Tuesday, February 9, 2021

 


        ஓடிகிற  புஸ்தகங்கள்  J K  SIVAN 



எனக்கு  உடையும், ஓடியும் புஸ்தகங்களுக்கும்  ஒரு நல்ல  ஜோடி பொருத்தம். சில நாட்களுக்கு முன் என்னை நங்கநல்லூரில் சந்தித்த ஒரு அன்பர் சில புஸ்தகங்களை கொண்டு வந்திருந்தார். எல்லாமே  நான்  பிறப்பதற்கு முன் பிறந்த அண்ணா,  மாமா, தாத்தா  புத்தகங்கள்.    முக்கால் வாசி  நூறு வயது நிரம்பியவை.
நான்  பழைய கால விஷயங்கள்  சிலவற்றை நினைவு கூர்ந்து எழுதுவதால்  இவை என்னை   வந்தடைகிறது. நல்லது தான்.  ஆனால்  அவற்றை  ஒரு தரம் பிரித்த பிறகு மறுமுறை பிரித்து படிக்க இயலவில்லை.  உள்ளே  சிறு சிறு  பூச்சிகள், புழுக்கள் போல்  நெளிகிறது. சிலவற்றில் எழுத்துக்கள் ரொம்ப பொடியாக இருக்கிறது.  சில படிக்கமுடியாத  தமிழாக இருக்கிறது.  நான்  தமிழ்ப் புலவன் இல்லை, ஆராய்ச்சியாளனும்  இல்லை.  பழமை விரும்பும் ஒரு முதியவன்.

என் அம்மாவிடம்  இதே போல்  ஒரு புத்தகம்   ''நல்ல தங்காள்  சரித்ரம்''  என்ற பெயரோடு  இருந்தது. அவளது லைப்ரரி  சமையல் அறையில்  அலமாரியில்   என் கைக்கெட்டாத ஒரு மூலை . மொத்தமே  ஐந்தோ ஆறோ  தான் அவள் லைப்ரரியில் இருந்த ஞாபகம்.  ஒன்று '' பெரிய எழுத்து  விக்ரமாதித்தன் கதைகள்''  மற்ற சில என ''அல்லி அரசாணி கதை''  பக்த விஜயம்.  தாயுமானவர் பாடல்கள்.  அட்டை இல்லாத  சில   முனை மடங்கிய ,  காது மடங்கிய, வாலில்லாத  நாய் போல்  சில,   பார்த்திருக்கிறேன்.   அடிக்கடி அவள் படிப்பது நல்லதங்காள் சரித்த்ரமும்  விக்ரமாதித்தன் கதையும்.... ரெண்டு  புஸ்தகமும் ''அறுதப்பழசு''  என்கிற  வகையைச்  சேர்ந்தவை.    இரண்டுமே  அவளால்  ஊசி  நூலினால்  மீண்டும்  ஒரு தடவை   தைக்கப்பட்டு   பலப்படுத்தப்  பட்டவை.    உள்ளே  பக்கங்கள் பழுப்பு  நிறத்தவை.   நிறைய  பக்கங்கள்  அப்பளம்  போல்  நொறுங்கும்  தன்மையானவை.  அம்மா  பார்க்காதபோது  ஒரு  சில  பக்கங்களை  மடித்து  அவை  ஒடிந்து சிறு  தூள்களாக  கீழே விழுவதை பார்த்து  மகிழ்ந்து இருக்கிறேன்.  பாவம்  அவளுக்கு  தெரியாது  நான்  தான்  செய்தேன்  என்று.  எதற்குமே    அனாவசியமாக என்  அண்ணன்  தான்  திட்டு வாங்குவான்.  செய்யாத தவறுக்கு  தண்டனை  பெறுவதில் அவனுக்கு நிகர்  அவன் தான். ''யார்ரா அவன்  இந்த  பக்கத்தையெல்லாம்  நொறு க்கினவன்.    படுபாவிகளா.  நல்ல  விஷயங்களை எல்லாம்  படிக்க முடியாதபடி  பண்ணிட்டேளே ''  என்று அவள்  பொருமியதின்  அர்த்தம்  தெரியாத வயது  எனக்கு.  இப்போது என் கையில்  ஓடியும் புஸ்தகங்களை பார்க்கும்போது அதில் என் அம்மா முகம்  தெரிகிறது.

அம்மாவுக்கு  அக்கால  பெண்மணிகளைப்  போல இளகிய மனசோ?   புத்தகங்களைப் படிக்கும்போதே அவள் கண்ணீரில் நீர் சுரக்கும். உரக்க தான்  பாடிக்கொண்டே படிப்பாள்.  அழுவாள்.  அதில்  துயர  சம்பவங்கள்    வர்ணிக்கப்பட்டிருந்தால் அவளும்  அந்த  புத்தகத்தில்  வரும்  சோக  சம்பவத்தோடு  தானும்  கரைந்து விடுவாள்   என்பது இப்போது   புரிகிறது.  நல்ல தங்காள்   அவளை  அநேகம்  முறை  அழ வைத்திருக்கிறாள்.
அப்போது பழைய  புத்தகங்களை உடைத்த, ஒடித்த பாபத்திற்கு   பிராயச்சித்தமாகத்தான்  இப்போது  பல பழைய நல்ல விஷயங்களை  புத்தகமாக்கி  நிறைய  வீடுகளில் வயதானவர்களும்  தமிழில்  படிக்க  என்னால்  முடிந்ததை  செய்கிறோனோ   என்றும்  எனக்கு புரியவில்லை.  ஏதோ இப்படிச்   செய்வதில்  கொஞ்சம்  திருப்தி  ஏற்படுகிறதே  அந்த  வரைக்கும்  சந்தோஷம்.  

