Friday, July 2, 2021

RAMAKRISHNA PARAMAHAMSA

 



அருட்புனல் - நங்கநல்லூர் J K SIVAN ---
பார்போற்றும் பரமஹம்சர்.  

    
3. ராஸமணி கட்டிய காளி கோவில்


ராமன்  என்றால் லக்ஷ்மணன் ஞாபகத்துக்கு வருவது போல்,  காந்தி என்றால் நேரு என்ற பெயர் மனதில் எழும்புவது போல்  ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹஸரைப்  பற்றி சொல்லும்போது  காளிகோவில் அதைக்  கட்டிய  ராணி  ராஸமணி   நினைவுக்கு வருவாள்.

ராஸமணி தாஸ்  (28.9.1793- 19.2.1861)  கட்டிய தக்ஷிணேஸ்வர  காளி  கோவில்  என்றும் அவளை நினைத்து வணங்கச் செய்யும்.  அவள்  அந்த கோவிலை நிர்வகித்த காலத்தில் தான்  ராமகிருஷ்ணர் அவளுக்கு அறிமுகமாகிறார். அவரை காளி  கோவில் பூசாரியாக  நியமித்தவள்.  அவரிடம் தினமும் பழகியவள் . சுவர்ணரேகா நதிக்கரையிலிருந்து  பூரி ஜெகன்னாதர் ஆலயம் வரை சாலை அமைத்தவள் .  கங்கையில் பக்தர்கள் ஸ்னானத்துக்கு பல  படித்துறைகள் அமைத்தவள். 

 ராஸ மணி கட்டிய  காளி கோயிலில்  பணி  புரிய கல்கத்தா சென்ற கதாதரின் நடவடிக்கை அண்ணன் ராம்குமாருக்கு திருப்தி அளிக்க வில்லை.

''என்னடா கதாதர் செய்கிறாய் ? பூஜை பண்ணச்சொன்னால் பேசாமல் சிலையாக நின்று விடுகிறாய்? 
கோயிலுக்கு  யார் வருகிறார்கள் போகிறார்கள்  என்பது கூட கவனிப்பதில்லை. அர்ச்சனை அபிஷேகம் சங்கல்பம் பண்ண வந்தவர்கள் கோபம் கொண்டு என்னிடம் குறை சொல்கிறார்கள். ராணி சமஸ்தானத்தின் காதுக்கு விஷயம் சென்றால் என் உத்தியோகமும் போய்விடும். உன்னால் தான் கூட கொஞ்சம் வருமானம் குடும்பத்துக்கு கிட்டும் என்று உன்னை அழைத்து வந்தேன். என் உத்யோகத்துக்கே  உலை வைத்து விடுகிறாயே ''  

ராம் குமார் தம்பியை எச்சரித்தார். ஆனால் உள்ளூர ஒரு எண்ணம் அவருக்கு.    கதாதர், ஏதோ தப்பி பிறந்தவன். ராமன், கிருஷ்ணன், புத்தர், சங்கரர் சைதந்யர் போன்ற மஹான் ஆத்மாவோ? அமானுஷ்ய தெய்வீக சக்தி ஏதோ அவனுக்குள்ளே இருக்கிறதோ ? அப்படித்தான்  போல எனக்கு தோன்றுகிறது''  என்று நினைத்தார். . எந்த ஆட்சியிலும் இந்தியாவில் ஆன்மிகம் தான் உயிர் மூச்சாக இருந்திருக்கிறது. இவன் ஒருவேளை நம் குடும்பம் செய்த பாக்யமோ?'' ராம்குமாரின் மனம் தீவிரமாக யோசித்தது.

