Sunday, June 13, 2021

THIRUK KURUKKAI

 திருக்குறுக்கை வீரட்டேஸ்வரர்    நங்கநல்லூர்  J.K. SIVAN


அவசியம் குறுக்கை செல்லுங்கள். 

கொ .மு.  வில்   (கொரோனா  வருவதற்கு முன்பு. கொ.பி. எப்போது என்று தெரியவில் லை?) என் நண்பர்  அரும்பாக்கம் ஸ்ரீனிவா சனோடு அவரது காரில் பல  க்ஷேத்ரங்கள் சென்று தரிசனம் செய்தது முன் ஜென்ம பாக்யம்.
அப்படிச் சென்ற ஒரு கோவிலைப்பற்றி  மீண்டும் சொல்கிறேன். 
 மயிலாடுதுறையிலிருந்து 12 கி. மீ.  மயிலாடு துறை - மணல்மேடு பேருந்துச் சாலையில் நீடூர் தாண்டிச் சென்றோம் .  சாலை நல்லவேளை தொந்தரவு கொடுக்காமல் இட்டுச் சென்றது.   வழியில்  ‘கொண்டல் பாலம்  தாண்டி, ‘கொண்டல்’ ஊரையடைந்து, ‘கொருக்கை’ என்று வழிகாட்டிப் பலகை (கைகாட்டிமரம்) உள்ள (குறுக்கைச்) சாலையில் இடப்புறமாக 3 கி.மீ. சென்று (குறுகியபாதை) பாலத்தைக் கடந்து இத்தலத்தை அடையலாம்.  
சிவன் பெயர் வீரட்டேஸ்வரர். அம்பாள்: ஞானாம்பிகை. ஸ்தலவிருக்ஷம்  :கடுக்காய். இலக்குமி, திருமால், பிரமன், முருகன், ரதி ஆகியோர் வழிபட்டத் தலம். 
கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்றது. அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று .. சிவபெருமான் மன்மதனை எரித்த ஸ்தலம்..   தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 26வது சிவத்தலமாகும்.
கோயிலுக்கு முன்பு குளம் உள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், நந்தி. வலப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு  வலது பக்கம்  சுக்கிரவார அம்மன் . இடப்புறம் பள்ளியறை து. அம்மன் சன்னதியை அடுத்து தட்சிணா மூர்த்தி சன்னதி, வாகனங்கள், நடராஜர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. தொடர்ந்து   ப்ரஹாரத்தில்  குறுங்கை விநாயகர் சன்னதி . அதற்கடுத்து ஞானசம்பந்தர், சேரமான், சந்திரசேகரர், பிரதோஷ நாயனார் உள்ளனர். அதற்கடுத்து விநாயகர், சோமாஸ்கந்தர், சோகஹரேஸ்வரர்   (சோகத்தை  போக்குபவர் என்ற  விக்ரஹம்  இது தான் நான் முதல் முறை  கேள்விப்பட்டது தரிசித்தது.  பார்த்தவுடனேயே  இது வரை பார்க்காமலிருந்தோமே என்கிற சோகம் போய் விட்டதே)   .ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. அடுத்து காணப்படும் உற்சவமூர்த்திகள் அறை உள்ளது. கருவறை கோஷ்டத்தில் துர்க்கை, பிரம்மா, பைரவர், பிரம்மா, அண்ணாமலையார், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, மகா  கணபதி ஆகியோர் அருள் பாலிக்கிறார்கள்.
