Saturday, February 20, 2021

GEETHANJALI

 கீதாஞ்சலி                -- J K  SIVAN 

தாகூர் 

                   
  24. எனது நீண்ட பிரயாணத்தில்........

24 If the day is done, if birds sing no more, 
if the wind has flagged tired, then draw the veil of darkness thick upon me, 
even as thou hast wrapt the earth with the coverlet of sleep and 
tenderly closed the petals of the drooping lotus at dusk.
 From the traveller, whose sack of provisions is empty before the voyage is ended, 
whose garment is torn and dustladen, whose strength is exhausted, 
remove shame and poverty, and renew his life like a flower under the cover of thy kindly night.

ஒவ்வொரு நாளும் காலை கிழிக்கும் தினசரி காலண்டர் ஷீட்டுக்கு ஏன் ''நாட்காட்டி"" என்று  எவ்வளவு  பொருத் தமான பெயர். அதை விட சிறந்த பெயர் யோசிக்க முடியவில்லையே .

'' டேய்,   ஒரு நாள் போய்விட்டதடா. நீ கிழித்துவிட்டாய் ஒரு நாளை உன் வாழ்வில். இதோ அடுத்தது இன்று காலை உனக்காக கிழிபட காத்திருக்கிறது. யாரும் உன்னை இன்று என்ன பெரிசாக செய்து கிழித்தாய்?'' என்று கேட்பதற்கு முன்பு   நீயே அந்த கேள்வியைக்  கேட்டுக்கொள். நல்லபடியாக இந்த நாளை உபயோகப் படுத்து.   இது போனால் வராது பொழுதுபோனால் நிக்காது. 2  4 மணி நேரம் தான் உனக்கு கொடுக்கப்பட்ட நேரம். ஜாக்கிரதை, கெட்டிக் காரனாக அதை நல்ல வழியில் உபயோகி என்று அல்லவோ சொல்கிறது அந்த குட்டி காகிதம். இந்த நாட் காட்டி. எவ்வளவு  தெளிவாக வாய் பேசாமல்   கொட்டையான  எழுத்துக்களால்  சொல்லாமல் சொல்கிறது.

''அடே   உன்னிடம் இருக்கும் மீதி நாட்களை இனி எண்ணமுடியும், அது தான் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறதே. இருப்பதை அருமையாக உபயோகி. இந்தா இன்று உனக்கு ஒரு முழு புது நாள்''.... என்று புதிய தேதியை காட்டுகிறது...

இன்று ஒரு சீட்டு கிழித்ததில் ஒரு நாள் குறைந்து போனது புரிகிறது. அதற்குள் இந்த புது நாள் வந்து விட்டதே. காலையில் துவங்கிய நாளை அந்தி நெருங்கி முடிந்து இருள் எல்லாவற் றையும் மெதுவாக நிதானமாக சொகுசாக விழுங்குகிறது. காலதேவா, காலையில் கிளுகிளு என்று சந்தோஷத் தோடு சப்தித்த பறவை கூட்டம் இதோ அந்தி கருக்கலில் இனி பறக்காது, பாடாது. கூடு தேடி ஒதுங்குகிறது. பகல் தேய்ந்து இரவு படர்கிறது. காற்று வீசி வீசி ஓய்ந்து போய்விட்டது. 

கிருஷ்ணா, நீ படைத்த உலகை இருட்டாக்கி, அதை தூக்கம் எனும் போர்வையால் போர்த்தி விடுகிறாய். உறக்கம் எல்லாவற்றையும் கண்ணை மூட வைக்கிறது. நானும் இருளில் கண்மூடி உறங்கட்டுமா?

கிருஷ்ணா, நீ உறக்கத்தால் ஓய்வில்லாது அசையும் உலகத்தை கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு மறுபடி இயங்கு என்று ஒரு இரவு கண் மூட வைப்பவன். இதோ அந்தியில் தாமரை மலர்கள் இதழ்களை சுருக்கிக் கொண்டு கூம்பி அவற்றின் மடல் கண் இமை போல் மூடுகிறது. உறக்கம்.....

காலதேவா, ஒரு காட்சி கண் முன்னே காண்கிறேன். நான் தான் அதில் வரும் வயது முதிர்ந்த பிரயாணி. லொங்கு லொங்கு என்று வெகு தூரம் நீண்ட பாதையில் நடந்து விட்டேன்.. பிரயாண ஆரம்பத்தில் என் முதுகில் சுமந்த உணவுப் பொருள் மூட்டை போகும் வழியில் என்னால் உண்ணப்பட்டு என் உணவு மூட்டையும் என்னைப்போல் இளைத்து விட்டது. இதோ வெகு சீக்கிரம் அது காலி கோணிப்பை யாகபோகிறது. ஓஹோ அது முடியும்போது என் பிரயாணமும் முடிவுக்கு வந்து விடுமோ?

என் ஆடையைப்  பார்த்தாயா, எத்தனை பழையது. கல்லில், முள்ளில், காற்றில்,வெயிலில், மழையில், அதன் வனப்பு இழந்து, கிழிந்து, கசங்கி, மண் புழுதிபடலமாக கரை படிந்து தொங்குகிறது. இனி என்னை மூடிக் கொள்ளும் சக்தி கூட  அதற்குக்  குறைந்து விட்டது. மானமாவது மண்ணாங்கட்டியாவது. எதையும் மறைக்க என்னிடம் சக்தியோ தகுதியோ கூட இல்லை. இதிலிருந்து மீள முடியாதோ? இதெல்லாம் விலகுமோ? அது உன்னால் மட்டுமே முடியும்.

ஆமாம்  கிருஷ்ணா, உன் அளவற்ற கருணையால், புத்துணர்ச்சி, புது வாழ்வு கொடுக்கமுடியும். அதோ அந்தியில் சாம்பி கூம்பிய அந்த தாமரை மொட்டு மீண்டும் காலை புத்தம் புதிதாக கண்ணைப்பறிக்க  மடல் விரிக்குமே . வண்டுகளை அழைக்குமே,  மலருமே , அதற்கு செய்யும் தயவை எனக்கும் காட்டு. இனி நானும் வாழ்வில் உன் கருணையால் அமைதியாக ஒரு புது நாளைத்  தொடங்குகிறேன். உன் நினைவால், அது மலரட்டும். என் வாழ் வில் ஒரு புதிய பக்கம் திருப்புகிறேன்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...