Wednesday, July 7, 2021

GEETHA GOVINDAM

 


கீத  கோவிந்தம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 
அஷ்டபதி.


மனம்போல்  மாங்கல்யம்  


சங்கீத சீசனில்  மட்டும் என்றில்லை. எப்போது கேட்டாலும்  ஜெயதேவர் அஷ்டபதி  மனதை கிறங்க வைக்கும்.   ஒவ்வொரு வித்வானும்  தனது கற்பனா  ஸ்வரத்தில்  அற்புத  ஆலாபனையோடு பாட சொகுசானது.  தனித்திறமையை மாயாஜாலத்தோடு ஜனரஞ்சகமாக எடுத்துக் காட்ட ஒத்துழைக்கிறது.   ஆகவே தான் ரசிகர்கள்  காட்டில் மழை .  

 அஷ்டபதி பாடல்களில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது  பாலமுரளி கிருஷ்ணா பாடிய சில பாட்டுகளைக் கேட்ட பிறகு தான். இவ்வளவு ரம்யமான பாட்டுகளா அஷ்டபதி என்று வியந்தேன்.

ராதா கல்யாண உற்சவங்களில்  என்றால் கேட்கவே வேண்டாம்.  முழுக்க முழுக்க  ஜெயதேவர் அஷ்டபதிகள் தான்  ஆதாரமே.  பருப்பில்லாமல் கல்யாணமா? ஜெயதேவர் அஷ்டபதி இல்லாத ராதா கல்யாணம் நினைத்துக்  கூட பார்க்க முடியாது.

அந்த கால  ஒரிஸ்ஸாவில் போஜ தேவர் என்று  ஓர்  ஜெகன்நாதன் பக்த பிராமணர் வசித்தார்.  அவர் மனைவி ரமாதேவி. ஒரே மகன் ஜெயதேவர். அப்பாவிடம் அனைத்து சாஸ்திரங்களும் கற்றார். ஸ்ரீமத் பாகவதம் ரொம்ப பிடித்ததால் அன்றாட பாராயணமாயிற்று.

பூரியில்   ஜெகந்நாதர் பக்தர் இன்னொருவரும்  இருந்தார்.  ஜெகதேவர் என்று பெயர்.  அவர் மகள் பெயர்  பத்மாவதி . கிருஷ்ண பக்தை. ஆடல் பாடல்களில் தேர்ந்தவள். மூன்று ''ஜெ'' க்கள் இணைந்தன.  ஜெயதேவர், ஜெகதேவர், ஜெகந்நாதன்.....  

ஒரு நாள் பூரி ஜெக நாதன் ஜெகதேவர் கனவில் வந்து ''உன் மகள் பத்மாவதியை என் பக்தன் ஜெயதேவனுக்குக்  கொடு '' என்றான். ஜெகநாதன் உத்தரவை மீற முடியுமா?

''என்னுடன் வா'' என்று பெண்ணின்  கையைப்  பிடித்து அழைத்துக்கொண்டு ஊருக்கு கடைசியில் ஒரு குடிசை ஆஸ்ரமத்தில் இருந்த ஜெயதேவர் வீட்டுக்கு வருகிறார்  ஜெகதேவர். 
 வாசலில் திண்ணையில் ஜெயதேவர் உட்கார்ந்திருக்கிறார்.  தன் வீட்டு வாசலில் நுழைபவர்க ளைப் பார்த்துட்டு   பேசாமல் எழுந்து நடந்து விட்டார்.

''இதோ இவரே  இனி உன் பதி. அவருக்கு சேவை செய்து அவரை அடைவது உன் பாக்யம். இது ஜெகந்நாதன் அருள் '' என்று ஜெகதேவர் சொல்லிவிட்டு  பத்மாவதியை அங்கேயே விட்டு விட்டு நடக்கிறார். 

 பத்மாவதி ஜெயதேவர் இல்லாத   நேரத்தில் அவர் ஆஸ்ரமத்தை சுத்தம் செய் து அவருடைய பூஜைக்கு, பாராயணத்துக்கு எல்லா ஸாமக்ரியைகளும் எடுத்து வைத்து பூப்பறித்து, தொடுத்து, வாசல் பெருக்கி, நீர் தெளித்து, கோலமிட்டு, விளக்கேற்றி துப்புரவாக வைத்து விட்டு  வீடு திரும்புவாள்.

 யார்  என்வீட்டை இப்படி அழகாக சுத்தம் செய்து  எனக்கு  தேவையான  காரியங்களை செவ்வனே செய்து வைப்பது? என்று ஜெயதேவருக்கு  ஆச்சர்யம். ஒருவேளை யாராவது பக்தர்கள் இப்படி  செய்கிறார்களோ?

