Saturday, December 29, 2018

ORU ARUDHA GNANI


அற்புத ஞானி ஆராதனை J.K. SIVAN

டிசம்பர் 30, 2018 --

என்ன முக்கியம் இன்றைக்கு ? வேறு எது இதைக் காட்டிலும் சிறந்தததாக இருக்க முடியும்? ஞானச் சித்தரா, யோகியா, பித்தரா, வித்தகரா, எவர் எப்படி நோக்கினும் அப்படி காட்சி தந்தருளும் அருள் துறவி ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் அதிஷ்டானத்தில் ஆராதனை. திருவண்ணாமலை, ஊஞ்சலூர், சென்னை மாடம்பாக்கம் சித்தர்கள் ஆலயம் மற்றும் எங்கெங்கோ பக்தர்கள் அவரை வணங்கி ஆசி பெரும் நாள்.

சேஷாத்திரி ஸ்வாமிகள் மற்ற சித்தர்கள் ஞானிகள் யோகிகள் போல் அல்ல. உருவத்தை கண்டு அவரை கணிக்க முடியாது. உள்மனதில் எவர் என்ன எண்ணம் கொண்டாலும் எளிதில் அறிபவர். பணத்தை துச்சமாக கருதிய எல்லோரையும் ஒன்றாக பாவித்து அருள் புரிந்த மஹான். ''ஒரு அற்புத ஞானி'' என்று மனதில் தோன்றி அவரைப் பற்றி எழுதும் பாக்கியம் எனக்கு வாழ்வில் கிடைத்ததும் அவர் அருளாலே தான்.

சேஷாத்திரி ஸ்வாமிகளைப் பற்றி ஒரு சிறு கண்ணோட்டம்:

75 வருஷங்களுக்கு முன்பு ஸ்வாமிகளை ஒரு சிறு கையளவிற்கும் குறைந்த படமாக எங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு அட்டையாக பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது.சுரைக்காய் ஸ்வாமிகள் என்று ஒருவர் படம், ரமணர்,பரமஹம்சர் என்று பல மனித தெய்வங்களின் படமும் என் தந்தை சேர்த்து வைத்திருந்தார். பூஜை பண்ணுவார். எங்களுக்கு கல்கண்டு உலர்ந்த திராட்சை பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு தருவார். பூஜை மணி சப்தம் கேட்டதும் ஓடி வந்துவிடுவோம். ஸ்வாமிகளுக்கு எனக்கும் உண்டான தொடர்பு இந்த பிரசாதம் ஒன்று தான் அப்போது. பின்னர் அங்கங்கே என் வாழ்வில் பல இடங்களில் அவரைபற்றி பேசுவதை கேட்டும், சில விவரங்களை ஏதேதோ புத்தங்களில் யாரோ எழுதியதை படித்தும் அவர் மேல் ஒரு இனம் புரியாத பக்தி ஏற்பட்டது. 60 வயது கூட பூலோகத்தில் வாழவில்லை. ஆனால் அறுநூறு கோடி வருஷங்களுக்கான அருளை பிரதி பலனொன்றும் எதிர்பாராமல் கேட்கு முன்பே பக்தர்கள் பெற வைத்து இன்றும் சூக்ஷ்ம சரீரத்தில் அருள்பாலிக்கும் மஹான் சேஷாத்திரி ஸ்வாமிகள். தவயோகி. உயர்ந்த அத்வைத ஆத்ம யோகி. பரிசுத்த ப்ரம்ம ஞானி. காமாக்ஷி தேவி அம்சம். அற்புதங்களை எல்லாம் சர்வ சாதாரணமாக நிகழ்த்தி சேவை செய்து உலகெங்கும் எண்ணற்ற குடும்பங்கள் இன்றும் அவரை நினைத்து வணங்கும் பெருமை பெற்றவர்.

22.1.1870 - 4.1.1929 - காஞ்சியில் காமகோடி குடும்பத்தில் பிறந்து 59 வருஷங்கள் மட்டுமே வாழ்ந்த அதிசய பிரம்மச்சாரி. ''காமோகார்ஷித்'' மந்திரத்தை லக்ஷத்து ஐம்பதாயிரம் முறைக்கு மேல் உச்சாடனம் பண்ணி அதன் தவப்பயனை பக்தர்கள் வாழ்வு பரிமளிக்க உபயோகித்த ஒரே மஹான். உலகெங்கும் இன்றைய பல தலைமுறைகள் கதை கதையாக அந்த மஹான் தங்கள் வாழ்வில், தமது முன்னோர் வாழ்வில் நிகழ்ந்த அதிசயத்தை சொல்வதை கேட்டு மாளாது. எழுத முடியாது. அதனால் அல்லவோ இன்றும் அவரது அதிஷ்டானத்தையே சரண் என்று ஓடுகிறார்கள். அதுவும் எனக்கு இதை கொடு உனக்கு நான் அதை கொடுக்கிறேன் என்று பேரம் பேசும் போலிகள் மலிந்திருந்தும் கூட. ஸ்வாமிகள் ஸ்பரிசம் பட்டாலே சுபிக்ஷம் பொங்கும் என்று வியாபாரிகள் குடும்பஸ்தர்கள் நிதர்சனமாக அனுபவம் பெற்றார்கள் தவிர ஸ்வாமிகள் எந்த வியாபாரமும் பேரமும் பேசவில்லையே. கிட்டேயே யாரையும் நெருங்க விடவில்லையே அந்த திரிகால ஞானி.

