Sunday, July 18, 2021

PESUM DEIVAM

பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K SIVAN

58.       யானையின்  பக்தி..

இன்று  நான்  எழுதும் விஷயம் எத்தனை பேருக்கு ஏற்கனவே தெரியும்?  

காஞ்சி மடத்துக்கு  மஹா பெரியவாளிடம் சிலர் யானைகளை தானமாக தந்தது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேனே.

1930ல்  மஹா பெரியவா விஜய யாத்திரையின் போது பூசமலைக் குப்பத்தில்  முகாம் இருந்த சமயம்  ஒரு யானை கூடவே இருந்திருக்கிறது.  அது காட்டு பகுதி என்று குறிப்பிட்டிருந்தது ஞாபகம் இருக்கலாம்.
 
மஹா பெரியவா முகாம் இட்டிருந்த பகுதியில், அருகே  ஒரு வைக்கோல் போர். அதை ஒட்டி  ஒரு  கொட்டகை. அதில்  தான் யானை கட்டி வைக்கப்படும்.  

ஒரு நாள்  ராத்திரி  திடீரென  வைக்கோல்போர்  பற்றி எரிந்தது.  நடு இரவு  எவரும்  தீயை கவனிக்கவில்லை.   தீயின் ஜ்வாலை  யானையை சுட்டிருக்கிறது.  யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு  காட்டுக்குள் ஓடிவிட்டது.  மறுநாள் காலை  யானையைத் தேடினார்கள் எனும் அதை காணவில்லை.  யானை  கட்டி வைத்திருந்த கொட்டகை சாம்பலாகி இருந்தது.  மட சிப்பந்திகள் நாலா பக்கமும் சென்று தேடியும்  யானையைக் காணவில்லை.

சில வழிப்போக்கர்கள் மூலம்  வெகு தூரத்தில் ஒரு குட்டையில்  யானை நீரில் அமர்ந்திருப்பதாக  செய்தி வந்தது.  அவர்கள் சொன்ன இடம்  ஐந்து மைல்  தள்ளி.  யானை அதுவரை ஓடி இருக்கிறது.
மாவுத்தன், மற்றும்  பணியாளர்கள்  அங்கே ஓடி  யானையை மீண்டும் அழைத்துக் கொண்டு வர முயற்சி  செய்ததெல்லாம்  வீண்.  மிகவும் ஏமாற்றத்துடன் எப்படி யானையை மீட்டு கொண்டுவருவது என்று  கவலையோடு  மஹா பெரியவாளிடம் விஷயம் சொன்னார்கள்.

மஹா பெரியவா ஒன்றும் பேசவில்லை.   ஐந்து மைல் காட்டுக்குள்ளே   நடந்து சென்றார்.   யானை இருந்த அந்த குட்டை தெரிந்தது.  யானையைப் பார்த்துக்கொண்டே  குட்டையில் கரையில் நின்றார்.  சில நிமிஷங்கள் ஓடியது.  யானை  மஹா பெரியவாளை பார்த்து விட்டது.  உடனே குட்டையிலிருந்து  கரையேறி அவரிடம் வந்தது.  அவர் எதிரே மண்டி யிட்டு அமர்ந்தது.  மஹா பெரியவாளுக்கு நமஸ்காரமா?   அதற்கும் மஹா பெரியவா மஹத்வம் தெரியுமோ?

அதன் உடலில் தீப்புண்கள்.  மஹா பெரியவா அருகே சென்று யானையை தட்டிக் கொடுத்தார். புண்கள் இருந்த பகுதியில் தடவிக்கொடுத்தார்.  மிருதுவான அவரது தாமரைக் கரங்கள் பட்டவுடன்  அதன் எரிச்சல் அடங்கி இருக்கும் போல இருக்கிறது.   வைத்தியர்கள் வந்தார்கள். களிம்புகள் தடவி தீப்புண் எரிச்சல் அடங்கியது.   அவரோடு மெதுவாக  பூசமலைக் குப்பம் திரும்பியது.

இது கட்டுக்கதை அல்ல.  மஹா பெரியவா சரித்திரத்தில் கண்டது.  பெரியவாளை ஒரு சினிமா ஹீரோ மாதிரி இல்லாதது பொல்லாதது  எல்லாம் போட்டு சித்திரிக்கும் வழக்கம் எனக்கில்லை. கண்களில் பக்தியினால்  கண்ணீர் திரையிட்டு  மேலே  எழுத முடியாத அளவு  மயிர்கூச்செறிவுடன் சொல்கிறேன்.   அந்த மகானை, பேசும் தெய்வத்தை  உலகில் எல்லா ஜீவன்களும் புரிந்து கொண்டிருந்தன  என்பதற்கு இதுவே  நிதர்சனமான உண்மை.

பூசமலைக்குப்பத்தில் இருந்தபோது  வேலூரிலிருந்து சில பக்தர்கள் மஹா பெரியவாளை தரிசிக்க வந்தார்கள்.  அவர்கள் பல வித துறைகளிலிருந்து வந்தவர்கள். டாட்கள், வக்கீல்கள், வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள், அரசாங்க பணியில் இருப்போர், பக்தர்கள்  என்று பல ரகம் .சங்கீதத்தில்ஞானம் கொண்ட சிலரும் அந்த கூட்டத்தில் இருந்தார்கள்.   தம்புரா, மிருதங்கம், வயலின் போன்ற  வாத்தியங்களை சிலர் ஏந்தி இருந்தார்கள்.   மஹா பெரியவர்கள் சமூகத்தில்  வாசிக்கவேண்டும் என்று அவர்கள் ஆர்வம். விருப்பம்.