மறுபடி  புத்தக விஷயத்துக்குப் போவோமா?  அம்மாவின்  அந்த  ரெண்டு புஸ்தகங்களுமே  வெள்ளைக்காரன்  காலத்தியவை.   அவற்றை  பதிப்பித்தவர்  இரத்தின நாயக்கர்  சன்ஸ்   என்று  போட்டிருந்ததாக  ஞாபகம்.  எனக்குத்தான் அப்போது படிக்கத் தெரியாதே.  பிற்காலத்தில்  எப்போதோ  அந்த  புஸ்தகத்தை படு  பயங்கரமாக  கிழிந்து நாசமான நிலையில்  பார்த்தபோது இந்த  பெயர்  மனதில் பதிந்தது.

ஒரு ஆச்சரியம்  என்னவென்றால்  அந்த  புத்தகத்தில்  நிறைய  படங்கள்  உண்டு.  பக்கங்கள்  தமிழ்  எண்களில் போட்டிருப்பார்கள்.  நமக்கு  பக்க எண்  பார்க்க  தடுமாறவேண்டும்.

  எனக்கு  அந்த  சிறு வயதில்  படம்  தான்   பார்க்க தெரிந்தது. படிக்க தெரியாதே .  ஆறு  வயதிற்குத்தான்  என்னை  ஒண்ணாம்  க்ளாசில்  என்  தந்தையார்  ஒரு  கூரைக்கட்டு  பள்ளியில்  படிக்கக் கொண்டு   சேர்த்தார்.  கார்பொரேஷன் பள்ளி.   காவேரியம்மா தான்  டீச்சர்.  அடிக்கவே  மாட்டாள்.  நன்றாக  நினைவு இருக்கிறது.   ரெட்டைநாடி.  எப்போதுமே   பச்சை  நூல்  புடவை தான்.  சிரித்துக்கொண்டே  இருப்பாள்.  கோவம்  மட்டும்  திடீர்  திடீர்  என்று சொல்லாமல்  கொள்ளாமல்  சுனாமியாக  வரும்.   பிரம்பால்  அடிக்க மாட்டாள்.  காதை மட்டும்  கன்னா பின்னா  என்று  திருகுவாள் .  அதனால்  ஏற்படும் வலியில்  கதறும்போது இனிமே  இப்படி பண்ண மாட்டாயே  என்ற  நீதி வாக்கியம்  வெளிப்படும்.  மாட்டேன் மாட்டேன்  என்று  நாங்கள்  தேர்தல்  வாக்குறுதி அளிப்போம்.   விட்டு விடுவாள்.  இது  ஒரு தொடர்ந்து  நடந்த கதை அப்போதெல்லாம். வீட்டில்  போய்  சொல்வதில்லை.  சொன்னாலும்  காவேரி அம்மாவின்  பக்கம்  தான்  தீர்ப்பு  கிடைக்கும்.

புஸ்தகத்தை பற்றி சொன்னேனே.  அதில்  ராஜா,  மந்திரி, காலாட்படைகள், குதிரைவீரர்கள்  எல்லாருமே  இருப்பார்கள்.  ஒவ்வொருவரிடமும்  ஒரு  பட்டா கத்தி  நீளமாக  கையில் இருக்கும்  இடுப்பில்  ஒரு  கேடயம்.  தலையில்  கிரீடம்.  காது குண்டலம்.  காதுவரை  மீசை. உடம்பை பிடித்தாற்  போல  ஒரு  உடையோ  ஆடையோ  ஏதோ ஒன்று.    ஒரு  அவசரத்துக்கு  அவிழ்க்கமுடியாது. காலில் ரொம்ப கஷ்டமான  ஒரு  காலணி. நிறைய  சுற்றுகளாக  இருக்கும்.  ஆஹா  இது  என்ன  வேடிக்கை.!!  வினோதம்!   குதிரை  மீது அமர்ந்து கொண்டிருப்பவனும்,  தரையில்  நின்று  கொண்டிருப்பவனும்  ஒரே  உயரம்.  ராஜா  மந்திரி  இத்யாதி  அனைவருமே  ஒரே மாதிரி முக அமைப்பு கொண்டவர்கள், மீசை  குண்டலம் தலை கிரீடம்,  உடம்பை பிடித்துக்கொண்டிருக்கிற  ஆடை  எல்லாம் ஒரே மாதிரி.  உடல்  வாகு  கூட   கட்டுமஸ்தான  உடம்பு  தான் அனைவருக்கும்.  . இது  போதாதென்று  அனைவருமே  ஒரே  பக்கம்  தான்  பார்த்துக்கொண்டிருப்பார்கள்.  

