Thursday, December 27, 2018

VAISHNAVA SAINTS


யாத்ரா விபரம் 
திருக்கோளூர்

           ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள்


நமக்குள் ஒரு பழக்கம். பண்பாடும்  கூட. எந்த ஊரில் பிறந்தோமோ அந்த ஊர் கோவிலின் பிரதான சுவாமி பெயர் வைப்பது. பழனியில் நிறைய முருகன், கந்தன், தண்டபாணி, சுவாமிமலையில் நிறைய ஸ்வாமிநாதன்கள் , மதுரையில் நிறைய  சுந்தரம், சுந்தரேஸ்வரன், மீனாட்சி சுந்தரம், சிதம்பரத்தில் நடராஜன்கள், இது போல் நிறைய.    ஒருவர்  என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் பெயரை கேட்டேன். ''வைத்த மாநிதி'' என்கிறார்.  நான் சரியாக கவனிக்க வில்லை.  

''ஸார்  புரியவில்லை, உங்கள் பேரை சொல்லுங்கள்''
''வைத்த மாநிதி ''   
மிகவும் தமிழ் வாசனை வீசும் பெயராக  இருக்கிறதே.  ஆகவே   ''உங்களுக்கு எந்த ஊர்''? என்றேன்.
''திருக்கோளூர்'' திருநெல்வேலி தூத்துக்குடி பக்கம். என்கிறார்.
அப்போது தான்   நவதிருப்பதி யாத்திரையின் போது திருக்கோளூர் சென்றது ஞாபகம் வந்து மகிழ்ந்தேன். பழைய நினைவு வந்தது.  எங்களை ஒவ்வொன்றாக நவ திருப்பதிகளையும் அழைத்து சென்ற ஸ்ரீ  சடகோப ராமானுஜத்தை கேட்டேன். 
''எங்களை எங்கே அடுத்து அழைத்துச் செல்லப்போகிறீர்கள்?'' என்று கேட்டேன்.
அவர்  '  திருக் குருகூர  இதோ வந்துவிட்டதே.   போகும் வழியில் திருக்கோளூர் என்று ஒரு அழகிய பெருமாள் ஆலயத்தை பார்த்து விட்டு செல்வோம் என்றதும்  அந்த ஊருக்குள்  கார் நுழைந்தது.

''காலை 9மணி தானே. இன்னும் ரெண்டு மூன்று மணி நேரங்களுக்குள் மற்ற திருப்பதிகளை தரிசிக்க முடியும்'' என்று சொன்னார்.

திருநெல்வேலி ஜில்லாவில்,  தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரியில் இருந்து ரெண்டு மைல் தூரத்தில் கிழக்கே இருக்கும் வைணவஸ்தலம் தான் திருக்கோளூர். 
 108 வைணவத் திருப்பதிகளுள் ஒரு  திவ்ய தேசம்.  தாமிரபரணிப் படுகையில் உள்ள நவ திருப்பதிகளிலும் ஒன்று. சயன கோலத்தில் திருக்கோளூர் நாச்சியார், குமுதவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள். ''திரு' என்றால் செல்வம் கோளூர் என்றால் கொள்ளிடம். குபேர பட்டணம். அவ்வளவு மாபெரும் நிதி வைத்துள்ள வைத்த மா நிதி பெருமாள்.'

 பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வாரின் ஜென்மஸ்தலம். திருக்கோளூர் என்றாலே ‘தேடிப் புகும் ஊர்’ என்கிறார்கள் ஆச்சார்யார்கள். அவ்வளவு புண்ய ஸ்தலம். எங்கிருந்தெல்லாமோ ஒரு முறையாவது அந்த ஊருக்கு வருவோமா  என்று   பக்தி பரவசத்தோடு வரும் ஊர். 
திருக்கோளூர் பற்றி கொஞ்சம் படித்தது ஞாபகம் வந்தது. ஒருமுறை ஸ்ரீ ராமானுஜர் நடந்து திவ்யதேசங்கள் எல்லாம் தரிசித்து வரும்போது நம்மாழ்வார் அவதரித்த திருநகரி வந்து சேர்ந்தார். பரம சந்தோஷத்ததோடு ஆதிநாதனை சேவித்து வெயில் சுட சுட வெறுங்காலோடு மரங்களின் நிழலை துணை கொண்டு திருக்கோளூர் வந்தார். நம்மாழ்வார் போற்றிய வைத்தமாநிதி பெருமாள் இங்கே தானே இருக்கிறார். உடனே ஓடி சென்று அவரை சேவிக்கவேண்டும் என்ற தாகம் மேலிட '' சிஷ்யர்களே கொஞ்சம் வேகமாக வாருங்கள் என்று விடுவென்று நடந்தபோது அவருக்கு இரட்டிப்பு சந்தோஷம். ஏன் என்றால் இந்த திருக்கோளூரில் தான் இன்னொரு ஆழ்வாரான மதுரகவி ஆழ்வார் அவதரித்தார். புண்ய க்ஷேத்ரம் அல்லவா? 