பூசமலைக்குப்பத்தில் மஹா பெரியவா தங்கியிருந்த இடத்திலிருந்து ரெண்டு கி.மீ. தூரத்தில்
ஒரு மலைஅடிவாரத்துக்கு அவர்களை அழைத்தார்  மஹா பெரியவா.   அவ்வாறே அவர்கள்  அங்கே சென்று காத்திருந்தார்கள்.

சாயங்காலம் ஐந்து மணி வாக்கில் மஹா பெரியவா அங்கே சென்றார்.   அவரைக் கண்டதும் அந்த  வாத்ய கோஷ்டிக்கு பரம சந்தோஷம்.  பாட ஆரம்பித்தார்கள்.  வாத்தியங்கள் முழங்கின.  அந்த குழுவில் ஒரு வைஷ்ணவர்.  ரொம்ப இனிமையான குரல். சங்கீத ஞானம்  பாடும்  விதம்  காந்தம் போல் எல்லோரையும் கவர்ந்தது.  ''சிவ  தீக்ஷா பரு  என்ற  கீர்த்தனையை பாடிக்கொண்டிருந்தார் அந்த வைணவ  வித்வான்.

சிவ தீக்ஷா பரு  ஒரு அருமையான குறிஞ்சி ராக   தெலுங்கு  க்ரிதி.   கனம்  சீனய்யா என்பவர்  முந்நூற்று ஐந்து வருஷங்களுக்கு முன்பு இயற்றி பாடியது.  என் தந்தையார் ஸ்ரீ தஞ்சாவோர்  ஜே. கிருஷ்ணய்யர்  இந்த கீர்த்தனையை அடிக்கடி பாடி இந்த இளம் வயதில் கேட்டிருக்கிறேன். மனதில் இடம்பிடித்த ஒரு ராக கீர்த்தனை இது.  சீனய்யா  தெலுங்கு காரர்.  விஜய ரங்க சொக்கநாத  நாயக்கர்    மதுரை ராஜாவாக இருந்த காலத்தில் (1706-1732)    அவர்  அரண்மனை சபையில் பாடியது . சீனய்யா  இயற்றிய பதங்களில்  ''மன்னாரு ரங்க '' என்ற முத்ரை  விழும். 
அந்த க்ரிதி : 

शिव दीक्षा परुरालनुरा ने शीलमिन्तैन विडुवजालनुरा
शिव शिव गुरुनाज्ञ मीरनुरा ने श्री वैष्णवुडण्टे चेरनुरा

वडिग वच्चि मठमु जोरवकुरा शिवार्चन वेळ तलुपु तेरुवकुरा
मडुगु कावि चेरगु दीयकुरा नन्नु माटिमाटिकि नोरु मुय्यकुरा

shiva dIkshA parurAlanurA nE shIlamintaina viDuvajAlanurA
shiva shiva gurunAjna mIranurA nE shrI vaishNavuDantE chEranurA

vaDiga vachchi maTHamu joravakurA shivArchana vELa talupu teravakurA
maDugu kAvi cheragu dIyakurA nannu mATimATiki nOru mUyyakurA

அர்த்தம்:    நான்  சிவ  பூஜையில் ஈடுபடுத்தப்பட்டவன்.  கொஞ்சம் கூட  அந்த  வழிமுறையிலிருந்து   பிறழ மாட்டேன்.   சிவ  சிவ  என்று  பரமேஸ்வரன் நாமத்தை சொல்வதிலிருந்து என் குரு அருளியபடி  அவர் வார்த்தையை தட்டாமல்  தியானம் பண்ணுவேன்.  ஸ்ரீ வைஷ்ணவர்களிடம் அதிகம் சேரமாட்டேன்.  நான்  பூஜை பண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் பூஜை அறைக்குள் வரவேண்டாம்.  கதவை திறக்க வேண்டாம்.  மடியாக  நான் தோய்த்து உலர்த்தி  அணிந்திருக்கும் காவி வஸ்திரத்தை தொட்டு விட முயற்சிக்க வேண்டாம்.  எனக்கு இடைஞ்சல் பண்ணி   குறுக்கிட வேண்டாம். ''

மஹா பெரியவா அந்த வைணவ வித்வான் பாடும்போது ரசித்துக் கொண்டிருந்தவர்  நடுவே  அவரை நிறுத்தினார் .
   
''நீ பாடின பாட்டுக்கு என்ன அர்த்தம் சொல்லு?''
வித்வான் நெளிந்தார்.   வைஷ்ணவனோடு சேராதே  என்று வருகிறதே எப்படி சொல்வது?  அருகிலே இருந்தவர்கள் முகத்தில் சிரிப்பு.  எப்படி இந்த வித்வான் சமாளிக்கப் போகிறார்?

எல்லோரையும் கவனித்த  மஹா பெரியவா  தானே அர்த்தம் சொன்னார்:

''இதிலே  சிரிக்க ஒரு ஹாஸ்யமும் இல்லை. இதை இயற்றினவரின்  சிவ  பக்தி தான் இதில் பிரதிபலிக்கிறது.  தன்னை மாதிரி எல்லோரும் அவரவர்  இஷ்ட தெய்வத்திடம் பக்தியோடு இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். அவ்வளவு தானே தவிர  சைவ வைஷ்ணவ பேதம் கிடையாது''

மஹா பெரியவாளிடமிருந்து இப்படி ஒரு  அற்புதமான பாடம் கற்போமென்று  எவரும் நினைக்கவே இல்லை.   எல்லோரும்  அவரை சாஷ்டாங்கமாக  நமஸ்கரித்து ஏகமனதாக  '' பெரியவா உபதேசித்தபடி நடந்து கொள்வோம்''   என்று சொல்லி விடை பெற்றார்கள்  .


தொடரும் 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...