Thursday, June 2, 2022

RAMARAJYAM

 


ராமராஜ்யம்  -    நங்கநல்லூர்  J K   SIVAN 


இந்த  பூலோகத்தில்  கடைசி ஹிந்து உயிரோடு இருக்கும் வரை  ராமனும் கிருஷ்ணனும்  நம்  கூடவே இருந்து கொண்டிருப்பார்கள்.  ராமன் ஒரு வழி கிருஷ்ணன் தனி வழி. ராமாயணமும்  பாரதமும்  நமது இரு கண்கள். பல்லாயிரம் வருஷங்களாக  எவர் முயன்றும் அழிக்க முடியாதவை. கோடானு கோடி மக்கள்  திரும்ப திரும்ப கேட்டும் படித்தும் எழுதியும் அலுக்காத இதிகாசங்கள்.  இதிகாசம் என்றால் இப்படித்தான் நடந்தது என்று அர்த்தம். 

ராமன்  ஒரு  உதாரண புருஷன்.  பித்ரு வாக்ய பரிபாலனம் செய்தவன், சத்யம்,  தர்மம்  வழி நடந்தவன். கிருஷ்ணன்  தர்மம்  நீதி நியாயம்  பாபம் புண்யம், கர்மம், பக்தி ஞானம் எல்லாம்  நாம் பெற  வழி சொல்லிக்கொடுத்தவன்.  அற்புதமாக போதித்தவன்.

ராமன்,      மனிதர், அசுரர், அரசர், வானவர்,  வானரர், வேடன்,  சாதுக்கள், முனிவர், பெண்கள்,தந்தை தாய் அனைவரையும் மதித்து போற்றி நட்போடு பாசத்தோடு இணைந்தவன் .  இல்லாவிட்டால்,  அயோத்தி நகர மக்கள்,   லக்ஷ்மண பரத  சத்ருக்கனர்கள், ஜனகர், விஸ்வாமித்ரர், வசிஷ்டர், தசரதர், ஹனுமான் சுக்ரீவன், குகன், பாரத்வாஜர், வால்மீகி, கௌதமர், ஜடாயு, சம்பாதி, அகலிகை, விபீஷணன்,  சபரி  இன்னும்  எத்தனையோ பேர், இப்போதும் நம்மைப்போல்    ராமனை கண்ணுக்கு கண்ணாக  நேசித்திருப்பார்களா?  ஒரு ராஜாவைப் போய் தெய்வமாக  கொண்டாடுவார்களா? 

 தந்தை சொன்னதாக தாய் சொன்னதை மதித்து மரவுரி தரித்து பதினான்கு வருஷங்கள் வனத்தில் மட்டும் வசித்து எந்த இல்லத்துக்கு செல்லாத ஸ்தித ப்ரஞனாக  வைராக்கியத்தோடு யாராலாவது இருக்க முடியுமா?

எல்லோரும் ராமராஜ்யம் பற்றி புகழ்ந்து பேசுகிறார்களே.  எல்லோரும்  சந்தோஷமாக சுபிக்ஷமாக வாழ்ந்தார்களாமே. கம்பர் சொல்கிறாரே, மாதத்துக்கு  மூன்று முறை ஜோ  மழை, நீர் வளம், நிலவளம்,   வீடுகளுக்கு கதவுகள் இல்லை, போலீஸ் இல்லை,  திருடன் இல்லையே.  எல்லாமே போட்டது போட்டபடியே கிடந்தது.  ''கொள்வார் இல்லாததால் கொடுப்பார் இல்லை''  எவனுக்கும் எதுவும்  தேவைப்படவில்லை.  எல்லோரிடமும் எல்லாமும் இருந்ததால் பணக்காரன் ஏழை வித்யாசமே கிடையாது.. ஆஹா  இப்படி  நினைத்துக்கூட  நம்மால் இப்போது பார்க்க முடியவில்லையே!
கம்ப ராமாயணத்தில்  நகர் படலத்தில்  அற்புதமான ஒரு செய்யுள்: 

''தெள் வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும்
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள்
கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ.'' 73

ராம ராஜ்யத்தை  நாம் வாழ்ந்து அனுபவிக்க வில்லையே, இன்னும் அந்த   7000 வருஷம் முன்பு சந்தோஷமாக  இருந்த   ஒரு ராஜ்ஜியம்   கண் முன்  நிற்கிறது.  நிச்சயம் நாமும் அப்போது  அங்கு வாழ்ந்திருப்போம். ஆனால்  நமக்கு பூர்வ ஜென்ம ஞாபகங்கள் இல்லாததால்  தெரியவில்லை, நினைவில்லை.  மீண்டும் ராமராஜ்யம் வர  முயற்சிப்போம். முயற்சி உடையார்  மாட்டார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...