Wednesday, July 7, 2021

GEETHANJALI

 

கீதாஞ்சலி  -   நங்கநல்லூர் J K  SIVAN --
தாகூர் 


81. உன்செயலால் தான் எதுவும் ஆகும்.
  

81.  On many an idle day have I grieved over lost time. But it is never lost, my lord. 
Thou hast taken every moment of my life in thine own hands.
Hidden in the heart of things thou art nourishing seeds into sprouts, buds into blossoms, and ripening flowers into fruitfulness.
I was tired and sleeping on my idle bed and imagined all work had ceased. 
In the morning I woke up and found my garden full with wonders of flowers.


கிருஷ்ணா,  ''நடப்பதெல்லாம்  நாராயணன் செயல்''  என்று  வாய்  மட்டும் பல முறை சொல்லியும் மனதில் பதியவில்லை, 
 இப்போது தான்  பளிச்சென்று  ஆணியடித்தது போல் பதிகிறது.
ஒருவேலையுமில்லை,  அக்கடா..என்று  படுப்பவன். அப்போதெல்லாம்  ஒரு  எண்ணம் தோன்றும். 
சே  வாழ்வில் எத்தனை நேரங்களை வீணடித்து விட்டோம் என்று.   நானா,  நேரத்தையா,  வீணடித்தேனா? 
 எவ்வளவு முட்டாள் நான்?  நேரம் என்னைக்கேட்டா வருகிறது போகிறது?
என் ஒவ்வொரு எண்ணமும்  செயலும் நீயல்லவா நடத்துபவன்.  எதை நான் எப்போது எப்படி   செய்யவேண்டும் என்று  தீர்மானிப்பதே  நீ தானே.  நான் வெறும் பலூன், காற்றடித்த பக்கம் பறப்பவன்.  என் உள்ளே நிரம்பிய காற்று நீ.  என்னை லேசாக்கி பறக்கவைத்தவன்..  ஒவ்வொன்றிலும்    விதை, முளைவிட்டு, தலையை பூமிக்கு மேலே நீட்டி, இலையோடு வளர்ந்து, பூத்து,  காயாகி, பழமாகும் வரை  நிகழ்த்திடுபவன்  நீ , நாராயணா , உன் செயல் தானே. 

''அக்கடா''  விஷயத்தில்,  நான் எல்லா வேலையும் முடித்தவன் என்று நினைத்து, களைத்துப் போனவனாக காட்டிக்கொண்டு  படுக்கையில் அங்குமிங்கும் புரள்கிறேன்.  தூங்குகிறேன். கனவு காண்கிறேன்.  சோம்பல் முறிக்கிறேன். என்ன வேலை நான்  செய்துவிட்டேன்?

பொழுது விடிந்து வீட்டின் கொல்லை பக்கம்  பல் தேய்க்கச்  சென்றபோது எது கண்ணில் பட்டது?
நேற்று சிறிய  மொட்டு, இன்று அற்புதமான வண்ண மலராக தலையாட்டுகிறது,இளம் மஞ்சள் கொழுந்து இலை,பச்சை யாகிவிட்டது.  இன்று  புது கொழுந்துகள்.  புது கிளைகள், அரும்புகள்.  உலர்ந்து உதிர காத்திருக்கிறது சில. 

 ஆஹா உன்   சிருஷ்டியின் ரஹஸ்யம் புரிகிறது.
ஓயாமல் ஒழியாமல்  உழைப்பவன் நீ.  உழைப்பவனாக  பாவ்லா  காட்டுபவன் நான்.  
  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...