Tuesday, February 16, 2021

ARUNACHALA KAVIRAYAR


 

எங்கள் வம்ச நினைவு: J.K. SIVAN

     ராம நாடக கீர்த்தனைகள்


என்  இளவயதில் என் அம்மாவுக்கு  ஏன்  ராம நாடக  கீர்த்தனைகள்  மேல் அவ்வளவு ஆர்வம் என்று எனக்கு தெரியவில்லை.   அவள்  தந்தை, முன்னோர்கள் ஜீவிதமே  அதனால் தான்  என்பதும்  அவள் சிறு வயதிலிருந்தே  கேட்டு வளர்ந்தது அந்த க்ரிதிகளால் தான் என்பதும்  பெரியவனான பிறகு எனக்கு தெரிந்த சமாச்சாரம்.
தமிழகத்தில் எண்ணற்ற பக்தி கீர்த்தனங்களை பாடிய எத்தனையோ கவிஞர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள். வடமொழியில், தெலுங்கில், கன்னட, மலையாள மொழிகளில் பாடிய கவிகளை விட நமது தமிழில் பாடிய  கவிகளை நாம் மறந்துவிடுகிறோம். நம்மவர்களை  நாமே மறந்துவிட்டால் வேறு யார் ஞாபகம் வைத்திருக்கப்  போகிறார்கள?.

எத்தனை பேருக்கு அருணாசலக் கவிராயர் (1711-1779) என்பவரை தெரியும்?  அருணாச்சலம் என்றால்  யார் திருவண்ணாமலையில் இருந்த ரமணரா? அருணகிரி நாதரா,   றும் கேட்க நிறைய பேர் இருக்கிறார்கள்  .  

என் தாய்வழி முன்னோர்கள் வாழ்ந்ததே இந்த அருணாச்சல கவிராயரின் ராமநாடக கீர்த்தனைகளை பாடியும் ராமாயண  உபன்யாசம் செயதும்,  நாடகம் நடித்தும் தான். நான் அவரைப்பற்றி சொல்ல கடன், அல்ல, கடமைப் பட்டிருக்கிறேன்.

அருணாச்சல கவிராயர்  1711 ல் பிறந்தவர்.  தில்லையாடி என்னும் ஊரில் . கார்காத்த வேளாளர் குலம். இளமையிலேயே கவிபாடும் புலமையும், இசையுடன் பாடும் ஆற்றலும் இருந்ததால் தருமபுர ஆதீனத் தலைவர் ஆதரவு கிடைத்தது. சீர்காழியில் குடும்பம் வசதியாக தங்க ஆதீனம் உதவியது.

கர்நாடக இசையில் அற்புத பாட்டுகள் மெட்டமைத்தவர். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜ  சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் காலத்துக்கும் முந்தியவர். முதலில் இருந்தவர் முத்து தாண்டவர். (1525-1625) . அப்புறமாகதான் அருணாச்சலாகவிராயர். அவரது சம காலத்தவர் மாரிமுத்தா  பிள்ளை (1717-1787). அருமையான முத்தான தமிழ் கீர்த்தனைகள் படைத்தவர்கள் இந்த மூவரும்.  அவர்கள்  கீர்த்தனைகள்  இன்றும் பாடப்பட்டு வருகிறது.

இராம நாடகக் கீர்த்தனை (சங்கீத ராமாயணம்) 258 இசைப்பாடல்களை நாடக வடிவில் கொண்டது.  கவிராயர் இந்த கீர்த்தனைகளை தோடி, மோகனம், பைரவி, ஆனந்தபைரவி, சங்கராபரணம் ஆகிய பல பிரசித்த ராகங்களில் அமைத்தார். மங்களகைசிகம், சைந்தவி, துவிஜாவந்தி ஆகிய அபூர்வ இராகங்களிலும் இராம நாடகக் கீர்த்தனைகள் பாடுகிறார்கள்.

