Monday, July 12, 2021

RAMAKRISHNA PARMAHAMSA

 அருட்புனல்  -    நங்கநல்லூர்  J K  SIVAN  --

ராமகிருஷ்ண பரம ஹம்சர் 


''பைத்யம் செய்த பூஜை ''

 
உலகில்  ராமகிருஷ்ணர் போன்ற  ஞானிகளை காண்பது ரொம்ப அபூர்வம்.  ஆனால்  நாம்  அதிர்ஷ்டக்காரர்கள் என்பதால்  அவரைப் போன்ற பல  ஞானிகள் நம்மிடையே  வாழ்ந்தவர்கள். இன்றும் எங்கே  வெளியே தெரியாமல் சிலர்  வாழலாம்.  அவர்கள் விளம்பரப்பிரியர்கள், காசு தேடுபவர்கள் அல்லர்.  அந்த கோஷ்டிகள்   தான் நமது கண்ணில் படுபவை.  ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கையை அறியும்போது எத்தனையோ அதிசயங்கள் வரிசை வரிசையாக வந்து கொண்டே இருக்கிறது.

அமானுஷ்ய,மான  இரவின் அமைதியில்   மயானத்தில் தியானம் செய்யும்போது ராமகிருஷ்ணர் தனது ஆடையையும் பூணலையும் களைந்து விடுவார். இது ஹ்ரிதய்க்கு தெரிந்துவிட்டது. ஒருநாள் கேட்டான்:

 ''கதாதர்,  நீ  ஏன் இப்படி பண்ணுகிறாய்?'' 

''என் தெய்வத்தோடு நான் ஹ்ரிதயம், மனம்,  கலந்து இணையும்போது நான் எல்லாவற்றி லிருந்தும் விடுபட்டு இருக்கவேண்டாமா? பிறக்கும்போது எட்டு தடைகளோடு பிறக்கிறோம். வெறுப்பு, வெட்கம், உறவு, உயர்ந்தவன்  தாழ்ந்தவன்  பேதம், பயம், ரகசியம், ஜாதி வித்யாசம், துக்கம் என்ற இவற்றை எல்லாம்  களையவேண்டும் .இந்த பூணல் நான் ஒரு உயர் ஜாதி  பிராமணன் என்ற நினைப்பைத்  தருகிறது. என் தாய்க்கு முன் நான் நிற்கும்போது இதெல்லாம் இருக்கலாமா?

''ஐயோ, கததரனுக்கு இப்படி சின்ன வயதிலேயே  தியம் பிடித்து விட்டதே '' என கவலையுற்றான் ஹ்ரிதய்.

நாள் செல்ல செல்ல பூஜை பண்ணும் வழிமுறைகளும் தடை பட்டன. கமலகாந்த் , ராம்பிரசாத் போன்ற காளி பக்தர்களுடைய  பாடல்களைப்  பாடிக்கொண்டு மணிக்கணக்காக பவதாரிணி முன் அமர்ந்தார் ராமகிருஷ்ணர். அவளை நாடி, தேடி, தாயிடமிருந்து பிரிந்த சேயானார்.

''அம்மா நீ எங்கேம்மா  இருக்கே.  என்னை விட்டு எங்கே போய்விட்டே. வா  என்னிடம் ? என்று தரையில் முகத்தை இடித்துக் கொண்டு அழுதார்.

''சொல், நீ உண்மையிலேயே  என் அம்மாவா? இல்லை சும்மாவா? நீ உண்மையிலேயே  என்  அம்மாவாக  இருப்பவளானால் ஏன் என் முன்னே  இன்னும்  வரக்காணோம்?

மணிக்கணக்கில் தரையில் அவள் முன்னே ஜமக்காளத்தை மடித்து போட்டு அதன் மேல் உட்கார்ந்து கொண்டு அவளை வெறித்து பார்த்துக் கொண்டிருப்பார்.அன்ன ஆகாராதிகள் தூக்கம் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தன. நின்று போய் விட்டன. 

எதிர்பார்த்த நேரம் ஒருநாள் வந்துவிட்டது. பவதாரிணி  ராமகிருஷ்ணரின்  கண் முன் தோன்றினாள்.

