Wednesday, June 16, 2021

EVIDENCE NIL

 ''சாட்சியம் கலைந்தது''      -  நங்கநல்லூர்  J K SIVAN


கண்ணன் அவனது நண்பர்கள்  எந்த வீட்டில் கடைசியாக  வெண்ணை உறியை  காலி செய்தார்களோ  அந்த வீட்டுக் காரி  கோபி  தண்ணீர் குடத்தோடு  வீட்டுக்குள் நுழைந்தாள் .  கதவு வாசலில் திறந்திருக்கிறது.  வீட்டின் உள்ளேயும் கதவுகள் திறந்து தான் இருக்கிறது.  எனக்கு  பித்து பிடித்து விட்டதா?   கதவைத்  தாளிட்டேன் என்று நினைத்து தாளிடாமல் கதவைத்திறந்து போட்டுவிட்டு சென்றேனோ?

உள்ளே அவள் என்ன செய்கிறாள் என்று சில கண்கள் கவனித்துக் கொண்டிருந்தன. தங்கள் பெயர்கள் அடிபடுகிறதா என்று வேவு பார்க்க  கண்ணனின் ஆட்கள் அவர்கள்.  எதிரே ஒரு மரத்தின் மேல் இருந்து இலைகள் மறைவில் அமர்ந்து உள்ளே நடப்பது அத்தனையும்  தெரியும் இடத்தில் வாட்டமாக  அமர்ந்து கொண்டு பார்ப்பவர்கள்.

கோபி  உள்ளே  கோபமாக தனக்குத்தானே பேசிக்கொண்டது காதில் விழுந்தது.  

''நிச்சயம்  இது பூனை யின் திருட்டு அல்ல,  பூனை கதவை திறந்து உள்ளே வராது.  வந்த பூனையால்   அத்தனை பானைகளில் இருக்கும் தயிர் வெண்ணையைத்  தின்ன முடியாது.  பூனைக் கூட்டங்களும்  இங்கே கண்ணில் பட்டதே இல்லை .  பூனையாக இருந்தால் எதற்காக மயிலிறகை கொண்டு வந்து இங்கே போட வேண்டும்.  தனியாக ஒரு பெரிய அழகான  இறகு  மட்டும் இங்கே ஏன் கிடக்கிறது/

 அடிக்கடி  யசோதையின் பிள்ளை கிருஷ்ணன் தான் இந்த மாதிரி வேலையை பல வீடுகளில்  செய்கிறான் என்று எல்லோரும் ஆற்றங்கரையில் கூட  அரசல்  புரசலாக பேசிக் கொண்டார்கள்.  அவன் தான் தலையில் எப்போதும்  மயிலிறகு செருகி வைத்துக் கொள்பவன்.   அவனைத் திருடும்போது எவரும் இதுவரை கையும் களவுமாக பிடித்ததில்லை. இதோ இன்று மாட்டிக்கொண்டான். அவனது மயிலிறகு காட்டிக் கொடுத்து விட்டதே. இதோ போகிறேன்  யசோதையிடம்.  அந்த கிருஷ்ணனை விட்டேனா பார் ''  

 உரக்க பெருமூச்சு விட்டுக்கொண்டே பேசினாள்  அந்த கோபி. 

செய்தி கிருஷ்ணனுக்கு உடனே போய்விட்டது.   ''உன்  பேரைத் தாண்டா  கிருஷ்ணன் கிருஷ்ணன் என்று சொல்கிறாள்.  கையில் ஒரு மயில் இறகு  வைத்திருக்கிறாள். அதை   ஆட்டி ஆட்டி  அந்த கிருஷ்ணனை விட்டேனா பார்''  என்று சொல்லிவிட்டு உன் வீட்டுக்கு போய்க்  கொண்டிருக்கிறாள்''

''கிருஷ்ணா, இத்தனை நாள் தப்பித்தாய்,  இன்று  நீ வகையாக மாட்டிக்  கொண்டாய். அந்த கோபி கோபமாக  போகிறாள். அவள் கையில் ஒரு மயிலிறகு ஏன் வைத்திருக்கிறாள் என்று புரியவில்லை'' என்றவன்...

. ''அடேடே,   கிருஷ்ணா உன் தலையில் நீ செருகி வைத்திருப்பாயே அந்த மயிலிறகு எங்கேடா  காணோம் ?'' என்று   ஒருவன்  கேட்டான். கிருஷ்ணன் தனது தலையை தொட்டுப் பார்த்துக்  கொண்டவன் சிரித்தான்.

''ஓஹோ என் தலையிலிருந்து தான் நான் உறியைக்  காலி பண்ணிவிட்டு  கீழே குதிக்கும்போது அங்கே விழுந்திருக்கிறது. நான் வந்திருந்தேன் என்பதற்கு சாக்ஷி என்று சொல்ல     அதோடு  என்  வீட்டுக்கு தான் போகிறாள் போல் இருக்கிறது ''என்றான் கிருஷ்ணன்.

