Wednesday, July 21, 2021

RAMAKRISHNA PARAMAHAMSAR

 

அருட்புனல்  -  நங்கநல்லூர்   J K  SIVAN --
பார் போற்றும் பரமஹம்சர்.


'எல்லாம் ஒன்றே தான் ''

யாருமே இல்லை.  அமைதியான  சூழ்நிலை. சுற்றிலும்  அடர்ந்த மரங்கள்.  சற்றே தூரத்தில் எதிரே சலசல வென்று கங்கையின் நீரோட்டம். மேலே கருமேக கூட்டம். பறவைகளின்  ஆனந்த கூச்சல். மென்மையான குளிர்ந்த காற்றில்  நறுமண மலர்களின் வாசம்.  எதிரே  பவதாரிணி நிற்கிறாள். சுடர் விடும் தீபம் அசையாமல் எரிகிறது.  தரையில் சிலையாகி  கால்களை பத்மாசனத்தில் அமைத்து கண்மூடி ஆழ்ந்த த்யானத்தில் ராமக்ரிஷ்ணர்.     ஓம்  என்று அனாஹத சப்தம் நெஞ்சில் கேட்கிறது  உலகும். அவருள்ளே  ஏன் இப்படி  உருள்கிறது.?  கடல் அலைகள் ஏன் கொந்தளிப்புடன் ஆர்ப்பரிக்கிறது?  அதோடு கலந்த  உலகம் உருளும் சப்தத்தின் எதிரொலியுமா சேர்ந்துவிட்டது?   ஓஹோ  
அஷ்டாங்க சித்த யோகம் பலித்தது.
    
தெய்வீக அன்னையின் உருவமொன்றே அவர் மனதில் பதிந்து மற்றெல்லாம் உதறித்  தள்ளி வெகு நேரமாகிவிட்டதே. 

அட  இதென்ன ஆச்சர்யம்?    அவர் மனதில்  காணும்   ஓவென்ற பேரிரைச்சலுடன் கங்கை அல்லவோ  கொப்புளிக்கிறாள்.  அந்த ஆழமான  நதியிலிருந்து   யார் இந்த   திவ்ய சுந்தரி?  ஓஹோ  அவள் பூரண கர்ப்பவதியாக மெதுவாக  அசைந்து அசைந்து வயிற்றின் சுமையோடு  எங்கே போகிறாள்?  ராமகிருஷ்ணர்  வாசம் செய்யும்    பஞ்சவடியை நோக்கி  எதற்கு  நடந்து வந்தாள் .    அவளது அழகிய முகத்தில் புன்சிரிப்பு.  தொடர்ந்து  அவள்  அமர்ந்தாள்,படுத்தாள்,  பிரசவித்தாள்.  குவா குவா என்று ஒரு பச்சிளம்  பிறந்த சிசு.  அதை அரவணைத்தாள் .  அப்புறம்?
ஐயோ,  இதென்ன.  அழகானவளாக  தோன்றிய அந்த தாய்,  எப்படி திடீரென்று சிவந்த கண்களோடு தொங்கிய நாக்கோடு கூறிய பற்களை நறநறவென்று கடிக்கிறாள்.  அந்த சிசுவை வாயருகே கொண்டு சென்றாள் . ஒரே கடி. ரத்தத்தை உறிஞ்சினாள். அந்த சிசுவை ஒரே வாயில் விழுங்கினாள். நடந்தாள் . கங்கையில் இறங்கினாள் .மறைந்தாள்.   என்ன  அர்த்தம் இதற்கு. ஒன்றுமே புரியவில்லையே .  மார்பு படபடவென்று துடிக்கிறதே.  அதிர்ச்சி  தாங்கமுடியாமல்  உடம்பு வியர்க்கிறதே .

ராமகிருஷ்ணர்  உடலிலிருந்து குண்டலினி சக்தி உயிர் பெற்றது. தூங்கிக்  கொண்டிருந்த சர்ப்பம் வளைந்து நகர்ந்தது. மேலே எழும்பியது. சுழுமுனை கால்வாயில் ஊர்ந்து மேலே சென்றது. ஆறு ஸ்தானங்களில் நின்றது.  ஸஹஸ்ரார ஆயிரம் தாமரை இதழ்களில் சென்று ஐக்யமானது. ராமகிருஷ்ணர் சமாதி நிலையில் ஆழ்ந்தார்.

