Thursday, July 22, 2021

KONERI RJAPURAM

 ஒரு  அற்புத  நடராஜா  --    J  K   SIVAN


எத்தனையோ  நூற்றாண்டுகளுக்கு முன்  சோழ சாம்ராஜ்யத்தில்  எங்கும்  பக்தி பரவசமாக இருக்க காரணம். பெரிய பிராட்டி  பல  கோவில்களை புனருத்தாரணம் செய்வதில் இரவும் பகலும் ஈடுபட்டிருந்ததால்.  செம்பியன் மாதேவியை எனக்கு தெரிந்தது கல்கி  எழுதிய  பொன்னியின் செல்வன் மூலமாகத்தான் .

அவர் காலத்தில்  சோழநாட்டில்   அநேக சிவாலயங்களை செங்கல், காரை, சுண்ணாம்பு, மண்ணிலிருந்து காப்பாற்றி கற்றளியாக,  கருங்கல் கோவில்களாக  அற்புத சிற்பக் களஞ்சியங் களாக, பக்தி பெருகும்  கருவூலங்களாக மாற்றி அமைத்தார்.   பராமரிப்புக்காக  விளக்குகள் தினமும் எரிய, நித்ய பூஜைகள் நடக்க,   நிறைய   ஆடுகள், மானியங்கள், நிலங்கள்  நிவந்தங்கள் விட்டிருக்கிறாள்.  

அடடா   பெரிய பிராட்டியால் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு, பிழைக்க வழி, பக்தியை எப்படி பரப்பி இருக்கிறாள்?   இவளை இருட்டடிப்பு செய்து விட்டிருக்கிறார்களே.  ஏன் தமிழ்  பாட புத்தகங்களில் பெரிய பிராட்டியைக்  காணோம்.

 கண்டராதித்த  ஏரி, வீராணம் ஏரி, செம்பியன் மாதேவி ஏரி என்று எவ்வளவு நீர்நிலைகளை ஸ்தாபித்திருக்கிறாள்.  எத்தனை ராஜாக்களை வளர்த்திருக்கிறாள். இன்று  ராஜராஜன் கட்டிய உலகப்புகழ் பெற்ற தஞ்சை   பெரிய கோவிலுக்கு யார் காரணம்? அவனை ஐந்து வயது முதல் வளர்த்த பாட்டி இவள் அல்லவா? குந்தவை தேவி  ராஜ்யதிகாரம் செலுத்து திறம்பட சோழ ராஜ்யத்தை நிர்வகிக்க யார் காரணம்? செம்பியன் மாதேவி எனும் பெரிய பிராட்டி தானே?    மூவேந்தர்கள்  சேர சோழ பாண்டியர்களில் பெரும் புகழ் பெற்று  ப்ரஸித்தமானவர்கள் சோழர்கள் என்பது  அவர்கள் விட்டுச்சென்ற செல்வங்கள், பக்தி, ஆளுமை, மக்கள் மேல் அன்பு  பொதுநல சேவைகள்

 ஆறு  ராஜாக்கள் அவளது  85 வயது வாழ்வில் வழி நடத்தியவன் செம்பியன் மா தேவி.   எவ்வளவு பெரிய  சக்தி தெய்வம்.  சோழர் குல மாணிக்கம் செம்பியன் மாதேவி சேர மன்னருள் ஒரு கிளையான மழவர் குலத்தில் பிறந்து சோழ வம்சத்தில் புகுந்தவர்.  

அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி அருகே உள்ள செம்பியக்குடி  அவள் பிறந்த ஊர் என்பதால் அவள் பெயரை தாங்கி இன்றும் இருக்கிறது.  ஊர் மக்கள் 1000 கிலோவில் ஐம்பொன் சிலை செய்து மணிமண்டபம் கட்டி  கௌரவித்திருக்கிறார்கள்.   செம்பியன்மாதேவியை  நாம் எல்லோரும் மறந்த  குற்றவாளிகள்.  அவளது  மகத்தான சேவையை  அதிகாரத்தில் இருப்பவர்கள் என் மறந்து விட்டார்கள்?   அவள் எழுப்பிய   எத்தனையோ  கோவில்களுக்குச் செல்லக்  கூட நேரமின்றி  விருப்பமின்றி  உல வுகிறோம்.

