Friday, February 12, 2021

THIRUMALA BALAJI

                   


 ''வேங்கடேசா    உன்னிடம் ஒரு  வேண்டுகோள்''     --    J K  SIVAN  

இப்போது வேண்டுமானால்  கொரோனா காரணமாக  கூட்டம் குறைந்து காணப்படலாம். குறிப்பிட்ட  எண்ணைக்கைக்கு மேல்  அனுமதி இல்லாமல் போகலாம். ஆனால்  இரவும் பகலும் தூக்கம் அறியாத ஒரு  க்ஷேத்ரம்  திருப்பதி திருமலை.

கலியுக  வரதன்   கண்கண்ட  தெய்வம்  வேங்கடேசன் .  பாலாஜி என்று உலகளவில் தெரிந்தவன். ஆயிரமாயிரம் வருஷங்களால் கோடிக்கணக்கான பக்தர்களால் புகழ்ந்து பாடப்பட்டு, வணக்கப்பட்டவன்.  .  மொழி  கடந்து  போற்றப்படுபவன்.  

 ஆழ்வார்களின்  அழகு  தமிழில்   ஓசை, இனிமை, தெளிவு  தேனின்  இனிமையாக ருசிப்பவன். ஒன்றிரண்டு  பாசுரங்கள் இன்று  உங்களோடு சேர்ந்து அனுபவிக்க விருப்பம்.  எதற்கு?  உங்களோடு  சேர்ந்து அனுபவித்தால்  பூரண  திருப்தி.

நீ   எந்த உருவத்தில் தரிசிக்க  விழைகிறாயோ  அந்த  ரூபத்தில்,  எந்த பேரில் அழைக்க விரும்புகிறாயோ  அந்த பேருடன்,  அவ்வாறே  உன் எண்ண ப்ரகாரம் தோன்றி  அருள்பவன்  திருமால் என்கிறார்  பொய்கை ஆழ்வார். ,

''தமருகந்த தெவ்வுருவம், அவ்வுருவம்  தானே,
தமருகந்த தெப்பேர் ,  மற்றப்பேர் --  தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமயாதிருப்பரேல்
அவ்வண்ணம் ஆழியான்  ஆம்''.

இந்த  பெருமாளை  விட  அவன்  வாசம்  செய்யும்  க்ஷேத்ரங்கள்  உன்னதமாக   இன்றும்  அங்கு  சென்றாலே   நாம் மகிழ்வுற்று அவன்  அருள் பெற  உதவுகிறதே .  உலகச் செல்வம்   தேடுவோர்க்கும்   ஆத்ம  திருப்தி  நாடுவோர்க்கும் ,இது ரெண்டுமே தேவையில்லாமால்   ஸ்ரீநிவாஸா உன்னை  பார்த்துக்கொண்டே இருந்தாலே  போதும்   என்கிற பக்தர்களுக் கெல்லாம்   அவரவர்   வேண்டியதை தருபவன்  வேங்கடாசலபதி .

நாம் பல ஜென்மங்களில் செய்து சேர்த்து வைத்த  கரும  வினைகள்  அந்த  திரு மலைக் காற்று  பட்டாலே  போய் விடும்.  கால் கடுக்க பல மணி நேரம்  நின்ற  வலி  அரை  நிமிஷ  நேரம்  நின்று  ''ஜருகண்டி'' யில் விரட்டும்  நேரத்தில் தொலைகிறது.    
 
எவ்வண்ணம்  நினைத்தாலும் அவ்வண்ணம்  காட்சி தருபவன்  ஸ்ரீனிவாசன்.   அவனுறையும்   ஏழு மலையே  ஒரு  புகைப்படத்தில்  அவன்  முகத்தை  பிரதிபலிக்கிறது  என்று உங்களுக்குத்  தெரியாவிடில் இதோடு இணைத்திருப்பதை பாருங்கள்.  உற்றுப்பார்த்தால்  திருமலைப்பாதை   சுவர்கள்   தெரிகிறதா?   இப்போது  ஸ்ரீனிவாசன்  படுத்துக்கொண்டு  வானைப்  பார்த்துக்கொண்டிருப்பதை பாருங்கள்.  நெற்றி,  மூக்கு, உதடுகள்,  தாடை  எல்லாம்  தெரியுமே.    அதையே    நின்ற  வாக்கில்  காட்டினால்  இன்னும்  நன்றாக  தெரியுமே. நெற்றி, நாமம், கண்கள் மூக்கு, உதடுகள் தாடை..  பெயரும்  எழுதி இருக்கிறதே.

