Thursday, June 10, 2021

NARAYANEEEYAM



 

நாராயணீயம் --- நங்கநல்லூர் J K SIVAN

2. பரமனும் பக்தனும்.

குருவாயூரப்பன் எண்ணம் நிறைவேறியது என்பது பட்டத்ரிக்கு தெரியாது. தானாகவே குருவாயூர் வந்ததாகவும் கிருஷ்ணனை வேண்டி தனது நோயை குணப்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாகவும் எண்ணினார். அது அவன் லீலை என இனி உணரப்போகிறார்.
உன்னிகிருஷ்ணன் முகத்தில் புன்னகை தவழ, பாண்டுரங்கன் மாதிரி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து பட்டத்ரியைப் பார்த்தான்.

''பட்டத்ரி, எங்கே நாராயணீயம் பாட ஆரம்பியுங்கள் '' என்று கூறி அனுக்ரஹம் செய்கிறான்.

இப்பொழுதும் நாராயண பட்டத்ரி மண்டபத்தில் உட்கார்ந்து பார்த்தால் நமக்கு அந்த குருவாயூ ரப்பன் தெரிய மாட்டான். ஆனால் குருவா யூரப்பன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து நம்மைக் காண முடியும். எவ்வளவு அழகான சிற்பக் கலை நுணுக்கம்!

அப்பேர்ப்பட்ட புனிதமான இடமானதால் இப்பொழுது அங்கே ஒரு செப்புப் பட்டயம் வைத்து, ''நாராயண பட்டத்ரி நாராயணீயம் எழுதிய இடம்'' என்று எழுதி வைத்திருக் கின்றனர். ஸாக்ஷாத் அந்த குருவாயூரப்ப னே, பட்டத்ரி நாராயணியம் எழுதி முடித்தவுடன்,

''மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி , இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம். ஆனால் இன்று முதல் இந்த இடம் உனக்கு மட்டுமே சொந்தம். இதற்கு இனிமேல் ''பட்டத்ரி மண்டபம்'' என்று பேர்'' என சந்தோஷமாக கூறினவன் அந்த குட்டி கிருஷ்ணன்.

எந்த காவியத்துக்கும் இல்லாத பெருமை இந்த நாராயணீயத்திற்கு உண்டு. என்ன வென்றால், இந்த நாராயணீயம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணை.

'' என் குருவாயூரப்பா, நான் உன்மேல் மனமார ஒரு நாராயணீயம் பாடி எழுத ஆரம்பிக்கட்டுமா? - பட்டத்ரி
'' உம். எழுதுங்கோ பட்டத்ரி, நான் கேட்க ஆவலாக இருக்கிறேன்'' - உன்னிகிருஷ்ணன்.

'' உண்ணி கிருஷ்ணா, முதலில் இதைக் கேள். நான் நாராயணீயத்தைத் தொடங்க வேண்டும் என்றால் சில பல நிபந்தனைகள் உள்ளன. அவற்றை எல்லாம் நீ பூர்த்தி செய்தால் மட்டுமே என்னால் நாராயணீயம் பாட முடியும். இல்லையென்றால் நான் இப்போதே ஊருக்குச் செல்கிறேன்''

இதுபோல் பகவானும் பக்தனும் சம்பாஷணை செய்த வேறு சில சம்பவங்களும் இருக்கிறது. திருப்பதியில் குலசேகர ஆழ்வாரும் ஸ்ரீநிவாசப் பெருமாளும் பேசியது.. ஸ்ரீரங்கத்தில் இரவில் நடக்கும் அரையர் சேவையில் நாட்டியம் ஆடிக் கொண்டே ரங்கநாதருடன் பேசுவது. சிதம்பரத்தில் அப்பய்ய தீக்ஷிதரும் நடராஜரும் பேசியது. மதுரையில் முத்துஸ்வாமி தீக்ஷிதர் மீனாக்ஷி தேவியோடு பேசியது.,காஞ்சியில் வரதராஜ பெருமாளும்- திருக்கச்சி நம்பிகளும் பேசியது, ராமகிருஷ்ண பரமஹம்சர் காளி பாவதாரிணியுடன் பேசியது, , கந்தவேள் முருகனும்- கச்சியப்ப சிவாச்சார்யாரும், திருக்கடையூரில் அம்பாளும்,அபிராமி பட்டரும், பிள்ளையாரும்- முருகனும்- அவ்வையாரும், காளியும்- கவி காளிதாசனும், திருத்தணி முருகனும்- முத்துசுவாமி தீட்சிதரும், மூல ராமரும்- ஸ்ரீஇராகவேந்திரரும் என்று ..இன்னும்... இன்னும்...
இது ஒரு நீள ஹனுமார் வால் பட்டியல். பக்தர்களும், பரமனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட புண்ய பூமி இந்த பாரதம். இந்த அற்புதத்திற்கெல்லாம் சிகரமாக நிகழ்ந்தது தான் நம் பட்டத்ரியும் குருவாயூரப் பனும் பேசிக் கொண்டது.

மற்றவர்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் சில சமயங்களில் தங்கள் இஷ்ட தெய்வத்தோடு பேசியிருக்கிறார்கள். குருவாயூரில் பட்டத்ரி நூறு நாளும் தொடர்ந்து குருவாயூரப்பனோடு பேசும் மகா பாக்யத்தைப் பெற்றார்.! பேசியது மட்டுமல்ல ஒரு நண்பனாக, தந்தையாக, குழந்தையாக, பணியாளாக என அத்தனை பாவங்களிலும் BHAVA கிருஷ்ணனோடு பேசுகிறார். அவனும் பேசுகிறான். குருவாயூரப்பன் ப்ரத்யக்ஷ தெய்வம் என்பதால் தானே லட்சோப லக்ஷம்பக்தர்கள் இன்றும் குருவாயூருக்கு ஓடுகிறார்கள்.


எங்கள் நங்கநல்லூரில் அந்த குட்டி கிருஷ்ணன் உத்தர குருவாயூரப்பனாக காட்சி அளிக்கிறான். எண்ணற்ற பக்தர்கள் இங்கேயே அவனை குருவாயூரிலிருப்பது போல் ஆலய அமைப்பில் கண்டு ஆனந்திக்கிறோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...