Wednesday, June 30, 2021

MONROE

 கலெக்டரின் வயிற்று வலி ''-  நங்கநல்லூர்  J K  SIVAN 


ஹிந்துக்களுக்கு  நிறைய  தெய்வங்கள் இருப்பது வாஸ்தவம். அது ஒரு வசதி.  தனிமனிதனுக்கு னின் திருப்தி  ஒன்று  பலவாக  தன்னை  பரிமளித்துக் கொள்வது.  அதில்  முக்கியமாக திருப்பதி பாலாஜி அநேகரின் குல தெய்வம். இஷ்ட தெய்வம். கலியுக வரதன். கண்கண்ட தெய்வம். நினைத்ததை நடத்தி வைக்கும் பகவான் என்ற  அசையாத  நம்பிக்கை  பக்தர்கள் மனதில் நிரம்பி வழிகிறது. அது உண்மை என்று பல சந்தர்ப்பங்களில் அனுபவம் பெற்றவர்கள்.  அதனால் தான்  திருப்பதி வெங்கடாசலப்பதியை மட்டும் தேடிக்கொண்டு எங்கிருந் தெல்லாமோ கோடானு கோடி பக்தர்கள் வருகிறார்கள். மணிக்கணக்காக நின்று ஒரு வினாடி தரிசனம் ரொம்ப தூரத்திலிருந்து பெறுகிறார்கள்.கிட்டே போகக்கூட முடியவில்லை.. கோவிந்தா கோவிந்தா  என்று  லக்ஷம் குரல்கள் கேட்கிறது.  தீராததை தீர்த்து, முடியாததை முடித்து, ஆபத்திலிருந்து காப்பாற்றி, வேண்டியதை தந்திடும் வெங்கடேசன். நமக்கு மட்டும் அல்ல ஹிந்து அல்லாத வெள்ளைக்காரனுக்கு கூட அருள் புரிந்தவர்.  ஆமாம்   ஒரு வெள்ளைக்காரன், நமக்கெல்லாம் தெரிந்தவன்  நல்லவன்.  தாமஸ் மன்றோ, சென்னையில் தீவுத்திடலில் இன்றும் குதிரைமேல் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டிருப்பவன். 

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு   திருமலை திருப்பதி  சென்னை மாகாணத்தில் அது ஒரு பகுதி. சித்தூர் மாவட்டம். இந்த மாவட்டத்துக்கு கலெக்டர்  தாமஸ்  மன்றோ. அப்போது எல்லாம் மந்திரிகள் கிடையாது. கலெக்டர்கள் வைத்தது தான் சட்டம். வேலை விஷயமாக திருமலை-திருப்பதிக்கு அடிக்கடி மன்றோ போகவேண்டி இருந்தது. திருப்பதி பாலாஜி பெருமை மஹிமை பற்றி யாரெல்லாமோ சொல்லி கேட்டிருந்தாலும் மன்றோ அதைப் பற்றி சிறிதும் பொருட் படுத்தவில்லை. அவர் நம்பிக்கையும்  மதமும் வேறு.   அவருடைய ஒரே கவலை.  திருப்பதி கோவிலுக்கு  பக்தர்கள் நிறைய  காணிக்கை செலுத்துகிறார்கள், அதெல்லாம்  சரியாக கணக்கு வைத்துக் கொள்கிறார்களா? அதை பரிசோதனை செயது அரசாங்கத்துக்கு போகவேண்டிய பணம்  குறைவின்றி சேரவேண்டும். 

மன்றோ அடிக்கடி  திருமலைக்கு  குதிரை மேல் செல்வார். ஆனால்  ஆலயத்துக்குள் சென்றாலும் வெங்கடாசலபதியைப்  பார்ப்பதில்லை. இந்தியாவின் மக்கள் எங்கிருந்தெல்லாமோ வந்து தங்கள் பணம் நகைகள் எல்லாவற்றையும் கணக்கின்றி திருப்பதி உண்டியலில் ல் போடுவதால் அந்த உண்டில் கலெக்ஷன் மேல் தான் கவனம்.

‘கோயில் அதிகாரிகள் இந்தப் பணத்தைச் சுருட்டாமல் இருக்க கண்குத்தி பாம்பாக அதிலே தான் குறி மன்றோவுக்கு. கோயில் வேலையாட்களை, அதிகாரிகளை, அர்ச்சகர்களை சரமாரியாக திட்டுவார். தண்டனை கொடுப்பார் . அதால் அவர்களுக்கு மன்றோ என்ற பெயர் சொன்னாலே சிம்ம சொப்பனம்.

''ஸ்ரீநிவாஸா, நீ தான் எங்களை காப்பாற்றவேண்டும் என்று பாலாஜி முன் முறையிடுவார்கள். மொட்டையடிக்க வருபவர்களைக்  கேலி செயது வேறு இடம் கிடைக்கவில்லையா மொட்டை  போட என்றும், இரு மொட்டைகளை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதும் மன்றோவுக்கு பிடிக்கும். ''அபசாரம்’ என்று மனதிற்குள் சபிப்பார்கள் அர்ச்சகர்கள். யாரேனும் வாயைத் திறந்தால் அவன் பிணம் தான் மிஞ்சும் .

