Thursday, December 20, 2018

THIRUVEMBAVAI



திருவெம்பாவை 2
                                                                                      

                 பிறவா வரம் தரும் பெம்மான்

  குனித்த புருவன் கொவ்வைச் செவ்வாயன் ''   என   கேட்கும்போது செவியில் தேன்  பாய  எழுதியதால் தான் அந்த சிவ  பக்தர்  நாவுக்கே அரசரானார். திரு நாவுக்கரசர். கண் முன்னே சிவனை நரத்தனமாடச்  செய்யும் எழுத்து வலிமை.  அண்ட சராசரமும் அசைந்து அசைந்து ஆட மனதில் பிரபஞ்ச சுழற்சியை பிரதிபலிக்கும் சொல் வன்மை. சிவனின் ஆண்டருளும் தன்மை.

''திருப்பாவை  நன்றாக  ரசித்து ருசிக்க எழுதுகிறீர்கள், அதே போல் திருவெம்பாவை எங்கே?  இது நண்பர்கள் கேட்ட கேள்வி மட்டும் அல்ல, கட்டளையும் கூட. என் மனதில்  இருந்த  ஆசையின் வெளிப்பாடும் கூட.  சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார், சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார் '  -  எவ்வளவு அர்த்த புஷ்டி நிறைந்த பாட்டு இது. நிறைய கேட்டிருக்கிறேன்.

கிருஷ்ணன் ணன் மனதில் குடிகொண்டு திருப்பாவையில் மனதையும் கையையும் இணைத்து செயல் படுத்தினான். பாவையும் பரமனும் புத்தகம் வடித்தேன்.  சிவனே, நீ சிவ பரமாக திருவாசகத்தை தொடு , திருவெம்பாவையை படித்து எழுது என்று என்னுள் ஒரு வேகத்தை கிளப்பி விட்டதால்  மொத்தம் 20 மணிவாசகரின்  அருமையான  பக்திப்  பாடல்கள் திருவெம்பாவையாக  மார்கழி இறைவனின் மகோன்னத காலத்தில் பகிர்ந்து ரசிப்போம்.

 சிவன் சிந்தையில் புகுந்தால் எதுவுமே சிறப்பாக தானே அமையும். இது என் சொந்த அனுபவமும் கூட. தூக்கமே கிடையாத  நான்  தூங்குபவர்களை எழுப்ப  திருப்பாவையும் திருவெம்பாவையுமான துயில் எழுப்பும் தெய்வீக பாடல்களைச் ''சிக்கென' 'பிடிப்போம். படிப்போம்.    மணி வாசகரைப் படிக்க இயலாது. எழுத முடியாது.  கண் தெரியவில்லை. கண்களை குளம்போல் கண்ணீர் மல்கி மூடிவிடுகிறதே.  காதலாகி கசிந்து கணீர் மல்கி அவரும்  பக்தர்களும்  சிவரசம்  என்னும் பக்தி பரவசம் அனுபவிப்போம்.. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவசாகத்துக்கும் உருகார் என்று சொல்லே இருக்கிறதே.

திருவெம்பாவை ஏறக்குறைய திருப்பாவை தான். அங்கே கண்ணன். இங்கே முக்கண்ணன். அங்கேயும் பெண்கள் இங்கேயும் பெண்கள். இவர்களும் துயில் எழுப்புபவர்கள் . அங்கே ஆய்ப்பாடி. இங்கே அண்ணாமலை. அங்கே ஆழி மழைக் கண்ணன். இங்கே ஆதி அந்தம் இல்லா அரும்பெருஞ்சோதி. ஆயர்பாடியும் அண்ணாமலையும் அவரவர் நெஞ்சிலே தான் உள்ளது.

மார்கழி பனியில் மாலோலனை கொள்வோரும், என்றும் பனிமலையில் மோனத்தவம் இருக்கும் மகாதேவனை மனதில் கொள்வோரும் ஒன்றே. இனிப்பை எந்த பெயரில் ருசித்தாலும் இனிக்குமே .
உய்யும் நெறியை உறுதியாகப் பற்றவேண்டும். அதே நேரத்தில் அவ்வாறு பற்றுவதால் நாம் பெறும் இன்பத்தை அண்டை அயலவர் எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம், "எம்பிரான் மூலபண்டாரம் வழங்குகின்றான்; வந்து முந்துமினே !" என அறைகூவி அழைத்தும், அறியாதவருடைய இல்லங்களுக்கே சென்று அவர் வாழ்வையும் அண்ணாமலையாரின் அருள் ஒளி நிறைந்ததாக ஆக்க வேண்டும் என்பதே மணிவாசகர் நோக்கம்.

1.''ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.''

