Monday, June 14, 2021

PESUM DEIVAM





பேசும் தெய்வம்   -   நங்கநல்லூர்  J K  SIVAN   -


37.   அரக்க வெள்ளமும் இரக்க  உள்ளமும் 


தூங்கிக் கொண்டிருந்த   இந்தியா  விழித்துக்கொண்டு சுதந்திரம் கேட்ட  காலம்  அப்போது.  நாடெங்கும்  கிளர்ச்சிகள், காந்தி மஹான்,  திலகர்,கோகலே, நேதாஜீ , ராஜாஜி, சத்யமூர்த்தி, என்று எங்கும் தியாகிகள் சுதந்திரம் கேட்டுக்   கொண்டிருந்தனர். வெள்ளைக்கார  அரசாங்கம் கொஞ்சம்  பணிந்து வந்தது.

தமிழ்நாடு  அரசாங்கம்  நீதிக் கட்சி தலைவர்  பனகல்   தலைமையில்  ஒரு  சட்டம் கொண்டுவர  முயன்றது.  ஹிந்து  ஆன்மீக  இயக்கங்கள் பாதுகாக்கப்படவேண்டும்  என்று.  இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. யார் வேண்டுமானாலும் குறைகளை  முன் வைக்கலாம் என்ற வாய்ப்பு அளிக்கப்பட்டது.

காஞ்சி  மடம்  சார்பாக ஒரு கோரிக்கை   வைக்க பல வக்கீல்களை கலந்தாலோசிக்க  கூட்டம்  கூடியது. மஹா பெரியவா அதில் பங்கேற்றார்.  கும்பகோணம் வக்கீல் S  மகாலிங்க ஐயர்  கோரிக்கையை எடுத்துக்கொண்டு  பனகல் ராஜாவை சந்தித்தார்.  

''ஸ்வாமிகள்  என்ன சொல்கிறார்.  ஹிந்து  ஆன்மீக நிறுவனங்கள் பாதுகாக்கப்பட  ஒரு சட்டம் அவசியம் என்று ஆமோதிக்கிறாரா, வேண்டாம் என்கிறாரா?  என்று பனகல்  ராஜா கேட்டார் ?

''மஹா ஸ்வாமிகள் அதை ஆதரிக்கிறார் ''  என்றார் மஹாலிங்கய்யர். அந்த சட்ட மசோதா வில் சில ஷரத்துகள் கொஞ்சம்  மாற்றப்படவேண்டும் என்று கருதுகிறார்  அது விஷயமாக  ஒரு அறிக்கை கொண்டு வந்திருக்கிறேன் ''

பனகல் ராஜாவுக்கு சந்தோஷம்,  அரசாங்கம் ஒரு மசோதாவை கொண்டு வரும்போது முதலில் காஞ்சி மடாதிபதி அதை ஆதரித்து ஆசிவழங்கியது அவருக்கு திருப்தி அளித்தது.

சென்னை ST  ஜார்ஜ் கோட்டையில் ஒரு  பொதுக் கூட்டம் நடைபெற்றது.   ஸ்ரீ  T.R.  ராமச்சந்திர அய்யர், பெரியவா பக்தர்,  விலாவரியாக  அந்த மசோதா பற்றி, சில திருத்தங்கள் மஹா பெரியவா  கொண்டுவந்தது பற்றி விவரித்தார்.   அந்த கூட்டத்தில் பனகல் ராஜா  தன்  சார்பிலும்,   அரசாங்கம் , கமிட்டீ சார்பிலும்   மஹா பெரியவாளுக்கு நன்றி தெரிவித்தார்.

1924;  திருச்சியில்  மஹா பெரியவா  தங்கி இருந்த போது  காங்கிரஸ் தலைவர் புருஷோத்தம தாஸ் தாண்டன் ஸ்வாமிகளை  தரிசித்தார்.   ஹிந்தி பிரச்சார சபா சென்னையில்  ஆரம்பிக்க முயற்சிகள் நடப்பது பற்றி தாண்டன்  கூறி ஆசி கேட்டார்.   மஹா பெரியவா  காஞ்சி மட சார்பாக  ஆயிரம் ரூபாய்  நன்கொடை வழங்கினார்.    1924லிலேயே   தமிழர்கள் ஹிந்தி மொழி அறிவதன் அவசியத்தை உணர்ந்தவர் மஹா பெரியவா.  அது தமிழகத்தில் வளர நன்கொடை கொடுத்தவர் என்று புரிகிறது.

