Saturday, July 3, 2021

CARDINAL NEWMAN

 


மார்க்க பந்து  -   நங்கநல்லூர் J K  SIVAN  

வழி  காட்டு,  ஒளி காட்டு.

1833ல்   கார்டினல்  ஜான்  ஹென்றி நியூமன்  என்ற இளம் பாதிரியார்  ஒரு பாட்டை எழுதி  இதை எத்தனையோ பேர்  ஸ்தோத்ர பாடலாக பாடினார்கள். பகவானை வேண்டினார்கள்.  இன்றும் எங்கும் அது பாடப்படும்  உலகப்பிரசித்தி பாடலாகி விட்டது.  

இத்தாலிக்கு சென்ற  நியூமன்  பாலெர்மோவில்  திடீர்  ஜுரத்தில்  உடல் நலம் குன்றி  படுக்கையில் இருந்த சமயம்   படுக்கையில் எழுந்து  உட்கார கூட முடியவில்லை. மெதுவாக சுதாரித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தார்.  அழுகை வந்தது.   ஒரு  பணிப்பெண் அவருக்கு உதவியவள்   ''எதற்காக ஐயா அழுகிறீர்கள்?''என்று  கேட்டாள் .

'' நான் எப்படி அம்மா  சொல்வேன் உனக்கு.    இங்கிலாந்தில் ஒரு முக்கிய வேலை .இங்கே  வந்த இடத்தில் இப்படி நோய்வாய் பட்டு தவிக்கிறேன்.  எப்படியாவது இங்கிலாந்தில்  என் வீடு  போய்ச்  சேரவேண்டும்.  இங்கிருந்து அடுத்த  இங்கிலாந்து செல்லும்  கப்பல்  இன்னும் 3 வாரங்கள் கழித்து தான் வருமாம்.  என்ன செய்வேன்?.  இங்கே  அருகே  இருக்கும் ஒரு  தேவாலயம் சென்று தொழுகிறேன். நல்லபடியாக ஊர் போய்ச்சேர  வேண்டுகிறேன்.  கொஞ்சம்   மன  நிம்மதி கிடைக்கிறது.  தேவாலயத்தில் நடக்கும்  மற்ற எந்த   பேச்சையும் பிரசங்கத்தையும் நான் கேட்பதில்லை. தேவாலயம்  போவேன், வேண்டுவேன்,  வருவேன். அவ்வளவுதான்'' என்கிறார்.  
நாட்கள் ஓடியது.
அப்பாடா  ஒரு நாள் ஒரு  சின்ன ஆரஞ்சு நிற பாய்மர கப்பல்  வந்தது.   நியூமன் அதில்  பிரான்ஸ்  நாட்டில் மார்ஸெல்ஸ் நகரம்  போய் சேர்ந்தார்.   போகும் வழியில்  சார்டினியாவுக்கும்   கார்ஸிகாவுக்கும்  இடையே   போனி பாஸியோ  STRAITS OF BONIFACIO  எனும் ஜலமார்கத்தில்   கப்பல் பிரான்ஸ் நோக்கி போகும்போது  நியூமன்   எழுதியது தான் மேலே சொன்ன அந்த பாட்டு.

ஒரு சங்கதி சொல்கிறேன்.  
எப்போதோ  ஒரு சமயம்  இங்கிலாந்தில் ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நிறைய பேர்  அடியில்  புதையுண்டு, பிராணவாயு இன்றி இறந்தனர். எப்படியோ தெய்வாதீனமாக ஒரு சிலர் மட்டும்  மீட்பு பணியாளர்கள் வந்து காப்பாற்றும் வரை  உயிரைக்  கெட்டியாக கையில் பிடித்திருந்தார்கள்.  அப்போது அவர்கள்  எங்கோ ஒரு மூலையில் பாறைகளுக்கு இடையில்   அமர்ந்து இந்த பாடலை மன  முருகி பாடி இறைவனை வேண்டினார் கள். மீட்கப்  பட்டார்கள்.  இதை கடவுள் கிருபை என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