'ஹே, தூங்கு மூஞ்சி தோழியே, இன்னுமா தூக்கம், உன் காதில் அண்ணாமலையானின் அழகிய நாமம் நாங்கள் ஒலிப்பது விழவில்லையா. கூர் வாள் போன்ற கண்ணுடையவளே, அதை அழகாக மூடி உறங்குகிறாயே'' என்று பெண்கள் சொல்லி இதற்கு முன் ஒரு பெண் இவ்வாறு தூங்கியவள் அவர்களது இன்னிசை பக்தி பூர்வமாக நெஞ்சில் பாய, உடனே துயில் எழுந்து தான் செய்த தவறுக்கு வருந்தி விம்மி விம்மி அழுதாளே .'' துவக்கம் இறுதி இல்லாத அரிய பெரிய சோதியை நாங்கள் பாடுகின்றோமே. காதில் விழ முடியாதபடி டமாரமா? மெய்ம்மறந்த அந்த பெண்ணுக்கு மலர் நிறைந்த படுக்கையிலேயே பக்தி அவளை சிவன் பால் ஈர்த்தது. என்ன ஒரு பாக்கியசாலி அவள் பற்றி கேட்டதுமே உன்னையும் பரமேஸ்வரன் மேல் உண்டான பரவசம் ஈர்க்கட்டும் எம்முடைய தோழியே !. தூக்க ம் கண்களை மறைப்பது போல் சம்சார பந்தம் திரும்ப திரும்ப நம்மை இறைவனை நாட முடியாமல் உலக மாயையில் கட்டிப்போடுகிறது.

2. பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய்.


''ஹே பெண்ணே, சிறந்த ஆபரணங்களை உடலில் அணிந்தவளே!     என்னடி இரவு பகலெல்லாம்  எப்போதும் பேசுகிறாயே, யாரைப்பற்றி?'' என்று கேட்பேனே , அப்போது நீ என்ன சொல்வாய நினைவிருக்கிறதா? நானே சொல்கிறேன் கேள்


இரவும் பகலும் நாம் பேசுவது ஒன்று தான். அது தான் எப்போதும் என் உள்ளே நிறைந்திருக்கும் அந்த தில்லை நாதனைப் பற்றி தான். என் அன்பு,   அந்த பரம்பொருள் ஒருவரிடத்தில் மட்டுமே,அது மேலான ஒளிப் பிழம்பானஅந்த தில்லை நாதன் மட்டும் தான் மட்டும் தான்'' என்று சொல்வாய்.

அப்படிப்பட்ட நீ ஏன் இப்போது இந்த பட்டு விரித்த படுக்கையிடம் அன்பு வைத்து அதை விட்டு எழுந்திருக்கவே இல்லை! என்கிறார்கள் அந்த தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் அவள் தோழிகள். அவளுக்காக காத்திருக்கிறார்கள் விடியற்காலை எழுந்து நீராட செல்வதற்கு.  நாம் பேசும் பொழுதெல்லாம் அந்த பரமேசன் புகழ் பாடி எங்களோடு இன்பம் துய்த்தாய், பாசம் நேசம் எல்லாம் எல்லாம் படுக்கை மீது விழுந்துவிட்டதா?

அந்த தூங்கு மூஞ்சி தோழி தான் இப்போது விழித்துக் கொண்டு விட்டாளே!, அவள் என்ன பதில் சொல்கிறாள்?

''பெண்களே! சீச்சி . போதுமடி ..... நீங்கள் பேசும் நகை மொழிகளில் இதுவும் ஒன்று , இதைப்போல் பல பேச்சுகள்  நான் உங்களிடம் கேட்டிருக்கிறேன். என்னோடு விளையாடி என்னை கேலி செய்ய இது சரியான ஒரு சமயம் என்று முடிவெடுத்து விட்டீர்களா?

தேவர்களும் வழிபடுதற்கு கூச்சப்படும் அழகிய தாமரை மலர் போன்ற தனது திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவமானவன் என் தெய்வம். தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு,   ஒரு காலைத் தூக்கி நின்றாடும் கண்கண்ட தெய்வம் அந்த சபாபதி மீது அன்பு பொருந்திய நாம்-- அது தான் நானும் நீங்களும்... என்னைப்போய் நீங்கள்.....!! அந்த பெண் எழுந்து விரைந்து வாயிலில் காத்திருக்கும் பெண்களோடு சேர்ந்து கொள்கிறாள்

அப்படியென்றால் ரொம்ப  நல்லது.  உனது எண்ணம் பிடிப்பு, விருப்பு எல்லாமே அந்த சர்வேஸ்வரனின் மேலேயே இருக்கட்டும். ஏன் தெரியுமா? விண்ணவர்களும் மண்ணவர்களும் போற்றி வணங்கும் ஒளியை, , சிவலோகநாதனை, சிற்றம்பலனை, பொன்னம்பலனை, நம்மை வாஞ்சையுடன் விஸ்வேஸ்வரனை நினையா நாளெல்லாம் பிறவா நாளே.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...