இங்குள்ள சூல தீர்த்தத்தின் பெருமையறியாது, 'தீர்க்கபாகு' என்னும் முனிவர், கங்கை நீரைப் பெறவேண்டித் தம் கைகளை நீட்டியபோது அக்கைகள் குறுகிவிட்டன.  அவர்  எந்த க்ஷேத்ரம் சென்றாலும்  ஆகாய கங்கையை வரவழைக்க இரு கைகளையும் உயர்த்தி  வணங்குவார். கங்கை வருவாள்.  இங்கே அது போல் பண்ணியது தவறும். கங்கை ஆகாயத்திலிருந்து வரவேண்டாம்.   உன் எதிரிலே குளத்தில்   இருக்கிறாள்  என்று உணர்த்த முனிவர்  நீட்டி உயர்த்திய கைகள் குட்டியாக குறைந்து விட்டன.   குறுகிய கை . குறுக்கை.  முனிவர்  தனது தவறை உணர்ந்தார்.   ப்ராயச்சித்தமாக தலையைப் பாறைமீது மோத முற்பட்டபோது,  சிவன் காட்சி தந்து, அவர் உடற்  குறையைப் போக்கினார் என  ஸ்தல சரித்திரம்.   கை  குறுகிய   'குறுங்கை முனிவர் ' என்று இவர் பெயரால்  இந்த ஸ்தலம்  அழைக்கப்பட்டு, நாளடைவில் 'குறுக்கை'  கொருக்கை  ஆகிவிட்டது.   இந்த ஸ்தலத்துக்கு வேறு பெயர்களும் உண்டு. யோகீசபுரம், காமதகனபுரம், கம்பகரபுரம் என்பன.
ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்களில் பன்றி, யானை, நரசிம்மம், மனிதன் ஆகிய நான்கு முகங்களையுடைய ஒரு மூர்த்தியின் சிற்பம் காணத்தக்கது.  இந்த ஆலயத்தில் கொடிமரமில்லை.     காமனைத் தகனம் செய்த இடம் 'விபூதிக்குட்டை ' என்ற பெயரில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது; இக் குட்டையில் எங்கெடுத்தாலும் மண்ணானது விபூதியாவேயுள்ளது.
நடராஜ சபையில் சிவகாமி, மாணிக்கவாசகர் திருமேனிகள் உள்ளன. இச்சபை, 'சம்பு விநோத சபை', 'காமனங்கநாசனி சபை' எனப் பெயர் பெறும்.
 மூலவர்  சதுர ஆவுடையார் - உயர்ந்த பாணம். மன்மதன் எறிந்த பஞ்ச பாணங்களுள் (ஐந்து அம்புகளுள்) ஒன்றான பத்மம் (தாமரை) பதிந்துள்ள அடையாளம் சுவாமி பீடத்தின் முன்புறத்தில் நடுவில் உள்ளது.
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ள தலபுராணம் உள்ளது.
சோழ, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.
காவிரி நதி வடகரை ஆலயங்களில் அற்புத மான ஒரு ஆயிரம் வருஷ கால சிவன் கோவில்.பழமை வாய்ந்த கோவில். ஐந்தடுக்கு பழைய ராஜகோபுரம். ரெண்டு பெரிய ப்ரஹாரங்கள். . சிவன் ஸ்வயம்பு லிங்கம். 
இந்த ஆலயத்தில் ஒரு விசேஷம் இங்கே விநாயகருக்கும் கைகள் சின்னது. குறுகியது. அதனால்  கூட குறுங்கை என்று இந்த  ஊருக்கு பெயர் நாளடைவில் குறுக்கை ஆக  குறுகிவிட்டிருக்கலாம்.
திருக்குறுக்கை சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் ஒன்றா கும். சூரபன்மன், தாரகன் ஆகிய அசுரர்களின் தொல்லைகளை தீர்க்க சிவபெருமான் ஒரு குமாரனைத் தோன்றச் செய்ய வேண்டும் என்பதற்காக தேவர்கள்  மன்மதனை சிவனின் தவம் கலைக்க   ஏவ,  அவனும் அவர் மீது மலர்க்கணை தொடுக்க, தவம் கலைந்த சிவன் நெற்றிக்கண்ணை திறக்க மன்மதன் எரிந்து சாம்பலானான்.   மன்மதனின் மனைவி ரதி இறைவனிடம் அழுது கணவனின் பிழை பொறுத்தருள பிரார்த்தித்தாள். இறைவன் ரதியிடம் தான் பூலோகத்தில் பார்வதியை மணம் புரிந்து கொள்ளும் போது மன்மதனுக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருள் புரிந்தார்.