''இனி உன்னை தேடி நிறைய சீடர்கள் வருவார்கள். அவர்களுக்கு வழி காட்டு'' என்று ஏதோ அவர் உள்ளே சொல்லியது.

பக்தியில் மூன்று வகை. தமோ, ரஜோ, சாத்விக  பிரிவுகள்.  பக்திமானாக இருந்தும் அவனிடம் அதிகாரம், கர்வம், கோபம், முதலானவை தென்பட்டால் அவன் தமோ குண பக்தன். செல்வம் பெற, உலக சுகங்கள் பெற கடவுளை வேண்டும் பக்தன் ரஜோகுண பக்தன். உலக விருப்பு வெறுப்பு அற்று பகவானை திருப்தி பண்ண நினைத்து, பூரண விஸ்வாசம், எல்லோரிடமும் அன்புடன் வேண்டுபவன் சத்வகுண பக்தன்.

இந்த  மூன்றில் எதுவும் இன்றி, மனம் முழுவதாக இறைவனை மட்டுமே நினைந்து தன்னை இழந்தவன் பூர்ண பக்தன். அவன் தான் இந்திரலோக மாளும் அச்சுவை பெறினும் வேண்டாதவன். எந்த நிலையிலும் கடவுள் ஒருவரையே மூச்சாக கொள்பவன். 

வைதிக பக்தி சாஸ்த்ர விதிகளுக்குட்பட்டது. இப்படி உபாசிப்பவன், ஸ்தோத்ரம், பிரார்த்தனை, விரதம்,  உபவாசம்,  பஜனைகளில் ஈடுபடுபவன். இதிலேயே ஊறினவனால்  தான் பர பக்தி யில் ஈடுபட முடியும். அதி தீவிர கடவுள் சிந்தனை ஒன்றே எங்கும் எதிலும் என்றும் கடவுளே என அவனை மாற்றும். உலக  சம்பந்த  மில்லாத தெய்வீகன் அப்போது அவன். 

அவனுக்கு தந்தை, தாய், மனைவி, மக்கள், சுற்றம் எஜமானன், வேலைக்காரன், நண்பன் எல்லாமே கடவுள் தான். இந்த உறவுகளில் தான்  ராமகிருஷ்ணர்  பவதாரிணியை தனது  தாயாக  கண்டார்.

கண்ணன் வாழ்ந்த காலத்தில் கோபியர் ஆறு வயது கண்ணனை தமது வாழ்வின் ஜோதியாக கண்டனர். அவர்களது தூய அன்பு அவனை கட்டுண்ட மாயனாக பண்ணியது. தீராத அந்த விளையாட்டுப்  பிள்ளை அவர்கள் மனதில் ஆரா அமுதென இடம் பெற்றான்.

நாட்கள் நகர்ந்தன. தக்ஷிணேஸ்வரம் என்ற பெயர் பலர் நாவில் இடம் பெற்றது. 1864ல் ஒரு வைணவ சந்நியாசி, ஜடாதாரி, என்று அழைக்கப்பட்டவர் அங்கே வந்தார். அவர் சிறந்த ராம பக்தர். ராம்லாலா என்ற சிறிய விக்ரஹம் அவருடைய உயிர் மூச்சாக அவருடன் எப்போதும் இருக்கும். அதற்கு பூஜை செயது உபசரித்து விட்டு தான் நீர் கூட பருகுவார். தாய் கௌசல்யா எப்படி ராமனிடம் வாத்சல்யம் வைத்திருந்தாளோ அதில் இம்மியளவும் ஜடாதாரியின் பாசமும் நேசமும் ராம்லாலாவிடம் குறையவில்லை

''வாடா ராம்லாலா குளிக்கலாம். இதோ பார் அருமையான குளம், வா,  இதைப் பார் எவ்வளவு அழகாக இருக்கிறது இந்த மண்டபம். இங்கே அமர்ந்து சாப்பிடுவோமா.? ... போதும் பேசினது. நேரம் ஆகிவிட்டது. குழந்தே,  நீ தூங்கவேண்டும், வா உன்னை தோளில் சாத்தி முதுகில் தட்டி,  பாடித்,   தூங்க பண்ணுகிறேன்.''    --      இந்த வகை பக்தி.

இப்படி இணை பிரியாத ராம்லாலாவை ஜடாதாரி என்ன பண்ணினார் தெரியுமா? ஒருநாள் ராமக்ரிஷ்ணரிடம் வந்தார்.

