Sunday, February 14, 2021


 வைராக்ய சதகம்    1      -      J K  SIVAN  


உஜ்ஜயினி  ராஜா  பர்த்ருஹரி  ஒரு வேதாந்தி.  விக்ரமாதித்யனின்  சகோதரன் என்பார்கள்.  அவன் தான் பிற்காலத்தில் தெற்கே வந்து பட்டினத்தாரின் சிஷ்யனாகி பத்திரகிரியார்  என்று பேர் பெற்று  பத்திரகிரியார் புலம்பல் இயற்றினான்.     அற்புதமான  வாழ்க்கை தத்வ பாடல்களைக்  கொண்டது. நிறைய எழுதி இருக்கிறேனே. மறந்து போய்விட்டதா?  மீண்டும் எழுதட்டுமா?

பர்த்ருஹரி வடக்கே உஜ்ஜயினியில் ராஜாவாக இருந்தபோது ஒருநாள் ஒரு முனிவர் அவன் அரண்மனைக்கு வந்தார்.  வாயில் காப்போன் உள்ளே  ஓடிச்சென்று  ராஜாவின் முன் கைகட்டி நின்றான்.

''என்ன விஷயம், சொல் ?''
''யாரோ ஒரு முனிவர் வந்திருக்கிறார்  உங்களை நேரில் பார்க்கவேண்டுமாம்?''
''அழைத்துக் கொண்டு வா''
முனிவரின் காலில் விழுந்து வணங்கி அவரை  ஆசனத்தில்  அமர வைத்து  உபசாரங்கள் செய்துவிட்டு  கை கட்டிக்கொண்டு  அருகே  நின்றான் ராஜா பர்த்ருஹரி.
அவனது  உபசரிப்பில் மகிழ்ந்த  முனிவர்  தனது தோள் பையில் இருந்து ஒரு பழத்தை எடுத்து அவனிடம்
கொடுத்து ''அரசே,   இந்தா  இது  ஒரு  தேவலோக  கனி.  இதை உண்டால்  அமரத்வம், மன  அமைதி கிட்டும்''

ராஜாவிற்கு  ஒரு இளம் மனைவி.  அவள் மீது அளவு கடந்த ஆசை.   அவனுடைய உலகமே  அவள் தான்.  

''இந்த  அமரத்துவம் தரும் பழம் இவளுக்கு தான்  பொருத்தமானது'' என்றும்  என்னை மகிழ்விப்பவள்'' என்று அவளிடம் கொடுத்தான்.    அந்த இளம்  ராணி  விதி வசத்தால்  ராஜாவின் மனைவியானவள். அவளுக்கு உண்மையிலேயே ராஜாவின் தேரோட்டி மீது கண்மூடித்தனமான காதல்.  ஆகவே  மெதுவாக  அந்த பழத்தை எடுத்துக்கொண்டு யாரும் பார்க்காத நேரம் அவனிடம் கொடுத்து சாப்பிட சொன்னாள் .

தேரோட்டிக்கு  அவன்  வீட்டுக்கு அருகே ஒரு  வேசியின் மேல்  ஆசை. ஆகவே  அந்த  வேசியிடம் ரிஷி கொடுத்த பழம்  போயிற்று. அவளுக்கு அமரத்வம்!!  விதி எப்படியெல்லாம் வேலை செயகிறது!

அந்த வேசி  தொழிலால் பிழைப்புக்கு  வேசியே  தவிர  ராஜா பர்த்ருஹரி மேல்  மரியாதை, மதிப்பு  அளவற்ற பக்தி.  '' இந்த நல்ல ராஜா நீண்ட நாள் வாழவேண்டும் அவன் வாழ்ந்தால் எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை  நிச்சயமாக  கிடைக்கும்.  ஆகவே அவனே  இதை உண்டு  அரணாக  வாழ   தகுதி வாய்ந்தவன் என்று ராஜாவை நேரில் கண்டு அந்த கனியை பற்றி விவரம் சொல்லி  பர்த்ருஹரி கையில் அதை கொடுத்தாள் .