''ஈரமான துணியை பிழிவோமே அதுபோல் என் ஹ்ரிதயம் பிழிபட்டது. எங்கோ பறப்பது போல் லேசானேன். இந்த ஜென்மத்தில் அவளைக்  காண முடியாமல்  போய் விடுமோ என்ற பயம் என்னை பிடித்துக் கொண்டிருந்தது.  பிரிவு இனிமேல் தாங்கமுடியாது என்ற நிலைக்கு வந்து விட்டேன்.  சே, இதற்கு எந்த வாழ்வு?  உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்?'' என்று கூட  தோன்றியது. அம்பாளுக்கு மேல், சுவற்றில் தொங்கிய வாளின் மேல்   என்   கண் அப்போது  போனது.

''ஆஹா. நல்ல யோசனை.   சரியான முடிவு. இது தான் என் வாழ்வின் கடைசி நேரம்.''

பந்து போல் எகிறினேன். மேலே இருந்த அந்த வாளை எடுத்தேன். வாளுக்கும் எனக்கும் இடையே
அப்பப்பா,  என் தாய், என் அம்மா .என் இதய தெய்வம்.. பவதாரிணியின் முகம் .....தோன்றி காட்சி அளித்தது.  என் எதிரே எல்லாமே தலை  கீழாக வேகமாக சுழன்றது. கோவில், கட்டிடம், கங்கை, மரம், கோபுரம், நந்தவனம்,  எல்லாமே ஏன் இப்படி சுற்றுகிறது?. அதில் ஒவ்வொன்றிலும் பெரிதும் சிறிதுமாக எங்கும் எதிலும் என் தாயின் முகம் காண்கிறதே....சுழலும் வேகம் அதிகரித்தது. இன்னும், இன்னும்...... ஓ வென்ற சப்தத்திலும் வேகத்திலும் உருவங்கள் மறைந்தது. நான் எங்கிருக்கிறேன்? . என் கண் இருண்டது.  . நினைவு அழிந்தது.. பிறகு அமைதி.  ஒவென்ற  பேரிரைச்சல் என்னை எதுவோ  ஆழமாக  இழுத்துக்கொண்டே  போகிறது.  எங்கே மூழ்குகிறேன்.  கங்கையா ?  கையைப் பிடித்து அல்லவோ அழைத்துக் போகிறாள். என் தாயா? அசைவற்று போனேன். எல்லாம் மறைந்து ஒரு எல்லையற்ற காலமற்ற வெள்ளம்... பிரஞை உணர்வு. பேரிடி போன்ற சப்தம். அதன் எதிரொலியில் நடுக்கம். மூச்சு திணறியது. எது என்னை மூழ்கடிக்கிறது. நினைவு அகன்றது. வெளி உலகத்தில் எது நடந்ததோ எனக்கென்ன தெரியும்? என்னுள்ளே ஒரு ஒளி பெரிதாகிக் கொண்டே வந்தது. என் தாய், என் அம்மா ஒளியாகி என்னுள்ளே வியாபித்தாள் ..அப்பாடா அவளை பிடித்து விட்டேன். இனி அவள் என்னுள்ளே''.

ராமகிருஷ்ணன் கண் விழித்தார். இதழ்கள்  ''அம்மா'' என்று  பரம  திருப்தியோடு உச்சரித்தன. நடந்தது இனி வரப்போவதற்கு அச்சாரம். இனிப்பின் ருசி தெரிந்த குழந்தை இன்னும் இன்னும் தா  என கேட்குமே? அம்மாவை நாடினார். இடைவெளி இல்லாத எப்போதுமே   நிரந்தரமாக பவதாரிணி தேவையானாள். குழந்தை மட்டுமா விளையாடும். அம்மாவும் தான்  பாப்பாவோடு கண்ணாமூச்சி விளையாடினாள். தோன்றுவாள், மறைவாள். அழ வைப்பாள். சிரிக்க வைப்பாள். தேடி அழும்போது ''அழாதே கண்ணா'' என்று எதிரில் நின்றாள். பேச்சுக்கு, சிரிப்பதற்கு, ஆள் கிடைத்தாயிற்று அவளுக்கு மட்டுமல்ல அவருக்குமே. 