''சுவாமி , இந்தாருங்கள். என் வாழ்வின் லக்ஷிய சொத்த  இந்த   ராம்லாலா. இவன் இனி உங்களிடம்  தான்  இருக்க போகிறான்''

கண்களில் நீர்ப் பெருக்கு .  வாய் பேசமுடியாமல் திணற ராம்லாலாவை ராமகிருஷ்ணர் கைகளில் திணித்துவிட்டு விடுவிடுவென்று புறப்பட்டார் ஜடாதாரி.

ஒன்றும் பேசாமல்   ராம் லாலாவை  வாங்கி கொண்ட ராமகிருஷ்ணர் கனவில் ஒருநாள் ராமர் தரிசனம் தந்தார். ராமன் தான் கிருஷ்ணன், அவனே ப்ரம்மா, சிவன், முத்தொழிலின் காரணம், அகண்ட பெருவெளி, எதுவும் எங்கும், எதிலும் அவனே என்ற ரகஸ்யம் மனதில் பளிச்சிட்டது. ராம்   லாலாவை தனது செல்லக் குழந்தையாகவும், தன்னை  அவன்   தாயாகவும்  பாவித்தார் ராமகிருஷ்ணர். 

தன்னை பவதாரிணியின் சேவகியாகவும் கிருஷ்ணனின் கோபியரில் ஒருவளாகவும் மாற்றிக் கொண்டார். நடை உடை பாவனை பேச்சு எல்லாமே பெண்மை கலந்து இருந்தது. மாதுர்பாபு பெண்கள் உடை, நகை எல்லாம் ராமகிருஷ்ணருக்கு அளித்து அவற்றை அணிந்து கொண்டார். இரவு பகலாக கிருஷ்ணனும் அவரோடு கலந்து பேசி உறவாடி பிருந்தாவன வாழ்வு தந்தான். ராதாவை அடையாமல் கிருஷ்ணனை அடைய  முடியாதே . ராமகிருஷ்ணர் ராதையை நாடினார் அடைந்தார். அவர் உடலில் ராதை குடி  புகுந்தாள்.

பிற்காலத்தில் ஒரு நாள் இது பற்றி பேசும்போது ''ஆஹா, ராதையின் அழகு வர்ணிக்க முடியா தது.  அவள் இனிமையான குரல்,நளினம், பாசம், நேசம், பிரேமை எல்லை யற்றது. இளம் மஞ்சள் அவள் நிறம். அவள் தன்னை மறந்தவள். கண்ணனாகவே தன்னை கருதியவள். ஆனவள். ராமகிருஷ்ணன் அதே மகா பாவத்தை (bhavam ) அடைந்தார். .

''மஹா பாவம் (bhavam ) என்பது பக்தியின் உச்சி. 19   வித உணர்ச்சிகளை, உணர்வுகளை கொண்டு இறைவனை தன்னிலையாக்கிக் கொள்வது. ராதையிடம் அது இருந்தது. என் இந்த உடலிலும் அது எல்லாமே வெளிப்பட்டது '' என்று பின்னர் ஒருமுறை சொல்லியிருக்கிறார். ராதை பெற்ற கிருஷ் ணானுபவத்தை ராமக்ரிஷ்ணரும் பெற்றவர். ராமனும் க்ரிஷ்ணனும் அவருள் கலந்ததாலேயே அவர் இயற்பெயர் கதாதர் மறைந்து அவர் '''ராமகிருஷ்ணர்'' ஆகியிருக்கவேண்டும்.

ராதா  காந்த் ஆலயத்தில் ஒருநாள் பாகவதம் உபன்யாசம். கேட்டுக்கொண்டே இருந்த ராமகிருஷ்ணர் அப்படியே இன்பசாகரத்தில் மூழ்கி சமாதி நிலை அடைந்தார். கிருஷ்ணனை நேரில் கண்டார். கண்ணனின் தாமரைப் பாதங்களிலிருந்து ஒரு ஒளிக்  கீற்று கயிறாக மாறி அவரை அடைந்து அவரை கண்ணனோடு பிணைத்தது. அப்புறம் எல்லோரிடமும் அவர் சொன்ன வார்த்தை ''புரிந்து விட்டது.பகவான், பக்தன், பாகவதம்'' வெவ்வேறு அல்ல ஒன்றே தான்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...