Thursday, June 9, 2022

RAMANA MAHARSHI

 #ரமண_மஹரிஷி  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

சூரி நாகம்மா 

ரமணானுபவம்

 
1945ல்  ரமணாஸ்ரமம்  புராண காலத்திய  ஹரி வம்சம் நூல் விவரிக்கும்   பத்ரிகாஸ்ரமத்தை நினைவு படுத்தியது.   அருணாசல  மலையில் மேல் ஸ்கந்தாஸ்ரமம் அருகிலிருந்து  நெளிந்து நகரும் அருவி அழகுக்கு  அழகூட்டி   கண்ணுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தந்தது.  சந்தியார்க்கிய ஜாலம்  என்போமே  அதுபோல்  சூரிய உதயத்திலும்  அஸ்தமனத்திலும்  அந்த  அருவியின் நீர்  சூர்ய ஒளியில்  வர்ண ஜாலங்களை வீசியது.  காற்றில்  மரங்களின் அசைவும், இலைகளின் ஓசையும்  மரங்களில் வாழ்ந்த  எண்ணற்ற  வித விதமான பறவைகளின் வெவ்வேறு ஸ்வர  குரல்  ஒலியும்  காதுக்கும்  கண்ணுக்கும்  அம்ருதம். அவற்றின் ஒலி  பல குரல்களில்  ரிஷி  குமாரர்கள் வேதம் கற்று ஓதுவது போல் இருந்தது.

சென்னை, பாண்டிச்சேரி,  விழுப்புரம்   போன்ற பெரிய  பட்டணங்களிலிருந்து  அநேக  டாக்டர்கள், இன்ஜினியர்கள், வக்கீல்கள், ஜட்ஜ்கள், வியாபாரிகள், தனவந்தர்கள், பிரமுகர்கள் என்று பல துறை சார்ந்த  பக்தர்கள்  ரமணாஸ்ரமத்தில் தரிசனத்துக்கு வருவார்கள்.   அங்கே  எல்லோரும் ஒன்று.  எல்லோரும்   தரையில் தான் மஹரிஷியைச்சுற்றி  அமர்வார்கள்.

 அண்ணாமலை  ஒரு  பெரிய   நவரத்ன  சிம்மாசனம், ஆகாசத்தில்  வெண்ணிற மேகங்கள் தான்   வெண்  குடைகள் ,  மரங்கள் காற்றில் அசைந்து  தென்றலை வாரி வீசுவது  வெண்சாமரம் வீசுவது ஆகும்.  மகரிஷி தான் முடிசூடா  மன்னர்.  சூரிய  ஒளி  சந்திர ஒளி தான்  தீபாலங்காரம்.

பகவான் அசையாமல்  வீற்றிருப்பார்,  மௌனமாக  எல்லோரையும்  பார்த்துக் கொண்டே இருப்பார்.   எப்போவாவது ஒரு  புன்சிரிப்பு.  சந்திர ஒளி போல்  அவர் முகத்தில் ஞான ஒளி.   மிருதுவாக அவர் பேசும் சில வார்த்தைகள்  அம்ருதமாக காதில் பாயும்.    எல்லோரும் சிலைமாதிரி  அமைதியாக  அசையாமல் உட்கார்ந்திருப்பார்கள்.  தேகம் என்று ஒன்று இருப்பதையே  எல்லோரும் மறந்தவர்கள்.  காமிரா எல்லோரிடமும் கிடையாது. இருந்தவர்கள் சிலர் படம் பிடிப்பார்கள். 

காலை  ஒன்பதரை மணிக்கு   கீழே  ரமணாஸ்ரமத்தில் அன்றைய  நிகழ்வுகள், கடிதங்கள்,  செய்தித் தாள் விஷயங்கள், எல்லாம்  பகவானுக்கு அருகே அமர்ந்து படித்து சொல்வார்கள்.  அது ஒரு  மஹரிஷி தர்பார். சில சமயம்  மேகங்கள் கருமையாக  வானை மறைக்கும்.  காற்று பலமாக  வீசும் . 

அன்று சில  பக்தர்கள், தொண்டர்கள்  மஹரிஷிக்கு ஒரு போர்வையை எடுத்து  போர்த்தினார்கள். முகம் மட்டும் தான் தெரிந்தது. மௌனம்.  ''குரோஸ்து  மௌன வ்யாக்யானம்'' என்று சொல்வது  இதைத்தான். அமைதி  உபதேசம்.  உள்ளத்தில் எழும்  சந்தேகங்களை நிவர்த்தி செய்வதை  ''சின்ன சம்சயா ''  என்பார்கள். 