செம்பியன் மாதேவி  வாழ்நாளில்  ஆண்ட சோழ மன்னர்கள். 1. மாமன்னன் முதலாம் பராந்தக சோழன், 2. கணவர் கண்டராதித்தன், 3. கொழுந்தன் அரிஞ்சய சோழன், 4. கொழுந்தனின் மகன் இரண்டாம் பராந்த சோழன் எனப்படும் சந்தரசோழன், 5. தன் மகன் உத்தம சோழன், 6. கொழுந்தனின் பேரன்  ராஜராஜ சோழன்.

இத்தனை  ராஜாக்களும் எழுப்பிய  சிவாலயங்கள், செய்த தர்ம காரியங்களுக்கு பின் புலமாக இருந்த  தெய்வீக பெண்மணி  செம்பியன் மாதேவி என்ற சிவபக்தை.   காவிரியின் இரு மருங்கிலும் எண்ணற்ற சிவாலயங்கள் வைணவ ஆலயங்கள் தோன்ற, பராமரிக்கப்பட காரணம்  இந்த பெண்மணி. ஒரு சில கோவில்கள் உள்ள ஊர்கள் பெயரை மட்டும் சொல்கிறேன்  


திருநல்லம் (கோனேரிராஜபுரம்)
திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்)
திருவாரூர் அரநெறி ( அசலேஸ்வரர் கோயில்)
திருமணஞ்சேரி
தென்குரங்காடுதுறை (ஆடுதுறை)
திருக்கோடிக்காவல்
ஆதாங்கூர்
குத்தாலம்
திருவக்கரை
திருச்சேலூர்

ஒவ்வொரு ஆலயத்துக்கும் சென்று அதன் நிலையை கண்டறிந்து உடனே புணருத்தாரணம் செய்ய வழிவகுத்தவர். ஆலய திருப்பணிகளை நேரில் சென்று மேற்பார்வை பார்த்தவர்.
செம்பியன் மாதேவி வாழ்ந்த காலத்தில்  நூற்றுக்கணக்கான  மண், செங்கல், சுண்ணாம்பால் கட்டப்பட்ட பழைய  கோவில்கள் சிதிலமடைந்திருந்த நிலை கண்டு கண்ணீர் வடித்தாள்.  அவற்றை புதுப்பிக்கும் பணி யில் தன்னை அர்ப்பணித்தாள்.   மலைகளோ, கருங்கற்களோ  இல்லாத போதும்  கற் பாறைகளை களை கொணரச் செய்து  ஆயிரக்கணக்கான சிற்பிகளை ஊக்குவித்து,  எங்கும் உளி சத்தம் கேட்க செய்தவள். செப்புச்சிலைகள், ஐம்பொன் சிலைகள் சிறந்த வேலைப்பாடுகள்  கொண்ட கோவில்கள் அமைந்தன.  செப்பு பட்டயங்கள், கல்வெட்டுகளில் செயதிகளை பரப்பினாள் . நிவந்தங்கள் ஆலயங்களுக்கு கொடுக்கும் முறையை  உண்டாக்கினாள் . ஏரிகள் குளங்கள் அமைத்து நீர் பஞ்சம் இல்லாதபடி செய்தவள்.  இதற்கெல்லாம் படிப்பு அவசியமா?

