Monday, December 31, 2018

MARGAZHI VIRUNDHU

மார்கழி விருந்து    J.K. SIVAN 
மார்கழி 16ம் நாள் 

                               மணிக் கதவம் தாள் திறவாய்

வெயில் எவ்வளவு வேண்டுமானாலும் தாங்கி விடலாம். இந்த குளிர் மட்டும் பொல்லாதது. துளிக்கூட நிம்மதியாக இருக்க விடுவதில்லை. குளிரும் பனியும் பெரிசுகளுக்கு பரம வைரி. வெடவெட வென்று நடுங்கிக்கொண்டு கம்பளிகளுக்குள்ளே மறைந்து கண்ணு மட்டும் ரெண்டு வெளியே தெரியும். இந்த வருஷம்  கொஞ்சம் அதிகமாகவே  குளிர் நடுங்க வைக்கிறது.

ஆனால் ஆயர்பாடியில் நிலைமையே வேறு. சில்லென்று வீசும் இனிய குளிர் காற்றில் சுகமாக ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் தன் சினேகிதிகளோடு ஆண்டாள் பேசிக்கொண்டே போகின்
றாள். மற்ற பெண்களையும்எழுப்பி நீராட வைக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறதே.

இன்று மார்கழி 16 நாள் ஆகிவிட்டதே இதுவரை விடாது அந்த பெண்கள் அன்றாடம் யமுனையில் நீராடி விரதமிருந்து,உள்ளும்புறமும் தூய்மையோடு கிருஷ்ணனையும் நாராயணனையும் அருள் தா என்று வேண்டுகிறார்கள். சொட்ட சொட்ட ஈர ஆடையை பிழிந்து சுற்றிக்கொண்டு அந்தப்பெண்கள் இதோ யமுனைக் கரையில் இருக்கிறார்கள். அவர்கள் நீராடி நோன்பிருந்து கூட்டமாக நின்று கொண்டிருக்கிறார்கள்.

'ஆண்டாள் இப்போ எங்கேடி போறோம்?''

'நந்தகோபனது அரண்மனை போன்ற வீட்டுக்கு. இன்று என்ன விசேஷம் தெரியுமா? இந்த பதினைந்து நாட்களாக எல்லோர் வீட்டிலேயும் சென்று பெண்களை துயில் எழுப்பிய ஆண்டாள் இன்று காலை யார் வீட்டுக்கு சென்றாள் தெரியுமா?

ஆயர்பாடியில் கண்ணன் வசிக்கும் அவன் தகப்பன் நந்தகோபன் அரண்மனைக்கே. எளிதில் உள்ளே போக முடியுமா? வாசலில் நந்தகோபனின் வாயில் காவலாளி கொடிய கூர்மையான வேல் ஈட்டி போன்ற ஆயுதங்களோடு காவல் காத்துக் கொண்டிருக்கிறான். யாரும் உள்ளே நெருங்க முடியாது. கண்ணனைக் கண் போல் பாதுகாக்கிறான் நந்தகோபன். ஏன்? நாளொரு அரக்கனும் பொழுதொரு ஆபத்தும் தான் அந்தச் சிறுவனைக் கொல்ல கம்சனால் அனுப்பப்படும் ராக்ஷஸர்கள் மூலம் எந்த உருவில் வேண்டுமானாலும் வரலாமே? சொல்லிவிட்டா வருவார்கள்? நாம் தான் ஜாக்கிரதையாக குட்டி கிருஷ்ணனை காப்பாற்றவேண்டும்!! என்ற நினைப்பு அந்த வாயில் காப்பானுக்கு. அவனைக் காப்பதே அந்த கண்ணன் தான் என்று அவன் எப்படி அறிவான். அறிந்தால் ஏன் ஈட்டி வேல் பிடித்துக்கொண்டு வாசலில் நிற்கிறான்?

'சிறுமிகளா யார் நீங்கள் எல்லாம் ? அதுவும் இந்த வேளையிலே இந்நேரத்தில் இங்கு என்ன வேலை உங்களுக்கு.?''

''ஐயா வாயில் காப்போனே, இந்த உயர்ந்த மணிகள் பொருத்திய பெரிய உங்களது கோட்டை மணிக்கதவைக் கொஞ்சம் திறவுங்கள் எங்களை கொஞ்சம் உள்ளே விடுங்கள்'' என்கிறாள் ஆண்டாள்.

'' சிறு பெண்களா யார் நீங்கள், எதற்கு உள்ளே போகவேண்டும்?''