 நெய்வேலி சந்தான கோபாலன் அவர்கள் பாடிய ''ராமனுக்கு மன்னன் முடி.." இந்தோள ராக பாட்டை அடிக்கடி கேட்பேன்.  ரசித்ததுடன் கண்களில்  பெருகும் நீரைத் துடைத்துக் கொள்வேன்  மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிய ''ஏன் பள்ளிக்கு கொண்டீரய்யா'' என்ற மோஹன ராக பாடலை எத்தனை முறை இதுவரை கேட்டிருக்கிறேன் என்று கணக்கே இல்லை.
  
அருணாசல கவிராயர் இதிகாச கதையை கீர்த்தனைமூலமாக மக்களிடம் பரப்பிய முதல் கவிஞர் எனலாம். 'இராமநாடகக் கீர்த்தனை' திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் அரங்கேறி இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது. கி.பி. 1779 இல் தமது 67வது வயதில் மறைந்தார்.

ஒரு அல்ப சந்தோஷம். நாம் மறந்துவிட்டாலும் அருணாசலக் கவிராயருடைய கீர்த்தனைகளை எம். எஸ். சுப்புலட்சுமி, டி. கே. பட்டம்மாள், மகாராஜபுரம், அரியக்குடி, போன்ற மஹா வித்துவான்களும் திரை நடிகையும் பாடகியுமான பானுமதி, என். சி. வசந்தகோகிலம் ஆகியோர் பாடி எத்தனை லக்ஷம் ரசிகர்கள் செவிகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்திருக்கிறது  என்று  உணரும்போது புளகாங்கிதமடைகிறேன். 
சீர்காழியில்  கவிராயரை  காசுக்கடை என்ற நகை அடமானம் வைத்து கடன் கொடுக்கும் கடை வைத்து பிழைக்க வைத்தார்கள். மனம் அதில் செல்லவில்லை.  அப்போது  ஒரு அதிசயம் நடந்தது.

கவிராயர்  புதுச்சேரிக்கு வியாபாரத்துக்காக தங்கம் வாங்க நடந்தார்.   அங்கே  ரெண்டு  சங்கீத  மஹா வித்வான்களை  சந்திக்கும் பாக்யம் கிடைத்தது. வெங்கட்ராம ஐயர், கோதண்டராம ஐயர் என்ற அந்த ரெண்டு வித்துவான்களும்   சீர்காழியை அடுத்த சட்டநாத புரத்தைச் சேர்ந்தவர்கள்.  அருணாச்சல கவிராயர்  புதுவை போகும் மார்கத்தில்   சீர்காழியில்  தருமபுர ஆதீனத்தின் மடத்துக் கிளையில் தங்க நேர்ந்தது. அந்த மடத்தில் தலைவராக இருந்தவர் முன்பு அருணாசல கவிராய ருடன் படித்த சிதம்பரம் பிள்ளை என்பவர். அவர் "கட்டளை மாலை" என்ற பாமாலையை இயற்றி யிருந்தார்.  அவருக்கு  இன்னொரு ஆசை.  தான் வாழும்  சீர்காழி  பற்றி  ஒரு பாடலை இயற்ற வேண்டும் என்று விருப்பம். ஆனால் வேலை பளுவின் காரணமாக எழுத நேரமில்லை. பாட்டில் தொடக்க அடி மட்டும்தான் எழுதியிருந்தார், மேற்கொண்டு எழுத வில்லை.அந்த நேரம் பார்த்து அருணாசல கவிராயர் சீர்காழியில்  மடத்தில் தங்க நேரிட்டதால்  பழைய நண்பர்கள்  சந்தோஷமாக  சந்தித்து பேசினார்கள்.  பிள்ளை  கவிராயரிடம் 

''அருணாசலம், நான்  ஒரு  பாமாலை  ஆரம்பித்
தேன். அப்புறம் எழுத நேரமே இல்லை. நீ இந்த பாமாலையை  பாடி முடிக்கிறாயா? என்றார் சிதம்பரம்பிள்ளை.

''ஆஹா,  செய்கிறேனே .  கையில்  எடுத்துக் கொண்டு போகிறேன். புதுச்சேரியில் தங்கம் வாங்கும் வேலை இருக்கிறது. முடிந்தால் அங்கேயே எழுதுகிறேன். வரும்போது தருகிறேன்'' என்கிறார் கவிராயர்.