ஜெயதேவர் ஒருநாள் பத்மாவதியை நேரில் பார்த்து  விட்டார். 

   ''அட  இந்த பெண்ணா  தினமும் எனக்கு  சிச்ருஷை செய்பவள்? என்று ஆச்சர்யத்தோடு அவளை நிறுத்தி  பேசுகிறார்.

 ‘‘நீ யாரம்மா? உனக்கு என்ன வேண்டும்? எதற்காக  இப்படியெல்லாம் அருமையாக  தினமும் எனது ஆஸ்ரமத்துக்கு வந்து  பணிவிடை செய்கிறாய்? '' . 
‘‘சுவாமி,  நான் உங்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் இவ்வாறு பணி விடை செய்துகொண்டே இருக்க வேண்டும்  என்பது தான் எனது விருப்பம்.  அதுவே  பூரி ஜெகந்நாதனின் விருப்பமும் என்று என்தந்தை சொன்னார்.  அதுவே என் பாக்கியம்”

''ஓஹோ.  அது சரி,  நீ யாரம்மா? , உன் பெயர், உன் பெற்றோர்கள் யார் என்று சொல்?

''என் பெயர் பத்மாவதி, என் தந்தை ஜெகதேவர். இதே ஊர். பூரி ஜெகநாத பக்தர். எங்கள் குடும்பமே கிருஷ்ண பக்தி குடும்பம்.

''இன்னொரு தடவை சொல்.   நீ எதற்காக இங்கே வந்து எனக்கு பணிவிடை செய்ய  தினமும்  வருகிறாய்?

''பூரி ஜெகந்நாதன் என்னை தங்களுக்கு திருமணம் செய்து வைக்க என் தந்தை கனவில் கட்டளை இட்டதால் முதலில் உங்களுக்கு பணிவிடை செய்யவேண்டும், பிறகு திருமணம்''  என்பது  என் தந்தை  இட்ட கட்டளை.''

இதுவும் ஸ்ரீபகவானுடைய விருப்பம்  போலும் என்று நினைத்து பத்மாவதியோடு அவள் வீட்டுக்கு செல்கிறார். இருவரையும் கண்ட ஜெகதேவருக்கு பரம சந்தோஷம். 

''ஜெகன்னாதா, இதை தானே நீ ஆசிர்வதித்தாய்'' என்று வணங்குகிறார்  ஜெகதேவர்.
 இதுவரை திருமணத்தை வெறுத்த ஜெயதேவர் பத்மாவதியை மனைவியாக ஏற்கிறார்.

இனி பூரி ஜெகநாதன் சும்மா இருப்பானா? ஜெயதேவருக்கு தன்னை பற்றி எழுத ஆர்வம் தருகிறான்.

ஜெயதேவரும்  பத்மாவதியும்  ரிஷியும் ரிஷிபத்னியுமாக இல்லறம் நடத்த,  தினமும் பத்மாவதி,   கிருஷ்ணனுக்கு பூஜை கைங்கர்யங்கள், பாராயணம் செய்து, அவரிடம் உபதேசங்கள் பெறுகிறாள். ப்ரேமையும் பக்தியாக இருவரும் க்ரிஷ்ண பக்தியோடு வாழ்கிறார்கள்.
கண்ணனும் ராதையுமாக அவர்கள்  வாழ்கிறார்கள்  என்பது தான் சரியான வார்த்தை.  
  
கீத கோவிந்த  காவிய ஓவியம்  இப்படி  ஒவ்வொரு காட்சிகளாக  கண்முன்னே   உருவாகிறது. மூன்றே பாத்திரங்கள்,  கிருஷ்ணன், ராதை , தோழி.  காட்சிகள் பிருந்தாவனத்தில்.
  
ஜெயதேவர் சகல சாஸ்திரங்களிலும் கரைகண்டவர்.  ஸமஸ்க்ரித  நிபுணர்.  ஆதலால் இப்போது கண்ணன் ராதை இருவர் மீதும் ஒரு காவியத்தை இயற்றத் தொடங்கினார். அதுவே அஷ்டபதி என்கிற கீதகோவிந்தம் ஆகும்.ஜெயதேவர்  தோழி  ரோல்  எடுத்துக் கொள்கிறார். பத்மாவதி தான் ராதை.  ஜெகந்நாதன் தான் கிருஷ்ணன்.  அற்புதமாக  பிருந்தாவன காட்சிகள் அவர் கண்முன்னே தோன்றுகிறது. எழுத்தில் சமஸ்க்ரித  ஸ்லோகங்களாக  ஓலைச்சுவடியில் பதிவாகிறது.  இது  நமக்கல்லவோ  அதிர்ஷ்டம்.


தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...