Wednesday, July 14, 2021

RAMAKRISHNA PARMAHAMSA

 

அருட்புனல்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 
பார் போற்றும் பரமஹம்சர்.
   

வினோத வழிபாட்டு முறை

எங்கோ தக்ஷிணேஸ்வரத்தில் ராமகிருஷ்ணர் எளிமையோடு காளி கோவில் ஆலயத்தில் தியானத்தில் இருந்தாலும் அவரை மெல்ல மெல்ல நாடே அறிந்து கொண்டு வந்தது. இப்போதெல்லாம் ராமகிருஷ்ணர் ஆழ்ந்த தியானம் செய்து அன்னையை அடைய தேவையின்றி நினைத்த மாத்திரத்தில் என்ன செய்து கொண்டிருந்த போதிலும் அம்மா தரிசனம்  கொடுத்துக் கொண்டிருந்தாள். 

 எதிரே தெரியும் கங்கை நதி, மரங்கள், கட்டிடங்கள் மனிதர்கள் போல் சந்தேகமின்றி அம்மாவும் அவர் கண்ணுக்கு தெரிந்து கொண்டே இருந்தாள் .

சிலசமயங்களில் திடீரென்று   காலி கோவிலுக்கு  மதுர பாபு வந்து பூஜைகளை கவனிப்பார். இளம் ராமக்ரிஷ்ணரின் பக்தி  பாபுவுக்கு  பரவசம் தந்தது. கல்லையே கூட காளியாக மாற்றும் பக்தர் ராமகிருஷ்ணர்  என்று புரிந்தது.

ஒருநாள் ராமகிருஷ்ணர் பவதாரிணிக்கு நைவேத்தியம் பண்ண   வைத்திருந்த ப்ரசாதத்தில் கொஞ்சம் ஒரு பூனைக்கு  முதலில் எடுத்துப்  போட்டதை   ஆலய  மேனேஜர்  மதுரபாபுவிடம் சென்று  முறையிட்டான்.

''இப்படியா பூஜை செய்வது. அம்பாளுக்கு என்று பண்ணிய நைவேத்தியத்தை பூனைக்கா கொடுப்பது. இந்த பைத்தியத்தை வைத்திருக்கிறீர்களே''  என்று கோபமாக  குறைபட்டுக்கொண்டான்.  மதுர் பாபு ஒன்றும் பதிலே பேசவில்லை. 

பல வருஷங்களுக்குப் பிறகு   ஒரு நாள்  ராமகிருஷ்ணர் இந்த சம்பவத்தை  நினைவு கூர்ந்து என்ன சொன்னார் தெரியுமா?

''ஆமாம் என்  கண்ணுக்கு  எல்லாமே பவதாரிணியாகத்  தான் தோன்றியது. கதவு, சிலை, பாத்திரங்கள், பூனை, வெளியே மரங்கள், நடந்து செல்பவர்கள் எல்லோருமே என் அன்னையாக இருக்கும்போது என்னை ''ஆகாரம் கொடு'' என்று பூனையாக அவள் கேட்கும்போது முதலில் அவளுக்கு தானே கொடுக்கவேண்டும்'' என்று மதுர பாபுவிடம் சொன்னேன்.''அவர் கண்களில் நீரோட ஆமாம் என தலையாட்டினார். இனி ராமகிருஷ்ணர் வழியில் குறுக்கிடாதே என்று அந்த மேனேஜருக்கு மதுர் பாபு  உத்தரவிட்டார்.