முதன் முதலில் செம்பியன் மாதேவி சீரமைத்த திருக்கோவில் நல்லம் சிவாலயம்.  சிதிலமடைந்த அக்கோவிலுக்கு கருங்கல் திருப்பணி செய்ய விழைந்தார். கருங்கற்கள் பல நூறு மைல்கள் பயணம் செய்து ஆயிரக்கணக்கான எடை கொண்ட கற்கள் வரவழைக்கப்பட்டன. கல் தச்சர்கள் இடைவிடாமல் பணிபுரிந்து கோவிலை கருங்கல் திருப்பணியாகச் செய்தார்கள். ராஜமாதா செம்பியன் மாதேவி நாள்தோறும் இறைப்பணி செவ்வனே நடைபெறுகிறதா என்று கவனித்துக் கொண்டாள்.  இனி  திருநல்லத்தில் ஒரு காட்சிக்கு செல்வோம்:

திருநல்லத்தில் ஏக போகமாக அலங்காரம். காலை வெய்யில் கொஞ்சம் கொஞ்சமாக வலுத்தாலும் மரங்கள் சூழ்ந்த அந்த கிராமத்தில் வெயில் தெரியவில்லை. குளிர்ந்த காற்று வீசியது. கிராமத்தின் ஒரே பாதை முழுதும், வழியெல்லாம் தோரணங்கள் கட்டியிருந்தது. எங்கும் தென்னங்குருத்து மாவிலைகள், வாழைமரங்கள் கட்டி மலர் பந்தல் கோவில் கட்டும் இடம் வரை பரந்திருந்தது. நறுமணம் வீச அகில் புகை வளர்த்தார்கள். காற்றில் மணத்தது. வழியெங்கும் நீர் தெளித்து சுத்தமாக நடு வீடு போல காணப்பட்டது.

அழகுக்கு அழகு செய்வது போல் பெரிய மாக்கோலங்கள் பல பல வண்ணம் குழைத்து கண்ணை கவரும்படியாக பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு வரைந்திருந்தார்கள் . திருநல்லம் கிராம நுழைவாயிலில் மாவிலை தோரணம், வாழைமரம் கட்டி வரவேற்பு. ஊர் பிரமுகர்கள் கை கட்டி நின்றனர். கையில் பெரிய தாம்பாளங்களில் பழங்கள், வெற்றிலை பாக்கு இனிப்புகள், வாத்திய கோஷ்டி தங்கள் கைவரிசையை காட்டின. பெரிய பெரிய பாத்திரங்களில் பொறி கடலை, வெல்லம் நீர் மோர் பானகம் எல்லாம் வருவோர் போவோர்க்கெல்லாம் அளித்தனர்.
நாட்டிய பெண்கள் ஒரு ஓரத்தில் ''மதன காம ராஜன்'' தெருக்கூத்து ஆடிக்கொண்டிருந்தனர். என்ன விசேஷம் இன்று?

'' நம்ம ஊர் கோவில்  புனருத்தாரணம் நடக்குது.  புதுசு பண்றாங்க , பெரிய ராணியம்மா வராங்க. அதோ வந்துவிட்டது பல்லக்கு''. அம்மா மஹாலக்ஷ்மி.  பார்த்தாலே  புண்யம்.   எல்லோர் விழியும் பல்லக்கையே பார்த்துக்கொண்டிருந்தது. சோழ பெரிய மஹாராணி, வரப்போகிறார் என்ற சேதி சில நாட்களுக்கு முன்பே காதில் விழுந்ததால் மக்கள் வெள்ளம். பெரிய மகாராணியை பார்த்தால் ஸ்ரீ லலிதாம்பிகையை பார்த்தது போல் என்பார்கள். எத்தனை கோவில்களுக்கு தான தர்மம். நிலம், விளக்குகள், அர்ச்சர்களுக்கு நிலம், மான்யம்... அடடா... பழங்கால காரை செங்கல் கோவில் எல்லாம் கல்லாக மாத்தறாங்க அந்த தெய்வம்.    இங்கே உமாமஹேஸ்வரர் கோவில் புதுசாவுது.     உள்ளே ராஜா கண்டரா தித்தர் சிலை சாமி கும்புடுறாப்புலே வைக்கிறாங்க.''

