Wednesday, December 5, 2018

TAMIL POETS



தமிழ்ப் புலவர்கள்         J.K. SIVAN 
ராமச்சந்திர கவிராயர் 
                                        
     
  புளுகின வாய்க்கு போஜனம் இல்லை..

அன்றை விட இன்று தமிழ் கவிஞர்கள் அதிகம்.  எதுகை மோனை எல்லாம் கிட்டே வரக்கூடாது. யாப்பு,சோப்பு எதுவுமே வேண்டாம். ''எவண்டி உன்னை பெத்தான், கையிலே கிடைச்சா செத்தான் '' என்று எழுதும் கம்பர்கள் நிறைய. அப்போதே ஜாலிலோ ஜிம்கானா இருந்தது... வா மச்சான் வாழை தோப்பிலே... போன்ற கவிகள் கிடைப்பது அபூர்வம்.
ஆகவே தமிழகத்தில் கவிஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் பஞ்சமே இல்லை.  இப்படி எழுதி நிறைய சம்பாதிக்கிறார்கள். கேட்கவும் தெருவெல்லாம் அதை பாடவும் ஆள் இருக்கிறதே.

முன்னொரு காலத்தில் ராமச்சந்திர கவிராயர் ஒரு சிறந்த புலவராக இருந்தும்  வறுமை அவரை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தது.    அந்த வறுமையிலும் அவர் நகைச்சுவையை கைவிடாது இயற்றிய  இந்த பாடல்  என் நெஞ்சைத்தொட்டது. வெகுகாலமாக இந்த பாடல் மனதில் இருந்து இன்று வெளியேறி உங்களை அடைகிறது. எனக்கு வறுமை தெரியும். நான் பட்டிருக்கிறேன்.

கவிராயர்  முனகுவது காதில் கேட்கிறதா. கூர்ந்து கேளுங்கள். பசியால்  அவரால் உரக்க பேச முடியவில்லை 

''என் தலையெழுத்தை பாருங்கள். தின்னுவதற்கு ஒன்றுமில்லாமல் பசி வீட்டில் எல்லோரையும் தின்கிறது. சரி எங்கே யாவது சென்று யாரையாவது பிடித்து ஏதாவது தேறுமா என்று பார்ப்போம் என்று போனேனா??  என் துரதிர்ஷ்டம்  எனக்கு முன்னால்..

வழியில் ஒரு படிக்காத முட்டாளை பார்த்தேன். இவனிடம் ஏதாவது தானம் வாங்குவோம் என்று ''சார்  உங்களைப்போல ஒரு சிறந்த கல்விமான்  இப்போது வரை பார்த்ததே இல்லை ''  என்று பாடினேன், 

காட்டில் கிடைப்பதை விற்று வாழும் அந்த தனவானை'  '' நீ  மஹாராஜா, பெரிய நாட்டையே ஆள்பவன்'' என்றேன்.
பொல்லாத அவனை நீ உலகிலேயே ரொம்ப ரொம்ப சாது  சாத்வீக குணசாலி.  நல்லவன் அப்பா''  என்றேன்.

சண்டை, யுத்தம் போர் என்றாலே  ஒரு மாதம்  முன்பே ஓடிவிடுபவனை, ''போரில் புலி நீ தானய்யா''  என்றேன்.
கை கால் எல்லாம் சூம்பிப் போய் தொப்பை ஒன்றே பிரதானமாக தெரிந்ததைப் பார்த்தும் கூட நான் கூசாமல் ஒரு பொய் சொன்னேன். ''ஆஹா உன்னைப்போல் புஜ பல பராக்கிரமசாலி  யாருமில்லை '' என்றேன்.

எச்சில் கையால் காக்காய் ஒட்டாதவனை ''கர்ணனுக்கு அடுத்து நீ தான். வலது கை கொடுப்பதை அதுவே  கூட அறியாமல் கொடுப்பவன், வள்ளல் நீ ஒருவனே'' என்றேன்.

இப்படியெல்லாம் இல்லாததை எல்லாம் அடுக்கி அடுக்கி சொன்னேனே, அதையெல்லாம் தலையாட்டி ரசித்து கேட்டவன் நான் தானம் கேட்டபோது ''  அடாடா,  இருந்ததை எல்லாம் கொடுத்து விட்டேனே. இப்போது  என்னிடம் ஒன்றும் இல்லையே. போய் இன்னொருநாள்  சாவகாசமாக வாருங்கள்'' என்று கையை விரித்து விட்டான்.

என்ன செய்வது. என் விதியை நொந்து அடுத்தவனை தேடி நடந்தேன்.'' என்கிறார் ராமச்சந்திர கவிராயர்.

''கல்லாத வொருவனை நான் கற்றாய் என்றேன்
காடெறியும் அவனை நாடாள்வாய் என்றேன்
பொல்லாத வொருவனை நான் நல்லாய் என்றேன்
போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்
மல்லாரும் புயம் என்றேன் சூப்பற்றோளை
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்
இல்லாது சொன்னே னுக்கில்லை என்றான்
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.''

இன்னொரு பாட்டில் நேராக அந்த ப்ரம்ம தேவனை பார்த்து சரமாரியாக கேள்விகள் கேட்கிறார்  அதை கேட்போமா ?

1 comment:

  1. Very nice. Never heard of this poet till now.

    ReplyDelete

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...