ஒரு முருக பக்தர். படிப்பு அவ்வளவாக கிடையாது. அளவற்ற பக்தி முருகனிடம். அவனருளால் திருப்புகழ் அனைத்தும் மனதில் பதிந்து வெள்ளமாக பாடினார். ஊரும் உலகமும் அவரை திருப்புகழ் ஸ்வாமிகள் என்று அடையாளம் கண்டது. அவர் திருவண்ணாமலைக்கு சென்று அங்கே சேஷாத்திரி ஸ்வாமிகளை தரிசித்து, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். ''திருப்புகழ் மஹிமை வாய்ந்த மந்திரம். விடாமல் சொல்லு '' ஆசி கிடைத்தது. வள்ளிமலை சென்றார். இன்றும் வள்ளிமலை ஸ்வாமிகள் என்று பக்தர்களால் போற்றப்படுகிறார். யாருக்கு என்ன எப்போது நேரவேண்டும், கிடைக்கவேண்டும், செய்யவேண்டும் என்று மகானுக்கு தீர்க்கமாக ஞானத்தில் தெரியும். தானே நேரில் சென்று அவர்களுக்கு ஆசிவழங்கி அதை அடையச் செய்வார். அடுத்த கணம் மறைந்து விடுவார். பகவான் ரமணரை வெளி உலகுக்கு பரிசளித்த மஹான் சேஷாத்திரி ஸ்வாமிகள். ''இவன் என் பிள்ளை. இவனை பாதுக்காக்க வேண்டியது உன் வேலை'' என்று ஒரு பக்தரிடம் திருவண்ணாமலையில் சிறுவன் ரமணனை ஒப்படைத்தவர்.
அவர் பேசுவது பூடகமாக சிறு சிறு வார்த்தைகள், சொற்களாக தான் இருக்கும், சூக்ஷமமாக புரிந்து கொள்ளவேண்டும். ''உன் ராவணனை,ராக்ஷஸனை கொல்லு '' -- என்பார்.. நாம் தான் உன்னுள்ளே உன்னை ஆட்டிவைக்கும் ஆசைகளை , கோபத்தை, பேராசை, பொறாமையை அழித்து விடு என்று உபதேசிக்கிறார் என்று பொருள் கொள்ளவேண்டும். '

காஞ்சி பரமாச்சாரியார் ஒருமுறை சேஷாத்திரி ஸ்வாமிகள் மாதிரி கன்னத்தில், தாடையில் கையூன்றி அமர்ந்து காட்டி ''நான் அவரை மாதிரி ஆவேனா?'' என்று வியந்திருக்கிறார் என்றால் வேறென்ன வார்த்தை ஸ்வாமிகளை பற்றி சொல்ல முடியும்.

''இந்த மலையை செவ்வாக்கிழமை சுற்று, சிவன் அது தான். ஆகாரம் எல்லோருக்கும் போடு '' என்று அருணாச்சலம் சாக்ஷாத் பரமேஸ்வர ஸ்வரூபம் என்று புரியவைத்து எண்ணற்றவர்களை கிரிவலம் செய்ய வைத்தவர். அன்னதானம் செய்ய அறிவுறுத்தியவர். சென்னையிலிருந்து 200 கி.மீ. தூரம் திருவண்ணாமலை. அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தின் அருகே ஸ்வாமிகள் ஆஸ்ரமம் இருக்கிறது.

சேஷாத்திரி ஸ்வாமிகளின் ''ஒரு அற்புத ஞானி'' புத்தகம் விற்பனைக்கு அல்ல. நன்கொடை செலுத்தி காகித விலையை ஈடு கட்டினால் மேற்கொண்டு பிரதிகள் பிரசுரித்து இவ்வாறு பக்தர்களுக்கு விநியோகிக்க முடியும். விரும்புவோர் அணுக
J.K. SIVAN 9840279080

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...