Wednesday, June 29, 2022

RAGAVENDRA

  'பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்திராய .......''  J.K. SIVAN


ஸ்ராத்த காரியங்களுக்கு  நடுத்தர வர்க்கம் கஷ்டப்படாமல் சாஸ்த்ரோக்தமாக  செய்து வைக்கும் ஒரு அருமையான கைங்கர்யத்தை நங்கநல்லூர்  ஸ்ரீ ராகவேந்திர ஆலயம் நடத்தி வருவது நமது பாக்யம்.      ராகவேந்திரர் எத்தனையோ பக்தர்களுக்கு அருள் புரிந்துவருவதில் இது மகத்தானது. மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல விஷயத்தை யார் எப்போது வேண்டுமானாலும் நினைத்துப் பார்ப்பது நல்லது தானே.

மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரரை அறியாத ஹிந்து கிடையாது. ஜீவசமாதியில் இருந்து கொண்டு இன்றும் எண்ணற்ற பக்தர்களை போஷிப்பவர்.

மூல பிருந்தாவனத்தில் இருந்து பிரசாதமாக அளிக்கப்படும் மிரிதிகா என்னும் மண் எண்ணற்ற நோய்களை குணப்படுத்துவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். எத்தனையோ குடும்பங்களில் அது பூஜையில் வைக்கப்பட்டு வருகிறது. குரு ராகவேந்திரர் வாழ்வில் எண்ணற்ற அதிசயங்கள் நிகழ்ந்தன:

ஒரு முறை சோழ ராஜாவின் ஆட்சியில் அரசியல் சிக்கல் உட்பூசல் உண்டாகி மன்னன் மனம் வாடிய நேரம். ராஜ்யம் கலகத்தால், கொள்ளைகளால் ஒரு பக்கம் வாடியது. நாடு முழுதும் பஞ்சம் வேறு வாட்டி நாடே தவித்தது. அரசன் கஜானாவை காலி செய்தும் போதாமல் தன் சொந்த சொத்து, நகைகளையும் விற்று மக்களுக்கு சேவை செய்தான். அப்படியும் பஞ்சம் தீரவில்லை. குரு ராகவேந்திரரை பற்றி கேள்விப்பட்டு அவர் அருளை வேண்டினான். மகான் உடனே தஞ்சை விரைந்தார். பன்னிரண்டு ஆண்டுகள் தங்கி தன் தவ வலிமையால் அமைதி நிலைநாட்டி சோழநாடு மீண்டும் செழித்து மக்கள் சந்தோஷமாக வாழ வகை செய்தார். அரசன் மகிழ்வோடு ஒரு மிக விலையுயர்ந்த மணி மாலையைப் பரிசளித்தான். மகான் அதை வாங்கி தான் அப்போது பூஜை செய்து கொண்டிருந்த யாக (ஹோம) தீயிலிட்டார். அரசன் அவர் தன்னை அவமானம் செய்ததாக நினைத்து வருந்தினான். அவன் மனநிலையை அறிந்த ராகவேந்திரர் யாகத்தீயில் அக்னி அம்சமான பரசுராமரை பிரார்த்தித்தார் . யாகத் தீயிலிருந்து மணிமாலை மீண்டும் வெளி வந்தது. ராஜா  மகானின் காலில் வீழ்ந்து ஆசி வேண்டினான்.

ராகவேந்திரருடைய சீடர்களில் ஒருவர் தன் கல்வி கேள்வி பூர்த்தி ஆனவுடன் ஆச்சர்யன் ஆசியுடன் தன் வீடு திரும்பும் நேரம். அவர் விடைபெறும்போது மகான் துங்கபத்ரை நதிக்கரையில் ஸ்நானத்துக்கு தயாராயிருந்தார். வழக்கமாக சிஷ்யர்கள் குருகுல ஆஸ்ரமம் முடிந்து திரும்புகையில் சிலருக்கு எதாவது பணமுடிப்பும் தரப்படும். இந்த சிஷ்யரோ பரம ஏழை. ஆனால் அந்த நேரம் ஆற்றங்கரையில் இருந்து கொண்டு மஹான் என்ன செய்யமுடியும்?
"என்னிடம் உனக்கு தர ஒன்றுமில்லேயே அப்பா? என்றார் குரு.
“சுவாமி, எனக்கு ஒன்றுமே வேண்டாம். எனக்கு கல்வியறிவு புகட்டிய செல்வமே போதும். உங்கள் கையால் சிறிதளவு இந்த ஆற்று மண்ணைத் தந்தால் அதுவே எனக்கு பெரும் செல்வம்." என்றான் சீடன்.
ஒருகணம் கண்மூடி தியானித்து குனிந்து ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிக் கொடுத்தார் மகான். அதை பொக்கிஷமாகப் போற்றி துணியில் முடிந்து தலைமேல் வைத்துகொண்டு புறப்பட்டான் சீடன். நாளெல்லாம் நடந்து இரவில் தங்க ஒரு ஊரின் ஒரு மாளிகை வாசலுக்கு வந்தான். உள்ளே சென்று ஒதுங்க வழியில்லை. வெளியே வீட்டுத் திண்ணையில் படுத்தான்.

