Tuesday, July 13, 2021

pesum dheivam



 

பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K SIVAN
55.   என் குருவே எனக்கு பாலாஜி...

அம்மையநாயக்கனுர்  ஜமீன்தார்  ஸ்ரீ   ராமஸ்வாமி நாயக்காரனுக்கு  அவரை விட  மிகப்பெரிய  தாராளமான மனது.  மஹா பெரியவா நவராத்ரி வைபவத்தை அந்த வருஷம்  தனது ஊரில் கொண்டாட வேண்டும் என்று எண்ணியதை  எப்படியோ  சாதித்து விட்டார்.  மஹா பெரியவா பக்தர் அவர்.  மிகச்சிறப்பாக  ஒரு குறையும் குறைவும் இல்லாமல்  நவராத்ரி வைபவத்தை மஹா பெரியவா எப்படி  நடத்த எண்ணினாரோ அதை அறிந்து சகல ஏற்பாடுகளும் செய்தவர்.   மஹா பெரியவா பரிவாரத்தோடு தங்கியிருந்த  பதினைந்து நாட்களில்  அம்மையப்ப நாயக்கனுர்  தேவலோகமாக  மாறி விட்டது.

காஞ்சி மடத்துக்கு  தனக்கு சொந்தமான  சிறுமலையில்  300 ஏக்கர் நிலங்கள்  தானமாக கொடுத்து மகிழ்ந்தார். சிறுமலை ஒரு கோடை வாசஸ்தலம், ஊட்டி கொடைக்கானல் மாதிரி. அதில் ரெண்டு ஆறுகள்  உற்பத்தி ஆகி  ஒரு மதுரையை வாழவைக்கும் சாத்தையாறு.  இன்னொன்று திண்டுக்கல் நோக்கி  ஓடும் சந்தான வர்த்தினி ஆறு.   சிறுமலை மூலிகைகள் நிறைந்த  மலை.  ஹனுமான் சஞ்சீவி பர்வதத்தை தூக்கிக்கொண்டு  அவசரமாக இலங்கை பறந்தபோது  ஒரு சிறு மலைத்துண்டு கீழே விழுந்த இடம் தான் சிறுமலை என்று ஒரு நம்பிக்கை.

நவராத்ரி வைபவங்கள் முடிந்து  மஹா பெரியவா  திண்டுக்கல் வழியாக  பழனிக்கு ரெண்டாம் தடவையாக சென்றார்.   தண்டாயுதபாணி தர்சனம் பண்ணிவிட்டு அவருக்கு அபிஷேகம் செய்தார். வெல்லத்தை  ஈக்கள் எங்குபோனாலும்  மொய்த்துக் கொள்ளாதா? பழனி முருக பக்தர்கள்  மஹா பெரியவாளுக்கு பாத பூஜை, பிக்ஷா வந்தனம் செய்தார்கள்.

பழனி  முருகன் தரிசனத்துக்குபிறகு மஹா பெரியவா   தாராபுரம்,  கொளிஞ்சிவாடி, சின்ன தாராபுரம்,   கரூர் மார்க்கமாக  திருச்சி சென்றார்.  ஜனவரி 1929  பிறந்துவிட்டது.   பெப்ருவரி மாதம்  திருச்சி  விஜயத்தை நிறைவு செய்துவிட்டு  தென்னாற்காடு  ஜில்லாவிற்கு சென்றார்.   ஏழு மாத காலம்  அந்த பகுதியில்  கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஜில்லாக்களில் விஜயம் .   1929  ஜூலை  21ம்  தேதி வியாச பூஜை  மணலூர்பேட்டையில் நடந்தது.  அங்கே  ரெண்டு மாச காலம் முகாம்.     அந்த  கால கட்டத்தில் தான் எதிர்பாராத விதமாக மஹா பெரியவாளுக்கு    மலேரியா  ஜுரம் வந்து  ஒரு மாதம் போல்  அவரை அவஸ்தைப்படுத்தியது. அவர் அதை  யெல்லாம்  லக்ஷியம் செய்பவரா?