ஆச்சார்யர் உவகை மேலிட உரக்க பாடினார்.

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்று என்றக் கால் கண் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ணம் என் இள மான் புகுமூர் திருக் கோளூரே –6-7-1
எதிரே  தெருவில் அவர் பாடிக்கொண்டு   வருவதைக் கண்டு ஒரு பெண்  ஒதுங்கி நிற்கிறாள்.  அவள் தலையில் ஒரு சட்டி.  இடுப்பில் மூட்டை முடிச்சு.  அவள் ஒரு  மோர் விற்கும்  பெண்.   அன்றைக்கு மோர்  விற்பதற்காக அந்த ஊரை விட்டு அடுத்த ஊர் நடக்கிறாள்.   ராமானுஜர்  ஊருக்கு புதியவர் போல் இருக்கிறதே என்று நினைக்கிறாள்.
 
அவளோ ஒரு  விஷ்ணு பைத்தியம். அவளுக்கு அன்னம் வேண்டாம், ஆகாரம் வேண்டாம், குடிக்க நீர் வேண்டாம், மெல்வ தற்கு வெற்றிலை வேண்டாம். சதா சர்வகாலமும் கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஒன்றே ஸ்மரணம். கண்ணன் எனும் மன்னன் பெயரைச் சொல்ல சொல்ல கண்களில் பிரவாகமாக ஆனந்த பாஷ்பம் சொட்டாதா, கொட்டாதா ?
 அதுவே மேற்சொன்ன எல்லாவற்றையும் சாப்பிட்டது போல் வயிற்றை நிரப்பும்.

 அந்த பெண் போலவே ராமானுஜரும் கேட்கிறார். நான் சரியான பாதையில் போகிறேனா? இப்படித்தானே அந்த அருமையான திருக்கோளூர் செல்லவேண்டும்?
'' ஆமாம் என்கிறாள்'' அந்த பெண். 

ராமானுஜர் போல்  நாங்கள் வழி கேட்கவில்லை. ஸ்ரீ சடகோப ராமானுஜம்   கூடவே வரும்போது அவருக்கு தெரியாத திருக்கோளூரா?

ராமானுஜர் இப்படி சந்தோஷமாக திருக்கோளூர் அடைந்து நடந்து நுழையும்போது, 
எல்லோரும்  இங்கு வருவதற்கு விரும்பும்போது இந்த பெண்  எதற்கு அந்த ஊரை விட்டு  வெளியே போகிறாள்? வளைப்பார்த்தால் ஊரை விட்டே வெளியே கிளம்பினவளாக காண்கிறதே. 

''அம்மா கொஞ்சம் நில். இது தானே திருக்கோளூர் ?
''ஆமாம் சுவாமி''
''இந்த ஊரைப் பற்றி தானே நம்மாழ்வார் ஸ்வாமிகள் வெகு ஸ்ரேஷ்டமாக பாடியிருக்கிறார்
''கேள்விப்பட்டிருக்கிறேன் சுவாமி''
''ஏனம்மா, எனக்கு ஒரு சந்தேகம். அவர் வாக்குப் படி எங்கிருந்தெல்லாமோ மக்கள் ஓடி வருவார்களாம் இந்த ஊரில் குடியிருக்க, நீ எதற்கு அப்படிப்பட்ட எம்பெருமான் வைத்த மாநிதி பெருமாள் அருள்பாலிக்கும் உன்னதமான இந்த திருக்கோளூரை விட்டு வெளியே செல்கிறாய்?''
 ‘புகும் ஊருக்கு நாங்கள் வரும் போது  நீ  வெளியேறிக் கொண்டிருக்கிறாயே’ என்று கேட்கிறார்.    
'  ஐயா நீங்கள் 'என்ன சொன்னீர்கள்?
''அடுத்த வேளை சோறில்லாவிட்டாலும் கூட,  இடுப்பில் கட்ட துணி இல்லாவிட்டாலும் கூட ஒருவர் துணியை கிழித்து ஏழுபேர் உடுத்தியவாறு இங்கே வந்து சேர்வார்களாமே. நீ எதற்காக குழந்தாய் இந்த பெருமாள் அருளும் வள நாட்டை விட்டு செல்கிறாய் என்று கேட்டேன்?''
''நீங்கள் கேள்வி கேட்டுவிட்டீர்கள். நான் பதில் சொல்லவேண்டாமா?''
மோர்  விற்பவள்  வெறும் தயிரை மட்டும்  கடைந்து அலசி,  கரைத்து மோராக விற்பவள் அல்ல.  ராமாயணமும், மகாபாரதமும், பாகவதமும், ஆழ்வார்கள் வரலாறுகளையும்  அலசி, கடைந்து, கரைத்து குடித்தவள் .  
மூட்டையை இறக்கி கீழே வைத்தாள் அந்த பெண். ஒன்றல்ல ரெண்டல்ல 81 வார்த்தைகள், அத்தனையும் இதிகாச, புராண சம்பந்தத்தோடு இணைந்தவை. மிக அழகான வார்த்தைகள் பதிலாக  சொல்கிறாள் அந்த பெண்.   அதன் சாராம்சம். 