அந்த வருஷம் திருவையாற்றில்  வியாச பூஜை   ஏற்பாடாகியது. காவிரி  வடகரை  ஓரம் புஷ்யமண்டபத் தில் வெகு விமரிசையாக  நடந்தது. தஞ்சாவூர்  மற்றும் பல  கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து மஹா  பெரியவா தரிசனம் பெற்றார்கள்.

ஆடியில் `புதுப்புனல்  பெருக்கு  எடுப்பது எல்லோருக்கும் தெரியும்.  அந்த வருஷம் ஆடியில் காவேரி கரை புரண்டு ஓடியது.   வெள்ளத்தால்   சில இடங்களில் கரை உடைப்பு   எடுத்துக் கொண்டது.  கிராமங்களில் வெள்ள  அபாயம், பயிர்ச்  சேதம்,  எனும்  பயம் எங்கும்  விவசாயிகள் மத்தியில் தூக்கமின்றி வாட்டியது.   புஷ்யமண்டபம்  ஆற்றின் கரையோரமாக இருந்தால்  வெள்ளம்   பூஜா  மண்டபத்திற்குள்ளும் வந்து விட்டது.

பக்தர்கள் மஹா பெரியவாளிடம்  பூஜையை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண் டார்கள்.

 ,மஹா பெரியவா,  வெள்ளமோ , புயலோ, எது  வந்தாலும்   சாதுர் மாஸ்ய சமயத்தில் பூஜையை வேறு இடம்  மாற்றக்கூடாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.   எல்லோருக்கும் கவலை.

 கொள்ளிடம் வரை வெள்ளம் அதிகமாகிக் கொண்டே வந்தது.   எத்தனையோ  குடிசைகள், பெரும்பாலும்  ஹரிஜனங்கள் வாழ்ந்த பகுதிகள் நீருக்குள் மூழ்கின.  தப்பித்தவர்கள்  மேட்டுப்பகுதிகளுக்கு   ஓடினார்கள்.  குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், தவிர  ஆடு மாடுகளும் அவர்களோடு  சென்றன.   வீட்டை    பிழைப்பை இழந்து தவிக்கும் அந்த மக்கள் மீது மஹா பெரியவா மிகவும்   இரக்கம் கொண்டு,  பரிதாபப் பட்டார்.    உள்ளூர்  கிராமங்களில் பிரமுகர்களை  எல்லாம்  அழைத்தார்.  உடனே  அவர்கள்  உதவியோடு  தேவையான வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்.   மடத்தில் தினமும் வழங்கிய  அன்னதானத்தை நிறுத்தி  பெரிய அண்டா குண்டாக்களில்  நிறைய  உணவு பதார்த்தங்கள்  வெள்ளத்தில் வாடும் பகுதி   மக்களுக்கு  கொண்டு செல்லப்பட்டது.   தொண்டர்களை அனுப்பி எல்லோரும்  உணவு  சரியானபடி ஒழுங்காக போய்ச்சேர  ஏற்பாடு செய்தார்.     சரியானபடி எல்லோரும்  உணவு  வழங்கும் பொறுப்பை  காங்கிரஸ் தலைவர்  சாரங்கபாணி அய்யங்கார் ஏற்று நடத்தினார்.   வெள்ளம் வடிந்து மக்கள் அவரவர் இடம் போய் சேர 15-20 நாட்கள் ஆகியது. அதுவரை  அனைவருக்கும்  தினமும் மடத்திலிருந்து உணவு அளிக்கப்பட்டது.  அத்தனை ஏழைக் குடும்பங்களும் மஹா பெரியவாளை  வாழ்த்தினை.   காலத்தில் செய்த உதவி ஞாலத்தின்  மாணப் பெறிது  அர்த்தம்  இப்போது புரிகிறதா?   மஹா பெரியவாவின் சமய சஞ்சீவி  உதவியை பலரும்  போற்றினர்.  அது தான் மஹா பெரியவா.

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...