கண் முன்னே ஆயிரக்கணக்கான பளிச் சென்று  ஒளி வீசும்  மின்மினி பூச்சிகள் பறக்கும். எங்கோ முடிவில்லாத, உருவம் காணமுடியாத ஒரு பனித்திரை மூடும். ஆழம் தெரியாத சமுத்திரத்தின் அடியில்... பேயாட்டம் ஆடும் அலைகளின் மேல்,.... மேலே உச்சி வானில்.... எங்கெல்லாம் என்னை அலைக்கழிக்கிறாள்  இந்த  பொல்லாத அம்மாக்காரி.? சுட சுட வெள்ளி உருக்கி வார்த்தது போல் இதோ திருவடிகள், கணுக்கால், தொடை, இடை, மார்பு, முகம் தலை....முழு உருவம்... ஆஹா என்ன தேஜஸ்..அவளது மூச்சு சூடாக அவர் முகத்தில் பட்டது. அவள் குரல் காதில் ஒலித்தது. பூஜை பண்ணுவார். எண்ணற்ற முறை அவளது தரிசனத்தில் தன்னை மறந்து   மரக்கட்டையாவார்.

பார்க்கும் சாதாரண மானுடர்களுக்கு இது தெரியுமா, புரியுமா?  பைத்தியம் பைத்தியம்...
''இந்த பூஜாரி பூஜை சரியாக பண்ணவில்லையே'' என்ற சேதி பரவியது.

தட்டில் புஷ்பம். அதை எடுத்து தன் தலை, முகம், கால்களில் எல்லாம் முதலில் போட்டுக்கொண்டு பிறகு அவளுக்கு சாத்துவார். அவள் தாடையை பிடித்து கொஞ்சுவார். பாடுவார், பேசுவார்,
கெஞ்சுவார்.  அணைப்பார். சிரிப்பார். நர்த்தனம் ஆடுவார்.

பிரசாதம் ஒரு கவளம் எடுத்து அவள் வாயில் வைத்து ''இந்தா நீ சாப்பிட்டால் தான்  உன்னை நான்  விடுவேன்'' என்று பிடிவாதம். அவருக்கே அவள் சாப்பிட்டதாக தோன்றினால் தான் விடுவார்.

இரவில் அவளை நித்திரைப்  படுத்திவிட்டு தனது அறைக்கு போவார். ஆனால் அவள் படியேறி மாடிக்கு கோபுரத்தின் உச்சிக்கு போவது தெரியும். சலங் சலங் ... தண்டை கொலுசும் ஒலிக்குமே. அவர் கண்களில் தெரிவாள். ஏன் தலையை விரித்து போட்டுக்   கொண்டிருக்கிறாள்? என்ன செய் கிறாள்? அவள் உருவம் பெரிதானது. கங்கை, இருளில் ஒலித்தது. வானுக்கும் பூமிக்குமாக அங்கே நிற்கிறது தெரிகிறதே. கரிய பெரிய உருவம். கங்கையையும் , கல்கத்தா முழுவதையும் பார்க்
கிறாளே''

கோவில் நிர்வாகிகள் சந்தேகமே படவில்லை. இது சரியான முற்றிய பைத்தியம். சில டாக்டர்கள் வந்து பார்த்தனர். எந்த மருந்தும் வேலை செய்யவில்லையே. 

''எல்லோரும் சொல்வது போல் நான் பைத்தியமாகி விட்டேனோ?  ராமக்ரிஷ்ணருக்கு  தன்  மேல் சந்தேகமே வந்துவிட்டது. 

''எல்லையற்ற கடலில் திசை தெரியாமல் மிதந்து செல்கிறேனே. அம்மா நீ தான் வழிகாட்டி. எனக்கு மந்திரமோ, தந்திரமோ, வேதமோ, சாஸ்திரமோ, ஒன்றுமே தெரியாதே. உன்னை நான் அடைய வழி நீ தான் சொல்லவேண்டும்.''

பைத்தியம் என்று சொன்னவர்கள், அவரது சாத்வீகம், அமைதி, எளிமை, பரிபூரண பக்தி ஆகிய வற்றைப்  போற்றினார்கள். அவரைக் கண்டாலே தாங்கள் உயர்வடைவதை உணர்ந்தனர்.

கோயில் தோட்டத்து வட மூலையில் ஒரு இடத்தை  தேர்ந்தெடுத்து அதைத்  தனக்கு அமைத்துக் கொண்டார்.

'அடேய் ஹ்ரிதய், இந்த ஐந்து செடிகளை இங்கே நட்டு விடுகிறாயா?'

அவர் சொல்லி  ஹ்ருதய்  நட்டவை தான் இன்று  தக்ஷிணேஸ்வரத்தில்   நாம் காணும்  பஞ்சவடி. 

தொடரும்  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...