Tuesday, December 11, 2018

ORU ARPUDHA GNANI

ஒரு அற்புத ஞானி   J.K. SIVAN 

சேஷாத்திரி ஸ்வாமிகள்

                                               சுவாமி தந்த பரிசு

பழைய கால விஷயங்கள் எழுதும்போது அப்போதிருந்த அனைவருமே  ஒரு  சுகமான வாழ்க்கை, சௌகர்யங்கள் அநேகம், பணம் தேவை இல்லாத காலம், எல்லாமே விலை குறைவு, மக்கள் நேர்மையாக இருந்தார்கள், என்றெல்லாம் ஒரு வேளை  எண்ணத்  தோன்றினால் அது நிஜமல்ல.  அந்தந்த கால வாழ்க்கை முறை நாளாக நாளாக  காலத்திற்கேற்ற மாதிரி மாறுதல் தந்து கொண்டு தான் இருக்கும். விலைவாசி ஏறும். கஷ்டம் வேறு விதமாக வேறு பெயரில் துவங்கலாம்.  ஆற்றில் ஜலம்  நிறைய ஓடினாலும் நாய் நக்கி தானே குடிக்கவேண்டும். கஷ்டப்பட்டவன் என்றும் கஷ்டப்பட்டுக்கொண்டு தான் வாழ்ந்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஜனத்தொகை குறைவு என்பதால் வீடுகள் அங்குமிங்குமாக சிலது. மரம் செடி கொடிகள், மாடுகள், கன்றுகள், ஆடுகள் கோழிகள் நிறைய கண்ணில் தென்பட்டன.

திருவண்ணாமலையில்  வெங்கட்ராமய்யர் ஒரு பத்தாம் பசலி. அப்பாவி. மேலதிகாரிகளிடத்தில் எப்படி பொய்யாக நடித்து மரியாதை காட்டவேண்டும் என்று பிழைக்க தெரியாதவர். பரம ஏழை. ஆறு பெண்கள் மூன்று பிள்ளைகள். போதுமா?. ஒரு பழைய ஒட்டு வீட்டில் ரெண்டு ரூபாய் வாடகைக்கு குடியிருந்தவர் . ஆறு ஏழு மாதமாக வீட்டு வாடகை பாக்கி. நடேச முதலி, தோட்டம் துறவு வைத்துக்கொண்டு நிறைய வசதியோடு இருந்ததால் ஐயருக்கு வாடகை பற்றி அதிகம் தொந்தரவு கொடுக்கவில்லை.  நாணயமானவர். எப்படியும் ஐயர் வாடகை மொத்தமும் கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கை அவனுக்கு.

ஒருநாள் ஒரு மேலதிகாரி பள்ளிக்கூடம் வந்தபோது உதவி தலைமை ஆசிரியர் வெங்கட்ராமய்யர் ஏன் இன்னும் வரவில்லை என்று கேட்டுக் கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்தார் ஐயர்.

''ஏனய்யா? இப்போது தான் பள்ளிக்கூடத்துக்கு வருவதா?    இது தான் நீ பசங்களுக்கு சொல்லிக்கொடுக்கிற லக்ஷணமா?''

''சார்,   நான் கொட்டும் மழையிலும் பள்ளிக்கூடம் வந்து பாடம் சொல்லிக் கொடுப்பவன் சார். என்னைப்பற்றி அவதூறாக பேசவேண்டாம்.''

''இன்னிக்கு ஏன் லேட்டு ?''

''என் தோப்பனார் ஸ்ராத்தம். அதாவது இன்னிக்கு எங்கப்பா திதி. காலம்பரவே எல்லாம் ரெடி. ஆனால் வாத்தியார்கள் தாமதமாக வந்து ஹோமம் பண்ணி இப்பதான் முடிந்தது. அதனாலே தான் லேட். என் பெற்றோருக்கும் நான் கடமைப் பட்டவனில்
லையா?'' என்கிறார் ஐயர்.