பல்லக்கு திரைச்சீலையை விலக்கி அந்த முதிய சோழ ராணி வெளியே பார்த்தாள் . அவள் எதிர்பார்த்த கோபுரம் அங்கே விரைவில் தோன்றப்  போகிறது. வேலைப் பாடுகள் நடந்து
 கொண்டிருந்தது. தனது கணவர் சிவபாதசேகரன் சிவபக்தி செல்வர் கண்டராதித்த தேவரின் நினைவாக அந்த ஆலயம் இருக்கும் ஊருக்கு கண்டராதித்த புரம் என்று பெயர் சூட்டப்போகிறார்.
ரெண்டு மூன்று முறை நடராஜர் சிலை வடித்தது திருப்தியாக இல்லை.சிற்பிக்கு அரசர் ஏற்கனவே கட்டளையிட்டு   விட்டார். இந்த முறை நடராஜர் சிற்பம் சரியாக அமையவில்லை யென்றால் அவன் உயிர் பலியாகும் . சிற்பி பயத்தில் பொறுப்பை ஏற்றோ, உபவாசம் இருந்து சிலை வடித்துக் கொண்டிருந்தான்.

கண்டராதித்த சோழன் திருத்தேவி , மாதேவடிகள் செம்பியன் மாதேவி தன் கணவர் நினைவாக இரு கோயில் கட்டினாள். குடமுழுக்கு நாளும் நிச்சயிக்கப்ப்ட்டு விட்டது.  எல்லா சிலைகளும் தயாரான நிலையில் நடராஜர் சில மட்டும் சரியாக அமையவில்லை. சிற்பி எப்படி செய்தும் தவரு நிகழ்ந்து கொண்டேயிருந்தது. ஒன்றும் புரியாமல் சிற்பி   நடராஜனை கண்களில் நீரோடு  கெஞ்சினான் .கவலையோடு முணுமுணுத்தான்  சிற்பி.

 ''நடேசா.  இது தான் என் கடைசி முயற்சி.   ஏன் என்னை சோதனை செய்கிறாய்.  எத்தனையோ முறை உன்னை சிலை வடித்திருக்கிறேனே .  இப்போது மட்டும் ஏன் இவ்வாறு நடக்கின்றது? உன்னுடைய திருவுருவம் மட்டும் ஏன் அமையமாட்டேன் என்கிறது. நான் என்ன பாபம் செய்தேன்   எப்படியாவது அரச தண்டனையிலிருந்து என்னைக் காப்பாற்று . உன்னைத் திருப்திகரமாக  நான் வடிக்கவில்லையேல்  உன் பாதாரவிந்தங்களில் என்னை அழைத்துக்  கொள்.  அடுத்த பிறவியிலாவது   நான் உன்னை திருப்திகரமாக வடிக்க, அருள் புரிவாயப்பனே.''

தன்னுடைய  பக்தன் வேண்டுகோளை  பரமேஸ்வரன்  உபாதேவியுடன் திருநல்லம் எழுந்தருளினார். எவ்வாறு வந்தார்?,

 ஒரு புலையனாக, கையில் நான்கு வேதங்களையும் நாய்களாகப் பிடித்துக் கொண்டு அம்பாள் தலையில் கள் குடத்தை சுமந்தவாறு, ஸ்கந்தனை சிறு குழந்தையாக இடுப்பிலே ஏந்தி அஹ்ரகாரத்திலே வலம் வந்தார். தாகத்திற்காக வீடுதோறும் நீர் கேட்டார். கொடுப்பார் யாருமில்லை என்று சேக்கிழார்  சொல்கிறார்.

கோவில்  அருகே  ஒரு பட்டறையில்  கவலையுடன் அமர்ந்திருந்த சிற்பியிடம்   அந்த  கிழ தம்பதிகள்  வருகிறார்கள்.   அங்கே  சிற்பி தனது உயிரைப் பணயம் வைத்து  நடராஜர் சிலை வடிக் கிறான்.   வெயில் தஹிக்கிறது . பவளமல்லி மரங்கள் சூழ்ந்திருந்ததால் நிழல் தரையில் சூட்டை கொஞ்சம்  பொறுக்கும்படியாக பண்ணி கொண்டிருந்தது.  