அன்றிரவு அந்த மாளிகையின் பிரபுவின் மனைவிக்கும் பிரசவ காலம். இதுவரை நான்கு ஐந்து முறை பிரசவித்து உடனே அந்த சிசு மரணமடைந்த வருத்தம். இன்றிரவாவது பிறக்கும் இந்த குழந்தையாவது பிழைக்காதா என்ற ஏக்கம் அவர்களுக்கு.

பிரசவ நேரத்தின் பொது வாசலில் ஒரு கரிய பூதம் தோன்றி உள்ளே நுழைய முயற்சித்தது. அனால் சீடன் வாசலில் தலைக்கு வைத்து படுத்திருந்த சிறிய மணல் மூட்டை ஒரு பெரிய நெருப்பு அரணாக அந்த பூதத்தை உள்ளே செல்ல விடாமல் தடுத்தது. அதன் வெப்பத்தில் பூதம் கத்தியது. சீடன் எழுந்து அதை நோக்கினான். குருவை நினைத்து சிறிது மணலை எடுத்து அதன் மீது வீசினான். பெரும் காட்டுத்தீயாக மாறி அந்த மணல் பூதத்தை சுட்டெரித்தது. பெரும் கூச்சலுடன் அது எரிந்து சாம்பலாகியது. சப்தத்தை கேட்டு பிரபு வெளியே ஓடிவந்தார். விவரம் அறிந்தார். ஏன் ஒவ்வொரு முறையும் தன் குழந்தைகள் மடிந்தன என்ற காரணத்தை உணர்ந்தார். அதற்குள் உள்ளேயிருந்து மருத்துவச்சி வெளியே ஓடி வந்து
“அய்யா உங்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருக்கிறான்” என்று சந்தோஷத்தோடு அறிவித்தாள். இதற்கப்புறம் பிரபு தன் தங்கையை அந்த சீடனுக்கு மணம் செய்வித்து அவனும் ஒரு ப்ரபுவானான் என்று கதை நீளும்.  அறியவேண்டிய உண்மை மந்த்ராலய மகானின் கைப்பிடி மண்ணும் பொன்னுக்கு நிகராக ஒருவனை வாழ்வில் உயர்த்தியதுதான் .

ஒரு சமயம் ஒரு பிரபு அவரைச் சீண்டினான். அந்த ஊரில் ஒரு பெரும் பூஜை செய்ய மகானை அழைத்தான். எல்லோர் முன்னிலையிலும் அன்று அவரை அவமதிக்க எண்ணி ஒரு உலர்ந்த கட்டையை அவர் முன் வைத்து,
"நீங்கள் தான் தவ லிமை மிக்கவர் என்று புகழ்கிறார்களே. இதைத் துளிர்க்க செய்வீர்களா” என சவால் விட்டான்.
மகான் கண்மூடி “ மூலராமா!! இது உனக்கு விட்ட சவால் அல்லவோ?. என்ன செய்ய வேண்டு மோ 
செய்” என்று கமண்டல ஜலம் சிறிது அதன் மீது தெளித்தார்.
காய்ந்த அந்த மரக் கட்டை அழகிய பச்சை இலைகளுடன் துளிர்த்ததை நான் எதற்கு உங்க ளுக்கு சொல்லவேண்டும்?

இது போல் எண்ணற்ற அநேக அதிசயங்களை அவர் நிகழ்த்தியிருக்கிறார். ஒன்றை மட்டும் கூறி நிறுத்துகிறேன்.