ஒரு சமயம் பஞ்சவடியில்  இருந்த   ராமகிருஷ்ணருக்கு உடலெல்லாம் திகு திகுவென எரிச்சல் தாங்கமுடியாமல்   தொந்தரவாக இருந்தது. வலி அதிகமாகியது.  
''நான் ஒரு பாபி. அதனால்  தான் இப்படி அவஸ்தை படுகிறேன்'' என்றார்.
உடல்  எரிச்சலோடு  தியானத்தில்  ஈடுபட்டார்.  அப்போது அவருடைய உடலிலிருந்து சிவந்த கண்கள்  கொண்ட  யாரோ கருப்பாக ஒருவன் வெளியேறி வந்து தடுமாறிக்  கொண்டே  வெளியே   செல்வது தெரிந்தது. 
''யார் இவன் என் உடலிலிருந்து வெளியே வருகிறான்?''  கவனித்தார். 
''அட. இதென்ன ஆச்சர்யம், இன்னொரு ஆள், யோகி மாதிரி . அவனும்   அவர் உடலிலிருந்து இப்போது வெளியேறினான். காவி உடை, சந்நியாசி, கையில் திரிசூலம். அவன் வெளியே முதலில் சென்ற கொடியவனுடன் சண்டையிட்டு அவனை சூலத்தால் கொன்றான். ' 

''என்னுள்ளே இருந்த பாபி கொல்லப்பட்டான். என் பாபங்கள் என்னை விட்டு விலகியது '' என்கிறார் ராமகிருஷ்ணர். அதற்கப்பறம் உடலில் இருந்த எரிச்சலைக்  காணோம்.

' நான் ராமனுக்கு பணிவிடை செய்த அடிமை ஆஞ்சநேயன் போல் என் தாய்க்கு பணியாளனாக மாற வேண்டும் '' என்பார் ராமகிருஷ்ணர். தன்னை ஹனுமானாக அனுமானித்துக்கொண்டு குரங்கின் அசைவுகளை வெளிப்படுத்தினார். மரங்களில் குரங்கு போல் தாவி ஏறுவார் . வேஷ்டியின் ஒரு நீளமான முனை வாலாகியது.நடப்பதற்கு பதில் தாவித்தாவிச்  செல்வார்.  கண்கள் ஓரிடத்தில் நில்லாது அலை பாயும் .  இருகைகளாலும் கிழங்குகள், காய்கள், கனிகளை கடித்துத் தின்பார், துப்புவார். 

சில நாளில் சீதா தேவியின் தரிசனம் சித்தித்தது. அவரது உடலில் அவள் புகுந்தாள். 

இதெல்லாம் படிப்பதற்கு ஏதோ கற்பனை போல் இருக்கும். நம்ப முடியாததாக இருக்கும். ஏனென்றால் நம் ஒருவருக்கும் இந்த அனுபவங்கள் கிட்டப்   போவதில்லை. அறியாததை, புரியாததை, தெரியாததை, இல்லை என்று சொல்லும் வழக்கம் அல்லவா நமக்கு.

மதுர்  பாபு ராமகிருஷ்ணர் குரங்கு போல் தாவுவதை கவனித்து அவருக்கு சித்த பிரமையோ என்று கூட  சந்தேகித்தார்.

ஒரு நாள் ராணி ராஸமணி ராமகிருஷ்ணர் மதுரமான குரலில் பாடுவதை கேட்டு ஆலயத்திற்குள் வந்தாள். பாடிக்கொண்டே இருந்தவர் சட்டென்று திரும்பி ராணியின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.

ராணி கோபிக்கவில்லை.

''ஆமாம் நான் அன்னையின் கோவிலில் அவளை பற்றி நினைக்காமல் ஏதோ ஒரு நீதி மன்ற வழக்கை பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருந்தது எப்படியோ அவளுக்கு தெரிந்து ராமகிருஷ்ண சுவாமி மூலம் என்னை தண்டித்தாள்'' என்றாள் ராணி.

மதுர்  பாபு யோசித்து மெதுவாக ராமக்ரிஷ்ணரிடம் '' சுவாமி நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை மட்டுப் படுத்திக் கொண்டு உலகில் சமூகத்தில் எப்படி நடக்கவேண்டுமோ அவ்வாறு நடக்க முயற்சிக்க வேண்டும். உங்கள் உணர்ச்சிகள் வேறு, உங்கள் கடமைகள் வேறு. பகவான் ஒரு மரத்தில் ஒரு செடியில் ஒரு வண்ண புஷ்ப  வகையைத் தான் தருவான். வெவ்வேறு வர்ண புஷ்பங்கள் ஒரே செடியில் உருவாவதில்லை அல்லவா?. ராமகிருஷ்ணர் பேசவில்லை.