பட்டறையில்  உலை  ஆக்கிரோஷமாக எரிந்து கொண்டிருந்தது.  பஞ்சலோகங்களை சரியான அளவில்  எடுத்து  காய்ச்சி வார்ப் படம் செய்யும் நேரத்தில்  அங்கே  வந்த கிழ தம்பதியர் வந்தது,  அவனோடு   பேச்சுக் கொடுப்பது சிற்பிக்கு  எரிச்சலைத்  தந்தது. .

''யார் நீங்கள், என்ன வேண்டும் இங்கே ? முக்கிய ராஜ காரியம் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் உங்களோடு நேரம் ஒதுக்க முடியாது. வந்த விஷயம் சொல்லுங்கள் ?''   கோபமாக கத்தினான்.
 தான் சிற்பி.

''திரு நல்லம் க்ஷேத்ர தரிசனம் வந்தோம். களைப்பாக இருந்தது இங்கே கொஞ்சம் நேரம் அமர வந்தோம். நீ தான் நடராஜா சிலை வடிக்கிறாயாமே அதை பார்க்க வந்தோம்.

''ஐயா பெரியவரே, தொண தொணவென்று  கொஞ்ச நேரம்   பேசாமல் இருக்கிறீர்களா, இப்போது தான் வார்ப்படம் தயாராகிறது. இப்போது நடராஜர் சிலையை  நீங்கள்   பார்க்க  முடியாது. சென்று அப்புறம் வாருங்கள். கோவிலில்   விக்ரஹம் வைத்தபிறகு போய்  தரிசனம் பண்ணுங்கள்  போங்கள் இங்கிருந்து உடனே.''

ஓ அப்படியா. ஏனோ நீ எங்கள் மேல் கோபமாக இருக்கிறாய்.  நடராஜா இருந்தால் பார்க்கலாமே என்ற ஆசையால் கேட்டோம்.  ஐயா,  எங்களுக்கு இந்த வெயிலில்    தாகமாக இருக்கிறதே கொஞ்சம் குடிக்க தண்ணீர் தருவாயா மகனே? கால் நீட்டி சற்று உட்காருகிறோம்'' முதியவர் சொன்னார்.

சிற்பிக்கு எரிச்சல் உச்சகட்டத்துக்கு சென்றது. '' இங்கே  எல்லாம்  நீங்கள்  உட்காரமுடியாது. எழுந்திருந்து செல்லுங்கள்.''

'' சரியப்பா  போகிறோம்.  தாகமாக இருக்கிறது,   கொஞ்சம்   தண்ணீர் கொடேனப்பா''

''ஆமாம்,   இங்கே தண்ணீர்ப்பந்தல் வைத்திருக்கிறேன் வருவோர் போவோர்க்கு உபசாரம் செய்ய. வேண்டுமானால் இதோ கொதிக்கிறதே உலோக குழம்பு அது நிறைய இருக்கிறது, தாகம் தீர தாராளமாக எடுத்து குடியுங்கள்.''

 கோபத்தோடு சொல்லிவிட்டு சிற்பி எழுந்து அவர்களுக்கு தண்ணீர் கொண்டுவர  பின் பக்கம் குடிசைக்குப்  போனான்.  அங்கே பானையில் குளிர்ந்த நீர் வைத்திருந்தான்.

''ஆஹா சரியப்பா, நீ சொல்கிறபடியே செயகிறோம். நீ ரொம்ப நல்லவன்.'' என்கிறார்கள் இருவரும்.

சிற்பி தண்ணீர் சொம்புடன் திரும்பி வந்தபோது அந்த கொதிக்கும் அத்தனை  பஞ்சலோக குழம்பையம். உலை  அணைந்திருந்தது.   தம்பதியை காணோம்.  அந்த முதியவர் கிழவி இருவரும் இருந்த இடத்தில் நடராஜர் அம்பாள் சிலைகள் தான் இருந்தது. அவர்கள் அந்த உலோக குழம்பை அவன் சொல்லியபடி குடித்து சிலையாகி விட்டார்களா????

