Thursday, December 6, 2018

thiruvisanallur

யாத்ரா விபரம் 
திருவிசநல்லூர்                J.K. SIVAN

                                                                               கிணற்றில்  கங்கை வந்தாள் 


இன்று ஒரு மகத்தான  நாள்.   கார்த்திகை அமாவாசை.  திருவிசநல்லூர்  ஞாபகம் எத்தனை பேருக்கு?


சந்தர்ப்ப,சூழ்நிலைகள், சமயங்கள், எல்லோருக்கும் கிருஷ்ணன் ஒன்றாகத்தான் அருள்கிறான். சிலர் அதை கண்டுகொள்வதே இல்லை. குறை மட்டும் கூறுகிறார்கள். விழித்திருந்தோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.

சில நேரங்களில் சில நல்ல சந்தர்ப்பங்கள் நமக்கு உதவுகின்றன. ஒரு முறை, ஒரே முறை, சில வருஷங்களுக்கு முன்புநடந்ததை நினைவு கூர்வோம்.  இப்போது அந்த ஊரை திருவிசலூர் என்கிறார்கள், திருவிசநல்லூர் என்கிறார்கள், எங்கள் வீட்டில்......... தி..... நல்லூர் தான் . அங்கே அற்புதம் ஒன்றைக் கண்டேன்.

அது எப்போதாவது நடக்கும் விஷயம் அல்ல. எப்போதும் வருஷா வருஷம் அந்த ஒருநாள் நடக்கும் அதிசயம். கார்த்திகை அமாவாசை அன்று.  ஒரு ஸாதாரண  சின்ன ஒட்டு  வீட்டில், ஒரு சாதாரண கிணற்றில் முதல் நாள் பார்க்கும்போது எங்கோ அதல பாதாளத்தில் கீழே தண்ணீர் தெரிந்தது. மறுநாள் அதிகாலையில் கிணறு பொங்கி வழிகிறது. சாதாரண நீர் அல்ல. கங்கா ஜலம் . இதை பொய்யென்று மறுப்பவரோடு எனக்கு எந்த வாதமும் கிடையாது. ஆமாம் என்று ஒப்புக்கொள்வோர்களில் நானும் ஒருவன்.

ஏன் அன்று மட்டும் அமைதியான அந்த கிராமம் புத்துயிர் பெற்று அநேக கார்கள், பஸ்கள், வாகனங்கள், எங்கெங்கோ இருந்தெல்லாம் மனிதர்கள் கூட்டம் ஆயிரத்தில், அங்கே கூடவேண்டும்?  அவ்வளவு  பேருமா முட்டாள்கள்...

''என்ன சார்  பூசி மெழுகுகிறீங்க. விஷயத்துக்கு வாங்க''    ...   வருகிறேன்.....

லிங்கராயர் என்கிற மைசூர் சமஸ்தான பிராமண வித்துவானுக்கு ஸ்ரீதர வெங்கடேசன் ஒரே பிள்ளை. சிவ பக்தன். அப்பா காலமான பிறகு பிள்ளைக்கு அப்பாவின்  உத்யோகம் கிடைத்தது.  ஸ்ரீதரன் வேண்டாமென்று உதறிவிட்டான். மனம் உஞ்சவிருத்தியில் சிவனை ஆராதனை செய்தும் நாம சங்கீர்த்தனத்திலும் பரம சந்தோஷம் கிடைத்தது. மனைவி அம்மா ஆகியோரும் அவனை பின்பற்றினார்கள். க்ஷேத்ராடனம் செய்தனர்.  அப்போது திருச்சியில் நாயகர் வம்சம் ஆண்டது. சைவ வைஷ்ணவ பேதம் அதிகம் இருந்த காலம். 