இந்த வீரட்டேஸ்வரர் ஆலயம் மேற்கு பார்த்திருக்கிறது. கோபுரத்தில் பைரவர், காமதகனர் சுதைச் சிற்பங்கள் காண்கிறது. வாசலில் கரையில்லாத ஒரு குளம் .தீர்த்தம் சூல கங்கை.

உள்ளே மண்டபத்தின் வடக்கே, தெற்குப் பக்கம் பார்த்தவாறு அம்பாள் சந்நிதி. ஞானாம்பிகை. அதை ஒட்டி காமதகனமூர்த்தி சபை. இதில் சிவபெருமான் யோகமூர்த்தி. இடது காலை மடித்துக் குத்திட்டு வலது காலை தொங்கவிட்டுக் கொண்ட கோலம். சிவபெருமானைச் சுற்றி சனகாதி முனிவர்கள்.
லிங்கத்தை உற்றுப் பார்த்தால் மன்மதன் சிவபெருமான் மேல் எய்த ஐவகை மலர்களும் குறிப்பாக தாமரை மலர் பதிந்திருப்பதைக் காணலாம்.  இங்கே முருகன் ஒரு முகமும் நான்கு கரமும் கொண்ட வர. உற்சவர் வில்லேந்திய முருகன்.
 “ஆடல் அநங்கனை அமுது செய்த செங்கணான் இருக்கை ஈது” என்பது திருவிளையாடற்புராணத் தொடர். இத்தலம் திருக்குறுக்கை வீரட்டம் எனப்படும்.

தருமபுர  ஆதீன  மேற்பார்வைத் திருக் கோயி ல். கோயில்  வாசல் வரை வாகனங்களில் செல்லலாம். 
வாயிலில் உள்புறமாகத் துவாரகணபதியும் சுப்பிரமணியரும் உள்ளனர். வெளிச்சுற்றில் தோட்டம் மட்டுமே - சந்நிதிகள் ஏதுமில்லை. கொடிமரம் இல்லை. நந்தி, பலிபீடம் மட்டும் உளது. வௌவால் நெத்தி மண்டபம். இம் மண்டபத்தில் இடப்பால் அம்பாள் - ஞானாம் பிகை சந்நிதி உள்ளது. தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங் கள்.இருபுறமும் துவாரபாலகியர் உள்ளனர். மண்டபத்தின் ஒருபுறம் பள்ளியறை உள்ளது.

வாயிலைக் கடந்து அடுத்த மண்டபத்தை யடைந்தால் இடப்பால் வள்ளி தெய்வயானை சுப்பிரமணியர் தரிசனம். அடுத்து கஜலட்சுமி தரிசனம். பக்கத்தில் தலமூர்த்தியாகிய ‘காம தகன மூர்த்தி’ சந்நிதி உள்ளது. இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு, வலக்கை அபயமுத்திரையுடன், இடக்கையை மடக்கிய கால்மீது வைத்து, அமர்ந்த திருக்கோலத்தில் இம்மூர்த்தி காட்சியளிக் கின்றார். களிற்றுப்படிகள் உள்ளன. சந்நிதியின் உள்ளே பக்கத்தில் உமையும் எதிரில் ரதி, மன்மதன் உற்சவத் திருமேனி களும் உள. சுவாமிக்குப் பக்கத்தில் சனகாதி முனிவர்களின் திருமேனிகள் உள்ளன. மன்மதன் கையில் கரும்பு வில்லும், ரதியின் கையில் கிளியும் உள்ளன.