இன்னொரு பாசுரம்:  

''வேங்கடமே விண்ணோர்  தொழுவதுவும் மெய்மையால்
 வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் --  வேங்கடமே
தானவரை வீழத் தன்னாழிப்  படை தொட்டு  
வானவரைக்  காப்பான்  மலை''  

நாம்  மட்டும்  அல்ல,  முப்பத்து  முக்கோடி தேவர்களும்  தொழும்  மலை,  சர்வ  ரோக  நிவாரணி  திருமலை. எளியோர்க்கும் தேவர்க்கும்   கொடுமை  செய்யும்  ராக்ஷசர்களைத்  தனது  சக்ராயுதத்தால்  அழிக்கும்  திருமால் உறையும்  மலை  திருமலை.  திருமழிசை ஆழ்வாரின்  வர்ணனை  இது.  

நம்மாழ்வார்  என்  favourite .   மற்றவர்களை விட  எப்போதுமே  ஒரு  படி மேலே.   அவரது  தமிழ் ஈடு  இணையற்றது. 

'' ஹே   வெங்கடேசா, நீ  தான்  எல்லாமே ,  இந்த  மூவுலகுமே, மார்பில்  திருவை   ஏந்தியவனே , தன்னிகர்  இல்லாதவனே,  என்னை  ஆள்பவனே. திருவேங்கடத்தானே,  உன்னை விட்டால்  வேறு  ஒருவர்  எனக்கில்லை. உன்னடியில்  சரண் புகுந்தாகி விட்டது''    என்கிற பாசுரம்  இது: .

''அகலகில்லேன், இறையும் என்று, அலர்மேல்  மங்கை உறை  மார்பா,
நிகரில் புகழாய்  உலகம்  மூன்றுடையாய்,  என்னை  ஆள்வானே,
நிகரில்  அமரர் முனிக்கணங்கள் விரும்பும்  திருவேங்கடத்தானே,
புகலொன்றில்லா, அடியேன்  உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே''

 இப்படி ஒருவன்  தன்னை  அவனுக்கே  அர்ப்பணித்தால்  மனத்தில்  ஏற்றிப்  புகழ்ந்தால்  மோக்ஷம் அவனுக்கு  கிட்டாமல் வேறு எவனுக்கு கிடைக்கும்?  

இன்னும்  ஒரு  பாசுரத்தொடு  முடிக்கிறேன்.

இந்த  உடம்பு  நாள்  செல்லச் செல்ல   மேலும் மேலும்  சதையும்  நிணமும், ரத்தமும் கலந்து  பருத்துக்  கொண்டே போகும்.  கிலோகிராம்  ஏறிக்கொண்டே போகும்.  வயிறு பெருத்து  நம் கால்களை நாம்  காணமுடியவில்லை.   எனக்கு   இந்த உடல்  மீது  கொஞ்சமும்  பற்று  இல்லை.  

ஹே   கிருஷ்ணா,  நப்பின்னைக்காக  ஏழு  எருதுகளை  அடக்கியவா,  உனக்கு  அடிமையாக  என்னை  ஏற்றுக் கொள்வாயா ? உன்  கை  பட்டுப்  பட்டுத்தானே  அந்த  பாஞ்ச  ஜன்யம்  என்கிற  சங்கு  கூட  வளைந்து  அழகாய் இருக்கிறது.  என்னையும்  அப்படியே   அணைத்துக் கொண்டால் என்ன?  அட  சரி,  ஒன்றுமே  இல்லை என்றாலும்  இந்த திருமலை யில்  இருக்கும்  அழகிய  புஷ்கரணியில்  ஒரு  பறவையாகப்  பிறக்க வேண்டும்.   மனிதப்பிறவி  வேண்டவே  வேண்டாம். இப்படி  கேட்டவர்  பிரசித்தி பெற்ற  ஒரு  ராஜா. குலசேகர ஆழ்வாராக மாறியவர்.