 ஊரில் ஒரு பிராமணரின் பிள்ளை  திடீரென்று நோய்வாய்ப்பட்டு நினைவற்று மிக மோசமான நிலையில் இருந்தான். வைத்தியர்கள் மருந்தில் பயனில்லை.  எல்லோரும் கைவிட்டு விட்டார்கள்.    யாரோ ஒரு பெரியவர்   அந்த பையனின் அப்பாவிடம்   ''இஙக  ஸ்ரீதர ஐயாவாள் என்று ஒரு சிவபக்தர் இருக்கிறார். அவரிடம் போய் சொல்லி ஏதாவது விபூதி மந்திரிச்சு கொடுங்கோ, உடனே போங்கோ''  என்கிறார்.  ஸ்ரீதர வெங்கடேசன் அந்த வீட்டுக்கு சென்றார். சிவனை வேண்டி தியானித்தார். ஜெபம் செயது மந்த்ர ஜலத்தை அவனுக்கு ஒரு உத்ரணி கொடுத்ததும் அந்த பையன் எழுந்து நடமாடினான். பழையபடி ஆனான். சேதி எங்கும் பரவியது. அந்த சின்னஊரிலும் அண்டை அசல் ஊர்களிலும் ஐயாவாள் பேர் திமிலோகப்பட்டது.

அரசன் முதல் ஆண்டி வரை ஜனங்கள் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் அங்கேயே இருக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால் அவர் தஞ்சை ஜில்லாவுக்கு நடந்துவிட்டார். அப்போது தஞ்சை நகரம் ஷாஹாஜி என்ற மராத்தி ராஜாவால் ஆளப்பட்டு வந்தது. அரசன் அவரை கௌரவித்து வரவேற்றான். பிறகு அங்கிருந்து மெதுவாக நழுவி திருவிசநல்லூர் வந்துவிட்டார். நிறைய ஸ்லோகங்கள், வியாக்கியானங்கள் எழுதினார் .பதமணி மஞ்சரி, பகவன் நாம பூஷணம், தயா சதகம், ஸ்துதி பத்ததி, சிவபக்தி கல்பலதா. சிவ பக்த லக்ஷணம், அச்சுதாஷ்டகம், முதலிய புத்தகங்கள் அவரால் வெளிவந்தன.

நாமசங்கீர்த்தன ஜாம்பவான் பகவன் நாமா போதேந்திர ஸ்வாமிகளை அறியாதவர்கள் கிடையாது. ஐயாவாளின் சம காலத்தவர். க்ஷேத்ராடனம் செல்பவர். ராமேஸ்வரம், பழனி, ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், கும்பகோணம் என்று பல க்ஷேத்ரங்கள் சென்று பகவன் நாம சங்கீர்த்தனம் செய்தவர்.    திருவிடை மருதூர் வந்தபோது ஸ்ரீதர அய்யாவாளை சந்தித்து அளவளாவினார். திருவிச நல்லூர் வந்தபோது அவரது ஸ்தோத்திரங்கள் பற்றி அறிந்து சந்தோஷித்தார்.

ஐயாவாள் திருவிடைமருதூர் மகாலிங்க பிரியர். பரம பக்தர். திருவிடை மருதூர் நடக்கும் தூரம் தான். ஒருநாள் கூட அவரை தரிசிக்காது போஜனம் கிடையாது. ஒரு நாள் மகாலிங்கத்தை பார்க்க காவிரியை கடக்க முடியாதபடி வெள்ளம். கோபுர
தரிசனம் செய்து ''ஆர்த்தி ஹர ஸ்தோத்ரம் '' பாடினார். அன்று அவருக்கு போஜனம் கிடையாது.

எப்படி வெள்ளம் பெருகி ஓடும்  காவிரி  ஆற்றைக்கடந்து மகாலிங்க தரிசனம் செய்வது? ஆற்றின் கரையில் தேங்கிய ஜலத்தில் தவளைகள் ''கர'' ''கர'' வென்று விடாமல் சேர்ந்து கத்தியது அவருக்கு மனதில் ''ஹர ஹர ''என்று மகிழ்வித்தது. வெகு நேரம் நின்றார்.

திடீரென்று ஒரு சிவ பக்தர் எதிரே வந்தார். , ஆச்சர்யமாக  அவர் திருவிடை மருதூர் மகாலிங்க ஆலய சிவாச்சாரியார்களில் ஒருவர். அவரை ஆற்றங்கரையில்  ஐயாவாள்  பார்த்து அதிசயிக்கிறார். சிவாச்சார்யருக்கு  அவருக்கு தெரியும் ஐயாவாள் அன்று சிவதர்சனம் பண்ணமுடியாதே என்று.