பர்த்ருஹரிக்கு தலை சுற்றியது. அதிர்ச்சி ஆச்சர்யம்,  ஆத்திரம் எல்லாம் ஒன்று சேர்ந்து அவளிடம்
விசாரணை நடத்தியதில்  தேரோட்டி,  தனது ஆசை மனைவி எல்லோரும்  செய்த காரியம்  தெரிந்தது.
 பர்த்ருஹரி  தனிமையில் சிந்தித்தான்.  அவன் சகோதரன் அவனுக்கு ஏற்கனவே  ராணியைப் பற்றி  ''  இதையே   ''கிசு கிசு''  சொல்லி   இவள்  இந்த சாம்ராஜ்யத்தில்  உன் ராணியாக இருப்பது  உனக்கு  அவமானம்.  என்ன செய்யவேண்டுமோ செய்''  என்ற போது  அவன் மேல் கோபம் வந்தது.  

பர்த்ருஹரி  மனைவியிடம்   ''உனக்கும் தேரோட்டிக்கும் தொடர்பு உண்டா?"' என்று கேட்டபோது அவள்  அழுது  அவன் மனம் வாடியது.  சில சாட்சியங்களை அழைத்து வந்து  ராஜாவின் சகோதரன்  தன் மேல் அபாண்டமாக  அவதூறு சொல்கிறான் என்று கதறியதால்  பர்த்ருஹரி அவன் சகோதரனை நாட்டை  விட்டு வெளியேற்றியது  எல்லாம்  கண் முன் காட்சியானது.

 இப்போது அவனே  கண்டுபிடித்த  அவன் மனைவியின் துரோகம் அதை நிரூபித்தது.  பாவம்  என் மேல்  அக்கறையாக எனக்கு  அறிவுரை தந்த  சகோதரனை நாடு கடத்தியது எவ்வளவு பெரிய  துரோகம்  தான் செய்தது என்று அவனை வருத்தியது.

நண்பனோ, மனைவியோ, உடன்பிறப்போ,   (இது ஏதோ கட்சி சம்பந்தப்பட்ட  வார்த்தை இல்லை) யாரும்  யாருக்கும்  உண்மையாக இருப்பதில்லை, நேர்மை நியாயம் நன்றி இல்லாத உலகம் என்று பர்த்ருஹரியின் மனது வெறுத்து வைராக்கியம் நெஞ்சில் வளர்ந்தது. உலகை வெறுத்தான்.

ஒரு சிலநாளில்  திடீரென்று  மனைவி குழந்தைகள், நாடு  எல்லாவற்றையும் விட்டு  தனியனாக காட்டுக்கு சென்றுவிட்டான். பல வருஷங்கள்  சந்நியாசியாக  வாழ்ந்தான்.  தியானம்  அவன் மனக்கண்ணை திறந்தது.
நமக்கு  பர்த்ருஹரி   ''வைராக்கிய சதகம்'' எனும் அற்புத நூல் கிடைத்தது. 100 ஸ்லோகங்கள்.  மற்ற  இருநூறில்  நூறு  ''நீதி சதகம்'' .  மீதி இருக்கும்  நூறு   ''சிருங்கார சதகம்''.    இந்த முந்நூறும் ''சுபாஷித  த்ரிசதி''  காலத்தால் அழியாத காவியங்கள்.
 
भ्रान्तं देशमनेकदुर्गविषमं प्राप्तं न किञ्चित्फलं
त्यक्त्वा जातिकुलाभिमानमखिलं सेवा कृता निष्फला ।
भुक्तं मानविवर्जितं परगृहेष्वाशंकया काकवत्
तृष्णे जृंभसि पापकर्मनिरते नाद्यापि संतुष्यसि॥


Bhraantam desamanekadurgavishamam praaptam na kinchitphalam
Tyaktwaa jaatikulaabhimaanamakhilam seva kritaa nishphalaa
Bhuktam maanavivarjitam paragriheshwaashankaya kaakavat
Trishne jrimbhasi paapakarmanirate naadyaapi santushyasi          