ஜில்லென்று குளிர்ந்த  ஆற்று நீரில் குளித்துவிட்டு  மூன்று பூஜைகளை ஒவ்வொரு  நாளும்  செய்தார். பக்தர்களுக்கு மனதில் வியாகூலம். பெரியவாளுக்கு உடம்புக்கு ஒன்றும் வராமல் இருக்க வேண்டுமே என்று மனதில் பிரார்த்தனை செய்து கொண்டார்கள்.   சில  நெருக்கமான பக்தர்கள்  துணிவோடு  ''மஹா பெரியவா டாக்டரை கூப்பிட்டு  ஏதாவது  மருந்து சாப்பிடவேண்டும். ஜுரம் சீக்கிரம்  விலகவேண்டும் ''  என்றும் கூட கேட்டுக்கொண்டார்கள்.  அவர் காதில் அது ஏறவில்லை.  வெறும் துளசி ஜலம்  மட்டுமே  பருகினார்.  நாளாவட்டத்தில் உடல் நிலை சரியானது.

அப்போது தான்  நூறு வயது தாண்டிய   ஒரு மஹாராஷ்ட்ர தேச  சந்நியாசி,  மஹா பெரியவாளை ஜாக்கிரதை யாக   அருகில் இருந்து  அன்னைபோல்  பாது காத்தார்.   இத்துடன் ஒரு போட்டோ   (டிசம்பர் 1929ல் எடுத்தது) . இணைத்திருக்கும் போட்டோவுக்கு 92 வயது நீங்கள் பார்க்கும்போது.   உற்று பாருங்கள்.  அதில் ரெண்டு பேர் நிற்கிறார்கள். ஒரு  முதியவர் கையில் தண்டமுடன், இன்னொருவர் 35 வயது வாலிபர்.  ஏதோ ஒரு மாடியில்.   பின்னால் திருவண்ணாமலை கோவில் கோபுரம் தெரிகிறதா? முதியவரை  மராத்தி  ஸ்வாமிகள் என்போம்.  தமிழ் தெரியாது.  சாதுர்மாஸ்யம் சமயம் திருவண்ணாமலை கார்த்திகை  தீப தரிசனம் பார்க்க வந்தவர். 35 வயது கை  கட்டிய   வாலிபர் தான் மஹா பெரியவா.  

முதியவர்   பிரயாணத்தில் எங்கேயோ தன்னுடைய  தண்டத்தை மறந்து வைத்துவிட்டு  தவிக்கிறார். சந்நியாசி தண்டம் இல்லாமல்  ஒரு கணமும்  இருக்கக்கூடாதே .  தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார். யாரிடம் உபதேசத்தோடு தண்டம் பெறுவது.  எங்கே இன்னொரு சந்நியாசியை தேடுவது?  யாரோ  சொன்னார்கள் தென்னார்க்காடு ஜில்லாவில்  மணலூர்பேட்டை கிராமத்தில்  காஞ்சி காமகோடி மட சங்கராச்சார்ய ஸ்வாமிகள் முகாம் இட்டிருக்கிறார் என்று. அங்கே போனார் முதியவர்.
என்ன  தெய்வானுகூல  சந்தர்ப்பம்  பாருங்கள்!.    அந்த  சமயத்தில்  மஹாபெரியவாளுக்கு  உடல்நலம் சரியில்லை. எழுந்திருக்க , உட்கார, நிற்க,  முடியாமல் சிரமம். அவரை யாரும் தொடவும் கூடாது.  அப்படியும் விடாமல் தினமும் சந்த்ரமௌளீஸ்வரர் பூஜை விடாமல் தினமும்  அற்புதமாக  நடத்துவார். பார்த்த பக்தர்கள் மறுபிறவி இல்லாதவர்கள்.  