''என்ன  இப்படிக்  கேட்டு விட்டேனே ?  ஒருவேளை  பறவை பறந்து விட்டால்.?  அதை  விட   அந்த  புஷ்கரணியில்  மீனாகவே  பிறந்தால் என்ன ?    இதுவும் சரியில்லை.  புஷ்கரணி   தண்ணீர்  வற்றிவிட்டால்  மீன்  எப்படி  வாழும்?   பேசாமல் திருமலை வாஸா   என்னை உன்  எச்சில்  துப்பும்   பாத்திரமாக 
பண்ணி விடுகிறாயா?
அதைவிட  வேறு ஏதாவது??   உனக்கு பூஜை  அர்க்யம், நைவேத்தியம்  பண்ணும்  பொன்  வட்டிலாக  ஆகிவிட்டால்?    சே சே   வேண்டாம்  அப்பா.  அதை  எவனாவது   திருடிவிடுவான். .. அடாடா இது வரை 
தோன்றாமல் போய்விட்டதே.  நான்  உன்னோடு  இருக்க ஒரு  சுலப வழி  இந்த  மலையில்  ஒரு  சண்பக மரமாக  நிற்பது தான்..என்  பூவையெல்லாம்  நீ  சூட்டிக்கொள்ளேன்.   ஓஹோ.. அதுவும்  தவறோ?  என்னிடம்  உள்ள  பூவெல்லாம்  பிறர்  பறித்துப்  போய்  முழக்கணக்கில்  அதிகவிலையில் விற்றுவிட்டால்  உன்னிடம் எப்படி இருக்க முடியும் ? மரமாக நின்று   என்ன பயன்? பேசாமல்  ஒரு  புதராக  இங்கு  இருப்பேன்.  அதில் ஒரு  தொல்லையுமில்லை.     இருக்கும் போல் இருக்கிறதே!   ஐயோ,  இந்த மலையைச்சீர் செய்கிறேன்   பேர்வழி  என்று   என்னை செதுக்கி  எடுத்து  களைந்து கொளுத்தி விடுவார்களே.    அப்பறம்  நான்  எப்படி  உன்னோடு?  இது  தான்  சரி.   அருமையான  ஐடியா.. இந்த திரு  மலைக்கூட்டத்தில்  என்னையும்  ஒரு  சிகரமாகவே  மாற்றிவிட்டு ஸ்ரீநிவாஸா.    வேண்டாம் வேண்டாம். அப்படி செய்துவிடாதே. யார்  இவ்வளவு   உயரமாக ஏறி  என்னை  அணுகுவர்?  உன்  தொண்டர்களுக்கு  என்னால் என்ன  பயன்? அதோ  தெரிகிறதே  அந்த  மலைச்சிகரங்களில்  வழிந்து  இறங்கும்  காட்டாறு தெரிகிறதே. அதற்காக  என்னை பண்ணிவிட்டால்  உன்  அடியார்களின்  காலைத் தீண்டும்  பாக்யமாவது கிடைக்குமே?   என்ன  இப்படி அதிர்ஷ்டம் இல்லாதவனாக இருக்கிறேனே.  அடேடே  உன்  மலைக்கு  சுலபமாக சௌகர்யமாக  வர  வேறு  வழிகள்  வைத்திருக்கிறார்களே.  எவன்  காட்டாறு  வழியாக  வருவான் உன்னை  பார்க்க? .  இது  வீண்  எண்ணம்.  அப்பாடா,  யோசித்து யோசித்து  ஒரு  உபாயம்  உன்னருளால்  எனக்கு இப்போது  கிடைத்து விட்டது.  பேசாமல்  துளியும்  அசைக்க முடியாத  பெரிய  பாராங்கல்  படியாக  உன்  ஆலயத்தின்  வாசலின்  கிடக்கிறேன். அப்போது தான்  என்னை  மிதித்துக்கொண்டு  தான்  அனைவரும்  உன்னை  தரிசிக்க  வருவார்கள்.  நானும்  உன்னை  இங்கிருந்தே  நகராமல்   பார்த்து மகிழலாம்  என்கிறார். 

 பெருமாள்  ஆலயங்களில் கர்பக்ரஹத்துக்கு  முன்னால்  உள்  வாசல்படிக்கு  குலசேகரன் படி  என்று  பெயர்.  அதன்  மீது  கால்  வைக்காமல்  வணங்கி  தாண்டிச்  செல்வது அதனால் தான். 

 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...