''நான் சுற்றாத இடம் கிடையாது.  எங்கெல்லாமோ அலைந்தேன். கல், முள்,  பள்ளம்,  மேடு, காடு,  நாடு  ஒன்று பாக்கி இல்லை.  என்னத்தைக்  கண்டேன்? என்ன பிரயோஜனம்?   என்ன சொன்னாலும் தட்டாமல்  இரவு பகல் பார்க்காமல்  வீடு,  மானம் மரியாதை எதுவும் பார்க்காமல் அடிமையாக  ராஜாவுக்கு சேவை, முதலாளி, எஜமானன்,  பணக்காரர்களுக்கு எல்லாம்  உழைத்தேன்,  சே,  இதனால்  என்ன பலன் அடைந்தேன்?  தன்னை யாராவது ஏதாவது செய்து  விடுவார்களோ என்ற பயத்தோடு காக்கை  அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு பயந்து கொண்டு  சாப்பிடுவது போல் சோற்றை உண்டேன்.  ''ஏ  பேராசையே , என்னுள் இருந்து கொண்டு என்னை இப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க   ஆட்டுவிக்கிறாய்.  தப்பு தப்பாக ஒவ்வொன்றையும் செய்ய வைக்கிறாய். இன்னுமா உனக்கு திருப்தி இல்லை?''

आदित्यस्य गतागतैरहरहस्संक्षीयते जीवितं
व्यापारैर्बहुकार्यभारगुरुभि: कालोऽपि न ज्ञायते।
दृष्ट्वा जन्मजराविपत्तिमरणं त्रासश्च नोत्पद्यते
पीत्वा मोहमयीं प्रमादमदिरां उन्मत्तभूतं जगत् ॥

Aadityasya gataagatairaharahah samksheeyate jeevitam
Vyaapaarairbahukaaryabhaaragurubhih kaalo’pi na jnaayate
Drishtwaa janma jaraavipattimaranam traasashcha notpadyate
Peetwaa mohamayeem pramaadamadiraam unmattabhootam jagat [7]

ஒவ்வொரு  நாளும்  அதிகாலை சூரியன் எழுகிறான், சாயந்திரம் மறைகிறான். அது மாதிரியே  என் வாழ்விலும்  எழுச்சி,  வீழ்ச்சி, கொஞ்சம் கொஞ்சமாக நான்  விடாமல் மரணத்தை நோக்கி செல்கிறேன். மக்கள்  எல்லோருமே உலக வாழ்க்கையில்  எதிலெல்லாமோ செயலில் ஈடுபட்டு,   சுமையில்  மூழ்கி, பொன்னான நேரம்  பாழாவதை உணரவில்லையே.  கண்ணுக்கு நேராக எத்தனை பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி, அத்தனையும் பார்த்தும் இன்னும்  கொஞ்சம் கூட, ''ஐயோ இப்படி  வாழ்க்கை நிலையாமை உணராமல் இருக்கிறோமே'' என்று பயப்படவே இல்லையே . இந்த மாதிரி அலட்சியம்,  உண்மையை  உணராமை, ஏதோ குடிவெறியில் புத்தி இழந்து தடுமாறும் குடிகாரனாக அல்லவா  நம்மை  மாற்றிவிட்டது?.

 हिंसाशून्यमयत्नलभ्यमशनं धात्रा मरुत्कल्पितं
व्यालानां पशवः तृणांकुरभुजः सृष्टा स्थलीशायिनः।
संसारार्णवलंघनक्षमधियां वृत्तिः कृता सा नृणाम्
यामन्वेषयतां प्रयान्ति सततं सर्वे समाप्तिं गुणाः॥

Himsaashoonyamayatnalabhyamashanam  dhaatraa marutkalpitam
Vyaalaanaam pashavah trinaankurabhujah srishtaah sthaleeshaayinah
Samsaaraarnavalam ghanakshamadhiyaam vrittih kritaa saa nrinaam
Yaamanweshayataam prayaanti satatam sarve samaaptim gunaah  [10]

ப்ரம்மா  எவ்வளவு சிறந்த  கருணை உள்ளம்  கொண்டவன்!  ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அல்லவா படைத்திருக்கிறான்.  பாம்புக்கு  வெறும் காற்று போதும் அது தான் ஆகாரம்.  அதற்கு எந்த பிரயாசையும் படவேண்டாம். சுத்தமாக நிறைய தந்திருக்கிறான்.  எங்கு பார்த்தாலும் பச்சைப் புல், செடிகள்.  ஆடு மாடுகள் சுகமாக  உண்டு ஜீவிக்க,   அதன் மேல் படுக்கையாக  உறங்குவதற்கு தந்தான்.  காசு கொடுக்கவேண்டாம்.  நமக்கு புத்தியை கொடுத்தான். சம்சார சாகரம் தாண்ட  வழி எல்லாம் வைத்தான். அதற்கான குணமும் உள்ளே திணித்தான். யார் அதைப் பற்றி கவலைப்படுகிறோம்?  

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...