இந்த நேரத்தில்  மராத்தி ஸ்வாமிகள் பெரியவாளை சந்தித்து அவரை வணங்கி அவரிடம்  தண்டம் பெறுகிறார். வயதில் சிறியவராக இருந்தாலும் தண்டம் அளித்த சந்நியாசி குரு அல்லவா?  மராத்தி ஸ்வாமிகள்  பெரியவாளை தொட்டு தூக்கி நடத்தி  ஒத்தாசை செயகிறார். சிறிது நாளில் பெரியவா பூரண குணம் அடைந்தார்.   இன்னொரு விஷயம்  மஹா பெரியவாளுக்கு மராத்தி பாஷையும் தெரியும். எனவே  இருவரும் பேசுவதற்கும்  சௌகரியமாக போயிற்று.

மராத்தி ஸ்வாமிகளுக்கு  பெரியவாளை விட  ரெண்டு மடங்கு வயசு ஜாஸ்தி. இருந்தாலும்  குருவான  பெரிய வாளுக்கு தினமும்  பசு  கோமயத்தால் தாம்பாளத்தில்   மஹா பெரியவாளுக்கு  பாத பூஜை  அபிஷேகம் செயது அந்த அபிஷேக நீரைத்  தான்  பருகுவார்.  அது தான் மராத்தி ஸ்வாமிகளின் நித்ய ஆகாரம்.

இன்னொரு விஷயம்  சொல்கிறேன். இது  சிலருக்கு அல்லது பலருக்கு தெரிந்திருக்கலாம்.  மஹா பெரியவா திருப்பதி செல்கிறார். நிழல்  மாதிரி எங்கும்  இந்த மராத்தி ஸ்வாமியாரும் செல்வார்.  பெரியவா ஏழு மலைகளையும் கடகடவென்று நடந்து திருமலை மேல்  வேகமாக ஏறிவிட்டார். அப்போது படிகள் வசதி, பஸ், வாகனம் எதுவும்  இக்காலத்தில் போல்  இல்லை.   பக்தர்கள்  மலைப்பாதையில் தான் நடந்து ஏறி மேலே செல்வார்கள் இறங்குவார்கள்.

மராத்தி ஸ்வாமிகள் மெதுவாக  ஏறி பின் தொடர்ந்தார்.  அதற்குள்  பெரியவா ஸ்ரீனிவாசன் ஆலய வாசலுக்கு சென்று விட்டார். அவரை  ஆலய  நிர்வாகி அதிகாரி  உள்ளே அழைத்து சென்று   வேங்கடவன் தரிசனம் செய்வித்தார்.  பெரியவா ஸ்ரீனிவாசன் தரிசனம் முடித்து வெளியே வாசலில் வந்து நின்ற  போது தான் மராத்தி ஸ்வாமிகள்  அங்கே  வந்து சேர்ந்தார்.

அந்த ஆலய  அதிகாரியை அழைத்து  மகா பெரியவா  மராத்தி ஸ்வாமிகளுக்கும்  பாலாஜி  தரிசனம் செயது வைக்க சொன்னார்.  அவர்கள்  தமிழில் பேசுவது மராத்தி ஸ்வாமிகளுக்கு புரியவில்லை.

''சுவாமி என்னைக் காட்டி ஏதோ சொல்கிறீர்களே, என்ன  விஷயம் ?''

''எனக்கு  இவர் பெருமாள்  தரிசனம் செய்வித்தார். அதே போல் உங்களையும்  பெருமாள் சந்நிதிக்குள்ளே அழைத்து சென்று  தரிசனம் செய்விக்க கேட்டுக்கொண்டேன்  ''

''இல்லை குருநாதா,  நான் உள்ளே சென்று  பாலாஜி தரிசனம் செய்ய விரும்பவில்லை''

''ஏன்  ஏதாவது காரணமா?''என்கிறார்  பெரியவா.

''என் குருநாதர் தான் எனக்கு பாலாஜி, அவரை தரிசனம் செய்தால்  அந்த திருப்தியே போதும்''

''பின் எதற்காக  இவ்வளவு கஷ்டப்பட்டு  பாலாஜி சந்நிதிவரை மலை ஏறி வந்தீர்கள்?''

