Friday, June 24, 2022

pesum deivam

 #பேசும்_தெய்வம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


''கிள்ளை மொழி''  

சைலண்டாக  மஹா பெரியவா நிகழ்த்திய  எண்ணற்ற அற்புதங்களில்  பல பக்தர்களுக்கு தெரிந்த ஒரு சம்பவம் நினைவு கூர்கிறேன்..

இதில் சம்பந்தப்பட்டவர் ஒரு வைஷ்ணவ பக்தர்.  மஹா பெரியவாளுக்கு  எந்த மத பேதமும் கிடையாது. நாம்  நமது சனாதன தர்மத்தை விடாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று மட்டும் தான் அழுத்தமாக  உபதேசிப்பவர்.  அவரவர் தர்மத்தை ஒவ்வொருவரும் விடாமல் கடைபிடித்தால் உந்த உலகமே ஒரு ஸ்வர்க பூமியாக சுபிக்ஷமாக இருக்குமே  என்ற நோக்கம். 
ஒரு நாள் காஞ்சி மடத்துக்கு மேலே சொன்ன வைஷ்ணவ பக்தர் வந்து மஹா பெரியவாளை தரிசிக்க காத்திருந்தார். தனியாக வரவில்லை, அவருடைய ரெண்டாவது பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்திருந்தார்.  மூணு வயசாகியும் குழந்தை ஏன் பேசவில்லை என்ற ஏக்கம் கவலை?டாக்டர்களிடம் எல்லாம் அலைந்து அவர் பெற்ற  அறிவுரை:“இது…. Genetically Predetermined case…. பிறவிக்கோளாறு ஸார்! ஒண்ணுமே பண்ண முடியாது…”

பெரிய பெரிய specialists-கள்  காசு வாங்கிக்கொண்டு  கை விரித்து விட்டார்கள்.

மனசு நொந்து போன நிலையில் பெற்றவர்கள் மனஸில் ஒரே ஒரு நம்பிக்கை... பாலைவனத்தில் ஒரு சிறு பசும் புல் பசுசமையிட்டது…..அந்த ஒரே ஒரு நம்பிக்கை தான் காஞ்சிபுரத்தில் மஹா பெரியவா சன்னிதானம்....….

“பிறவியையே வேரறுக்கும் நம்மளோட மஹா வைத்ய நாதஸ்வாமி இருக்கும்போது  பிறவிக் கோளாறு ஒரு பெரிய விஷயமா? அவர் பாத்துக்க மாட்டாரா என்ன?”  என்று அந்த வைஷ்ணவரின் மனைவி மனதில்  ஆழ்ந்த நம்பிக்கை.
 வைஷ்ணவர் குடும்பம் மடத்தில் நின்றபோது  அதிசய மாக  அந்த நேரம்  ஶ்ரீமடத்தில் கூட்டம் ரொம்ப இல்லை.  குழந்தையுடன் நமஸ்காரம் பண்ணிவிட்டு நின்றார்கள்.

காஞ்சி காமாக்ஷி ஸ்ரீ மூக கவியை பேச வைத்தவள்  அவள்  அவதாரம் தானே  மஹா பெரியவா.  அங்கே  கரும்பு வில், இங்கே காவி உடையில் கையில் தண்டம். மஹா ஸந்யாஸி  புன்முறுவலோடு தலை ஆட்டினார்.  பெரியவாளுடைய கருணைவிழிகள் அந்தக் குழந்தை யை பார்த்தன……
“கொழந்த யாரு?”
“அடியேனோட  ரெண்டாவது  பொண்ணு ...கொழந் தைக்கு  மூணு வயசாயிடுத்து ஆனா  இன்னும் பேச்சு வரல!  டாக்டர்கள்ளாம் பொறவிலேயே அப்டி…ங்கற துனால ஒண்ணும் பண்ண முடியாதுன்னுட்டா! இவள் என்னோட ஆத்துக்காரி.    பெரியவாகிட்ட ப்ரார்த்தனை பண்ணிக்கலாம்னு சொன்னா ...''

“ஏன்? ஒனக்கு அந்த ஆசை இல்லியோ?” 
மஹா பெரியவா முகத்தில் புன் சிரிப்பு.பதில் சொல்ல முடியாமல், வைஷ்ணவர் நெளிந்தார்..அசடு வழிந்தார்.

மஹா பெரியவாளின்  அபய ஹஸ்தம் உயர்ந்தது..
.ஆஶீர்வதித்தார்….