நேரம் ஓடியது.  பகல் உணவு நேரம் வந்தது.  புளியோதரை, தயிர்சாதம்  ரெடி. முதலில் அருணாச்சல மலைக்கு நைவேத்தியம் . அப்புறம் பிரசாத விநியோகம்.  பகவானுக்கு எதிராக ஒரு சின்ன மேஜை மேல்  குட்டியாக ஒரு  வாழை இலை  ஏடு.   மற்றவர்களோடு  பகவானுக்கும்  பரிமாறி  மற்றவர்கள் சாப்பிட்ட பிறகு மஹரிஷி  துளி எடுத்து சாப்பிடுவார்

மஹரிஷி  வழக்கமாக  உட்காரும்  ஒரு  சோபாவை  அறையின்  ஓரத்தில் இருந்த  வராந்தாவில் ஒரு  இரும்பு கேட்  இடையே  கொண்டு  வைத்ததும் அதில் அமர்வார். எல்லோரும் சற்று தள்ளி அமர்வார்கள். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக  அவர் அருகே நகர்ந்து வந்து உட்காருவார்கள்.  

நாகம்மாவும்  மஹரிஷியின்  சகோதரி அலமேலு மாமியும்  மற்றும் சிலரும் அடுத்த ஒரு சிறிய அறையில் அமர்ந்து ஜன்னல் வழியாக ஸ்வாமிகளைப்  பார்த்தபடி  அமர்ந்தார்கள்.  அங்கிருந்து பார்த்தால் அவர் தாமரைப் பாதங்கள் நன்றாகத்  தெரியும்.  மகரிஷி முகம் தெரியாது. அது போதுமே.

மௌனம் கலைந்து  மஹரிஷி   பேசினார்.  மலைமேல்  வாழ்ந்த காலத்தில் நடந்த சம்பவங்களை, குட்டிக்  கதைகளாக  சொல்வது ஸ்வாரஸ்யமாக இருக்கும்.  அவர் அம்மா அழகம்மா அங்கே வந்தது,  ஸ்கந்தாஸ்ரமம் கட்டத் தொடங்கியது, குடிக்க  நீர்  வசதி ஏற்படுத்தியது.  கீழேயிருந்து  உணவுப் பண்டங்கள், சாமான்கள் மேலே கொண்டு வந்தது,   குரங்குகளின் சாம்ராஜ்யம்,  மயில்களின் நடனங்கள்.  அவரோடு பழகிய  நாகப் பாம்புகள், சிறுத்தைகள்  பற்றியெல்லாம் கூறினார்.  கேட்க ருசித்தது.

பேச்சின் நடுவே புலவர்   நாகனார்  வந்ததை அறிந்து  தலையை அசைத்தார். ''எப்போ  வந்தீர்கள்?'' என்று கேட்டு தலையை சூரி நாகம்மா பக்கம் திருப்பினார். 
 ''இதோ வந்திருக்கார்.   பார்த்தியா?''
'ஆமாம்  சுவாமி. ''
சற்று நேரம் மௌனம்.  பகவான் பழைய நினைவுகளுக்குள்  சென்றுவிட்டார். பார்வை எங்கோ வெட்ட வெளியில் நிலைத்தது.
''அங்கே தான்  அம்மா நிர்வாணம் அடைந்தாள்.  வெளியே  உட்கார்த்தி வைத்தோம்.   முகத்தில் மரணக்  களை  துளியும் இல்லை.  ஆழ்ந்த சமாதியில் இருப்பது போல் இருந்தாள் .  ஏதோ ஒரு தெய்வீக  நடனத்தில்  பூர்ண ஒளி  கூடியது போல்.    அதோ  அங்கே நீ உட்கார்ந்திருக்கிறாயே  அங்கே தான்... ''

மஹரிஷியின் வார்த்தைகள் மந்திரம் போல்  எல்லோரையும்  பிணைத்தது. வேணுகானம் போல்  மிருதுவான குரல்.  அது 
 எவருக்கும் கிடைக்காத உன்னத பரிசு.  கேட்க கிடைக்காத  தேனமுதம்.
ரமணர் வாழ்ந்த ஒவ்வொரு கணமும்  அவருடன் இருந்தவர்களுக்கு கிடைத்த மா பெரும்  பாக்யம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...