''என் குருநாதர்  எங்கு சென்றாலும் நிழலாக பின் தொடர்வது தான் எனக்கு கடமை, விருப்பமும் கூட''

உலகத்திலேயே   ரொம்ப ரொம்ப  கஷ்டப்பட்டு  ஏழுமலை ஏறி வந்து  சந்நிதி வாசலில் நின்று உள்ளே சென்று பாலாஜி எனும் ஸ்ரீனிவாச பெருமாளை தரிசிக்காத ஒரே  மனிதர்  அந்த  மராத்தி ஸ்வாமிகளாகத் தான் இருக்க முடியும். இந்த விஷயத்தை  ஸ்ரீ கணேச சர்மா சொல்லி யூட்யூபில்  கேட்டிருக்கிறேன்.

எனக்கு இது ஆச்சர்யம் இல்லை. இதே போல் ஒரு சம்பவம் நான் எழுதிய  ஸ்ரீ ராமானுஜர் சரித்திரத்திலும் ம்  திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யத்திலும் எழுதி இருக்கிறேன்.  சுருக்கமாக சொல்கிறேன்:  

ஆந்திர பூர்ணர்  என்ற பெயர் கொண்ட  வடுகநம்பிக்கு  தனது குருநாதர்  ஸ்ரீ ராமானுஜரின் பாதுகைகள் தான் ஆராதனை செய்யும்  ப்ரத்யக்ஷ  பெருமாள். குருவின் ஸ்ரீ பாததீர்த்தம் தவிர வேறு எந்த தீர்த்தமும்  உட்கொள்ளாதவர். குருநாதர்  ராமாநுஜரைத் தவிர  வேறு எந்த தெய்வமும் வேண்டாதவர். நம்மாழ்வாருக்கு மதுரகவி ஆழ்வார் போல  ராமானுஜருக்கு  வடுக நம்பி.  அவ்வளவு  அதீத குருபக்தி.  ராமானுஜரோடு எல்லா பெருமாள் ஆலயங்களும் செல்வார். ராமானுஜர்  பெருமாளை  சேவிக்கும்போது வடுகநம்பி ராமானுஜரை  வணங்கிக் கொண்டு  நிற்பார்.

ஒரு நாள் ஸ்ரீ ரங்கம் ரங்கநாத பெருமாள் முன்பு ராமானுஜர் "நீண்ட அப்பெரிய கண்கள்..." எனும் ஆழ்வாரின் பாடலைப் பாடிவிட்டு   ''வடுகா, நீயும் ரங்கநாதனின் கண்ணழகைப் பாரடா'' என்று சொன்னார்.

''என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே..." எனும்   திருப்பாணாழ்வார் பாசுரத்தை பதிலாக  அளித்து  குருநாதரையே பார்த்து ரசித்து வணங்கி கொண்டிருந்தார் வடுகநம்பி.  குருபக்தி சிகாமணி. தினமும்  ராமாநுஜருக்கு பால் காய்ச்சி அளிப்பது வடுக நம்பிக்கு பிடித்த  ஒரு  முக்கிய வேலை.

ஒரு நாள், இராமானுஜருக்கு பால் காய்ச்சிக் கொண்டிருக்கும்போது  வாசலில் மேள தாளம் சப்தம்.. நம் பெரு
மாள் திருவீதி ஊர்வலம் வருகிறார்.

“வடுகா, நம்பெருமாளை சேவிக்க  ஓடிவாடா''  என்று ராமானுஜர் கூப்பி டுகிறார். உள்ளிருந்தே  வடுக நம்பியின்குரல் ஒலிக்கிறது.

''சுவாமி,  உம்முடைய பெருமாளை நான் சேவிக்க வந்தால் என்னுடைய பெருமாளுக்காக நான் காய்ச்சும் பால் பொங்கி விடுமே. என் குருநாதருக்குப்  புரியும் பணிவிடை தான்  எனக்கு முக்கியம்''.  பட்டென்று பதில். ராமானுஜரு டைய பாதங்களில் தனது இறுதி மூச்சை விட்டவர்  வடுக நம்பி.

மராத்தி ஸ்வாமிகள்  வடுகநம்பியின் அவதாரமோ,  மதுரகவி ஆழ்வார் அம்சமோ??   மஹா பெரியவாளுக்கு தான் தெரியும்.  

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...