அடுத்த நாள் பூஜையில் மதுர் பாபுவுக்கு ராமகிருஷ்ணர் பிரசாதம் கொடுத்த போது ஒரே காம்பில் இரு வண்ண செம்பருத்திப்பூக்கள் கிடைத்தது. ஒன்று சிவப்பு ஒன்று வெள்ளை.

ராணியும் பாபுவும் கலந்தாலோசித்தார்கள். ''ராமக்ரிஷ்ணர் அதீத பக்தி பாவத்தோடு உலகத்திலிருந்து விலகி இருப்பதால் இது போன்று நடந்து கொள்கிறார். அவரது கவனத்தை உலக வாழ்க்கைக்கு எல்லோரையும் போல் வாழ திருப்ப   வேண்டும். பிறகு எல்லாம் அப்போது சரியாகிவிடும் என்று நினைத்து இரு வேசிகளை அவர் தங்கியிருந்த விடுதிக்கு அனுப்பினார்கள்.

''யார் நீங்கள் உள்ளே வாருங்கள்'' என்று அழைத்து அவர்களை வணங்கிய ராமகிருஷ்ணர் அவர்களை கை கூப்பி வணங்கினார். அவர்கள் அவருக்கு பவதாரிணியாகவே காட்சியளிக்க ஆனந்த சமாதியில் ஆழ்ந்தார்.

1858ம் வருஷம் தக்ஷிணேஸ்வரத்திற்கு ராமகிருஷ்ணரின் நெருங்கிய உறவினர் ஹலதாரி வந்தார். ராமகிருஷ்ணரின் போக்கு வழக்கத்திற்கு மாறாக இருக்கிறதே என்று மதுர பாபு ஹலதாரியை பவதாரிணி ஆலய அர்ச்சகராக நியமித்தார். ஹலதாரியும் ராமக்ரிஷ்ணரும் மலைக்கு மடுவுக்குமான வித்தியாச குணங்கள் கொண்டவர்கள்.

ஹலதாரி படித்தவர். வாதங்கள் விவாதங்களில் ஈடுபடுபவர். ராமகிருஷ்ணரை விமர்சித்தார்.

'' ராமகிருஷ்ணா, உனது வழிபாட்டு முறை சாஸ்த்ர விரோதமானது. வினோதமானது'' என்று வாதித்தார்.

ஒரு நாள் '' ராமகிருஷ்ணா, மனித மனத்துக்கு புரி படாத அப்பாற்பட்ட வஸ்து பகவான்'' என்கிறார் ஹலதாரி . ராமகிருஷ்ணர்  தான் தவறான வழியில் செல்கிறோமோ என்று வருந்தினார்.

''அம்மா, நான் ஒரு முட்டாள் என்பதால் ஏமாற்றி  விட்டாயா? நான் உன்னைக்  கண்டு பேசியது, ஆனந்தித்தது எல்லாமே மனோ வியாதியா? இல்லாத ஒன்றையா இருப்பது போல், காணாத ஒன்றையா கண்டது போல் சொன்னேன்?'' 

கண்களில் ஆறாக நீர்வழிந்தது. அப்போது திடீரென்று எங்கும் ஒரு பனிப்படலம் தரையிலிருந்து மேலே எழும்பியது.அது எங்கும் வியாபித்து அதன் நடுவிலே ஒரு முகம். வெண் தாடி. அழகிய அமைதியான பளிச்சென்ற முகம்

 ''நீ தொடர்ந்து உனது பாவ (BHAAVA )முக்தி உணர்விலேயே இரு. உன் வழி சரியானதே'' என்று மூன்று முறை சொல்லி மறைந்தது'' என்கிறார் ராமகிருஷ்ணர். 

அவருக்கு பொய் சொல்லவேண்டிய அவசியம் ஏது ?

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...