Sunday, June 19, 2022

swanmidesikan



 சுவாமி தேசிகன் -- நங்கநல்லூர்  J.K. SIVAN                                                                                          அடைக்கலப்பத்து  2 & 3


ஞான மார்கம், பக்தி மார்க்கம் என்ற வழிகள் மோக்ஷத்தை அளித்தாலும், கலியுகத்தில் சரணாகதி ஒன்றே எளியது என்பதால் சுவாமி தேசிக ஆசார்யன் நமக்கு அடைக்கல பத்து என்ற பத்து பாசுரங்களை அளித்திருக்கிறார். முதல் பாசுரத்தை தொடர்ந்து  இனி மற்ற  ரெண்டு  பாசுரங்களை அறிவோம்.

ஞானத்தை பக்தியையும் போதித்த ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு உபதேசிப்பதாக வரும் சரணாகதி ஒன்றே அடைக்கல பத்தின் சாரமாக அமைந்துள்ளது.

सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज।  अहं त्वा सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः।।18.66।।
Sarva-dharman parityajya mam ekam saranam vraja  Aham tvam sarva-papebhyo moksayisyami ma sucha ||18.66||

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:

''அர்ஜுனா, சதா என் நினைவில் இருந்து என் பக்தனாக ஆகிவிடு. என்னை வழிபடு, தொழு, என்னை அடைய இது ஒன்றே போதுமே. இது நிச்சயமாக உன்னை என்னிடம் சேர்க்கும் என்னுடைய நண்பன் நீ என்பதால் உனக்கு இதை நினைவூட்டுகிறேன் '' என்று கண்ணன் சொல்வதை அற்புதமான தமிழில் சுவாமி தேசிகன் அடைக்கல பத்து பாசுரங்களில் விளக்குகிறார்.

நமது ஆச்சார்யர்கள் எதையோ சொல்லிவிட்டு போனவர்கள் அல்ல. சொல்லை செயலாக்கி வாழ்ந்து காட்டிய எடுத்துக் காட்டுகள். உதாரண புருஷர்கள்.

சடை முடியன், சதுர் முகன் என்று, இவர் முதலாம் தரம் எல்லாம்,
அடைய வினை பயன் ஆகி, அழிந்து விடும் படி கண்டு,
கடி மலராள் பிரியாத, கச்சி நகர் அத்திகிரி,
இடமுடைய அருளாளர், இணை அடிகள் அடைந்தேனே ||2||

அடைக்கல பத்து எனும் இந்த பத்து பாசுரங்களின் நாயகன் ஸ்ரீமந் நாராயணனான காஞ்சிவாழ் வரதராஜன். காஞ்சியை ஹஸ்தி கிரி எனும் பொருள்படும் அத்திகிரி என்று அடையாளம் காட்டுகிறார் சுவாமி தேசிகன். இந்த சிவன் ப்ரம்மா எனும் மூவரில் இருவரும் கூட நடுவரான விஷ்ணுவை வழிபட்டு பாபம் நீங்கியவர்கள் தான் என்று அறியும்போது நான் திருமகள் மார்பினில் உய்ய அருளும் அத்திகிரி வாழ் காஞ்சி வரதராஜா ,உன் திருவடிகளில் சரணம் என்று அடைக்கலமாகிறேன். உன் அருளோடு எனக்கு திருமகளின் காருண்ய கடாக்ஷமும் சேருமே, மோக்ஷம் எனக்கு  நீங்கள் இருவருமே அருள்வீர்களே. நான் பாக்கியசாலி அல்லவா?.

திருவையாறு அருகே சிரக்கண்டிபுரம் எனும் கண்டியூரில் பரமேஸ்வரன் பிரம்மனின் சிரம் கொய்த க்ஷேத்ரம், அருகே ஹரசாப விமோசன பெருமாள் எனும் கமலநாதர் ஆலயம். சிவனுக்கு ப்ரம்மனின் சிரத்தை கொய்ததால் ஏற்பட்ட ப்ரம்மஹத்தி தோஷம் நீங்க அவர் வழிபட்ட விஷ்ணுவின் ஆலயம் இருக்கிறது. இரண்டையும்  சில வருஷங்களுக்கு முன் தரிசித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

தந்திரங்கள் வேரின்றித், தமது வழி அழியாது,
மந்திரங்கள் தம்மாலும், மற்றும் உள்ள உரையாலும்,
அந்தரம் கண்டடி பணிவார், அனைவர்க்கும் அருள் புரியும்,
சிந்துர வெற்பிரையவனார், சீலம் அல்லதறியேனே ||3||

வாயினால் சுலபமாக இது தான் உபநிஷதங்கள், வேதங்கள் மற்றும் நீதி நூல்கள் சொல்லும் ஞான மார்க்கம், பக்தி மார்க்கம் பற்றி விளக்கி, இதை பின்பற்றினால் மோக்ஷம் நிச்சயம் என்று யாருக்கு வேண்டுமானாலும் உபதேசிக்கலாம். அதை அடைவதற்கு தீவிரமாக எவ்வளவு சிரமப்  படவேண்டும் என்பது அதை விடாப்பிடியாக முயற்சி செய்வோருக்கு தான் தெரியும். சரணாகதி அடைவோனுக்கு அந்த வழி எளியது என புரியும். இந்த ரெண்டு வழிகளுக்கும் இடையே உள்ள வித்யாசம் என்ன?
 எது எளிது? நம்மால் முடியக்கூடியது என்று புரிந்து கொள்வோர்கள், உடனே ப்ரபத்தியை தான் நாடுவார்கள். வரதராஜன் காருண்ய மூர்த்தி, ஈடிணையற்ற தயாளன், எல்லோரையும் சமமாக கருதும் பேரருளாளன். அவன் பக்தன் எந்த வழியை பின்பற்றினாலும் அவனுக்கு பேதமின்றி அருளுபவன் அல்லவா?

தொடரும் 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...