 பரபரவென்று  நடராஜர்  சிலை தானாகவே  உருவாகியது பற்றிய செயதி பரவி விட்டது.  யார்  அந்த கிழ தம்பதியர். எங்கே போனார்கள்? இந்த நடராஜர்  ஸ்வயம்பு நடராஜர்.  சிதம்பரம் நடராஜரை விட பெரியவர்.

இந்த செய்தி அரண்மனைக்கு எட்டிவிட்டது  மேலே  சொன்ன  பெரிய மஹாராணி செம்பியன் மாதேவி இதை பார்க்க தான்  நேரே வந்துவிட்டார்கள் திரு நல்லம் க்ஷேத்ரத்துக்கு.  

கும்பகோணம் அருகில் கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரன் ஆலயத்தில் அற்புதமான நடராஜனின் கதை மேலே சொன்னேன். அவன் அழகைப் பார்த்து வியந்தேன்.

பெரிய சிவன் கோயில் என்று அழைக்கப்படும் உமாமஹேஸ்வரர் ஆலயத்திற்கு வட மேற்கே ஊரின் ஆரம்பத்திலேயே ஸ்ரீ கைலாசநாதர் கோவில் உள்ளது. எஸ். புதூரிலிருந்து லிருந்து கொடியமங்கலம் வழியாக கோனேரி ராஜபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது .  அங்கே  சமீபத்தில் கும்பாபிஷேகம் ஆகி  கைலாசநாதர்  தரிசனம் தருகிறார்.

திருநல்லம் என்பது  பழைய  புராணப்பெயர்.  பிற்காலத்தில் சோழமன்னனின்  தளபதி ஒருத்தன்  கோனேரி ராஜன் இந்த ஊர் நிர்வாக  பொறுப்பேற்றான்.உமாமஹேஸ்வரர் ஆலயத்தை புதுப்பித்து நிறைய தான தர்மங்கள் அளித்து   திருநல்லம்  என்பதை   தனது பெயரில் கோனேரி  ராஜபுரம் ஆக்கினான்.  

உமாமஹேஸ்வரர் ஆலயம் பெரிதாக சோழ மஹாராணி செம்பியன் மாதேவியால் புனருத்தாரணம் செய்யப்பட்டு கற்றளி ஆலயமாகி பின்னர் பல அரசர்களால் பராமரிக்கப்பட்டு பெரிய கோவிலாக இன்று நமக்கு காட்சி தருகிறது. அந்த கோவிலை சுற்றி ஒரு சில பழைய கோவில்கள் இருந்தன

ஆலயத்தை சுற்றிலும் பச்சை பசேல் என வயல்கள் . அமைதியான கிராம சூழ்நிலை. கோனேரி ராஜபுரம் 18 வாத்திமா கிராமங்களில் ஒன்று. 200 க்கும் மேல் பட்ட பிராமண குடும்பங்கள் வாழ்ந்த வசித்த ஊர். ஏழு அக்ரஹாரங்களை கொண்டது. கோவில் மடவிளாகம் உமா மஹேஸ்வரர் ஆலயத்தை ஒட்டி இருந்தது. அங்கே கோவிலை தனி அக்ரஹாரமாக குருக்கள் மற்றும் பாரிஜாக்கர்கள் பரிஜாரகர்கள் வசித்தனர். கால ஓட்டத்தில் பிழைப்பை தேடி நிறைய பேர் புலம் பெயர்ந்த காரணத்தால் கோவில்களும் அதில் சம்பந்தப்பட்ட ஒரு சில குடும்பங்கள் மட்டுமே எஞ்சியவை.

கோனேரி ராஜபுரம் பூரா  ஒரு காலத்தில் சாம வேதக்காரர்கள். 1950 களில் ஸ்ரீ மஹா பெரியவா கும்பகோணத்தில் முகாம் இருந்த காலத்தில் இங்கு வந்து அநேகமாக எல்லா வீடுகளிலும் தங்கி ஆசிர்வதித்து உள்ளார். உமா மகேஸ்வர கோயில் ஸ்தல வ்ருக்ஷம் அரசமரம். குளக்கரையில் பலி பீடமும் மஹா வில்வ மரமும் உள்ளன.







No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...