'என்ன ஐயாவாள் தரிசனம் எப்படி பண்றதுன்னு யோசனையா?''
'ஆமாம் சுவாமி. ஒரு நா கூட மகாலிங்கத்தை பாக்காம  என்னாலே இருக்க முடியாதே''
''அப்படின்னா, இந்தாங்கோ பிரசாதம். இன்னிக்கு அபிஷேகம் அலங்காரம் பிரமாதமா நடந்தது'. சிவாச்சாரியார் மடியிலிருந்து ஒரு சுறுக்குப்பை யை எடுத்து மகாலிங்க விபூதி '' அளித்தார்.

ஐயாவாள்வீட்டுக்கு போகும் வழியில் தான் அவருக்கு ஞானோதயம் தோன்றியது. ஆற்றில் தான் வெள்ளம் கரைபுரண்டு நேற்று சாயந்திரத்திலிருந்து படகுகள் கூட அக்கரை செல்ல முடியவில்லையே. எப்படி அந்த சிவாச்சாரியார் ஆலயத்திலிருந்து ஆற்றைக் கடந்து  இந்த கரைக்கு வந்திருக்க முடியும்.. என்று ?  எப்படி  அவர்  உடலிலோ விபூதியிலோ கொஞ்சமும் ஈரமே இல்லையே. மறுநாள் வழக்கம்போல் வெள்ளம் விடிந்தபின் ஆற்றைக் கடந்து மகாலிங்க தரிசனம் செய்தபோது அந்த சிவாச்சார்யரை  அங்கே  பார்த்தார். மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டார்.

''சிவாச்சாரியாரே, நேற்று நீங்கள் எப்படி ஆற்றைக் கடந்துவந்து எனக்கு விபூதி பிரசாதம் தந்தீர்கள்?.''

'' நானா, நேற்று வந்தேனா? நேற்று எங்குமே நான் போகவில்லையே. ஆற்றை எப்படி கடக்க முடியும். நிச்சயம் நான் வரவில்லை நேற்று'' என்கிறார் சிவாச்சாரியார்.

''ஆஹா, சிவாச்சாரியார் உருவில் வந்தது மஹாலிங்கமே'' என ஐயாவாளுக்கு புரிந்தது. மனம் நெகிழ்ந்தது. தான் பட்டினி  கிடக்கக் கூடாது என்ற பரமேஸ்வரனின் கருணை  ஐயாவாள்  நெஞ்சை உலுக்கியது. நன்றிப் பெருக்கோடு மகாலிங்கத்தின் மேல் ஐயாவாள் அப்போது ஸ்ரிஷ்டித்தது தான் ''தயாஷ்டகம் '' ஸ்லோகம்.  அபாரமானது.

''எனக்கு ரெண்டு வரம் தா. மகாதேவா.    ஒன்று உன்னை இடைவிடாமல் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அடுத்தது சிவா, உன் நாமம் என்நாவில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கவேண்டும்''

என்ன சார்  ஏதோ திருவிச நல்லூரில்  கார்த்திகை அமாவாசை அதிசயம். உலகையே திரண்டு வரும். அது இது என்று என்னென்னமோ சொல்லி ஆரம்பித்தது விட்டு.. ஐயாவாள் கதைக்கு போய்ட்டீளே .....   ''

பொறுத்தார்  பூமி ஆழ்வார்  ... இருங்கோ சொல்றேன். நான் கொஞ்சம் லேட்டா தான் எதையுமே செய்வேன், சொல்வேன்.

அய்யாவாளுக்கு மிகவும் இரங்கிய, கருணை உள்ளம். தாராள மனசு. ஒருநாள் காவேரியில் ஸ்நானம் செய்துவிட்டு ஸ்லோகம் சொல்லிக்கொண்டே நடந்து வந்தார்.  நிறைய வேலை.  வீட்டில் அன்று அவர் தகப்பனாருக்கு ஸ்ரார்த்தம். பிராமணர்கள், சாஸ்திரிகள் வரும் நேரம். ஸ்ரார்த்தம் எப்போதும் உச்சி காலத்துக்கு மேல் தான் என்பதால் அவர் மனைவி ஒவ்வொன்றாக எல்லா பக்ஷணங்கள், சமையல் அயிட்டங்கள் எல்லாம் விறகு அடுப்பு மூட்டி  செயது வைத்துவிட்டாள். 

அப்புறம் என்ன ஆயிற்று என்று கொஞ்சம் பொறுமையாக அடுத்த கட்டுரைக்கு காத்திருப்போம்..

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...