டிட்டானிக்  எனும்  புது   கப்பல் முதல் பிரயாணத்தில்  அமெரிக்காவை நோக்கி செல்லும்போது  பரிதாபமாக  பனிப்பாறை  மோதி  மூழ்கியது. கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிய சமயம் சிலர் இந்த பாடலை கடைசியாக பாடியவாறு சிலர்   இறந்தனர். இன்னும் எத்தனை எத்தனை சந்தர்ப்பங்களில் நமக்கு தெரியாமல் திக்கற்ற நிலையில் வெள்ளையர்கள் இந்த பாடலை பாடி இருக்கிறார்களோ?  .  அதை தெய்வ பக்தி என்று நாம் எடுத்துக்கொண்டு  அந்த பாட்டை படிப்போமா?

இந்த பாட்டு என் ஞாபகத்தில்  இருக்கக் காரணம், இது  என்  11 ம் வகுப்பில் ஆங்கில வகுப்பில்  எங்களை  மனப்பாடம் செய்ய வைத்ததால்.     என்  ஆங்கில  வாத்தியார்  ஸ்ரீ   T N .சுந்தரம்.   லியோ'  LEO'S ஸ்   ஆங்கில  நோட்ஸ் போடுவார்.  தமிழில் கோனார் நோட்ஸ்  மாதிரி அது.   நல்ல டிமாண்ட்.  ஒவ்வொரு பாடத்தையும், பாடலையும்  ரசித்து  கற்பிப்பார்.

Lead, Kindly Light, amidst th'encircling gloom,
Lead Thou me on!
The night is dark, and I am far from home,
Lead Thou me on!
Keep Thou my feet; I do not ask to see
The distant scene; one step enough for me.

பகவானே,  எனக்கு  வழிகாட்டு, இருளில் ஒளிப்பாதை  காட்டு. எங்கும் இருள் அப்பி பயமாக இருக்கிறது. என்னை வழி நடத்து.  இவ்வளவு இருட்டாக இருக்கிறதே. நான் செல்ல வேண்டிய  என் வீடு எங்கோ வெகு தூரத்தில் உள்ளதே.  எனக்கு கொஞ்சம் வழி காட்டு.   அடி யொற்றி  நடக்கிறேன். உன் பாதத்தை காட்டு.  அதை பின் பற்றி நடக்கிறேன். காரிருளில் ஒன்றுமே தெரியவில்லை.  வழி முழுக்க  எனக்கு வெளிச்சம் வேண்டவே வேண்டாம். அடுத்த காலடிக்கு மட்டும்  வெளிச்சம் காட்டினாலே போதும்

I was not ever thus, nor prayed that Thou
Shouldst lead me on;
I loved to choose and see my path; but now
Lead Thou me on!
I loved the garish day, and, spite of fears,
Pride ruled my will. Remember not past years!

நான் இப்படி கெஞ்ச  சந்தர்ப்பம் இதுவரை  ஏற்பட்டதில்லையே தெய்வமே.  உன்னை  வழிகாட்ட  அழைத்ததும் இல்லையே. ஆனால்  இப்போது நீ  தான்  உதவ வேண்டும். உன்னால் தான் நான் கொஞ்சம் ஒளிபெற்று நடக்க முடியும். வழிகாட்டு.  எனக்கு  பட்டப்பகலில்  பளிச்சென்று சூரிய ஒளி ரொம்ப பிடிக்கும்.  அப்போது  பயம் தலை காட்டவில்லை.   ஆனால்   இப்போது  நிலைமை வேறு ?  நடுங்குகிறேன்.  என் கர்வம்  ஆணவம்  என்னை வழி நடத்தியது அப்போது.  இப்போது அதை நினைக்கவே பிடிக்கவில்லை. மறக்க முயல்கிறேன்.

So long Thy power hath blest me, sure it still
Will lead me on.
O'er moor and fen, o'er crag and torrent, till
The night is gone,
And with the morn those angel faces smile,
Which I have loved long since, and lost awhile!