வேங்கடாசலபதிக்கு தெரியாதா எப்போது என்ன செய்யவேண்டும் என்று?

வழக்கம்போல் ஒரு நாள் வசூல் செய்ய மன்றோ தனது படையுடன் வந்தான். வசூல் விவரம், கோவில் வழிபாடுகளில் கிடைத்த பணம். காணிக்கையாக வந்த பொருள், பணம், கையிருப்பு எல்லா கணக்கும் தயாராக வைத்திருந்தார்கள் கோவில் அதிகாரிகள்.

ஆலயத்துக்குள் நுழைந்த மன்றோ, வசூலைப் பார்வையிடுவதற்கு முன்னதாக, தன்னிச்சையாக ஆலயத்தை அதிகார மிடுக்குடன் வலம் வந்தான். புனிதமான க்ஷேத்ரத்தில் ஒரு வெள்ளையன் மரியாதை இன்றி சுற்றி வருவது அர்ச்சகர்களும் பக்தர்களுக்கு பிடிக்கவில்லை. என்ன செய்வது? பெரிய அதிகாரி ஆயிற்றே.

கோவிலின் ஒரு மூலையில் சில பக்தர்கள் அமர்ந்து பெருமாளின் பிரசாதமான வெண் பொங்கலை,   நெய்யொழுக இலையில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து மன்றோ முகம் சுளித்தான். அருவறுப்படைந்தான்.

''சே,   '' சீ சீ உணவா இது. பார்க்கவே வாயிலெடுக்க வருகிறதே. இதை எப்படி சாப்பிடுறீங்க. வியாதி வரவழைச்சுக் காதீங்க. துப்புங்க உடனே '' என்றான்.  இதைப் போய் தின்கிறார்களே, என்னென்ன வியாதிகள் பரவுமோ ?
''எல்லாரும் முதல்ல அதைத் துப்பி விட்டு தூர எறியுங்கள்'' என்று அருவருப்போடு கண்டிப்பான குரலில்   கத்தினான்.

பக்தர்கள் பதறிப் போனார்கள். துரைக்குப் பயந்து துப்பியவர்களும் உண்டு; பெருமாளுக்கு பயந்து விழுங்கியவர்களும் உண்டு.

பக்தர்களை விரட்டி  விட்டு மன்றோ பிராகாரத்தில் ஒரு சில அடிகள் எடுத்து வைத்தவன். திகைத்தான். என்ன ஆயிற்று?  ஏன்  உடல் திடீரென்று சோர்வடைகிறது. கால்கள் தள்ளாடுகிறது. ஏதோ ஒரு  தாங்கமுடியாத வயிற்று வலி ஏன்  வந்தது . காலையில் எழுந்தது முதல்  வழக்கம்போல் உடல்நலம் நன்றாக  தானே, இருந்தது.   மன்றோ வயிற்று வலியால் துடித்தார். 
''ஐயோ அப்பா, வலி தாங்கமுடியவில்லையே.''  அலறினார்   மன்றோ. சுருண்டு விழுந்தவனை அலுவலக அதிகாரிகளும், கோயில் ஊழியர்களும் தூக்கிவிட்டு பிடித்துக்கொண்டு கலெக்டர் பங்களாவுக்கு கொண்டு சென்றார்கள். படுத்த மன்றோவுக்கு மீண்டும் வயிற்றில் சுருக்கென்று இடைவிடாத  வலி. ஆங்கிலேய மருத்துவர்கள் வந்து வைத்தியம் செய்தனர். வயிற்று வலிக்கான காரணம் புரியவில்லை.

மருந்துகள், மாத்திரைகள், உறக்கம் வருவதற்கான ஊசிகள் – எதுவும் நிவாரணம் தரவில்லை. தொடர்ந்த வலியும் குத்தலுமாக  அடுத்த  சில நாட்களில்   மன்றோ   கிழிந்த துணி ஆனார். 

ஒருநாள்  வழக்கமாக திருப்பதியில் இருந்து, கோவில் நிர்வாக விஷயமாக மன்றோவைச் சந்திக்க  வேங்கடேசன்  ஆலய பிரதம  அர்ச்சகர் வந்தபோது அவரிடம் புலம்பினார்  மன்றோ.

''துரை அவர்களே, நான் சொன்னால் கோவிக்கமாட்டீர்களே? ” என்று தயங்கினார் அர்ச்சகர்.