புதுச்சேரியில் ஒரே இரவில் அந்த பாமாலையை  கவிராயர் பூர்த்தி செய்து  ஒரு ஆள் மூலம் சீர்காழியில் உள்ள சிதம்பரம் பிள்ளைக்குக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

சிதம்பரம் பிள்ளைக்கு ஒரே ஆச்சரியம். ''ஆஹா எத்தனை சிறப்பாக எழுதியிருக்கிறான் நண்பன், என்று  கவிராயரின்  புலமையை வியந்தார். மனதில் ஒரு எண்ணம் உதித்தது. எப்படியாவது அருணாசலத்தை தன்னுடன் சீர்காழியிலேயே  தங்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து தில்லையாடியிலிருந்து அவரது குடும்பத்தை சீர்காழிக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்துவிட்டார்.

புதுச்சேரியிலிருந்து தங்கம் வாங்கிக்கொண்டு திரும்பிய கவிராயர் வழியில் சீர்காழி வந்தபோது நண்பர் சிதம்பரம் பிள்ளை தனது குடும்பத்
தையே தில்லையாடியிலிருந்து சீர்காழியில் கொண்டு வந்து குடியமர்த்தி யது ஆச்சரியமாக இருந்தது. சரி இனிமேல் நமக்கு சீர்காழி தான் என்று அங்கேயே தங்கிவிட்டார். அது முதல் சீர்காழி அருணாசல கவிராயர் என்றழைக்
கப்பட்டார்.

புதுச்சேரியில் பழக்கமாகி சந்தித்த  மேலே  சொன்ன  இரு சங்கீத வித்வான்கள்  வேங்கட்ராம ஐயரும், கோதண்டராம ஐயரும் சீர்காழியில் மீண்டும் அருணாசல கவிராயரை சந்தித்து கம்பராமாயணத்தில் சில சந்தேகங்களைக் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வதற்காக வந்தனர். கவிராயர்  அவர் சந்தேகங்களை நிவர்த்தி செய்தார்.

''கவிராயரே, எங்கள் சந்தேகங்களை அற்புதமாக கம்பராமாயணத்திலிருந்து விளக்கி தெளிவாக சொன்னீர்கள். எங்களுக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. இவ்வளவு அற்புதமாக  ராமாயண காட்சிகளை கண்முன் தோன்றுவது போல் சொல்கிறீர்களே, நீங்கள் ஏன் கம்ப ராமாயணத் தை ஒரு நாட்டிய இசை நாடகமாக நிறைய பாடல்கள் எழுதி ஆக்கக்கூடாது. கவிதைகளை நீங்கள் இயற்றுங்கள், நாங்கள் அவற்றுக்கு ராகம், தாளம் எல்லாம்  அமைத்து இசை நாடகமாக ஆக்க உதவி செய்கிறோம்" என்றனர்.

''வித்வான்களே, இது மிக பிரமாதமான யோசனை யாக அல்லவோ இருக்கிறது. எனக்கு தோன்றவே இல்லையே''. என்கிறார் கவிராயர்.

கம்பனுடைய காப்பியச் சுவையில் திளைத்தவர். அதை மேலும் படித்து அனுபவிக்க இப்படி ஒரு சந்தர்ப்பமா? கம்பனின் கவி நயமிக்க பாடல்க ளும், பால பாரதியின் சந்த விருத்தங்களும் அவர் மனதில் ஒரு தாக்கம் விளைவிக்க இராம நாடக கீர்த்தனைகள் உருவாயின. பண்டிதரும் பாமரரும் பாடி மகிழ்ந்து, நாடகமாக நடிக்கப் பட்டது. அவர் கையாண்ட சிறந்த உத்தி என்னவென்றால் சாதாரணமான அன்றாட புழக்கத்திலுள்ள சொற்களைப் போட்டு, பழக்கத்திலிருக்கும் பழமொழி களைச் சேர்த்த எளிமையான பாட்டுக்கள் நல்ல இசையோடு சேர்ந்து, கேட்போர் அனைவர் நெஞ்சங்களையும் கவர்ந்தது .

"இராம நாடக கீர்த்தனைகள்" பூர்த்தியானபின் முன்பு கம்ப நாட்டாழ்வார் தனது கம்ப ராமாய ணத்தை திருவரங்கத்தில் அரங்கேற்றியது போல அங்கேயே கொண்டு சென்று அரங்கேற்றினார். 