வெள்ளைகாரன் நம்மை  ஆண்ட காலம். கிழக்கிந்திய கம்பனியில் அப்போது மன்ரோ  கலெக்டர். மந்த்ராலயம் இருந்த இடம், ராகவேந்திரா மடத்துக்கு சொந்தம் என்பதற்கு போதிய ஆவணம் காட்டவில்லை எனவே மந்த்ராலயத்தை கம்பனி ஆட்சிக்குள் கொண்டுவர நிர்பந்தம். ஆனால், அதை நிறைவேற்று முன் மந்த்ராலயத்தை ஒருமுறை சென்று பார்த்துவிட்டு முடிவு எடுக்க கலக்டர் மன்ரோ  சென்றார். ஒரு ஆவணமும் இல்லாத நிலையில் அந்த மடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்ற முடிவு செய்யு முன் அந்த பிருந்தாவனத்துக்குள் சென்று வணக்கம் செலுத்த மன்றோ உள்ளே நுழைந்தார்.

நீண்ட மண் தரையில், சுற்றிலும் இடுப்பளவு மண் சுவர், மேலே தென்னை ஓலை வேய்ந்த கூரை, எங்கு பார்த்தாலும் அடர்ந்த மரங்கள், அமைதியான அந்த இடத்தில் நுழைந்த மன்ரோ, எதிரே ஒரு அதிக உயரமற்ற சற்றே பருமனான தேகத்தில் ஒரு முதியவரை கண்டார். காவி உடை, கழுத்து நிறைய துளசி மாலை, உடலில் சந்தன கீற்றுக்கள் நெற்றியில் நாமம், ஆழ்ந்த கூரிய ஊடுருவும் அமைதியான கண்கள், வெண்ணிற தாடி, தலையை மூடிய மெல்லிய காவித்துணி. புன்சிரிப்பில் வெண்ணிற வரிசையான பற்கள் உறுதியான உதடுகளுக்கு இடையே தெரிந்தது.
''வாருங்கள்'' என்று பொருள் பட கையால் சைகை செய்து தலை ஆட்டினார்''முதியவர். 
மன்றோ கை கூப்பி வணங்கினார்.  அருகே யாருமில்லை. ஆங்கிலத்தில் மன்ரோ  நிதானமாக பேசினார்.
''நீங்கள் இந்த ஆலயத்தை சேர்ந்தவரா?
''ஆலயமல்ல, மடம் . நான் இங்கு தான் இருக்கிறேன்.'' தெளிவான ஆங்கிலத்தில் அவர் பதிலத்தார்.
''இந்த மட விஷயமாக ஒரு முக்ய செய்தி சொல்லவேண்டும்''.
''என்ன வேண்டும் சொல்லுங்கள்''?
''இது எங்கள் அரசாங்க மனை. இதில் அத்து மீறி எந்த ஆதாரமும் இன்றி உங்கள் மடம் ஆக்ரமிப்பு செய்திருப்பதாக தகவல் கிடைத்தது. இங்கிருந்து உங்களை அப்புறப்படுத்த ஆணை இட எனக்கு அதிகாரம் இருப்பதால், அதை செய்யுமுன் தீர விசாரிக்க நான் இங்கே வந்திருக்கிறேன்'' என்கிறார்  மன்ரோ.
''இங்கே எந்த அத்து மீறலுமில்லை. உங்கள் ஆட்சிக்கு முன் இந்த பிரதேசத்தை ஆண்ட அரசன் இந்த இடத்தில் எங்கள் மதத்துக்காக ஒதுக்கி அது அரசாங்க தஸ்தாவே ஜில் பதிவாகி இருக்கிறது. எனவே அதை பரிசீலனை செய்த பிறகு நீங்கள்  முடிவெடுக்கவேண்டும்.''

மன்ரோ  துருவித்துருவி கேட்டார். எந்த அரசன், எப்போது, எதற்காக, எப்படி எந்த இடத்தை மடத்துக்கு மான்யமாக அளித்தான் என்று கேட்டதற்கெல்லாம் அந்த முதியவர் பொறுமையாக, பெயர்கள், காலம் நேர குறிப்புகள் கொடுத்ததை மன்ரோ  குறித்துக் கொண்டார்.

''எனக்கு இது தெரியாது. யாரும் சொல்லவில்லையே. நல்லவேளை உங்களை நேரில் சந்தித்தது நல்லதாக போய் விட்டது'' என்கிறார் மன்ரோ .

அந்த பெரியவர்  மன்ரோவிற்கு அந்த ஆஸ்ரமத்தை சுற்றிக் காட்டினார். ''இந்தாருங்கள்'', என தன் கையால் மன்ரோவுக்கு  பிரசாதம் வழங்கினார். 