'' சொல்லுங்கள்… எனக்கு வயிற்று வலி தீர வேண்டும்.   அன்றைக்குக் கோயிலில் தொடங்கிய வலி இன்னமும் நீங்கிய பாடில்லை. சீக்கிரம் ஏதாவது வழி தெரிந்தால் சொல்லுங்கள்”  எது சொன்னாலும் கேட்பேன். சொல்லுங்கள்''
'சுவாமி பிரசாதத்தை நீங்க மரியாதைக்குறைவாய்   அவமதித்துப்  பேசினதால தான், ஒங்களுக்கு இப்படி ஒரு நிலைமை உண்டாகி இருக்கும்னு தோண்றது. இதுக்கு ஒரே ஒரு பரிகாரம்தான் இருக்கு”

''உடனே சொல்லுங்க . அது என்ன பரிகாரம்? நான் ரெடி. இப்பவே செய்றேன்'' கெஞ்சினார்  மன்றோ.

'' பெருமாளோட வெண்பொங்கல் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். பெருமாளை மனசுக்குள்ள தியானம் பண்ணிண்டு, இதை சாப்டுங்கோ. வந்த வலி தானா வந்தபடியே   போயிடும்” என்றார் அர்ச்சகர்.

மறுவார்த்தை பேசாமல், மாலவனின் பிரசாதமான வெண்பொங்கலை வாங்கி, கண்களை மூடி பெருமாளை தியானித்து, அதை உண்ணத் தொடங்கினான் மன்றோ.

ஒவ்வொரு கவளமாக வெண் பொங்கலை சாப்பிட   சாப்பிட,  மன்றோவின் வயிற்று வலியும், குத்தல் வலியும் ஆச்சர்யமாக இருந்த இடம் தெரியாமல்  நின்றது.  எப்படி  இவ்வளவு  நாளாக  வாட்டிய  வலி  காணாமல் போனது. ஆச்சரியப்பட்டார் மன்றோ.

''எங்கள் தேசத்து மருத்துவர்கள் எத்தனையோ வைத்தியம் செய்தும் தீராத இந்த வயிற்று வலி, பொங்கல் பிரசாதத்தால் தீர்ந்தது என்றால், அது உண்மையில் உங்கள் கடவுள் வெங்கடாசலபதி அருளாசிதான்”  என  கண்களில் நீரோடு  சொன்னார்  மன்றோ.
''இனி நான் சும்மா இருக்கமாட்டேன். உடனே ஒரு வேலை செயகிறேன்'' என்றான். அதிகாரிகளை கூப்பிட்டான்  

நெகிழ்ந்து போய் தன்னைக் குணமாக்கிய இந்த வெண்பொங்கல் பிரசாதம், காலா காலத்துக்கும் பெருமாளுக்கு நடக்க வேண்டும் என்று, வயல்பாடு தாலுகாவில் உள்ள ‘கோடபாயல்’ என்ற கிராமத்தின் வருமானம் முழுவதையும் திருப்பதி பெருமாளுக்கே எழுதி வைத்து உத்தரவு போட்டார் கலெக்டர் மன்றோ .

அத்துடன், ஒரு பக்தனாகப் திருப்பதிக்கு போய் பிரம்மோத்ஸவம், சகஸ்ர கலசாபிஷேகம் போன்றவற்றை நடத்தி, பெருமாளை வணங்கிப் பேறு பெற்றார்.
.
''திருப்பதி திருமலையில் வேங்கடேசன் கோயிலில் வெண்பொங்கல் பிரசாதம், காலா காலத்துக்கும் பெருமாளுக்கு நைவேத்யமாக அளிக்கப்பட்டு எண்ணற்ற பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்பட வேண்டும். இதற்காக திருப்பதி அருகே உள்ள வயல்பாடு தாலுகாவில் உள்ள ‘கோடபாயல்’ எனும் ஊரில் வசூலாகும் பணம் அத்தனையும் கணக்கு தவறாமல் திருப்பதி பெருமாள் ஆலயத்துக்கு பொங்கல் தயாரிக்க பயன்பட வேண்டும். இதை எவரும் மீறக்கூடாது '' என்று ஆணையிட்டான்.கோடபாயல் கிராமத்தின் வருவாயில் இருந்து எழுதி வைக்கப்பட்ட அந்த வெண் பொங்கல் பிரசாதம், இன்றைக்கும் திருப்பதி ஆலயத்தில் நண்பகல் வழிபாட்டுக்குப் பிறகு நடந்து வருகிறதாம். அந்தக் கட்டளை ‘மன்றோ பிரபு கங்காளம்’ என்றே அழைக்கப்படுகிறது.  

பின்னர் மன்றோ வெங்கடேச பெருமாள் பக்தர்களில் ஒருவன் என்று சொல்லவே வேண்டாம்.நிறைய அந்த கோவில் நிர்வாகம் பண்டிகைகள் நடத்த உதவினான்.
உலகெங்கும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கட்டுகிறார்கள். வெள்ளைக் காரர்கள் நம்மைவிட அதி பக்தியாக உழைக்கிறார்கள். எல்லாம் பெருமாள் செயல். கலியுக வரதன் என்று தான் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேனே .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...