பல நூறு ஆண்டுகளாக நடந்த முஸ்லீம் ஆட்சியில் நாடே கலங்கிப்போயிருந்தது. இந்துக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டு, அவர்கள் வம்சம் க்ஷீணமாகி, மதம் மாற்றப்பட்டு கோவில் சிலைகள் உடைக்கப்பட்டு, கோவில்கள் மசூதிகளாக மாறி என்னென்னவோ   அக்கிரமங்கள், பாதகங்கள், அராஜகங்கள்  கேட்பாரின்றி நடக்கிறது.  கொலை கொள்ளைகள்  மலிந்து விட்டது.  ஹிந்துக்கள்  சக்தியற்று,  எப்போதும் ஒரு   பீதியில், உயிருக்கு பயந்து  வாழவேண்டி இருக்கிறது.  

முஸ்லிம்களை தொடர்ந்து இந்த  வெள்ளை நிற மக்கள் உள்ளே புகுந்து விட்டார்களே. அவர்களால் ஏற்பட்ட, ஏற்படும் பாதகங்களை வேறு நாடும் ஹிந்துக்களும் பொறுமையாக அனுபவித்தார்கள். சாஸ்த்ர சம்பிர தாயங்கள் மறைய ஆரம்பித்து புது மோஸ்தரில் நாகரிகம், பண்பாடு வளர ஆரம்பித்து விட்டது.ஹிந்து தார்மீகம் முழுதும் சாகவில்லை. சத்தியத்துக்கு சோதனை. அவ்வளவு தான். எத்தனையோ, எவ்வளவோ சோதனைகளை அக்னிப் பரிக்ஷைகளை  சந்தித்த  பூமி இது.  ராம் குமாரின் மனதில் இந்த வேதனைப் புயல்.

'ஒருநாள் ராமகிருஷ்ணர்     'அண்ணா என்னைச்  சம்பாதிக்க சொல்கிறாயே. அதால் என்ன பயன்?'' என்று கேட்டபோது  ராம்குமார் தலை  சுற்றியது.  என்ன பதில் சொல்வது?

ராம்குமாரை சிலையாக்கி நிற்கவைத்து விட்டு நாம் சற்று பின் நோக்கி போகவேண்டும். சில விஷயங்கள் அப்போது தான் புரியும்.

முதல் பாராவில் மேலே  சொன்ன   ராணி ராஸமணி என்று ஒர் பிற்படுத்தப் பட்ட வகுப்பு பெண்மணி இருந்தாள்.கணவனை இழந்தவள். வியாபாரி, தைரியசாலி, கெட்டிக்காரி,   ஜமீன்தாரிணி  இதோடு கூட தாராள மனது இருந்தது. தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகம். ஒரு சிறந்த காளி பக்தை.. அவளுடைய வியாபார விவகாரங்களில் அவளுக்கு உறுதுணையாக இருந்தவர் அவளது மருமகன் மதுர மோகன்.

ராசமணிக்கு தக்ஷிணேஸ்வரில் இருபது ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. கல்கத்தாவிலிருந்து நாலு மைல் தூரம். 1847ல் அங்கே தனது இஷ்ட தெய்வம் காளிக்கு ஒரு ஆலயம் தோட்டத்துடன் நிறுவினாள். கங்கைநதியின் கிழக்கு கரையில் அற்புதமாக அமைந்தது அந்த ஆலயம். ஆலயத்தின் வடபுறம் பழத்தோட்டம், பூஞ்செடி கொடிகள், இரு நீரோடைகள் நெளிந்து ஓடி கங்கையில் சங்கமமாயின.

படகில் வருபவர்கள் ஸ்நான கட்டத்தில் இறங்கலாம். படித்துறை விசாலமாக இருந்தது. அதிலிருந்து சாந்தினி என்ற இடம் செல்லலாம். அங்கே ஆறு சிவன் கோவில்கள் கட்டியிருந்தாள். சிவன் கோவில்களின் கீழ்ப் புறத்தில் செவ்வக வடிவில் நீண்ட அகல மைதானம் போன்ற வெற்றிடம். இதில் தான் ரெண்டு கோவில்கள். ஒன்று காளிக்கு. மற்றொன்று ராதாகிருஷ்ணனுக்கு. காளி கோவில் கொஞ்சம் பெரியது. ராதாகிருஷ்ணன் கோவில் கங்கையை பார்த்தபடி. ஒன்பது வட்ட வடிவ விமானங்கள் கொண்ட காளி கோவில் எதிரே ஒரு நாட்டிய மண்டபம். கனமான தூண்கள் தாங்கும் உப்பரிகை.

