனஸ் தான்'' .
சில பிராமணர்கள்  வசுமனசின் அரண்மனையில்  ஸ்வஸ்தி வசன யாகம் செய்து கொண்டிருக்கும்போது யாகத்திலிருந்து ஒரு புஷ்பக தேர் வந்தது. நான்  அப்போது  அங்கிருந்ததால் நான்  '' அந்த பூத்தேர்  நன்றாக இருக்கிறது  என்றேன்''. வசுமனஸ் மகிழ்ந்து  ''நாரத மகரிஷி,  நீங்களே  அந்த  தேரை எடுத்துக் கொள்ளுங்கள்''  என்றான். இதுமாதிரி  வசுமனஸ் இரண்டாவது முறை யும் நடந்தது.  மூன்றாவது முறை நான்  வசுமனசிடம் சென்றபோது  அப்போதும்   ஒரு புஷ்பக  தேரை  பிராமணர்களிடம் காட்டினான்.  'நான்  இது நன்றாக இருக்கிறது என்றேன் ''

''நாரத ரிஷி   நீங்கள்  அந்த  தேரை  ஏற்கனவே  புகழ்ந்து விட்டீர்கள்''  என்றானே  தவிர  அதை கொடுக்க வில்லை. கொடுக்கவேண்டும்  என்ற எண்ணம்  தடை பட்டு  செய்கையால் நிறைவேறவில்லை  என்பதால்  அடுத்து  வசுமனஸ் பூமிக்கு செல்வான்'' என்றார்  நாரதர்.

அடுத்து  நீங்களும்  சிபியும்  தான்  இருக்கிறீர்கள்,  உங்களில் யார்  அடுத்து பூமிக்கு செல்லவேண்டும்  என்றான்  அஷ்டகன்.

"அடுத்தது நான்  தான்  என்றார்  நாரதர்.   ஏனென்றால் சிபி  தேவலோகம் சென்றுவிடுவான்.  காரணம் என்ன தெரியுமா?

ஒரு பிராமணன் சிபியிடம் '' ராஜா, எனக்கு உணவு வேண்டும் என்றான். .''உனக்கு என்ன வேண்டும் என்று  கட்டளை இடு 'என்றான் சிபி.

''உன் மகன்  வ்ரிஹத்கர்பனை கொன்று  சமைத்து பரிமாறு'' என்றான்.  நான்  அங்கே  இருந்ததால்  சிபி என்ன செய்கிறான் என்று பார்த்தேன்.  சிபி  துளியும் யோசிக்காமல் அவ்வாறே செய்தான். ஆகவே தான்  சிபிக்கு முன் நான்  பூமியில் விழுவேன்''  என்றார் நாரதர்.

 (இந்த கதை கொஞ்சம்  சிறுத்தொண்டர் பிள்ளைக் கறி  செய்த திருவிளையாடல் புராண கதை போலவே இருக்கிறது.  திருவிளையாடல் புராணம் பிற்காலத்தில் எழுதப் பட்டதால் வியாசரின்  மஹா பாரத ஸ்லோகம் தான் முதலில் இந்த கதையை தோற்றுவித்தது எனலாம்).

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...