''இது என்ன? நான் என்ன செய்யவேண்டும்?''
''பொங்கல்பிரசாதம்  என்று இதற்கு பெயர். இதை உண்ணவேண்டும்.'''
''ஒ நான் அப்படியே செய்கிறேன்''

அதை ஜாக்ரதையாக தான் தங்கி இருந்த இடத்துக்கு எடுத்துச் சென்று ''இதை இன்று என்னுடைய உணவோடு கலந்து விடுங்கள் '' என்று உத்தரவிட்டு, அதை உண்டார் மன்ரோ .
போகுமுன்பு அவரை வணங்கி

''இவ்வளவு  நேரம் எனக்கு எல்லாவற்றையும் திருப்திகரமாக விளக்கினை  நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?'' என்றார் மன்றோ.
''என்னை ராகவேந்திரர்'' என்பார்கள்
''ஒ இந்த பெயர் கேட்டிருக்கிறேன். அது நீங்கள் தானா? ஆனால் நீங்கள் பல வருஷங்களுக்கு முன்பே ........''
''ஆமாம். எனது ஸ்தூல சரீரம் இதோ இந்த ஜீவ சமாதிக்குள் இருக்கிறது..''..
மன்ரோ  அதிசயித்து சிலையானார்.

 அவரைப் பார்த்ததிலிருந்து மன்ரோவுக்கு உள்ளே ஏதோ ஒரு விவரிக்கமுடியாத சந்தோஷம் தோன்றியது. நாகபாசத்தில் கட்டுண்டவர் போல் ஆனார். எந்த நாளில் எந்த ஓலைச்சுவடியில், எந்த அரசாங்க முதிரையுடன் மந்த்ராலயம் மடத்துக்கு யாரால் எப்போது வழங்கப்பட்டது என்ற புள்ளிவிவரங்களை மகான் தெரிவித்த தெல்லாவற்றையும் விவரங்கள் சேகரித்துக் கொண்டு சென்னபட்னம் வந்து அதிகாரிகளை அனுப்பி சேகரித்து, வாங்கி பரிசீலித்தார்.

தேடிய ஆவணங்கள் சுவாமி சொன்ன இடங்களிலேயே இருந்தன. மந்திராலயம் இருந்த நிலமும் தானமாக அளிக்கப்பட்டது தெரிந்தது.

''மந்த்ராலயம் மடத்திற்கே சொந்தம். எனவே அரசாங்கம் அதில் தலையிட உரிமையில்லை'' என மன்ரோ  ஆணை பிறப்பித்தார்.
பிறகு குருவருளால் மன்ரோ  தென் மாநிலங்களுக்கு கவர்னர் ஆனார். இன்றும் குதிரை மேல் சென்னையில் தீவுத் திடலில் (ISLAND GROUND) கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். சென்னையில் உள்ளோருக்கு தெரியும். சென்னைக்கு புதியவர்கள் மன்ரோ  சிலையை பார்க்கும்போது ராகவேந்திரரை மனதில் வணங்கலாம். சுவாமியை நேரில் பார்த்து பேசி, அவர் கையால் பிரசாதம் வாங்கி உண்ட வெள்ளைக்காரர் அல்லவா? மவுண்ட் ரோடில்  அந்த பக்கம் போகும்போதெல்லாம்  நாம்  மன்றோ சிலையை வணங்கி ராகவேந்திரரை தியானிப்பது வழக்கம்.
மகானும் மன்றோவும் பேசியது எவர் கண்ணிலும் படவில்லை எவர் காதிலும் விழவில்லை. ஆனால் இது நடந்தது உண்மை என மன்றோ வெளியிட்ட அரசாங்க அதிகார செய்தி வெளிவந்தது. கீழே அதன் நகல் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து மகிழவும்.

ராகவேந்திரர்  மந்த்ராலயத்தில்,  மாஞ்சாலி எனும் இடத்தில்  ஜீவசமாதி அடையுமுன் அளித்த அறிவுரைகள்:
1. நேர்மையான முறையில் வாழாவிட்டால்  நேரிய சிந்தனை வராது .
2. ஜன சேவை ஜனார்த்தன சேவை.தரித்ரனுக்கு செய்யும் உதவி    நாராயணனுக்குச் செய்யும் சேவை. மானவ சேவையே மாதவ சேவை.
3. அற்புதங்கள் மட்டுமே செய்துகாட்டுபவரை விட்டு தூர போய்விடுங்கள். செப்பிடு வித்தையில் ஏமாறாதே.
4. நல்லறிவு அற்புதங்களைக் காட்டிலும் மிகச் சிறந்தது.
5. பகவான் மீது பக்தி அவசியம். அது வெறும் மூட பக்தியாக இருக்கக் கூடாது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...