''கிருஷ்ணா  நாங்களும் உன்னோடு இந்த வெண்ணை தயிர் திருட்டு  விஷயத்தில் கூடவே இருந்தோம்  என்றாலும்  உன்னை  நாங்கள் எப்படிடா   காப்பாற்றுவது.?  உன் மூலம் நாம் எல்லோரும் அங்கே சென்று வெண்ணெய் சட்டியை உடைத்தது. வெண்ணெய் எடுத்து தின்றது எல்லாம் வெளியே வரப்போகிறது. இப்போது என்ன செய்வது? '' என்று கவலைப்பட்டான் கிருஷ்ணனின் பால்ய  நண்பனான விஜயாக்ஷன்.

ஒரு கணம் யோசித்த கிருஷ்ணன் சுற்று முற்றும் பார்த்தான் . வசந்தகாலத்தின் எழிலில் மரங்களும் கொடிகளும் செடிகளும் பூத்து குலுங்குகின்றன. யமுனையில் கரை புரண்டு குளுமையான நீர் ஓடுகிறது.. . கிருஷ்ணன்  இடுப்பில் செருகி இருந்த புல்லாங் குழலை எடுத்து இதழ் ஓரம் கொண்டு போனான். கண நேரத்தில் இன்னிசை வெள்ளம் பெருகியது. மழை வரலாம் என்று அறிவிக்க கார்முகில் கூட்டம் மெல்ல மெல்ல கவிந்து வர அந்த பிரதேசத்தில் உள்ள மயில்களுக்கு கொண்டாட்டம். இந்த சூழ்நிலையில் தானாகவே தோகை விரித்தாடும் அவற்றுக்கு கண்ணனின் குழலோசையின் பதங்கள் சற்று அதிக சந்தோஷத்துடனேயே ஆட வைத்தது.

"என்னமாக வாசிக்கிறான் இந்த கிருஷ்ணன் பார்த்தாயா?" என்றது மயில் கூட்டத்தின் தலைவன் மயில் ராஜா தன் ராணியிடம்.

"நீ எப்போதும் தப்பாகவே தான் எதையும் செய்வாய், சொல்வாய்" என்றது மயில் ராணி.
" நான் என்ன தப்பாக சொல்லி விட்டேன்" என்று ஆட்டத்தை நிறுத்தி கேட்டது ராஜா மயில்
" பின்னே என்ன, கிருஷ்ணன் குழல் ஓசையை பார்த்தாயா, என்கிறாயே. கேட்டாயா என்று தானே சொல்லணும்.
''ஓ, நீ அப்படி சொல்கிறாயா?? என்ன செய்வது சொல்; கிருஷ்ணனைப் பார்த்தால் எல்லாம் மறந்து விடுகிறதே. அப்பறம் எப்படி கேட்பது?"
உனக்கு எப்போதும் எங்கோ எதிலோ யார் மேலோ தான் ஞாபகம் என்று என்று ராணி மயில் வழக்கம் போல் சொல்லவே 
"ஆமாம் நீ எப்பவும் எதிலும் சரியே" என்று பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தது ஆண் மயில்.
"இவ்வளவு அழகாக இன்னிசை பொழிந்த கண்ணனுக்கு நாம் என்ன பரிசு கொடுப்பது?" என்று கேட்டது மயில் ராஜா.  எதாவது தப்பாக சொல்லி மாட்டிக் கொள்வதை விட ராணியையே யோசிக்க வைக்கலாமே என்று சாமர்த்தியமாக கேட்டது.

"நீ தான் நம் கூட்டத்திலேயே அழகன், உன்னிடம் என்ன அழகான பொருளோ அதையே அவனுக்கு கொடேன்" என்றது ராணி மயில்.

யோசித்து பார்த்த ராஜா மயில் நடமாடிக் கொண்டே கிருஷ்ணனை அணுகியது. அவன் மடியில் தன் தலையை வைத்து கொண்டது. குழலை வாயிலிருந்து எடுத்து விட்டு கிருஷ்ணன் கேட்டான்.

"அழகிய மயிலே எதற்கு என்னிடம் வந்தாய்.சொல்."

"கிருஷ்ணா, எங்களை உன் கீதத்தால் பரவசப்படுத்திய, ஆடவைத்த நீ எல்லோரையும் பரவசப் படுத்த வேண்டும் என்பதற்காக உனக்கு நாங்கள் மயில்கள் எல்லாரும் சேர்ந்து எங்களால் இயன்ற ஒரு பரிசு தருகிறோம் ஏற்றுக் கொள்வாயா சொல் ?"