“ஏன் கவலைப்படறே? கொழந்த…. நன்னா பேசுவா…. நெறைய பேசுவா….. போ!”

ஆஹா! இதைவிட வேறு உத்தரவாதம் என்ன வேண்டும்?

ஶ்ரீமடத்துக்குப் போய்விட்டு வீடு திரும்புவதற்கு கிட்டத்தட்ட மூணு-நாலு மணிநேரம் ஆகிவிட்டது.   பேசமுடியாத  குழந்தைக்கோ நல்ல பசி!  என்ன செய்யும்???
பெரியவாளுடைய அருள் கடாக்ஷத்துக்கும்  ஆசிர்வாதத்துக்கும்  ஆஞை க்காக மட்டுமே காத்திருந்ததோ ? 
வீட்டுக்குள் வந்ததும்  ஒரே ஓட்டமாக சமையல்  கட்டுக்குள்  ஓடியது.  தன்னுடைய  சாப்பிடும்  தட்டை எடுத்துக் கொண்டு  அம்மாவிடம் வந்தது அந்தக் குழந்தை.
அப்பாவும் அம்மாவும் அதை பார்த்துக் கொண்டே  இருந்தார்கள். அடுத்த வினாடி ஒரு அதிசயம் அங்கே  நிகழ்ந்தது.பெற்றோர்கள் தமது காதுகளை நம்ப முடியாமல் மயக்கம் போட்டனர் .அந்த குழந்தை முதன் முதலாக  தன் தேன் போன்ற  மதுரக் குரலால்…..

“அம்மா! பசிக்கறது…. மம்மு போடும்மா….!” ……
…என்று கேட்டால் எப்படி இருக்கும்?முதல் முதலாக பேசப் பழகும் திக்கல் திணறல் எதுவுமில்லாமல், ஸ்பஷ்டமாக குழந்தையின் குரல் கேட்டது.   இன்ப சாகரத்தில் மூழ்கின பெற்றோர்கள் இன்னும்  வெளியே தலை தூக்கவில்லை... தலை தூக்கி முதலில் அவர்கள் செய்த வேலை காஞ்சிபுரம்  இருந்த திக்கை நோக்கி நன்றியோடு நமஸ்காரம்... பெரியவா அருள் வாக்கு  காதில் ஒலித்தது:  

''ஏன் கவலைப்படறே? கொழந்த…. நன்னா பேசுவா…. நெறைய பேசுவா….. போ!”

மறுநாளே  காஞ்சிமடம்  ஓடினார்கள்.  பேசமுடியாமல், கண்களில் நீர்மல்க, பெற்றவர்கள் இருவரும் இப்போது   ஊமைகளாகிவிட்டார்கள்.எதுவும் பேசாமல், சிரித்தபடி அவர்களை யதார்த்த நிலைக்கு பெரியவா கொண்டு வந்ததும், குழந்தை பேசிவிட்டதைச் சொல்லி சொல்லி மாய்ந்து போனார்கள்.
அழகாக சிரித்துக் கொண்டே ப்ரஸாதம் குடுத்தார்…..
“நன்னாப் பேசுவா! நன்னா இருப்பா….. ஸெரி….. நீ ஒரு கார்யம் பண்ணனும்….”
“காத்துண்டு இருக்கேன் பெரியவா…..”
“காமாக்ஷி கோவில்ல நவராத்ரிக்கு ஜானகி ராமையாவும், டாக்டர் ராஜப்பாவும் ஸங்கீத கச்சேரிகள் ஏற்பாடு பண்ணிண்டு வரா….. ராஜப்பாக்கு கண்ணு ஸெரியாத் தெரியல…. நீ… ரேடியோலதான…. வேலை பண்ற? ஸங்கீத வித்வான்களுக்கு, ஸம்பாவனையை விட, உபசாரம்தான் ரொம்ப முக்யம்! நவராத்ரி ஸமயம்… நீ எங்க இருந்தாலும்…. லீவு போட்டுட்டு அம்பாள் ஸன்னதில… நவராத்ரி கச்சேரிகளைப் பாத்துக்கணும் ..”
“அடியேன்… தாஸன்…. பரம பாக்யமா பண்றேன்… பெரியவா…”
கண்களில் பெருகும் கண்ணீரை துடைத்து மாளவில்லை! மஹாகுருவின் கைங்கர்யத்தை  ஆனந்தமாகப் பண்ணினார்  அந்த வைஷ்ணவ பக்தர்..

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...