மேலதிகாரி இந்த ஆள் செய்த தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்காமல் எதிர் கேள்வி கேட்கிறவன். உயரதிகாரிகளிடம் பழக தெரியாதவன். ஒழுக்கம் குறைவு என்று அவர் மேல் ரிப்போர்ட் எழுதி வெள்ளைக்கார அதிகாரி மூன்று மாதம் உத்யோக தற்காலிக நீக்கம் சம்பளமில்லாமல் என்று எழுதிவிட்டான். அவனுக்கும் மேலே உள்ளவன், வேலையிலே இருந்தே எடுத்துவிடலாம் என்று சிபாரிசு செய்தான். வருமானமுமின்றி எப்போது உத்யோகம் போகுமோ என்று வெந்து சாம்பலானார் வெங்கட்ராம ஐயர்.  மனம் அவர் வணங்கும்  சேஷாத்திரி ஸ்வாமிகளை நினைத்தது. கண்களில் தாரையாக கண்ணீர்.  வறுமையிலிருந்து விடுதலை??

ரெண்டு நாள்  கூட ஆகவில்லை.  ஏதோ ஒரு முக்கிய விசேஷமாக அந்த ஊர் பிரமுகர்களை ஒன்று கூட்டி வெள்ளையர் அரசாங்க  உள்ளூர் அதிகாரி  (டெபுடி கலக்டர்)  அழைத்து ஊர்  அபிவிருத்தி பற்றி பேசிக்கொண்டிருந்தார். அந்த ஊர்  முக்கிய பிரமுகர்  ஒருவரிடம்   அந்த ஊர் பள்ளிக்கூடம் பற்றி அதை விஸ்தரிக்க  வழிகள் கேட்கப்பட்டது.  அப்போது  வெங்கட்ராமய்யரை நீக்குவது பற்றி பேசினார்கள். அவருக்கு ஐயரைப்  பற்றி நன்றாக தெரியும். வெகு நேர்மையானவர். அந்த ஊரில் சில நல்ல பிள்ளைகள் உருவாக முக்கிய காரணம் என்கிறார்.  அவரை பற்றி எவரும் குறை கூறியது கிடையாது.

பூத நாராயணன் கோவில் ஒரு பழங்கால ஆலயம். திருவண்ணாமலையில் அதன் அருகே ஒருநாள் சேஷாத்திரி சுவாமி நின்று கொண்டிருந்தார். தூரத்திலே அவரைப் பார்த்துவிட்ட வெங்கட்ராமய்யர்  செருப்பை கழட்டி அங்கேயே விட்டுவிட்டு ஓடி வந்து நமஸ்காரம் பண்ணினார்.

சுவாமிகள் நேராக அந்த பழைய செருப்பருகே சென்று அதை கையில் எடுத்து அதால் அய்யர் தலையில் நாலு சாத்து சாத்தினார். செருப்பை கீழே போட்டுவிட்டு ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார் ஸ்வாமிகள்.

வெலவெலத்து போனார் அய்யர். ''ஓஹோ இன்று நமக்கு உத்யோகம் போகப்போகிறதோ. அதனால் தான்  ''ஏன் அதிகாரியை எதிர்த்து பேசினாய்'' என்று ஸ்வாமிகள் இப்படி தண்டனை கொடுக்கிறாரோ'' என்று பயந்து கொண்டே பள்ளிக்கு சென்றார்.

''அய்யிரே,   உங்களை தலைமை ஆசிரியர் உடனே பார்க்க வேண்டுமாம் '' என்று ஒரு சேவகன் சொன்ன போது பிராணன் ஊசலாடிக் கொண்டிருந்தது ஐருக்கு. மெதுவாக அறைக்குள் சென்றார்.

''இந்தாங்கோ உங்களுக்கு ஒரு லெட்டர் ஆபிலிசுலேருந்து வந்திருக்கு.''    கை  நடுங்க தலைமை ஆசிரியர் கொடுத்த கவரை கையெழுத்து போட்டு வாங்கிக்கொண்ட அய்யர் அரை உயிரோடு அதை பிரித்து நடுங்கிக்கொண்டே மூக்கு கண்ணாடி வழியே பார்த்தார். படித்தார்.

இன்னொரு புது ஸ்கூல் டேனிஷ் மிஷன் அந்த வளாகத்திலேயே ஆரம்பிப்பதாகவும் அதற்கு ஐயரை தலைமை ஆசிரியராக நியமிக்கப் பட்டிருப்பதாகவும் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் உயர்வுடன் அன்றே பொறுப்பேற்க உத்தரவு அது.

ஸ்வாமிகள் அளித்த செருப்படிக்கு இவ்வளவு மதிப்பா?
 ''தலைமை'' ஆசிரியண்டா நீ என்ற  ''சிறப்பை'' யா அந்த  தீர்க்க திரிசி ''செருப்பால்''தலையில்'' அடித்து சொன்னார்?  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...