"மிக சந்தோஷமாக பெற்றுகொள்கிறேன் மயில் ராஜா "

" இந்தா" என்று அந்த அழகு ஆண் மயில் தன்னிடத்தில் இருந்த ஒரு அழகிய இறகை கண்ணனுக்கு பரிசாக கொடுத்து " என்னிடம் பெருமைப்பட இருப்பது இது ஒன்றுதான்; இதை எப்போதும் உன்னிடம் வைத்துக் கொள்வாயா?" என்றது

" அப்படியே அழகு மயிலே, இந்த உன் அழகிய மயில் இறகு இந்த கணம் முதல் என்றும் என் தலையில் செருகப்பட்டு இருக்கும் திருப்தியா" என்றான் கிருஷ்ணன்.   இனி ஒரு முறை தலையிலிருந்து மயிலிறகு கீழே விழாமல் கெட்டியாக ஜாக்கிரதையாக அதை தலையில் செருகிக்கொண்டே வீட்டுக்கு சென்றான் கிருஷ்ணன். 

வீட்டில்  பல பேர் உரக்க ''கிருஷ்ணன்,  கிருஷ்ணன் வேலைதான் ''   என்று தன்னைக் குறை கூறுவது எதைப் பற்றி என்று அவனுக்கு தெரியும் ஆதலால்  பதட்டப் படவே இல்லை. ஒன்று மறியாதவனாக உள்ளே சென்றான்.   சில நண்பர்கள் வாசலில் நின்று  உள்ளே நடப்பதை கவனித்தார்கள்.  அவர்கள் முகத்தில் கவலைக்  கோடுகள். 
 
''அம்மா'' என்று தேனொழுக குரல் கொடுத்தான் கிருஷ்ணன்.
''வா கிருஷ்ணா , உனக்காக தான் காத்திருக்கிறேன்''  எங்கே போய் வருகிறாய்.
''ஆற்றில் குளித்துவிட்டு  வருகிறேன் அம்மா''
சுற்றி எல்லோரையும் பார்த்தான். அநேக கோபிகளை அவனுக்கு தெரியும், அவர்களுக்கும் அவனைத் தெரியும்  அதில் ஒரு முகத்தின் கண்களில் கோபம், அவள் கையில் இருந்த  மயிலிறகு இப்போது  யசோதையின் கையில்.      எல்லோரையும் கண்ணன் சுற்றிச்  சிரித்துக் கொண்டே பார்த்தான்.   சக்தி வாய்ந்த  மோஹனாஸ்திரம் . அவன் புன்னகை  அப்பாவிப் பார்வை, அத்தனை முகங்களையும் சாந்தப்படுத்தி அவன் மேல் பாசத்தை அதிகப் படுத்தி விட்டது.  அந்த ஒரு கோபி பேசாமல் சிலையாக நின்றாள். முகத்தில் கோபம் இல்லை.   ஏனென்றால் எல்லோர் கண்களும் கிருஷ்ணனையே  அதிலும் அவன் தலையையே பார்த்துக் கொண்டிருந்தன .

''பாமினி, கண்ணன் தலையில் மயிலிறகு  இருக்கிறதா இல்லையா   நீயே  பார்த்தாயா. இப்போது தானே அவன் உள்ளே வருகிறான்..'' என்றாள் யசோதை.
''ஆமாம் ..
''அவன் ஒரு மயிலிறகுக்கு மேல் செருகிக் கொள்வதில்லையே.......அதுவும்  நான் தானே தினமும் செருகி விடுபவள்''
''என்ன அம்மா என் தலையிலிருக்கும்   மயிலிறகு பற்றி பேச்சு. நீ தானே இன்று காலை இதை வழக்கம்போல் செருகி விட்டாய்.''
''யசோதா அப்போது.... நான் பார்த்த என் வீட்டில் இருந்த மயிலிறகு???....வெண்ணை தயிர் கோட்டை விட்டவள் கேட்டாள் .
''நீ  கதவைத் திறந்து வைத்தால் காற்றில் எங்காவது பறந்து  உள்ளே வந்து விழாதா ? வந்திருக்கும்... உன் வீட்டைச் சுற்றி மயில்கள் நடமாட்டம் அதிகமாச்சே.'' என்றாள் கூட்டத்தில் ஒருத்தி. யசோதை சிரித்தாள்.

''அம்மா  என் தலையில் இருந்து மயிலிறகு எப்போதும் கீழே விழுந்ததே இல்லையே அம்மா.  சாயந்திரம் நீ தானே தினமும் எடுத்து விடுவாய்'' என்றான்  கிருஷ்ணன். 

மேற்கொண்டு  கேட்க வேண்டிய கேள்வி எதுவும்  யாரும் கேட்கவில்லை... யசோதை  கிருஷ்ணனின் கொஞ்சலில் தன்னை மறந்து அவனை அப்படியே வாரி அணைத்துக் கொண்டாள் ... அவன்  வாய்ப் பக்கம்   வெண்ணை வாசனை இன்னும் போகவில்லை...என்பதையும்  அவள் கவனிக்க தவறவில்லை...

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...