அதில்  சில  அபூர்வ கீர்த்தனைகள்:

 ''இந்தா  விபீஷணா'', "ஏன் பள்ளிகொண்டீர் ஐயா,  ராமனுக்கு மன்னன் முடி,   யாரென்று ராகவனை,   யாரோ இவர் யாரோ, கண்டேன் சீதையை,  எப்படி மனம் துணிந்தானோ,''   இன்னும் எத்தனையோ பாடல்கள் இன்றும்   பல  பரத நாட்டியக் கலைஞர்களால் அபிநயம் பிடித்தும்,  சங்கீத  வித்வான்களால்  பாடப்பட்டு   ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறது.

அவர் காலத்தில் தஞ்சையை துளஜாஜி என்ற மராட்டிய மகாராஜா ஆண்டார். குடும்ப சூழ்நிலை சரியில்லா மலிருந்த காரணத்தால், இந்த நாடகத்தின் அரங்கேற்றம் துளஜாஜி ராஜா முன்னிலையில் நடத்த முடியாமல் போனது. கவிராயர் புதுச்சேரி துபாஷாக இருந்த ஆனந்த ரங்கம் பிள்ளையைச் சந்தித்துப் பேசினார். அவர் சென்னையில் அப்போது இருந்த வள்ளலும், கலை ஆர்வலருமான மணலி முத்துகிருஷ்ண முதலி யாருக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினார்.

மணலி முத்துகிருஷ்ண முதலியார் நல்ல கலா ரசிகர். அருணாசல கவிராயரின் சில பாட்டுக் களை வித்வான்கள் பாடக் கேட்டிருக்கிறார். அவருக்கு அவை மிகவும் பிடித்திருந்தது. அப்படிப்பட்ட சூழ் நிலையில் இப்போது அந்த பாடல்களை இயற்றிய புலவரே  நேரில் வந்திருக் கிறார், அதிலும் இராமாயண நாட்டிய நாடகத் துக்கான எல்லா பாடல்களோடும் வந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

துளஜா ராஜா தனது  குடும்ப நிலை சரியான பின்பு அருணாசல கவிராயரின் இராம நாடகத்தை தஞ்சாவூர் அரண்மனையில் நிகழ்த்தினார். புதுவை சென்று ஆனந்தரங்கம் பிள்ளையின் முன்னிலையிலும் நடத்தினார். அப்போது பிள்ளையுடன் வேறு பல செல்வந் தர்களும் இருந்து ரசித்துப் பார்த்தார்கள். அவர்கள் அனைவரும் அருணாசல கவிராயருக்கு அரும் பெரும் விலைமதிப்பற்ற பரிசுப் பொருட்களை அளித்து கெளரவித்தனர்.

முடிப்பதற்கு முன் ஒரு பாடல் பற்றி சொல்கிறேன்

''ஆஞ்சநேயருக்கு  அளவுகடந்த  சந்தோஷம். இலங்கை வந்த ராம காரியம் முடிந்தது. சீதையை உயிரோடு கண்டு அவளுக்கு ராமர் பற்றிய செய்தி சொல்லியாகிவிட்டது. அவளிடமிருந்து ராமருக்கு பதில் செய்தியும் தக்க அடையாளத்தோடு வாங்கிக் கொண்டாயிற்று. சீக்கிரம் திரும்பிப் போய்விட வேண்டியது தான். நான் ராம தூதன். தூதனுக்கு லக்ஷணம் திருட்டுத் தனமாக வந்து தப்பி ஓடுவதல்ல. இந்த ராவணனுக்கு அவன் யாரோடு மோதுகிறான் என்று தெரிய வேண்டாமா? எச்சரிக்கை கொடுக்க வேண்டாமா? அப்படிச் செய்யாமல் திருட்டுத் தனமாக வந்து செல்வது என்போன்ற வீரனுக்கு அழகா?தேவையா?