  படத்தில் பெண்கள்  எல்லோருமே  முகத்தை விட  பெரிய  புல்லாக்கு அணிந்து கொண்டிருப்பார்கள்.  அவர்கள் அனைவருக்கும்  ஒரே  மாதிரியான  உணர்ச்சியற்ற  பட்டை  சதுர  முகம்.  குண்டாகத்தான்  அனைவருமே,  குள்ளமாக  இருப்பார்கள்.  மூக்கு  கொஞ்சம்   நீண்டே தான்  இருக்கும். அதில்  தான்  அந்த  புல்லாக்கு  முகத்துக்கு  சம்பந்தமில்லாமல் ஆன்டென்னா  மாதிரி  தொங்கிக் கொண்டிருக்கும்.   மேலுதடு  கீழுதட்டை விட   கொஞ்சம்  முன்னே  நீண்டு  மூக்கில் பாதி  தூரம் வரை.  அது  ஏன்   அவர்கள்  அனைவருக் குமே  தாடையில்  மோவாக்கட்டையில்  ஒரு  வளையம்?  அவர்கள்  அணிந்துள்ள  புடைவை மேலாடை  அனைத்துமே  யூனிபார்ம்  போல  ஒரே மாதிரி யானவை.  உட்கார்ந்தவள், நின்றவள்  அனைவருமே  ஒரே உயரம்.  

அந்த  கால  சித்திரக்காரர்கள்,  சம நோக்கு கொண்டவர்கள்,  பாரபட்சம்  அற்றவர்கள்  என்று  அப்போது எனக்கு  புரியவில்லை. இந்த  படங்களை  திரும்ப  திரும்ப  பார்ப்பதிலேயே  எனக்கு அந்த  வயதில் பொழுது போனது.  அந்த  புத்தகங்களை  அம்மா  எப்போதும்  சமையில்  அரை   பாத்திரங்களுக்கு  இடையே எங்காவது  செருகி  வைத்திருப்பாள்.

நான்  அவற்றை  எளிதில்  ஆக்ரமிப்பேன்.  முடிந்த,  இல்லை,   கிடைத்த  நேரத்தில்--  எனக்கு  நேரமில்லாமல்  ஒன்றும்  இல்லை  -  புத்தகம்  கிடைத்த  நேரத்தில் -  அந்த காய்ந்த  அப்பளம் போன்ற  பக்கங்களை  ஒடிப்பதில் அலாதி  ஆனந்தம்.

இந்த புத்தகங்களில்  சில பக்கங்களில்  நதிகள், ஆறுகள் , ஓடிக்கொண்டிருக்கும்.  அதில்  நண்டு  மீன்கள்  எல்லாம்  நன்றாகவே  நமக்கு  தெரியும்.  மீன்களும் ஒரே  பக்கம்  பார்த்துக்கொண்டு   ஒரே  அளவில் தான் காணப்படும்.  ஆற்று நீர்  வரிசையாக  கோடுகளாக  காட்டப் பட்டிருக்கும்.  கீழிருந்து  மேலாக  பல  வரிசைகள். இது தான்  ஆறு.   எங்காவது  சில பக்கங்களில்  ஒரு முனிவர் சிலையாக  அமர்ந்திருப்பார்.  அல்லது  ஒரு  சிவலிங்கமோ  நந்தியில்லாமல்  தனித்து  இருக்கும்.    தலைமேல் ஒரு  வாழைமரமோ,  வேறு  எதாவது  வில்வ, அரச மரமோ  அதன் கிளைகளை   தலைக்கு  மட்டும்  குடையாக  அமைத்துக்கொண்டிருக்கும்.  மறுபடியும்  மரமும்  அந்த உட்கார்ந்திருக்கும்  முனிவரோ  அல்லது  சிவலிங்கமோ  கிட்டத்தட்ட   ஒரே உயரம்.    எழுந்தால்   தலை  மரத்தில் மோதிவிடும்.

புத்தகத்தின்  வாக்யங்கள்  பெரிதாக  இருக்கும்,  பெரிய  எழுத்திலும்  இருக்கும்   '' அஹோ  வாரும்  பிள்ளாய்...''  போன்ற  சொற்கள்  அதிகம்  இருக்கும். நீளமான வாக்கியங்கள்.  கொஞ்சம் நிரடலான தமிழ்.

இத்தகைய  புத்தகங்களை பார்க்கும்போது, படிக்கும்போது  நான்  என் இளம்வயதை அடைகிறேன்.  என்னைத் தேடி சில  வரும்போது  உற்சாகமாக இருக்கிறது.   ஜாக்கிரதையாக  அவற்றை  கையாள்கிறேன். 

 ''அம்மா, என்னை மன்னித்துவிடு.  இனிமேல்  இந்த புஸ்தக பக்கங்களை உடைக்கமாட்டேன். ஆனால் அவை தானாகவே உடைகிறது, ஓடிகிறது.  நிச்சயம் நான் உடைக்க வில்லை அம்மா!.

 









No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...