நான் சில பேர்களைச் சொல்கிறேன். அவர்களைப் போலவா நான்? . அப்படியிருந்தால் இங்கே இருக்க எனக்கு யோக்கியதாம்சம் உண்டு. என்று ஒரு பெரிய லிஸ்ட் தருகிறாள். அவளைத் தான் திருக்கோளூர் பெண்பிள்ளை என்போம். அவள் வார்த்தைகள் ''பெண்பிள்ளை ரஹஸ்யம்'' என்ற ஆழமான அர்த்தம் கொண்டவை. 

அவள் ஊரை விட்டு செல்வதன் காரணம் தெளிவாக அல்லவோ சொல்லிவிட்டாள் . அந்த 81 வாசகங்களில் அந்த திருக்கோளூர் பெண்  வைணவத்தைச் சாறாக, மோராகப் பிழிந்து தருகிறார். அதைக் கேட்ட ராமானுஜர்,   ''வாஸ்தவம்.  பூரண  உண்மைதான்.   இந்த திருக்கோளூரில் ஒரு   சாதாரண தயிர் விற்கும் பெண்மணிக்கே இந்த  அளவுக்கு ஞானம் இருக்கும் எனில் நிச்சயம் இது  எல்லோரும் ''புக'' வேண்டிய ஊர்தான் என அந்த பெண்ணை ப் பணிகிறார். பிறகு ராமானுஜர் அவளுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லி அவள் திரும்பி  திருக்கோளூர் ஊருக்குள் செல்வதை பற்றி யோசிக்க வைக்கிறார். பின்னாளில் அந்த அம்மையாரும் ராமானுஜரின் சீடராகிறார்  

 அந்த பெண்  ராமாநுஜரிடம்  ''இன்னொரு விஷயம் நான் இந்த ஊரில் இருப்பதாக இருந்தால் இங்கு ஆலயம் சிறப்பாக விழாக்கோலங்களோடு வைபவங்களோடு நடைபெறவேண்டும். மதுரகவி ஆழ்வாரின் பெருமை உலகளவு பரவ இங்கே உற்சவங்கள் பூஜா விதிமுறைகள் நடக்கவேண்டும். அவற்றை நீங்கள் கவனிப்பீர்களா?'' என்று கேட்கிறாள்?   ஆலய அன்றாட பூஜை , வைபவ நடைமுறைகளை காலா காலங்களில் முறையாக நடத்த சீர்திருத்தம் செய்ய வேண்டுகிறாள். வீட்டுக்கு அழைத்து சென்று ஆச்சார்யருக்கும் சிஷ்யகோடிகளுக்கும் அமுது படைக்கிறாள். பின்னர் அவளும் அவரும் சிஷ்யர்களோடு சென்று ஆலய வழிபாட்டு முறைகளை சரிவர நடத்த வழி வகுக்கிறார்.

 நாங்கள் திருக்கோளூர் ஆலயத்தில் ஒரு வயதானவரைப் பார்த்தோம். எங்களை அழைத்து பாசுரங்கள் பாடி அர்த்தம் சொன்னார். அழகிய சிற்பங்களை, நுண்ணியவையாக கண்ணில் எளிதில் படாதவைகளைக் காட்டினார். அற்புதமாக இருந்தது.

டிவிஎஸ் காரர்களின் ஒவ்வொரு புதிய வண்டியும், வாகனமும் இங்கே முதலில் வந்து பெருமாள் ஆசி அருள் பெற்று தான் வெளியே செல்லும் என்று கேள்விப் பட்டேன் . அவர்கள் வெற்றியின் ரகசியம் திருக்கோளூர்  பெண்பிள்ளை ரகசியம் போல் வியக்க வைக்கிறதே.


திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம்?  அதில்   ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கும் அந்த பெண் வைணவ ஆச்சார்யார் ஸ்ரீ ராமானுஜரிடம் தெரிவித்த 81 வார்த்தைகள்  தன திருக்கோளூர் பெண் பிள்ளையின்  81  வார்த்தை  ரகசியம்.  வைணவத்தை சேர்ந்த  பாமரப் பெண்களும் கூட இந்த நாட்டில் மேதைகளாகத் தான் இருந்திருக்கிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது.
அந்த 81 வார்த்தைகளை இனி ஒவ்வொன்றாக ரசிப்போம்:

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...