எதிரி எப்படிப்பட்டவன் அவன் பலம் என்ன என்று அறிவுறுத்த, ராவணனுக்கு சில கஷ்ட நஷ்டங்கள் உண்டாக்கியாக்கி விட்டது. இனி அவனைச் சந்தித்து புத்திமதி சொல்ல வேண்டியது ஒன்று தான் பாக்கி இருக்கிறது. நல்ல வேளை. அந்தச் சந்தர்ப்பத்தை அவன் மகனே உண்டாக்கிக் கொடுத்திருக்கிறானே. நான் தேடிப்போவதற்கு பதிலாக அவனே என்னை தருவிக்கிறான். நல்லது '' என்று தன்னை இந்த்ரஜித்திடம்  ''கட்டு'' ப் படுத்திக்கொண்டார். பயந்தவர் போல,'' பிடிபட்ட வராக''   தன்னைக் காட்டிக்கொண்டு, கட்டுப் பட்டு ராவணன் மாளிகைக்கு இழுத்துச் செல்லப்பட்டபோது கோபமாக இருந்த இலங்கை வாசிகள் அவரைத் தாக்கினார்கள். பிரம்மா ஸ்தி ரம் அவரை தொட்டுவிட்டு விலகியது. இந்திரஜித் துக்கு பெருமிதம். ஒரு பலசாலியை அடக்கி கட்டி இழுத்துக் கொண்டு வந்து விட்டோம் என்று.

''இவன் சாதாரண வானரன் இல்லை. எண்ணற்ற நமது வீரர்களை தனியொருவனாகக் கொன்ற வன். சேதம் விளைவித்தவன். என் திறமையால் பிரம்மாஸ்திரம் உபயோகித்து இவனைக் கட்டிக் கொணர்ந்தேன். இனி இவனுக்கு தக்க தண்டனை கிடைக்கும். '' என்று அனைவரும் கேட்க மேகநாதன் முழங்கினான்.

ராவணன் முன் நின்ற ஹனுமனை ராவணன் கேட்கச் சொன்னதால் ப்ரஹஸ்தன் என்ற ராக்ஷச அதிகாரி கேட்கிறான்:

''ஏ, வானரா, நீ யார், யாரால் அனுப்பப்பட்டவன்? பயப்படாமல் உண்மையைச் சொல், உன்னை விடுவிக்கிறேன்.'

இது தான் அந்த பாடல்:
செஞ்சுருட்டி : ஆதி தாளம்

'' ஆரடா குரங்கே - இங்கே வந்த நீ - ஆரடா குரங்கே''
வார் சிங்காசனம் போல், - வால் இட்டென்னிலும் மேல் இட்டிருகிறாய் ''
கம்பத்தின் மேலே காலனைப் போலே
செம்புமாலியையும் சேனாதிபரையும் கொன்றொருக்காலெ
சிட்சை செய்வேன் என்று கட்சி உடனே வந்த
அட்சதனைக் கூட பட்சணம் செய்த நீ.... ஆரடா குரங்கே.....
(ராவணன் எதிரில் தனது வாலைச்சுற்றி உயரமான ஆசனம் அமைத்து ராவணனை விட மேலே உயரமாக அனுமன் அமர்ந்திருக்கிறான் ) ( செஞ்சுருட்டி ராகத்தில் ஆதி தாளத்தில் -- ராவணன் கேட்பது )

அதற்கு அனுமார் பதில்: மோகனம்: ஆதி தாளம்

''ராமசாமியின் தூதன் நான் அடா -- அடடா ராவணா
நான் அடா என் பேர் அனுமான் அடா ( ராவணன் ஒரு அடா போட்டால் அனுமன் பல அடா போடுகிறான்!!)
கொடுத்த வரமும் தனமும் கனமும் வீணிலேன் போக்குகிறாய்
குடிக்கும் பாலை அய்யோ கமர் வெடிக் குளேன் வார்க்கிறாய்
துடுக்குடன் பரஸ்த்ரீ  செனங்களை தொடர்ந்தேன் பழி ஏற்கிறாய்
தூக்கி ஏறவிட்டேணியை வாங்கும் துர்த்தர் வார்த்தையைக் கேட்கிறாய் ..... ராம

)என் அம்மா  அற்புதமாக இதெல்லாம்  பாடுவாள்.   இன்னும் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...