Monday, December 31, 2018

SWAMIJI'S TIME



 சந்நியாசியின் விளக்கம்   J.K. SIVAN 

இருநூறு வருஷங்களுக்கு முன்பு  ஆல்வார்  என்கிற ஊர்  (இப்போது ராஜஸ்தா
னின் பகுதி) ஒரு ராஜாவின் ராஜ்ஜியமாக இருந்தது. ராஜா கோபக்காரன் மட்டுமல்ல  கடவுளை விக்ரஹங்களில் வணங்குவது பிடிக்காது.

அந்த ஊருக்கு  ஒரு சந்நியாசி வந்திருக்கிறார். மிகவும் அற்புதமாக பேசுவார்.  ஞானி. அவரை ராஜா தனது அரண்மனைக்கு அழைத்தான்.

டாம்பீகமாக தனது அரண்மனைக்கு அழைத்து விருந்து உபச்சாரம் செய்ய அழைத்தவன் அவரிடம் தனது ஆடம்பர மாளிகைகளைக் காட்டி பெருமை கொண்டான். இருவரும் பேசினார்கள்.   பேச்சின் நடுவே ராஜா சன்யாசியிடம் இடக்கு மடக்காக கேள்விகள் கேட்டான். பொறுமையாக பதில் சொன்னார்.

''சாமியாரே, எனக்கு இந்த போலித்தனமாக  கல்லையும் மரத்தையும் சாமி என்று கொண்டாடுபவர்களை கண்டாலே  பற்றிக்கொண்டு வரும். கோவிலுக்கு செல்வது தேவையில்லாத வீண் வேலை என்பேன். எனக்கு துளியும் இந்த படங்கள், கல், உலோக சிலை, இதெல்லாம்  கடவுள்  என்ற நம்பிக்கையே  இல்லை'' என்றான்.

சந்நியாசி என்ன சொல்வார். பேசாமல் மௌனமாக புன்னகை பூத்தார்.

ராஜா சும்மா  இல்லாமல் 'நான் சொல்வது சரிதானே, உண்மை அல்லவா. 'நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ''என்று வேறு கேட்டு விட்டான்.

சந்நியாசி பதில் சொல்லவேண்டாமா. அந்த ஆடம்பர அறையைச் சுற்றிலும் அந்த ராஜாவின் பல உருவ படங்களை யாரோ ஒரு ஓவியன் பெரிதாக வரைந்து  அலங்கரித்திருந்தார்கள்.

ராஜாவின் வேலைக்காரன்  இருந்தவனை  ''தம்பி இங்கே வா '' என்று சந்நியாசி கூப்பிட்டார்.

அருகில் பவ்யமாக வந்து நின்ற அவனிடம் ''அந்த படங்களில் பெரிதாக இருப்பதை காட்டி அதை எடுத்துக் கொண்டு வா '' என்கிறார். ராஜாவைப் பார்த்தான் வேலையாள். அவர் தலைஅசைக்கவே,  படத்தை கழற்றி கொண்டு  வந்தான்.

''இந்த படத்தின் மீது நீ காறி உமிழ் '' என்கிறார். இதை காதால் கேட்டதுமே  நடுங்கி வியர்த்து போனது வேலைக் காரனுக்கு.  வாயடைத்து சிலையாக நின்றான்.  ராஜா ஒன்றும் புரியாமல் திகைத்தான்.

''என்ன தம்பி நான் சொன்னது காதில் விழவில்லையா. இந்த படத்தின் மீது காறி  எச்சிலை உமிழ்'' என்கிறார் சந்நியாசி. ''சீக்கிரம்''  என்கிறார்.  பயத்தோடு  ராஜாவை பார்க்கிறான் வேலையாள்.  ராஜாவின் கண்களில் கோபம்.  கை  உடைவாள் மேல் சென்றது. 

தன்னைக் காப்பாற்றிக்கொள்ள  வேலையாள் '' என்ன சாமி இது. எங்க ராஜா இது. எவ்வளவு மரியாதை எங்களுக்கு அவர் மேலே. எங்களுக்கு குலதெய்வம் அவரு. அவர் மேலே எச்சி துப்ப சொல்றீங்களே. என்ன ஆச்சு உங்களுக்கு '' என்று உரக்க கத்தினான் வேலையாள்.

''என்னப்பா உளறுகிறாய் நீ. உன்னை யாரு  ராஜாவை  அவமதிக்க சொன்னது. அவர் தான் எதிரே நாற்காலிலே உட்கார்ந்திருக்காரே. இந்த வர்ணம் தீட்டிய  துணிப்படத்தின் மேலே தான் எச்சில் துப்ப சொன்னேன்.  அது என்ன பேசுதா, யோசிக்குதா,  நகருதா, அசையுதா, உயிரில்லாத ஒரு ஜடப்பொருள் தானே, துப்பு  '' என்கிறார் சந்நியாசி.

கண்டிப்பாக  ''அது துணி இல்லை, எங்க ராஜா, எங்க உயிரே அது தான். அவருதான் அது.'' என்று கண்ணில் ஒற்றிக்கொண்டான் வேலையாள்''

''ஓஹோ,  உங்க ராஜாவுடைய நிழல் அது, அதனால் தான் அதை உங்கள் ராஜாவாகவே நீ வணங்குகிறாய். அதை அவமதிப்பது ராஜாவை அவமதிப்பது ஆகும் என்று தானே ''   

''ஆமாம் சாமி ''

சந்நியாசி கோபமாக இருந்த ராஜாவின் முகத்தை பார்க்கிறார். அவன் கோபம் பறந்து போய் விட்டது. தலை குனிந்து கொண்டான். மனதில் எண்ணங்கள்  வேகமாக ஓடியது.  சந்நியாசி நடத்திய நாடகம் புரிந்து விட்டது. அர்த்தம் மனதில் ஆழமாக பதிந்தது. மாறிவிட்டான்.  அந்த சந்நியாசி, அரண்மனையிலிருந்து வெளியே செல்கிறார்.  சுவாமி விவேகானந்தரிடம் பேசி ஞானம் பெற்ற அந்த ராஜா புண்யசாலி.

கடவுள் எங்குமுள்ளார்.அவரை  வணங்குபவர்கள் அவரை பல உருவங்களில் சிலையாக, கல்லாக, படமாக்கி  அலங்கரித்து, ஆபரணம் பூட்டி, வஸ்திரங்கள் உடுத்தி, பிரசாதங்கள் உணவு அர்ப்பணித்து, அர்ச்சித்து,  நம்மை ரக்ஷிக்க வேண்டுகிறோம்.  உருவப்படங்களில் சிலைகளில்  பகவானை மட்டுமே  காண்கிறோம். அந்த கண்களை தரிசிக்கும்போது ஒரு கல்லாக,  ,உலோகமாக, துணியாக, காகிதமாக  காணவில்லை. அந்த கண்கள் ஆயிரமாயிரம் .அர்த்தங்களை சொல்கிறது. அருள்கிறது. ''அது கல் பேசாது'' என்பது  அறியாமையை வெளிப்படுத்துகிறது .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...