காமதகனவிழா மாசிமகத்தன்று, இக்கோயி லில் சிறப்பாக நடைபெறுகின்றது. குறுங்கை விநாயகர் - தலவிநாயகர் சந்நிதி உள்ளது. இச்சந்நிதியில் விநாயகர் சதுர ஆவுடையாரில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். பக்கத்தில் தீர்த்தபாகுமுனிவர் உருவம் உளது. அடுத்து, நின்ற கோலத்தில் ‘சோகஹரேஸ்வரர்’ காட்சிதரும் சந்நிதியுள்ளது.

“நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமஞ்செய்து
ஆற்றுநீர் பூரித்தாட்டும் அந்தண னாரைக் கொல்வான்
சாற்றுநாள் அற்றதென்று தருமராசற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர்போலும் குறுக்கை வீரட்டனாரே.”

‘நிறைமறைக்காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக்
கறை நிறத்தெலிதன் மூக்குச் சுட்டுடக்கனன்று தூண்ட
நிறைகடன் மண்ணும் விண்ணும் நீண்டவானு லகுமெல்லாம்
குறைவறக் கொடுப்பர்போலும் குறுக்கை வீரட்டனாரே.’ (அப்பர்)
- மணஞ்சேர்ந்து
வாரட்ட கொங்கை மலையாளொடுங் கொறுக்கை
வீரட்டமேவும் வியனிறைவே. (வள்ளலார் அருட்பா)காம தகன மூர்த்தியாக சிவன் இங்கே ஆடும் நடனம் வீரநடனம்.

பழங்காலத்தை சேர்ந்த இந்த ஆலயத்தில் நிறைய படிக்கமுடியாத கல்வெட்டுகள் உள்ளன. கோவிலைப் பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கும். யார் அக்கறையோடு இதெல்லாம் நமக்கு படித்து சொல்லப்போகிறார்களோ?
பக்கத்தில் தனியாக துர்கா பரமேஸ்வரி ஆலயம் இருக்கிறது. மரத்தாலான ரிஷப, மூஞ்சூறு, மயில், ஹம்ச வாகனங்கள் உள்ளன.

12ம் நூற்றாண்டில் இந்த ஊர் விக்ரம சோழ சதுர்வேதி மங்கலம் என்று சீரும் சிறப்புமாக இருந்தது. இப்போது வெறிச்சோடி காண்கிறது. நாங்கள் சென்றபோது நாங்கள் மட்டும் தான். தர்மபுரி ஆதீன மட நிர்வாகத்தில் இருந்தாலும் கவனிப்பு இல்லாத நிலையில் காட்சி அளிக்கி றது. விரைவில் மறையும் நிலையில் உள்ள  இந்த பழம் பெரும் ஆலயத்தை பக்தர்கள் உடனே  கவனத்தில் கொண்டு  புதுப்பிக்க வேண்டும்.  பூஜைகளுக்கு  ஏற்பாடு செய்ய வேண்டும் . 

திருப்பி திருப்பி ஒரு சில கும்பலான கூட்டம் சேரும் பெரிய வசதியான  கோவில்களுக்குச்  செல்லும் பக்தர்கள் இது போன்ற பழைய சிவ வைணவ ஆலயங்களுக்கும் சென்று தம்மாலான உதவிகளை செய்யவேண்டும். இவைகளை அழியவிட்டால் நாம் துரோகிகள். ஆலய பணி செய்யும் அர்ச்சர்களுக்கு வருமானமே இல்லை. சம்பளமே ஐநூறு ரூபாய்க்கு கீழே தான். விலைவாசி அதிகரித்த இந்த நாளில் அந்த சம்பளம் கூட பல மாதங்களாக தரப்பட வில்லை. இப்படி ஒரு ஆலய பணி புரியும் அரசாங்க நிர்வாகம் நம்மைத்தவிர வேறு எவருக்கும் கிடைக்காது.

இவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...