ஆமாம். பகவானே,   இந்த கணம் வரை  உன் சக்தியால் தான்   நான் மூச்சு விடுகிறேன். உன்  ஆசி என்னை வாழ வைக்கிறது. என்னை நீ கட்டாயம் வழி நடத்தி செல்வாய்  என்ற உணர்வு, நம்பிக்கை மனது பூரா இருக்கிறது.  வழி பூரா  மேடு பள்ளம்,  காடு  மேடு  முள், சூடு மணல்  சேறு சகதி,  எப்படியாவது இந்த கும்மிருட்டில் இருந்து பொழுது விடிந்து  உன் அருள்முகம்  இனித்த பளிச் முகத்துடன் புன்னகைத்து  என்னை வரவேற்கட்டும். விழி திறக்குமா  எனக்கு வழி கிடைக்குமா என்று பாடுகிறேன்.  அது நிச்சயம் என்பதால்  இந்த  தடுமாற்றம் அதிக நேரம் நீடிக்காது....

Meantime, along the narrow rugged path,
Thyself hast trod,
Lead, Saviour, lead me home in childlike faith,
Home to my God.
To rest forever after earthly strife
In the calm light of everlasting life.  

உன் நிழல் மாதிரி உன் காலடியை ஒட்டி உன் பின்னாலே  குறுகிய  சந்து பொந்துகளில் எல்லாம் தொடர்ந்து வருகிறேன். வழி நடத்தி செல்.  என் வீட்டை காட்டு. குழந்தை மாதிரி வழி தெரியாமல் நிற்கிறேன்  பகவானே, எனக்கு  வீடு பேறு  கிடைக்க வழி காட்டு. இந்த  துன்பத்தை தொடர்ந்து இனி அமைதியான  என்றும் ஒளி மயமான வாழ்வை தர  வேண்டி தொழுகிறேன்.

வாழ்க்கை  ஒரு சம்சார சாகரம். இதில் கரை சேர, பல  பிறவிப்பிணிகள், துயர்கள் தீர,  ஜென்ம வினை தீர பகவானை வணங்குகிறோம்.  

மேலே  பாடலில் சொன்னதை  வாழ்க்கை துன்பமாக எடுத்துக் கொண்டு படித்தால் அர்த்தம் அற்புதமாக த்வனிக்கும்.   எத்தனையோ இடையூறுகள் வாழ்க்கையிலும் உண்டு. அதெல்லாம்  தாண்டி கரை சேர வேண்டும். அதற்கு பகவான் துணை இன்றி முடியாது.  அவன் வழித்துணைவன்.  வழி காட்டுபவன், அதனால் தான் ஹிந்துக்கள்  நாம்  அவனை  ''மார்க்கபந்து''  மார்க்க சகாயம், வழித்துணை  இறைவன்,  என்போம்.  

அப்பைய தீக்ஷிதர்  எழுதிய  ''மார்க்க பந்து ஸ்தோத்ரம்''  எழுதியிருந்தேனே  பிடிக்கவில்லையா, படிக்க வில்லையா?. இன்னொரு தரம்  அதை  போஸ்ட் பண்ணட்டுமா?

காந்திஜி தமது இறுதிக்காலத்தில் நியூமனின் துதிப்பாடலை மீண்டும் நினைவுகூர்ந்து ஓர் அந்நிய அன்பருக்குக் கடிதம் எழுதியுள்ளார். மதக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட கிழக்கு வங்க நவகாளியில் அமைதி யாத்திரை மேற்கொண்டபோது, 1947 பிப்ரவரி 5 அன்று எட்மண்ட் மற்றும் யுவன்னே பிரைவாட் (Edmond & Ynonne Privat) இருவருக்குமாக எழுதிய கடிதத்தை நியூமனின் பாடல் வரிகளோடு இவ்வாறு முடித்துள்ளார்.

'எனது பாதயாத்திரை ஒரே சீராக நடைபெற்றுவருகிறது. அதன் இறுதி விளைவு எவ்வாறு இருக்குமோ தெரியாது; தெரிந்துகொள்வதிலும் எனக்கு விருப்பமில்லை. செயல் விளைவுகள் மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லை. அது கடவுளின் தனிச் சிறப்புரிமை. ஆகவே நான் கார்டினல் நியூமனுடன் இவ்வாறு சேர்ந்து பாடுகிறேன்.'


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...