''இந்த தெய்வீக மாதத்தில் விடியலில் நீராடி பாவை நோன்பு நூற்று எங்கள் தெய்வத்தை அந்த கிருஷ்ணனை தரிசிப்பதுடன் அவனைத் துயில் எழுப்பவும் வந்துள்ளோம். உள்ளே இருக்கும் உங்கள் தலைவன், எங்கள் மனம் நிறைந்த அந்த கண்ணன் நேற்று எங்களை இங்கே வரச்சொல்லி அனுமதி கொடுத்ததால் அவனை தரிசனம் செய்து அருள் ஆசி பெற வந்துள்ளோம். இது அவன் நேரம். நாங்கள் உள்ளே சென்று அவன் ஆயிர நாமங்களை சொல்லி அவனை துயிலெழுப்ப விழைகிறோம். எங்களைக் தடுக்காமல் குறுக்கிடாமால் தயவு செய்து கதவை மட்டும் திறவுங்களேன்?''

''விசாரிக்காமல் நான் யாரையும் உள்ளே விடமுடியாது.''

''நாங்களோ சிறு பெண்கள் எங்களால் என்ன துன்பம் உங்களுக்கோ,அந்த மாயக் கண்ணனுக்கோ நேரும்?"

''சூர்பனகை, பூதகி ஆகியோரும் பெண் தானே?'' என சிரித்தான் காவலாளி.

''அவர்கள் வெளியே இருந்து இங்கே வந்தவர்கள். நாங்கள் இதே ஊரில் கிருஷ்ணனுடன் பிறந்து வளர்ந்தவர்கள். கோபியர் குடும்பப்பெண்கள். மேலும் நாங்கள் கொல்ல வந்தவர்கள் இல்லை. எங்கள் மனத்தை அவன் வெல்ல வந்தவர்கள்.புரிகிறதா?'' என்றால் ஆண்டாள்.

''நான் கிருஷ்ணனையே நேரில் கேட்டு அனுமதி தருகிறானா என்று தெரிந்து தான் உங்களை உள்ளே விடமுடியும். அதுவரை வெளியே நில்லுங்கள்'' என்றான் வாயில் காப்போன். அவர்கள் அங்கேயே பாடிக்கொண்டு நின்றார்கள். உள்ளே சென்று வந்த அந்த காவலாளி அந்தப் பெண்களை உள்ளே அனுமதித்தான். ஆண்டாள் எதையும் சாதிப்பவளாச்சே.

வில்லிபுத்தூரில் அப்போது---

ஆண்டாளும் ஆயர்பாடிச் சிறுமிகளும் கண்ணனின் அரண்மனையில் உள்ளே போகும் நேரம் தான் அந்த ஆஸ்ரம வாயிற் கதவைத்திறந்து வெளியே சென்று அழகிய பெரிய கோலம் போட்டுக்கொண்டிருந்த கோதை ஆஸ்ரமத்தில் நுழைந்தாள். அவள் எதிரே அந்த அழகிய அரங்கனின் உருவச்சிலை அவளையே பார்த்துக்கொண்டிருக்க அன்று எழுதிய பாசுரத்தை மனதிலிருந்து வாய்க்கு மாற்றிக்கொண்டு வந்து பாடினாள். மேலே ஆயர்பாடியில் நாம் கண்ட காட்சி அவள் செய்த அந்த அற்புதக் கற்பனை தீஞ்சுவைத் தமிழில் ஈடில்லா பாசுரமாக பக்தி சொட்ட வெளிப் பட்டது.

'கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

‘’'அம்மா கோதை, நீ இந்த 16 நாட்களாக என்னை வைகுண்டத்தில் ஆழ்த்தி விட்டாய் தாயே. நீ சாதாரண கவிதையாக சொல்லலங்காரமாக இதை இயற்ற வில்லை. ஒரு தத்துவத்தையே புகட்டி விட்டாய்.''

''அப்படி என்னப்பா எழுதினேன் ? சிரித்தாள் கோதை.

சொல்கிறேன் கேள். முதல் 15 நாட்களாக ஆண்டாளும் சிறுமிகளும் யாரை வேண்டி நோன்பிருந்தார்களோ', அவனை , ஏன் 16வது நாளன்று பார்க்க நேரிட்டது?'' யோசித்து பதில் சொல்?

''தெரியவில்லையே அப்பா? நீங்களே சொல்லுங்களேன்?'' சிரித்துக்கொண்டே கேட்டாள் கோதை.

''கிருஷ்ணனை வேண்டித்தானே இந்த மார்கழி முப்பது நாளும் அவர்கள் நோன்பிருந்தார்கள். பாதி மாதம் ஆகிவிட்டதே. மீதியை அவர்கள் அவனைத் தேடி போகவேண்டாம் என்பதால் தான்.

பக்தன் பாதி வழி கிருஷ்ணனை நோக்கி நடந்தால் மீதி பாதி வழியை கிருஷ்ணனே நடந்து வந்து அவனை எதிர்கொள்ளுவான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டாய் அம்மா. எனக்கு இப்படித்தான் படுகிறது ''என்றார் விஷ்ணு சித்தர்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...