வடமேற்கில் தென்மேற்கிலும் உயரமான கோபுரங்கள். அதிலிருந்து இனிமையான சங்கீத ஒலி கேட்கும். சூரியோதயம், நண்பகல், அஸ்தமனம் கோவில்களில் பூஜை வழிபாடு சமயங்களில் இனிய ஒலி கணீரென்று கேட்கும். டாண்  டாண் என்று மனத்தைக் கவரும்  சப்தம் கேட்கும்.   இந்த இரண்டு கோபுரங்களை நஹபத் என்பார்கள்.

நடைபாதை ஓடுகள் வேயப்பட்டு நடப்பதற்கு சிரமமில்லாமல் இருந்தது. மேற்குப்புறத்தில் அறைகள் கட்டப்பட்டன. சமையல், உக்ராணம். சாமான்கள் சேமித்து வைக்க, போஜன சாலை, ஆலய பணியாளர்கள் தங்க.பிரயாணிகள் யாத்ரிகள் தங்குவதற்கு கூடம் என்று பிரிக்கப்பட்டு வசதி செய்யப்பட்டிருந்தது. 

நான் இப்போது சொல்லப்போவது தான் இதில் முக்கியம். அது ஒரு விசாலமான அறை . மேலே சொன்ன ஆறு சிவன் கோவில்களின் பின்னால், வடமேற்கு மூலையில் இருந்தது. அதில் தான் தனது வாழ்வின் பெரும் பகுதியை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கழித்தார். அந்த அறையின் மேற்கு பக்கம் படிகள் இறங்கினால் அரை வட்ட வடிவில் ஒரு வெளி வாயில் கங்கை நதியைப்   பார்த்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து வடக்கு தெற்காக ஒற்றை அடிப்பாதை ஒன்று ஒரு பெரிய நந்தவனத்தை அடையச் செய்யும். அதிலிருந்து படிகள் இறங்கினால் கங்கையை தொடலாம்.

இந்த கட்டிடங்களின் வடக்கே தான் பஞ்சவடி. பெரிய முதிய ஆலமரம். வில்வ மரம். இங்கே தான் பரமஹம்சர் தனது ஆன்மீக சிந்தனைகளில் ஈடுபட்டார்.

இந்த கோவிலுக்கு ல் வடக்கே வெளிப்புறத்தில் ஒரு மாளிகை. அதில் தான் ராணி ராஸமணி வசித்தாள். அந்த மாளிகையிலிருந்து அடிக்கடி தோட்டத்துக்கு வருவாள். ஆக, இந்த தோட்டம் ஆலய சுற்றுச் சுவர்களுக்கு வெளியே வெள்ளைக்காரர்களின் அரசாங்க பீரங்கிகள் வெடிப்பதற்கு வெடிமருந்து தயாரிக்கும் இடம் இருந்தது.

கிருஷ்ணன் ராதையுடன் சிலைவடிவில் கம்பீரமாக ஒரு உயர்ந்த பீடத்தில் மேற்கே பார்த்தபடி நின்று புன்முறுவலித்தான். மாலை வெயில் அவர்கள் மீது படாமல் ஒரு திரை சந்நிதியில் தொங்கியது. ஆலய உள் பிரகாரத்தில் மேலே சுவற்றில் எண்ணெய் திரியில் எரியும் வரிசையான லாந்தர் லஸ்தர் விளக்குகள் . சந்நிதிக்கு முன்பாக ஒரு பெரிய பித்தளை பாத்திரத்தில்  கங்கை தீர்த்தம். பக்தர்கள் அதிலிருந்து ஒரு சில உத்ரணிகள்  பிரசாதமாக  பெற்று பக்தியோடு பருகுவார்கள்.

தொடரும்  

 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...